‘நின்று கொல்லும் அரசு’ தலையங்கத்தில் மனிதனுக்கு அதிகாரத்தின் மூலம் இழைக் கப்படும் அநீதி, அக்கிரமம், அநியாயம் வெளிப்பட்டிருக் கிறது. வாழ்வதற்கான அடிப்படை விசயங்களில் கோளாறுகள் இருந்தால் அதனைச் சரிசெய்யச் சொல்லி மக்கள் எங்கே சென்று முறையிடுவார்கள்? மக்களை மாக்களாக நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால் இந்த தேசத்தில் மாக்களுக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லையே, என்ன இது விந்தை! தனியார் ஆலைக்கு இவ்வளவு உயிர்ப் பலியா?
கர்நாடக ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரம் ஆச்சரியமான ஒன்றுதான். ஒவ்வொரு மாநில
ஆளுநரும் ஒவ்வொருவிதமான முடிவை எடுப்பது வியப்பே. ஆட்சியமைக்க பெரும்பான்மை உறுப்பினர் என்ற அளவுகோல் சரி எனில், காங்கிரஸ் + மதச்சார்பற்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அழைத்திருக்க வேண்டும். அப்படி சில மாநிலங்களில் அழைத்த ஆளுநர்களும் உண்டுதானே? சரி. தனிப் பெருங்கட்சி என்ற அடிப்படையில் மெஜாரிட்டி இல்லை என்றபோதும் ஆட்சியமைக்க அழைத்தால் அங்கே மெஜாரிட்டியை நிரூபிக்க தவறுதானே நடக்கும். அதுவும் 15 நாட்கள் அவகாசம் ஏன்? எடியூரப்பாவே 7 நாட்கள் கேட்டபோதும் இவர் 15 நாட்கள் கொடுத்தது எதற்காக என்ற அதிர்ச்சியை நாடே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. உச்ச நீதிமன்றம் மட்டும் இல்லையென்றால் அரசியல்வாதிகள் நாட்டை என்ன செய்திருப்பார்களோ என்ற பயம் வருகிறது.
கூத்தப்பாடி பழனி
தருமபுரி
தலையங்கம் அர்த்த மிக்கதாகவே உள்ளது. சுதந்திர இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சொந்த மக்களைக் காக்க வேண்டிய அரசே ஒரு பெருநிறுவன நலனுக்காக மக்களைக் கொன்று குவித்தது. குற்ற உணர்வுடன் இரங்கலோ அஞ்சலியோ செலுத்தாத அரசாக வரலாற்றில் கறை படிந்த பக்கத்தில் இடம் பெற்றுவிட்டன மைய, மாநில அரசுகள்.
இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாடு போர்க்களமாகிக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. இது ஆளும் வர்க்கத்திற்குச் சவாலான நிலையில் அரசு எனும் அடக்குமுறைக் கருவி தாமே வன்முறையை ஏவிவிட்டு சென்னை கடற்கரைப் போரை அடக்கியது. ஆயினும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்தன போராட்டங்கள். அதன் ஒரு பகுதியான முத்துநகர் போரில் ரத்தக் குளியல் மூலம் 13 உயிர்களைக் கொன்று குவித்தது அரக்க அரசு. தலையங்கத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டவாறு சிரமறுக்கும் பொழுதுபோக்கால் ஆளும் வர்க்கம் குற்றவாளியாய் மக்கள் முன் நிற்கிறது.
இனியொரு போராட்டம் தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது என்கிற இலக்குடன் மைய, மாநில அரசுகள் வகுத்த வியூகம் அவற்றுக்கு வெற்றி பெற்றுத் தந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் தேர்தல் களத்தில் மௌனப் புரட்சியை மக்கள் நிகழ்த்துவர் என்பதில் ஐயமில்லை. உரிமைக்கான போராட்டம் சுவாசத்திற்கு நிகரானது. அதை முற்றாக முடக்கிப் போட யாராலும் முடியாது.
