தேடு கல்வி இலாது
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பள்ளிக் குழந்தைகளின் மீதும் அவர்களுடைய பிஞ்சுப் பருவத்தின் மீதும் கடும் சுமையை ஏற்றிவைத்தது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் எட்டாம் வகுப்புவரை தட்டுத் தடங்கலில்லாமல் மேலேறிச் செல்வதை மோடி அரசு விரும்பவில்லை. அதனால் குழந்தைகளின் கல்வி ஆர்வம் குறைந்து திறமையின்மை மேலோங்குகிறதாம். இதுபோன்ற அவல நிலையை மாற்ற அரசு தன் முனைப்பைக் காட்ட விரும்பினால் அது கல்வித்துறை சார்ந்த நிபுணர்களை அழைத்துக் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். மாறாக நோயைத் தீவிரமாக்கும் ‘நற்பணி’யைத்தான் அது மேலெடுத்தது. அவ்வகையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பயிலுகின்ற மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று சட்டத்திருத்தம் செய்தது. தேர்வாகாத மாணவர்கள் தொடர்ந்து அதே வகுப்புகளில் படித்துத் தேர்ச்சியடைய வேண்டும் என்று சொல்கிறது.
நம் குழந்தைகளின் பால்யத்தையும் அதன் வெகுளித்தன்மையையும் பறித்துக்கொண்டோட மத்திய அரசு முனைவதில் சமூகம் பெறப்போகின்ற ஆதாயங்கள் என்னவாக இருக்க முடியும்? பழங்கால இந்தியக் கல்விமுறை சாதியத் தன்மையோடு வரையறுக்கப்பட்டது. அது சமூகத்தைப் பல துண்டுகளாகப் பிரித்துவைத்துப் பல தரப்புகளுக்கும் கல்வியை மறுக்க விரும்பியது. அதே தன்மையை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் செயல்படுத்த முனைகிறது மோடி அரசு. அதன் தொடக்கப்புள்ளியாக நம் குழந்தைகளின் அறியாமையை அறுவடை செய்து தன் பலனைப் பெறப் பார்க்கின்றது. குழந்தைமையைப் பறிப்பது பெரும் பாவம் என்கிற சுரணைகூட நாகரிகக் காலத்தில் இல்லாமல் போகுமானால் ஒரு நாடு சீரழிய வேறு என்னென்ன வேண்டும்?
கெடுவிதியாக நாட்டிலுள்ள அனைத்து அரசுகளும் இன்னும் தம் வருவாய்க்கேற்ப கல்விக்கான நிதியை ஒதுக்குவதில்லை. முன்னர் இருந்த இந்திய அரசுகளும் இந்தத் திருப்பணியைத்தான் செய்துவந்தன; உலகமயமாக்கத்துக்கு வாழ்க்கைப்பட்டுவிட்ட இன்றைய அரசின் நடைமுறைகள் நலிவுற்றோர் மீது நடத்திவரும் தாக்குதல்களின் மறுவடிவமாக இப்போதைய கல்விமுறை மாறிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விப் பரவலாக்கத்திற்கும் உழைத்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்ற நினைப்பு அரசுக்கு வந்திருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், கருணைப் பார்வைகளை அரசு தாமே நடத்தும் பள்ளிகளுக்கு வழங்குவதில்லை; தனியார் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகள் போட்டியிடவும் வேண்டும். இந்நிலையில் கல்வியில் தேர்ச்சியில்லையெனில் வாழ்க்கையே இல்லை எனும் கருத்துகள் பொதுமக்கள் மத்தியில் விஷமத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தம் குழந்தைகளின் கல்விச் செலவுக்கே ஏழைப் பெற்றோர் படும் இன்னல்கள் கற்பனையால் எண்ணவும் இயலாதவை. அவர்களின் ஆசைகூட தம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்பதாக மாறிவிட்டது.
குழந்தைகள் பன்முக ஆற்றல்களைப் பெற்றிருப்பவர்கள். அவர்களின் திறம் வெறுமனே மனப்பாடங்களில் மட்டுமே இருக்க வேண்டியதில்லை; இருப்பதுமில்லை. வளர்ச்சியை விரும்பும் எண்ணத்தில் அரசு இருக்குமானால் அது உலகமயமாக்கலின் அழுத்தங்களை மீறித் தன் சொந்தத் திட்டத்தின் கீழே மனிதாயப் பண்புகளை வளர்த்தாக வேண்டும். அதற்கு நேர்மாறாகக் குழந்தைகளின் உடல் நலத்தையும் மன விரிவையும் காயடிக்க முனைகின்ற அரசு இயல்பாகவே தன் நாட்டின் அழிவைத்தான் துரிதப்படுத்துகின்றது.
