சித்தலிங்கையா (1954- 2018) - இழப்பின் துயரம்
வரலாற்றில் வாழ்பவர்கள் எனக் குறிப் பிடப்படும் பட்டியலில் எழுத்தாளர் களோடு மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடமுண்டு. இலக்கியத்தின் வழியாக இந்தியாவை ஒவ்வொரு கணமும் உணரச் செய்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள். ஆரோக்கிய நிகேதனம் நாவலை எழுதிய தாராசங்கர் பானர்ஜியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் த.நா.குமாரசாமி. பதேர் பாஞ்சாலியை எழுதிய விபூதிபூஷண் பந்தோபாத்யாயாவை அறியச் செய்தவர் ஆர்.சண்முகசுந்தரம். இதே விதமாக அதீன் பந்தோபாத்யாயாவை சு.கிருஷ்ணமூர்த்தியும் காண்டேகரை கா.ஸ்ரீ.ஸ்ரீயும் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரை ஹேமா ஆனந்ததீர்த்தனும் மொழிபெயர்த்தனர் என எழுதிக்கொண்டே செல்லலாம். வங்காளம், இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து இந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளைப் பற்றிய அறிமுகத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் வழங்கியவர்கள் மொழிபெயர்ப்பாளர்களே.
இந்தியாவின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான சிவராம காரந்த்துடைய படைப்புகளைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய மிகமுக்கியமான மொழிபெயர்ப்பாளர் சித்தலிங்கையா. சிவராம காரந்த்தை நினைத்துக் கொண்டால் சித்தலிங்கையாவின் பெயரும் இணைந்தே நினைவிலெழும். இன்று அவர் நம்மிடையே இல்லை. 19.01.2019 அன்று இயற்கை எய்தினார்.
வீட்டுமொழி என்கிற வகையில் கன்னடத்தைப் பேசும் பிரிவைச் சேர்ந்தவர் சித்தலிங்கையா. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுக் காசி பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவதற்குச் சென்றுவிட்டார். கல்கத்தாவிலும் தில்லியிலும் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு மதுரைப் பல்கலைக் கழகத்துக்கு வந்துசேர்ந்தார். தன் சொந்த முயற்சியால் கன்னடம், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளையும் கற்றுக்கொண்டார். வீட்டில் நித்தமும் புழங்கும் கன்னட மொழிப் பழக்கம் இருந்ததால் அவருக்குக் கன்னடமொழியில் கூடுதலான ஈடுபாடு இருந்தது.
எழுபதுகளில் தில்லியில் பணியாற்றியபோது நண்பரொருவரின் தூண்டுதலால் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். அதற்குப் பிறகு சிவராம காரந்த்தின் மூன்று முக்கியமான நாவல்களை அடுத்தடுத்துத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘மண்ணும் மனிதர்களும்’, ‘பாட்டியின் கனவுகள்’, ‘அழிந்த பிறகு’ ஆகிய நூல்கள் சாகித்ய அகாதெமி வழியாகவும் நேஷனல் புக் டிரஸ்ட் வழியாகவும் வெளிவந்தன.
சிவராம காரந்த் படைப்புகளைத் தொடர்ந்து அவர் பசவண்ணரின் வசனவரிகளை மொழிபெயர்த்து (பசவண்ணர் வாக்கமுது) நூற்றைம்பது பக்கங்களுக்கும் மேலான நூலாக வெளியிட்டார். அது குறிப்பிடத்தக்க முயற்சி. அதற்குப் பிறகு நீண்டதொரு இடைவெளி. அதைத் தொடர்ந்து கன்னட எழுத்தாளர் யஷ்வந்த சித்தாள எழுதிய ‘கதையானாள் பெண்’ என்னும் சிறுகதைத் தொகுதியை மொழிபெயர்த்தார்.
சித்தலிங்கையாவின் அர்ப்பணிப்புணர்வும் ஆற்றலும் தமிழிலக்கியச் சூழலில் போதிய அளவில் கண்டு கொள்ளப்படவில்லை என்பது கசப்பான உண்மை. சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைத் தவிர வேறெந்த அளவிலும் அவரை இச்சமூகம் பெருமைப்படுத்திப் பாராட்டவில்லை. ஏன் இப்படி நேர்ந்தது என இக்கணத்தில் யோசிக்கத் தோன்றுகிறது.
