தமிழரும் அவர் தம் சினிமாவும்
தமிழ்நாட்டுக்கு வெளியில் கருத்தரங்குகளில் பங்கெடுக்கும்போது நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி, ஏன் தமிழ்நாட்டில் மட்டும் சினிமா இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? தமிழர்களுக்கு ஏன் திரைப்படங்களில் இத்தகைய நாட்டம்? எப்படி இந்தப் புதிய கலை வடிவம் இங்கு சகல மக்களையும் பைட் பைப்பர் மாதிரி தன் பின்னால் ஈர்த்துக்கொண்டு செல்கின்றது? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட நூறாண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும். வரலாற்றில்தானே எல்லா பிரச்சனைகளின் வேர்களையும் நாம் தேட வேண்டும்!
நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா தோன்றியபோது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓர் அசுரக் குழந்தையின் பிறப்பு என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த ஒரு புத்தம் புதிய கலை தங்கள் கண்முன்னே உருவாகி வளர்வதை யாரும் பொருட்படுத்தவேயில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தொழிலாளி வர்க்கம் என்ற மக்கள் பகுதி உருவ