பதிப்பும் பூசலும் சி.வை. தாமோதரம் பிள்ளையும் உ.வே. சாமிநாதையரும்
'பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்’ என்பார் திரு.வி.க. அவர் தமிழ் முனிவர். விவாதங்களையும் சர்ச்சைகளையும் விரும்பாத தமிழ்த் தென்றல். ஆனால் தமிழ்ப் புலமை உலகில் சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோரின் இடம், பங்கு, பணி ஆகியன தொடர்ந்து கருத்து மோதலுக்கு உரியதாகவே இருந்து வருகின்றன. சாதி (பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பார்ப்பனர் - வேளாளர்), சமயம் (இந்து/சைவம் - கிறித்தவம்; ஸ்மார்த்தர் - சைவர்), பிராந்தியம் (ஈழம் - தமிழகம்; யாழ்ப்பாணம் - தமிழகம்) என்ற அச்சுகளில் இந்தக் கருத்து மோதல்கள் சுழன்று வந்திருக்கின்றன.
திராவிட/தமிழ் இயக்கத்தின் ஒரு சரட்டில் உ.வே.சா.வுக்கு எதிரான மனப்பான்மை இழையோடியிருக்கிறது. பெரியாரின் எழுத்துகளிலும் அவருடைய ‘குடிஅரசு’ இதழிலும் உ.வே.சா. பற்றி