இந்திய அளவில் எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடிகளும் மாற்றங்களும் இன்னொருவிதமான இளந்தலைமுறையினரை உருவாக்கின. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் உருவாகி எல்லாவிதமான தியாகங்களுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட இலட்சியவாதத் தலைமுறையினர் குறையத் தொடங்கினார்கள். இலட்சியவாதம் என்னும் அடையாளமே புறக்கணிப்புக்கு ஆளானது. இலட்சியவாத யுகத்தின் முகமாகக் கன்னட உலகில் பெரும்புகழ் பெற்றவர் சிவராம காரந்த். காந்திய யுகத்தைச் சேர்ந்தவர். அரசியல் களத்தில் காட்சிகள் மாறத் தொடங்கியபோது காரந்த்தை வாசிப்பவர்கள் குறைந்துபோனார்கள். இலட்சியவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய அரசியல் சூழல்களைக் கொண்ட தமிழகத்தில் காரந்த் அவர்களுக்கு மிகப்பெரிய வாசகப்பரப்பு உருவாகவில்லை. மிகநுட்பமான இலக்கிய வாசிப்பைக் கொண்ட வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் மட்டுமே அவருடைய எழுத்தின் பண்புகள் உணரப்பட்டன. காரந்துக்குக் கிடைத்திருக்கவேண்டிய கவனமே கிட்டாத சூழலில் அவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திய சித்தலிங்கையாவுக்கும் அது கிட்டாமல் போனது.
சிவராம காரந்த் எழுத்துகளைத் தொடர்ந்து சித்தலிங்கையா மொழிபெயர்த்த பசவண்ணரின் வசனங்களும் சமூகச் சீர்திருத்த நோக்கத்தைக் கொண்டவை. பக்தியைக் கடந்து மனிதாபிமானத்தை வலியுறுத்துபவை. மனிதாபிமானம் என்னும் குணமே மதிப்பிழந்த நாணயமாக மாறிக்கொண்டிருந்த காலச்சூழலில் அந்த மொழியாக்கத்துக்கும் கிட்டியிருக்கவேண்டிய கவனம் கிட்டாமலேயே போனது. இப்படி குறிப்பெழுதி பெருமூச்சு விடுவதைத் தவிர, நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? அது தமிழின் தீயூழ். ஆனால் அக்குறையை சித்தலிங்கையா ஓரிடத்திலும் வெளிப்படுத்தியதில்லை. அது அவருடைய பெருந்தன்மை.
இன்று இந்திய மொழிகளிடையிலான இலக்கியப் பரிமாற்றம் மெல்ல மெல்லக் குறைந்துவருவது மிகவும் துயரளிப்பதாக உள்ளது. இலக்கிய ஆர்வமும் தேடலும் கொண்டு இருமொழிகளிலும் தேர்ச்சியும் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இன்று தமிழில் நிகழும் இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் வெற்றிகளைப்பற்றியும் தெலுங்கு மொழிக்கோ அல்லது ஒரிய மொழிக்கோ தெரிவிக்க வழியே இல்லை. அதுபோலவே தெலுங்கிலும் ஒரிய மொழியிலும் நிகழும் இலக்கியமுயற்சிகளைப் பகிர்ந்துகொள்ளவும் இளந்தலைமுறையிலிருந்து ஒருவரும் உருவாகி வரவில்லை. வயதில் மூத்தவர்களே அத்தகு முயற்சிகளில் இடைவிடாத ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். மிகக்குறைந்த எண்ணிக்கை உடையது அந்தப் பட்டியல். அதில் இடம்பெற்றிருந்த ஒருவரைத்தான் நாம் இன்று இழந்துவிட்டோம். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது சித்தலிங்கையாவுடைய இழப்பின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
சித்தலிங்கையாவுக்கு அஞ்சலிகள்.
மின்னஞ்சல்: paavannan@hotmail.com