விசாரணையின் கீழ் ரஃபேல் தீர்ப்பு
ஆட்சியிலிருக்கும் அரசு அனுமதிக்கும் அளவிற்கே நீதிமன்றம் நீதிக்கான முனைப்புடன் செயல்படும்.
ரஃபேல் பேரம் குறித்து ஆராய்வதற்காகப் புலனாய்வுக் குழுவொன்றை அமைக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அவசரமும் அரைகுறைத் தன்மையும் இருக்கின்றன. இதிலுள்ள பல தவறுகளை ஏற்கெனவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றுள் எல்லாவற்றையும்விட முக்கியமானது, பேரம் குறித்த அறிக்கையை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுவிடம் சமர்ப்பித்துவிட்டார் என்று நீதிமன்றம் நம்பியமை. பார்த்த மாத்திரத்திலேயே கண்ணுக்குத் தெரியும் இந்தத் தவறு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்விக்குரிய பல அனுமானங்களைச் சட்டரீதியாக அலசி ஆராய்தலைத் தவிர்ப்பதன் அடிப்படையிலானதாகும்.
இந்தத் தவறுகளை மேலும் மோசமடையச் செய்யும் விஷயம் என்னவெனில் இந்த வழக்கை நீதிமன்றம் நடத்திய விதம்தான். தொடக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மிகப் பலவீனமானது; அத்தகைய வழக்குகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றபோதிலும் விரிவான, அதிக விவரங்கள் வருகிறவரை நீதிமன்றம் இந்த வழக்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது. ஆனாலும் விசாரணை முழுவதிலுமே ஆழமான புலனாய்வு தேவை என்பதில் நீதிமன்றத்திற்குச் சம்மதமில்லை.
வழக்கு விசாரணைகளின்போது நடந்தவை நீதிமன்றதுக்குச் சிறப்பு செய்வதாக இல்லை. முதலில், விலை தொடர்பான விஷயத்தை ஆராய விரும்பவில்லை என்று கூறிய நீதிமன்றம் பின்னர் மனத்தை மாற்றிக்கொண்டு விலை குறித்த விவரங்களை ‘முத்திரையிட்ட உறையில்’ சமர்ப்பிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. இரண்டாவதாக, இப்படி ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ விலை விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் அரசின் பெரும்பாலான வாதங்கள் அந்த முத்திரையிடப்பட்ட உறையிலிருந்த ஆவணங்களில் இருந்தன. ஆக, வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு அதிலுள்ள விவரங்களை மறுக்க வாய்ப்பின்றிப் போய்விட்டது. இதுவே தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொதுக் கணக்குக் குழுவின் தவறுகளுக்கான காரணம் எனத் தெளிவாகத் தெரிகிறது. அரசு தெரிந்தே நீதிமன்றத்தைத் தவறான திசையில் செலுத்தியதா அல்லது அந்தப் பத்தியை நீதிமன்றம் தவறாக விளக்கியதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் அது நீதிமன்றத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. அரசு சொன்னவற்றை மறுப்பதற்கான வாய்ப்பை எதிர்த் தரப்பிற்கு நீதிமன்றம் தந்திருக்க வேண்டும். அது ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ இருந்தது என்பதால் அப்படியே ஏற்க வேண்டியதில்லை.
மூன்றாவதாக, ராணுவத் தளவாடங்கள் குறித்த கேள்விகள் தங்களது நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீதிமன்றம் கூறியபோதிலும் இந்திய விமானப் படைக்கு தஸால்ட் ரஃபேல் போர் விமானங்கள் அவசியம் என்று கருத்துக் கூறுவதை நீதிமன்றத்தால் தவிர்க்க முடியவில்லை. அந்தக் கருத்து, விசாரணையின்போது விமானப் படை அதிகாரிகளுடன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தாறுமாறாக ‘உரையாடியதன்’ அடிப்படையில் சொல்லப்பட்டதாகத் தோன்றுகிறது. இந்தக் கூற்றுகள் சத்தியப் பிரமாணத்தின் அடிப்படையிலோ அல்லது அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவிலோ பதிவுசெய்யப்பட்டவை அல்ல. விசாரணை நீதிமன்றத்தில் இந்தக் கூற்றுகள் எந்தக் கேள்விக்கும் இடமின்றித் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் உச்ச நீதிமன்றம் பேரம் குறித்த புலனாய்வை மறுப்பதற்கு இந்தக் கூற்றுகளையே நம்பிக்கையுடன் மேற்கோள் காட்டியது.