பெரணமல்லூர் சேகரன்
மின்னஞ்சல் வழி
தலையங்கத்தில் இடம்பெற்ற புகைப்படமே ஸ்டெர்லைட்டின் கொடூரத்தை உணர்த்தியது. மூன்று மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்ட ஆபத்திற்கு நம் ஆட்சியாளர்கள் சிவப்புக்கம்பளம் விரித்தமை யூகிக்க முடியாத விந்தை இல்லை. தூய்மையான காற்றுக்காக மட்டுமே போராடிய அம்மக்களின்மீது ஏவப்பட்ட காட்டுமிராண்டிச் செயலைக் காலம் மன்னிக்காது. EPW பக்கங்கள் காலச்சுவடின் அணிகலன்களாக மாறுகின்றன. சித்துராஜின் ‘உண்ணாமுலை’ புதுமையாக இருந்தது. எழுத்தை மட்டுமே முழுநேரப் பணியாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பாலகுமாரன் தீவிர இலக்கிய தளத்தில் இயங்கியதில்லையெனினும் தீவிர இலக்கிய வாசிப்பின் வாயில் போன்று இருந்தமையை மறுக்க முடியாது. அஞ்சலிக் கட்டுரையில் இலக்கிய இடம் குறித்த விமர்சனம் ஏற்புடையது இல்லை. ‘சமாதானம்’ போன்ற நபர்கள் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சமூகம் அவர்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையாகத்தான் கருதிவருகிறது. மீசை குறித்த கட்டுரை வியப்பாக இருந்தது. ‘பழைய பேப்பர்’ கட்டுரை ஞானி என்ற சமரசமற்ற இதழியலாளனைப் போற்றியது.
சரவணன்
மதுராந்தகம்
தலையங்கம், மே 2013 இல்காத்திரத் தன்மையோடு விரிவாகச் சொல்லப்பட்டிருந்ததன் சுருக்கம் பலவற்றை மேலும் நினைவுபடுத்தி விரிந்து செல்கிறது. தன் குடிமக்களைக் காப்பாற்றாமல் கார்ப்பரேட்டுக்கும் நயவஞ்சக அரசிற்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டு அவர்களின் சொற்களுக்குத் தலையாட்டும் ஓர் அரசு தன்மக்களை மனிதராகப் பார்க்காமல் அஃறிணையைவிட கீழானவராகக் கருதிச் செயல்பட்டதற்கான எதிர்வினையைச் சொல்வதாக இருந்தது வரவேற்கத்தக்கது.
தனிமனிதனையும் தன்சுயலாபத்தையும் மட்டுமே தாரகமந்திரமாகக் கொண்டு செயல்படும் அரசிற்கு மக்களின் உயிர்கள் விளையாட்டாகவே இருக்கின்றன. வேதாந்தாக் குழுமப் பாதுகாப்பில் இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க சுயபரிசோதனை செய்துகொண்டு மக்களைக் காப்பது காலத்தின் கட்டாயம்.
இவ்விதழில் வந்துள்ள முக்கியகட்டுரைகளில் ஒன்று ஸ்டெர்லைட் போராட்டத்தின் வரலாறு தமிழில் மு.குமரேசன் நன்றாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். கட்டுரையாளர் ராஜசேகரன் வரலாற்றுப் பார்வையில், புள்ளிவிவர அடிப்படையில் அசைவியக்கம், போராட்டம், விளைவு என மிகவிரிவாக, சிறப்பாக எழுதியுள்ளார்.
அரசாங்கம் செய்த மூடிமறைப்பு வேலைகள், மக்கள் விடாப்பிடியாக போராட்டம் நடத்தியதைக்கண்டு திகைத்தமை, அரச ரூபத்தில் கார்ப்பரேட்டின் கோரத்தாண்டவம் போன்றன வேதனைக்குரியவை. விரிவாக்கத்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்ற அச்சத்தையும் அதனால் நேர்ந்த துர்ச் சம்பவங்களையும் தேவையான விவரங்களோடு கொடுத்த ஆசிரியருக்கும் இதழுக்கும் நன்றிகள்.
பாலகுமாரனுக்காக போகன்சங்கர் எழுதிய
அஞ்சலிக் கட்டுரையை இன்னும் அவர் நெருக்கமாக எழுதியிருக்கலாமே என்றுஎண்ணத் தோன்றியது. பாலகுமாரனின் எழுத்து, உடல்நிலை, சுஜாதா, தி.ஜா.ரா. குறித்தும் கொடுக்கப்பட்டமை நன்று. இலக்கியத்தைத் தாண்டிய அவரின் செயல்பாடும் எழுத்தின் பிரதி ஏற்படுத்திய சூழலும், வாசகர்கள் பார்த்த, பார்க்கும் நிலையையும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மா.ச. இளங்கோமணியின் ‘மீசை எனும் மயிர்’ கட்டுரை, மீசை மீதான புரிதலை வெளிப்படுத்தியிருந்தது. வரலாறு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் கட்டுரை எழுதப்பட்டமை சிறப்பு. தரவுகளோடு கொடுத்தமை நன்று. காலமாற்றத்தில் மீசை குறித்த இடம், பார்வை, பல்வேறுவகைகள், அதற்காகச் சிறப்பூதியம் கொடுத்த - கொடுக்கும் விதம் எனப் பலத் தகவல்களைக் கட்டுரை விரிவாகப் பேசியுள்ளது. சமீப இலக்கியத்தில் வந்துள்ள குறிப்புகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தின.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு- & 600077
‘நின்று கொல்லும் அரசு’ தலையங்கம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. சட்டத்தைப் பாதுகாக்கும் காவலர்கள் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாண்டுப் போராடும் மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். மக்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் எப்படி பெரும் பணமுதலைகளின் கைப்பாவையாக மாறியுள்ளன என்பதனை விளக்குவது தலையங்கத்தின் சிறப்பாகும்.
