காலா
நாயகனுக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களைத் தாராவிக்குக் கூட்டிச் செல்கிற படம் ‘காலா.’ முந்தைய படம் போலன்றி முழுக்க முழுக்க தாராவியில் நடக்கிறது. காலா பிறந்தது முதலே அங்கு வாழ்கிறான். இறுதிவரை தாராவி நிலத்தை அங்கு வாழும் மக்களிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் போராடுகிறான். ‘விழித்திரு’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் தடுத்த நிறுத்தமுடியாத அத்துமீறலை காலாவின் நுழைவு தற்காலிகமாக வெல்கிறது. ஒரு தாதாவை இன்னொரு தாதாதான் அடக்க முடியும் என்கிற பெருவழக்குப் படத்தின் கதையாடல் இங்கிருந்து தொடங்குகிறது.
எதிரி ஹரிதேவைத் தாதாவாக மட்டுமின்றி அவனை மேல் ஜாதியினனாகவும் மதவாதியாகவும் மகாராட்டினன் என்கிற மொழி-நில அடையாளத்துடனும் காட்டுகிறார் பா. ரஞ்சித். அவனது அடியாட்களுக்கும் அந்த அடையாளங்கள் தரப்படுவதால் அவன் ஒரு சேனைத் தலைவனாக உள்ளான். அச்சேனை இந்துத்வாவின் குறியீடாக உள்ளது. இந்துத்வா அரசியலில் முக்கிய பங்கு பெறுவது ராம பக்தி. படம் ராமனை வெளியிலிருந்து எதிர்க்கவில்லை. ராமாயணக் கதையை நெடிய உருவகமாகப் படத்திற்குள் இடம்பெறவைத்து அதை எதிர்க்கிறது.
காலா ‘ராவண காவியம்’ புத்தகத்தை வைத்திருக்கிறான். ரஞ்சித் புத்தகச் சாட்சிகளை வைத்துக் கதாபாத்திரங்களை நிலைநிறுத்துவார். ‘கபாலி’யில் பாலய்யாவின் புத்தகம். இதில் ராவணன் பற்றிய புத்தகம், அவர்களது கல்வி, அவர்களின் செயல்களுக்குச் சான்றுகள் பகர்கின்றன. அது தவிர, குறியீட்டுத் தன்மையுடன் கூடிய பல தலைவர்களின் படங்கள், வாசகங்கள், பாடல் வரிகள் என்று எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லிவிடவேண்டும் என்கிற வேகம் கொண்டுள்ளாரோ இயக்குநர் என்று எண்ணும் வண்ணம் அவை படம் முழுவதிலும் நிறைந்துள்ளன. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள், ரியல் எஸ்டேட் ஆசாமிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் இந்துத்வா தலைமையில் ஒன்றுகூடுவதைப் படம் குழப்பமின்றிச் சொல்கிறது. காலா, ராவணன் என்று அறியப்படுகிறான். தன்னை ராமனாக நினைத்துக்கொள்ளும் ஹரிதேவ் காலாவை ராவணன் என்று கருதுவதோடு மட்டுமின்றிக் காலாவும் தன்னை ராவணனாகக் காண்கிறான்.
மேன்மையான குணங்கள் பெற்றிருந்தாலும் ராவணனை ஓர் அரக்கனாகச் சித்திரிப்பது ராமாயணம். அதேசமயம் ராவணன் கடவுளாலும் வெல்லப்படமுடியாத சாத்தான் அல்ல. எல்லா அரக்கர்களுக்கும் இந்தியப் புராணங் களில் உய்வுண்டு. ஏதோ ஒரு விதியின் பொருட்டு அவர்கள் அவ்வாறு படைக்கப்படுகிறார்கள். எனவே புராணத்தி லேயே அவன்மீது இரக்கம் காட்டப்பட்டுள்ளது. ராவணனை வெவ்வேறு ஆளுமைகளாகப் பார்க்கும் பார்வைகள் ராமாயணத்தில் உள்ளன. ராவணனைத் தவறிழைக்கப்பட்டவனாகப் பார்ப்பதில் திராவிடக் கருத்தாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. வடக்கு-தெற்குச் சொல்லாடல்களில் ராவணன் பாத்திரம் முக்கிய பங்காற்றியுள்ளது.
கரிகாலன் என்கிற தனது தமிழ் அடையாளத்தைப் பெருமையாகக் கருதுகிறான் காலா. எதிரியை எச்சரிக்கும் போது தான் `காலா` அதாவது `எமன்` என்று தன்னை நீட்டித்துக்
கொள்கிறான். ரவுடி என்கிற முத்திரை தன்மீது குத்தப்பட்டிருப்பதையும் அவன் ஒரு சமயத்தில் பிரத்யேகமான பொருளில் நியாயப்படுத்துகிறான். தனது சொந்த இழப்புகள் பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. அதையொட்டிப் பழிவாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவன் நினைப்பதில்லை. ஒட்டுமொத்த தாராவி மக்களுக்கும் புதிய வாழ்வு வேண்டும் என்று நினைக்கிறான். காலா ஒரு நாத்திகவாதியாகக் காண்பிக்கப்படவில்லை. அதேசமயம் புத்தர் அவன் பின்னால் காட்சி கொண்டாலும் அவன் எந்த மதத்தையும் சேர்ந்தவனாகவும் இல்லை. தான் என்னவாக இருக்கிறானோ அந்த அடையாளங்களை மறுத்துவிட அவன் தயாராக இல்லை. ராவணன் அவனுக்கு ஒத்திசைவைத் தரும் ஒரு பிம்பம். ராமாயணத்தின் கிளைக் கதைகளுக்குள் சிக்கிவிடாது ராமன் - ராவணன் என்கிற அதன் பெருங்கதை நீரோட்டத்தை விட்டகலாத திரைக்கதையில் தனது போராட்டத்தை நடத்துபவனாக அவன் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. நில ஆசையுடன் தென்னகம் நோக்கித் தனது படைகளுடன் ராமன் நகர்ந்ததாகவும் கதைகளுண்டு. ஆனால் எந்த ராமாயணத்திலும் ராமன் கொல்லப்படவில்லை. காலாவில் அது நடக்கிறது. காவியச் சிறப்புகளற்ற, தீண்டாமை பாராட்டுகிற, குடிமக்களுக்கெதிரான ஓர் இந்துத்வா ராமனுக்கு அந்த முடிவு கிடைக்கிறது.
காலா, ஹரி ஆகியோரின் இரு சந்திப்புகளில் அவர்களின் அரசியல் அனைத்தும் வெளிப்படுகின்றன. படத்தின் முக்கியமான காட்சிகளென இவற்றைக் கூறமுடியும். காலாவின் வீட்டிற்கு முதன்முறையாக ஹரி வருகிறான். காலாவின் மனைவி அவனை விருந்தினனாக வரவேற்றுக் குடிக்கத் தண்ணீர் தருகிறாள். அதை அவன் மறுத்துவிடுகிறான். காரணம் தெரிந்ததுதான். அந்தச் சந்திப்பு எதையும் எட்டவில்லை, இருவருக்குமான பகையை வளர்த்ததைத்தவிர. ஹரியின் வீட்டிற்கு காலா வருகிறான். காலாவைக் கொல்ல நினைத்து காலாவின் மனைவியும் மகனும் கொல்லப்பட்டு விட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறான் ஹரி. காலாவைப் பார்க்கும்போது தனக்கு குற்றவுணர்வு ஏற்படுவதாகவும் எனவே அவனை வீட்டிற்குள் நுழைய அனுமதித்ததாகவும் சொல்கிறான். அப்படியெல்லாம் குற்றவுணர்வு அடையக்கூடியவனா ஹரி என்கிற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. காலாவைத் தன்னெதிரில் அமர வைக்கிறான். தன் பேத்தியை அழைத்து அவனுக்குத் தண்ணீர் கொடுக்கச் சொல்கிறான். அவனது காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொள் என்கிறானே, அதெப்படி? தீண்டாமை பாராட்டுபவன் இப்படியெல்லாமா வீட்டிற்கு வந்த விருந்தாளி என்பதற்காக காலாவிடம் நடந்துகொள்வான்? தீண்டாமை என்பது ஆதாயம் தேடும் அரசியல். அதைச் சற்றே தளர்த்துவதால் அதைவிட பெரிய அதிகாரம் கிடைக்குமென்றால் தீண்டாமையைத் தள்ளிப்போடலாம்தானே... அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் காலா அவனது உண்மை சொரூபத்தை அம்பலப்படுத்துகிறான். “சுத்தம்.கிளீன், ப்யூர் இதெல்லாம் உன் முகமூடி. உனக்கு என்ன வேணும், நிலமா?” உலகின் நிலையாமை பற்றி நினைவூட்டுகிறான். அதற்கு ஹரி ஏளனமாகப் பதில் சொல்கிறான்; தனக்கு சந்தோஷம் அளிக்கக்கூடியது, நிலம் தன் பெயரில் இருப்பதுதான் என்கிறான். இந்துத்வாவிற்கு ராமன் முக்கியமில்லை. ராமாயணம் முக்கியமில்லை. இந்து மதமும் முக்கியமில்லை. நிலம் மீதான அதிகாரம் தேவை. அதை மக்களின் மீதான அதிகாரமாக்குவது எளிது. நிலமென்பது நாடென்றும் புரிந்துகொள்ளவேண்டும்.