இதன் இறுதி முடிவு என்னவெனில், சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது பொது வெளிக்கு உண்மையைக் கொண்டுவருவது என இல்லாமல் பேரம் குறித்த பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமலே போகவிட்டதுடன் இத்தகைய பிரச்சனைகளில் நீதி வழங்குவதில் தனக்குள்ள ஆற்றலையே உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.
பணமதிப்பு நீக்கம் முதல் நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் வரையிலான சர்ச்சைக்குரிய விஷயங்களில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள தயக்கத்துடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் வெளியான ஊழல்களைப் புலனாய்வதில் அது காட்டிய தீவிரத்துடன் ஒப்பிடுகிறபோது இவை பற்றி ஆழமாக அறிந்திராத பார்வையாளருக்கு அதுவொரு முரணாகவே தோன்றும். இதிலிருந்து ஈவிரக்கமின்றிப் பெறப்படும் முடிவு இதுதான்: ஆட்சியிலிருப்பவர்கள் அனுமதிக்கும் அளவிற்கே நீதிக்கான முனைப்பை நீதிமன்றத்தால் காட்ட இயலும்.
ஆனால் இத்தகைய முடிவும் ஆழமான சில உண்மைகளை மறைத்துவிடக்கூடும். நீதிமன்றத்தின் தலையீடுகளுக்கு அடிப்படையாக இருக்கும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் அறிக்கைகள் இப்போதெல்லாம் வெளிவருவதோ அல்லது பொதுவெளியில் காணப்படுவதோ இல்லை. உச்ச நீதிமன்றம் புலனாய்வுகளுக்காக நம்பியிருக்கும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) அதீதமான அரசாங்கத் தலையீட்டின் காரணமாகவும் அதற்குள்ளேயே நடந்த தகராறுகளின் காரணமாகவும் முற்றிலுமாக நிலைகுலைந்திருக்கிறது. சிபிஐ-யை மேற்பார்வையிட வேண்டிய மத்திய கண்காணிப்பு ஆணையமோ பிரச்சனைகள் கைமீறும்வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஆக சட்டத்தின் கீழ் வேறு அமைப்புகள் ஏதுமில்லா நிலையில் உச்ச நீதிமன்றத்தின் ரஃபேல் பேர விசாரணை, குறைபாடான தகவல்களின் அடிப்படையில் மோசமான யூகமாக மட்டுமே அதிகபட்சம் இருக்கமுடியும்.
இந்தப் பேரத்தில் தவறான நோக்கம் ஏதுமில்லையென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆர்வத்தைக் கிளறும் விஷயம். அரசாங்கம் தனக்களித்த தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதில் உச்ச நீதிமன்றம் பெரும் அவசரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஒரு முழுமையான தீர்ப்பிற்குத் தேவைப்படும் இன்றியமையாத தகவல்கள் அனைத்தையும் தரவேண்டியது அரசின் கடமையென்றாலும் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இத்தகைய சூழல்களில் இன்றியமையாத தகவல்களை நீதிமன்றம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கில் ஒரு முழுமையான தீர்ப்பு இன்னமும் வரவேண்டியிருக்கிறது என்ற உணர்வே மேலிடுகிறது.
இந்த அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் நீதிமன்றத்தின் தலையீடு நீதியையோ அல்லது அரசமைப்புச்சட்ட இலக்குகளையோ அடைய உதவும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. உச்ச நீதிமன்றம் கடும் கோபத்தைக் காட்டிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கே பிசுபிசுத்துப்போய், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் ஈடுபட்ட எந்த அமைப்பும் முகமையும் தங்களது தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை.
ஏதோவொரு கட்டத்தில், ரஃபேல் பேரம் போன்ற விஷயங்களில் தனது பங்கு குறித்து உச்ச நீதிமன்றம் முறையாக, சமநிலையுடன் அலசி ஆராய்ந்து மதிப்பிடவேண்டியிருக்கும். சட்டத் தகராறுகளில் அது சமநிலை கொண்ட நடுவரா அல்லது உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கான பணியைச் செய்யும் பொது விசாரணையதிகாரியா? தனது வசதிக்கேற்ப இரண்டில் ஒன்றை அது தெரிவுசெய்துகொள்ள முடியுமா? இப்போது உச்ச நீதிமன்றம் கூர்மையான ஆய்விற்குக் கீழிருக்கும் நிலையில் தன்னைத்தானே ஆய்ந்துகொள்வதை இனியும் தள்ளிப்போட முடியாது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 22, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com