இளங்கோவன் ராஜசேகரனின் ‘ஸ்டெர்லைட் போராட்டத்தின் வரலாறு’ கட்டுரை இதுவரையிலான மக்களின் செயல்பாடுகளையும், ஆலை நிர்வாகம், அரசுகளின் செயல்படா தன்மைகளையும் விளக்குவதாக உள்ளது. ஃப்ரண்ட் லைன் இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை மு. குமரேசன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
வாழும்போது போராட்டங்களைச் சந்திக்கும் மனிதன் சில நேரங்களில் இறந்து பிணமான நிலையிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்கிறது. இதனைக் கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட நான்கு திரைப்படங்கள் குறித்த ரதனின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. மா.ச. இளங்கோமணியின் ‘மீசை எனும் மயிர்’ மிகவும் சுவாரசியமான கட்டுரையாகும். மீசைக்குப் பின் இவ்வளவு வரலாறா என வியப்பாக உள்ளது. மார்பகப் புற்று நோயால் விழும் பெண்ணின் கதையைச் சொல்லும் சித்துராஜ் பொன்ராஜின் ‘உண்ணாமுலை’ சர்வாதிகாரத்தின் பிடியில் மாட்டிக்கொண்ட மக்களின் வலியைச் சொல்லும் ஃபலீஹா ஹஸனின் ‘புதைகுழி’ அரச பயங்கரவாதத்தினால் ஏற்படும் துயரங்களை ஒற்றை மனிதனை முன்வைத்துச் சொல்லும் ஜே.கே.யின் ‘சமாதானத்தின் கதை’ எனும் மூன்று சிறுகதைகளும் வேறுவேறு கதைக்களன்களில் நடந்தாலும் பொதுவில் மனித வாழ்வின் துயரங்களையே பேசுகின்றன. எவ்வளவு துயரங்கள் சூழ்ந்தபோதிலும் மனிதன் வாழவே எத்தனிக்கிறான்.
சா.ரு. மணிவில்லன்
சென்னை -& 87
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக எவரும் இனிவரும் காலங்களில் சிறு அசைவைக் கூட மேற்கொள்ளக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும் இது.
தொண்ணூற்றொன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்துப் பேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரின் பட்டியல் உளவுத்துறையிடம் இருந்திருக்கும். நிகழ்ச்சிகளை வீடியோ, ஆடியோவாக எடுத்து வைத்திருப்பது கடினமான விஷயமல்ல.
பயங்கரவாதி எனக் காவல்துறை கருதும் நபர் எவரையும் முன்கூட்டியே கைது செய்வதும் சிரமமானதல்ல; ரவுடிகளையும் அடையாளம் தெரியும். நூறாவது நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தம் அலுவலகத்தில் ஏன் இல்லை? 144 தடை உத்தரவை மீறி மக்கள் திரள் அலுவலகம் நோக்கி வரும் என்பது ஆட்சியருக்குத் தெரியுமல்லவா? துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் ஆட்சியர் எங்கிருந்தார் என்பதைக் கேட்டு விடை காணும் நோக்கம் முதல்வருக்கு ஏன் இன்னும் ஏற்படவில்லை?
மாவட்ட வருவாய் அலுவலர் எங்கே சென்றார்? மிக முக்கியமான தருணத்தில் அலுவலகத்தில் இல்லாத மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டாமா? இங்கே கொல்லப்பட்டவரின் வாய்க்குள் குண்டு பாய்ந்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வாயைத் திறக்காதே என்பதுதான் சொல்ல வந்த செய்தி.
