மொழியே என்னிடம் வெறுப்புக்கொள்ளாதே
“தினசரி வாழ்வில், நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் ‘சாதாரண உலகம்’, ‘சாதாரண வாழ்க்கை’, ‘சாதாரண நிகழ்வுகள்’ போன்ற சொற்றொடர்களை அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப்படும் கவிதையின் மொழியில் எதுவுமே சராசரியானதோ சாதாரணமானதோ அன்று. எந்தச் சிறு கல்லும் அதன் மேலுள்ள எந்த மேகமும் சாதாரணமன்று. எந்த பகலும் அதைத் தொடர்ந்து வரும் எந்த ஓர் இரவும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வாழ்வும் சாதாரணமன்று. உலகில் எவருடைய வாழ்வுமே சாதாரணமன்று.”
விஸ்வாவா சிம்போர்ஸ்கா
நோபல் பரிசு ஏற்புரை, 1996
போலிஷ் மொழிக் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்கா கடந்த பிப்ரவரி ஒன்றாம் நாள் மரணமடைந்தார். இந்த அற்புதமான கவிஞருக்கு 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சமுதாயத்தின்மீது மிகுந்த அக்கறைகொண்ட மனவெளியிலிருந்து எழும் இவருடைய கவிதைகளின் கிண்டல், நகைச்சுவையுடன் கூடிய தொனி வாசகனை மிகவும் பாதிக்கிறது. சிரித்த பிறகு, “ஏன் சிரித்தோம்?” என்னும் குற்