சின்ன விஷயங்களின் மனிதன் நான்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வாண்டுக்கான இயல் விருது வழங்கும் விழா ஜுன் 10, 2018 அன்று டொரண்டோவில் சிறப்பாக நடைபெற்றது.
நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அரை நூற்றாண்டுக் காலமாக அயராது இயங்கி அரிய படைப்புகளைப் பங்களித்திருக்கும் கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற கல்யாணசுந்தரம், சிவசங்கரன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைப் பெற்றார். ‘சின்ன விஷயங்களின் மனிதன் நான்’ என்று தனது ஏற்புரையில் வண்ணதாசன் குறிப்பிட்டார். உண்மையில் அவர் சாதனைகளின் பெரும் மனிதர் என்பதை அவரது ஆக்கங்கள் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. விழாவில் ‘கல்யாண்ஜி’யின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அந்தரப் பூ’ வெளியிடப்பட்டது. பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அ. முத்துலிங்கம் நூலைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் ஆண்டின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளும் அளிக்கப்பட்டன. தமிழ்மகன் (வேங்கை நங்கூரத்தின் ஜுன் குறிப்புகள் - புனைவு), இ. பாலசுந்தரம் (கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும் - அ புனைவு), பா. அகிலன் (அம்மை - கவிதை), டி.ஐ. அரவிந்தன் (பால சரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் - மொழிபெயர்ப்பு), அனுக் அருட்பிரகாசம் (The Story of a Brief Marriage - ஆங்கில ஆக்கம்) ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. காலச்சுவடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் சுந்தர ராமசாமி கணிமை விருதை தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிய சசிதரன் பத்மநாபன் பெற்றார். புகழ்பெற்ற இயக்குநர் தீபா மேத்தா, நியூயார்க் ஸடோனி புரூக் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன் உள்ளிட்டவர்களுடன் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டது விழாவின்
சிறப்பு.