தமிழ்நாட்டுக்குள் மோடி வரக்கூடாதென நிகழ்ந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் கடுப்பாகிப் போன மோடியின் ஆசியுடன் நடந்ததே துப்பாக்கிச் சூடு. ‘தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் முகாம் அமைத்துப் பயிற்சி நடத்துகிறார்கள்’ என்று விடாமல் வதந்தியைப் பரப்பி வரும் பொன். ராதாகிருஷ்ணனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டாமா? காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது என்று அறிக்கைவிட்ட ரஜினி தூத்துக்குடி சென்றதும் விஷமிகளே காரணம் என்று பல்டி அடிக்க ஒரே காரணம் கார்ப்பரேட்டுகளுக்குக் காவடி தூக்கும் மோடிக்கு எடுபிடியாக இருக்க விரும்புவதே. அரசியல் அடிப்படை அறியாத ரஜினி சிறு துரும்பையும் எடுத்துப்
போடாமல் முதல்வராக ஆசைப்படுகிறார். தமிழ்நாட்டை நிரந்தரமாகக் கார்ப்பரேட்களுக்கு அடிமையாக்குவதே ரஜினியின் நோக்கம்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு -& 626 132
ஒரு குவளை சாராயத்திற்கும் ஒரு சில நூறுக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டுப் போடும் நிலைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்ட நிலையில் மண்ணுக்கும் தூய காற்றுக்கும் ஆசைப்படும் மக்களை நோக்கி ‘எடு துப்பாக்கியை!’ சொந்தமக்களைக் கொன்ற அவப்பலி... இதில் கேலிக்கூத்து தீவிரவாதிகள் கலந்துவிட்டார்கள் என்று. செத்தவர்கள் தீவிரவாதிகளா? மண்ணையும் காற்றையும் நேசித்த மக்கள். போராடும் மக்களுக்குக் காவலாக நிற்க வேண்டிய அரசு மக்களைக் கொல்கிறது. பிணம் தின்னும் அரசு. தூத்துக்குடியில் துப்பாக்கி துளைத்த ஓலம் கேட்டு கடவுளே ஓலமிட்டு ஓடிவிட்டான். துணை வட்டாட்சியர் ஆணையிடுகிறார். சுடு... எதிரி யார்? நமக்கு எதிரி பாகிஸ்தானியர் மட்டுமே என்று சொல்லிக் கொடுத்த சரித்திர ஆசிரியர் இன்று உயிருடன் இல்லை. உயிருடன் இருந்திருந்தால் அவருடைய எண்ணத்தை மாற்றியிருப்பார்.
முத்துகாமிக்ஸ் படித்துக்கொண்டிருந்த பருவம்; கான்ஸ்டபிளான என் அப்பாவிடம் கேட்டேன் அப்பாவியாக... ‘அப்பா குறி பார்த்துச் சுடுவீர்களா?’ என் அப்பா சொன்னது பசுமையாக ஞாபகம் இருக்குது.
“ஓ, கந்தசாமியைச் சுட்டா ராமசாமி செத்துப் போய்விடுவான்...” கந்தசாமியோ ராமசாமியோ ஆர்கே. லட்சுமணன் ஓவியத்தில் வரும் அப்பாவிப் பொது ஜனம். என் வீட்டுப் பக்கத்திலிருந்த மாதவன் நாயர் கான்ஸ்டபிள் சொன்னது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இந்த துப்பாக்கிச் சனியன் எல்லாம் எதற்கு? மாதவன் நாயரைச் சுடச் சொல்லியிருந்தால், நிச்சயம் சுட்டிருக்க மாட்டார். சொந்த மக்களைச் சுடுவதற்குத் துப்பாக்கி எதற்கு? வேலையும் வேண்டாம் உன்னுடைய சம்பளமும் வேண்டாம் என்று கேரளா கிளம்பியிருப்பார்.
எஸ். பஞ்சலிங்கம்
மடத்துக்குளம்
2010 செப்டம்பர் 28ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்று, ஆலையைத் தொடர்ந்து நடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆரம்பம் முதலே பல்வேறு விதிமுறை மீறல்களில் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்திருப்பதை அறிந்த பின்னரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அரசும் வாளாவிருந்தது ஏன் என்று போராட்டக்காரர்கள் வினவி வருவதற்கு இன்றுவரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து விடை கிடைக்கப் பெறவில்லை. மேலும் மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆலை அமையக் கூடாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அளவுக்குப் பசுமைக்காடுகள் அமைக்கப்பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த நிபந்தனையையும் புறந்தள்ளியிருக்கிறது வேதாந்தா நிறுவனம். லாபம் ஈட்டிப் பெரும் பணம் குவிப்பதே அதன் நோக்கம்.
பல உயிர்களைப் பலி வாங்கிய பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் தூத்துக்குடியை விட்டு வெளியேற மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஆலை நிர்வாகம். மேலும், “நாங்கள் இந்தியாவில் சட்டத்தை மதிக்கிறோம். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன, மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்ற, மாநில அரசின் விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்படுவோம்,” என்று துணிச்சலோடு சொல்லியிருக்கிறார் வேதாந்த நிறுவன தலைவர் அனில் அகர்வால்.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகள்மீது மக்களுக்கு எதிராகச் செயல்படச் செய்யும் அளவு அதிகாரம் வேதாந்தக் குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எங்கிருந்து வந்தது?” எனும் ஆசிரியரின் கேள்வியில் ஆயிரம் பொருள் பொதிந்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் ஏமாற்று வேலை இனி தமிழகத்தில் செல்லுபடியாகாது. மக்கள் விருப்பமே வெல்லும் என்பதனை இவை போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை