மறுக்கப்படும் பொதுவெளிகள்
அண்மைக் காலத்திய இரு நிகழ்வுகள் பொதுப் புத்தியை நிலைகுலையச் செய்துள்ளன; தொடர்ச்சியான விவாதங்களுக்கும் எதிர் விவாதங்களுக்கும் காரணமாகியுள்ளன. சபரிமலை சந்நிதானத்தில் எல்லா வயதைச் சேர்ந்த பெண்களும் அனுமதிக்கப்படவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், சமூக வலைத்தளங்களில் முன்னிருத்தப்பட்ட ‘மீ டூ’ இயக்கத்தின் பகிரங்கப் படுத்தல்களுமே அந்த இரு நிகழ்வுகள். இரண்டும் வெவ்வேறானவை. எனினும் அவை மைய இலக்காகக் கொண்டிருப்பது பெண்களையே. இரண்டு நிகழ்வுகளிலும் பொதுவெளியில் பெண்களுக்குரிய இடம் அளிப்பதை எதிர்க்கும், மறுக்கும், நிராகரிக்கும் வீம்பே வெளிப்படுகிறது.
கேரளம் தனி மாநிலமாக உருவான 1956ஆம் ஆண்டுமுதல் வயது வேற்றுமையின்றிப் பெண்களை, சபரிமலை சந்நிதானத்தில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்துள்ளது. சபரிமலை ஆலயம், பிரத்தியேகமான சூழலில் அமைந்திருப்பது, அடர்ந்த வனப்பகுதியில் பெண்கள் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று முதலில் சொல்லப்பட்டது. அப்படி கட்டுப்பாடு நிலவிய காலத்திலும் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மலை ஏறினார்கள் என்பதை வரலாறு ஊர்ஜிதப்படுத்துகிறது. அனுமதி மறுப்புக்கான அடுத்த காரணமாக பெண்களின் மாதவிடாய் சொல்லப்பட்டது. நைஷ்டிகப் பிரம்மச்சாரியான ஐயப்பனின் தெய்வாம்சம், மாதவிலக்குள்ள பெண்களின் வருகையால் களங்கப்பட்டுவிடும் என்று ஐதிகங்களை உருவாக்கிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. கேரள அரசின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ. நாயர் தமது தாயார் மாதவிலக்குப் பருவத்தில் ஐயப்ப சன்னிதானத்தில் வழிபட்டதை வெளிப்படுத்தினார். ஆக, இந்தக் காரணமும் பொருத்தமற்றதாகிறது. சபரிமலை ஆலயத்துக்கென்று தனித்துவமான சடங்குகளும் ஆசாரங்களும் உள்ளன. அவை பெண்களின் நுழைவை அனுமதிப்பதில்லையென்று உரக்கச் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆசாரமும் எந்தச் சடங்கும் நிரந்தரமானவை அல்ல; தொன்றுதொட்டு வந்தவையும் அல்ல என்பதற்கும் சபரிமலையே சாட்சி. கொடிய வனப்பகுதியில் மண்டலகாலம் விரதமிருந்து மட்டுமே மலைக்குச் செல்ல முடியும் என்ற பக்தி நோக்கம் இன்று கடைப்பிடிக்கப்படுவதில்லை. படிபூஜை என்று சொல்லப்படும் சடங்கு மிக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. சபரிமலைப் பாதுகாவலர்கள் அதன் புனிதத்தைப் பேணுவதற்காகச் சொல்லும் காரணங்கள், அவ்வப்போது மாறிவந்திருக்கின்றன என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். சபரிமலை இன்று கடினமான பயணத்தைக் கோரும் பக்தி கேந்திரமல்ல, ஆன்மீகச் சுற்றுலாத் தலம். ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்குக் காலங்களில் திரளும் நிதிப் பெருக்கு இதற்குச் சான்று.