கறுப்பு பற்றிய விளக்கங்களினூடாக ‘தூய்மை பாரதம்’ என்கிற கூப்பாடு விமர்சிக்கப்படுகிறது. தாராவி வாசிகள் போராட்டத்தின்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்திற்கான இடம் தாராவி என்கிறார்கள். தாராவிதான் மும்பையைத் தூய்மைப்படுத்துகிறது. மும்பையின் வெண்மை தாராவியின் கறுப்பிலிருந்து பெறப்படுகிறது.
காலா குண்டடிபட்டுச் சாகிறான். தங்களுக்காக உயிர்நீத்த மாவீரன் தங்களுடனேயே வாழ்வதாக மக்கள் உணர்கிறார்கள். இயேசுவைப் போல் அவன் உயிர்த்தெழுவான் என்று ஒரு பாதிரியார் கூறுகிறார்.ஆனால் நாட்டார் தெய்வமாக அவன் மாறவில்லை. எண்ணற்ற காலாக்களாக அவன் மறுபிறவி எடுக்கிறான்.
காலில் விழுதல் என்கிற அடையாள அதிகாரத்தை எதிர்க்கும் காட்சிகள் இதில் உள்ளன. கபாலியில் கோட்டைக் கழற்றுமாறு சொல்லும் போது அவனது சகாக்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று அவனிடம் சொல்வார்கள். காலாவில் `காலா, நீ காலில் விழாதே என்று யாரும் சொல்வதில்லை. காலாவே அதற் கெதிராக இருக்கிறான். கட்டாயப் படுத்திக் காலில் விழவைப்பதன் மூலம் ஒருவனை அடிமைகொள்ள முடிகிறது. அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் மன்னன் சிவாஜி, காகபட்டர் முன்பாக மண்டியிடுவான். சுயமரியாதைக் கதாநாயகனான தளபதி சந்திரமோகன் ‘மராட்டியமே மண்டியிடாதே, வீரமே வீழ்ச்சியுறாதே’ என்று பதறுவான். சிவாஜி மண்டியிட்டுவிட்டு, பின்னர் அதற்காக வருந்துவான். காலா அந்தத் தவற்றைச் செய்வதில்லை. அவனது மாஜிக் காதலி செரினா அப்படியான ஒரு காட்சியில் தன்னிலையை உணர்வ தாகக் காட்டப்படுகிறது. காலா என்ன சொல்லியும் விளங்கிக்கொள்ள முடியாமல் ஹரியிடம் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்டித்தருமாறு செரினா வேண்டிக்கேட்கிறாள். அவள் பெயரை வைத்து அவள் யார் என்பதைக் கணக்கிடுகிறான். அவளுடைய மணவாழ்வு பற்றிக் கேட்கிறான். ‘நான் ஷிவீஸீரீறீமீ னீஷீtலீமீக்ஷீ’ என்கிறாள்; அது அவனது செவிக்கு உவப்பான செய்தி அல்ல. செரினா அவனுடைய காலில் விழவேண்டிய சூழல் உருவாக்கப்படுகிறது. ஒரு பெண்ணை மதிக்கத் தெரியாதவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை வைத்திருக்க முடியும்? அவள் வெளியேறுகிறாள். ஒரு பெண்ணியவாதியாக அவள் இந்துத்வாவைப் புரிந்து கொள்ளும் காட்சி அது.
ரஞ்சித்தைத் தவிர படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய வர்கள் நடிகர்கள். அவர்களில் நானா படேகர் வேறு ரகம். பலம் வாய்ந்த சூழ்ச்சிக்காரக் கதாபாத்திரத்தை ஏற்றவராய்ச் சுற்றிலும் நடப்பவற்றை உள்வாங்கிக்கொண்ட பின்னர் தன்னிலையை வெளிப்படுத்தும் நடிப்புத்திறன் அவருடையது. ஆனாலும் ரஜினிக்குத்தான் ஃபுல் மார்க். இந்தியாவின் பெரும் சூப்பர்ஸ்டார் அவர். இயக்குநரிடம் தன்னை முழுதாக ஒப்படைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்காட்சி கறுப்பு, சிவப்பு, நீலம் என்று வண்ணமயமான கோலாகலத்துடன் முடிகிறது. ஹரிதேவின் வெள்ளையுடை கறுப்பாய் மாறும் தருணத்தில் அவனும் தொலைந்துபோகிறான். நில அபகரிப்பிற்கெதிரான போராட்டங்கள் படங்களில் வெளிவந்துள்ளன. இதிலும் அது தொடர்கிறது. தங்கள் உரிமைகளை நன்குணர்ந்த தாழ்த்தப்பட்டவர்களின் பார்வை வாயிலாக மனுதர்மத்திற்கும் இந்துத்வாவிற்கும் எதிரான படமாக வந்திருப்பது காலாவின் சிறப்பு.