ஐந்து, எட்டாம் வகுப்புத் தேர்வுகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் படிப்பைக் கைவிடுகின்ற குழந்தைகளின் வாழ்க்கை நிலைகுறித்த சிந்தனைகள் எவையும் அரசுக்கு இல்லையா? அவர்கள் ஏழைக் குழந்தைகளாய் இருக்கும்பட்சத்தில் குழந்தைத் தொழிலாளர்களாகவோ உதிரிகளாகவோ வளரக் கூடிய ஆபத்தைக் களைவது எப்படி? வேறு துறைகளில் அவர்களுக்கு இருக்கும் பன்முக ஆற்றல்களைக் கூட அரசு இனம் காண விரும்பவில்லை. ஏனெனில் தோற்றுப்போகின்ற மாணவர்கள் சமூகத்தின் நீரோட்டத்திற்கு அவசியமில்லை என்கிற சிந்தனை ஆளும் வர்க்கத்தில் இருக்கும்போலும்.
மாறிவிட்ட தமிழக அரசியல் சூழலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாகிவிட்ட அதிமுக, பள்ளித் தேர்வுகளுக்குச் சில வாரங்களே இருக்கும் சூழலில் கட்டாயத் தேர்வுகளை நடத்தவிரும்பி வெகு ஜரூரான நடவடிக்கைகளில் இறங்கியது. அதற்கான வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தப்பட்டன. தன் கூட்டணிக் கட்சியை உளங்குளிரச் செய்யும் ஆர்வக் கோளாறில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டது. ஒரு தேர்வுமையம் எத்தனை மாணவர்களால் நிரம்பியிருக்க வேண்டுமென்றும் அவ்வாறு நிரம்பாத நிலையில் அவர்கள் பக்கத்திலுள்ள வேறு தேர்வுமையங்களுக்குச் சென்று எப்படி தேர்வுகளை எழுத வேண்டுமென்றும் அறிவுறுத்தியது. தேர்வுக்கான கட்டண விகிதங்கள் வரைக்கும் முடிவுகள் எட்டப்பட்டிருந்தன. வயதுவந்த மாணவர்களை நீட் தேர்வுக்கு மத்திய அரசு எப்படி அலைக்கழித்ததோ அதற்குச் சற்றும் குறையாமல் இந்த ஐந்து, எட்டாம் வகுப்பு பிஞ்சுகளையும் அலைக்கழிக்க ஆசைப்பட்டது. வேறெந்தவொரு நாடும் தம் குழந்தைகளின் மீது இவ்வளவு பெரிய வன்மத்தைக் காட்ட முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு நகர்வும் நேரடியாகப் பொதுச் சமூகத்தின் மீதான யுத்தமாகவே இருந்துவருவது தற்செயலானதா? தாம் நடத்தும் அனைத்து யுத்தங்களையும் பொதுமக்களின் நலனுக்கானவையே என்று எப்படித்தான் இந்த ஆளுவோர்களால் சொல்ல முடிகின்றதோ, நமக்குத் தெரியவில்லை.
இந்தத் தலையங்கம் எழுதப்படும்போது, தமிழகக் கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் இந்த ஆண்டில் பொதுத் தேர்வுமுறை கிடையாதென்றும் அதற்கான ஆணையை அரசு பிறப்பிக்கவில்லையென்றும் கூறியிருக்கிறார். இது வரவேற்கத் தக்க விஷயம். ஆனால் அமைச்சரின் கருத்து இன்னும் குழந்தைமைகளுக்கு ஆதரவாகத் திரும்பிவிடவில்லை. இந்த ஆண்டு அந்தத் தேர்வு இல்லை என்றுதான் செங்கோட்டையன் சொல்கிறாரே தவிர, அப்படியான கட்டாயப் பொதுத்தேர்வைத் தம் கட்சி ஒருநாளும் ஆதரிக்காது, அமல்படுத்தாது என்று சொல்லத் துணியவில்லை. வரக்கூடிய தேர்தல்களில் தம்மைத் தோற்கடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் விளைவால் சொல்லப்பட்ட மறுப்பாக மட்டுமே செங்கோட்டையனின் அறிவிப்பைக் கருத வேண்டும். பழமைவாதச் சூளைக்குள் பிஞ்சுகளை வேகவைக்கும் சதியைத் திராவிடக் கருத்தியல்களில் காலூன்றிநிற்கும் தம் கட்சியால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று அவரால் அறிவிக்க முடியவில்லை.
திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்கள் அனைவரும் மாண்டுவிட்ட நிலையில், எம்ஜிஆருடனும் ஜெயலலிதாவுடனும் நான்கு தலைமுறைக் காலமாக திராவிடத் தன்மையிலான அரசியல் நடத்தியிருக்கும் மூத்த தலைவர்களில் இன்று செங்கோட்டையனே முதன்மையானவர். அவர் தன் அரசியல் தெளிவைத் தம் இளையோரான முதல்வர், துணை முதல்வர்களுக்கு எடுத்துரைத்து நல்வழி காட்ட வேண்டியவர். அகில இந்திய அளவிலான எந்தவொரு கட்டாயத் தேர்வையும் ஏற்கவியலாது என்று எப்போது தமிழக அரசு அறைகூவுமோ அன்று நம் குழந்தைகளின் வாழ்வும் சிறக்கும்.