ஓர் ஆன்மீகச் சுற்றுலாத் தலமாக மாறியிருக்கும் நிலையில் பால்வேற்றுமையை முன்னிட்டுப் பெண்களை அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம். இந்தத் தீர்ப்பு ஒருவேளை மேல்முறையீட்டில் மறுவிசாரணைக்கு உள்ளாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதை மறுத்தே விவாதங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. மதச்சார்பற்ற நாடு என்ற நிலையில் சடங்குகளை விடவும் மரபை விடவும் மதிக்கப்படவேண்டியது அரசியல் சட்டமே. அது இருபாலரையும் சமஉரிமை கொண்டவர்களாகவே கருதுகிறது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்தை உதாசீனப்படுத்துவது என்றே பொருள்படும். சாதி, மத, சமுதாய அமைப்புகளின் விதிகளும் செயல்முறைகளும் ஆண் மையக் கருத்தாக்கங்களையே கொண்டிருப்பவை. அதன் மூலமே அதிகாரம் காலங்காலமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் குலைந்துவிடும் என்ற அச்சமே பொதுவெளிக்குள் அவர்களுக்கு அனுமதி மறுக்கிறதே தவிர ஐயப்ப பக்தியோ ஆசாரப் பற்றோ அல்ல.
இந்த அச்சத்தின் விளைவும் அதிகாரம் பறிபோகும் என்ற பதற்றமுமே ‘மீ டூ’ இயக்கத்தைப் பற்றிய எதிர்வினைகளிலும் வெளிப்படுகின்றன. சபரிமலை பிரச்சனைக்காவது நீதிமன்றத்தின் பின்துணை இருக்கிறது. ‘மீ டூ’ இயக்கம் தன்னிச்சையான எழுச்சி கொண்டது. தொழில் இடங்களிலும் பிற சூழல்களிலும் பெண்கள் பாலியல் நோக்கில் சீண்டப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் தமக்கிழைக்கப்பட்ட அநீதியை ஒரு பெண் வெளிப்படையாகப் பேச இடமளிக்கப்பட்டதில்லை. சமூக ஊடகங்களின் பரவலாக்கம் அவளுக்கு அதற்கான சுதந்திரத்தையும் துணிவையும் அளித்திருக்கிறது; அதன் விளைவே ‘மீ டூ.’
ஆண்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சில பெண்கள் சமூக ஊடகத்தளத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களது துணிச்சலான நடவடிக்கை பொருட்படுத்தப்படுவதற்கும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் பதிலாக அவர்களது குரலைக் களங்கப்படுத்தும் செயலே தமிழ் வெகுஜன ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் சொல்கிறார் என்று கேள்வி எழுப்புவதும், குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றி விசாரணை மேற்கொள்ளாமல் புகார் சொன்னவரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுமான முயற்சிகள் நடக்கின்றன. பாடகி ஒருவர் தனக்கு நேர்ந்த அவலத்தைச் சொல்லத் தொடங்கியதும் அவரால் சுட்டப்பட்ட நபருக்காக ஊடகங்கள் வாதாடின; பாடகியைப் பொது அரங்கில் இழிவுபடுத்தின. ஆனால் அவர் முன்வைத்த குற்றச்சாட்டு பொய்யானதல்ல என்பதை அவரைப் போலவே பாதிப்புக்குள்ளான வேறு பலரும் வெளிப்படுத்தினர். இவற்றை ஊடகங்கள் பரபரப்புத் தீனியாகக் கருதின. பெண்களைக் கீழிறக்கும் வாய்ப்பாக எடுத்துக்கொண்டன. ஊடகங்களில் நிலவுவதும் ஆண்மைய அதிகாரமே. எனவே அதைக் கேள்விக்குள்ளாக்கும் பெண் குரலை மழுங்கடிக்க முயன்றன. பொதுவெளியில் பெண்ணுக்கு அதிகாரத்தை அளித்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு மறுக்கின்றன. முன்சொன்னதுபோல இதுவும் ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒன்றே.
பெண்கள் நுழைவதால் ஆலயத்தின் புனிதம் பாழாகுமென்றால், பெண்கள் குரலெழுப்பினால் அதிகாரம் நொறுங்குமென்றால் அந்தப் புனிதமும் அதிகாரமும் யாருக்கானவை?