ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை
1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை அதிகாலை ஆறு மணிகூட ஆகவில்லை. எனது வீட்டு வாசலில் ஒரு வாகனம் நிறுத்தப்படும் ஓசை கேட்டது.
முன்னறையில் நான் கண்களை மூடிப் படுக்கையிலிருந்த போதும் வழமைபோல் முதல் நாள் சம்பவங்களை இரை மீட்டும், அடுத்துச் செய்ய வேண்டியவை பற்றியும் சிந்தித்துக்கொண்டு கிடந்தேன். வாகனம் ஒன்று வந்து வாசலில் நின்ற ஓசை கேட்டதும், ஊரடங்கு நேரம் தளர்த்தப்படுவதற்கு இன்னும் சிறிது நேரம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் எனது மனைவி தெருக்கதவைத் திறந்தாள்.
“இந்தியன் ஆமிக்காரன்கள் வந்து நிற்கிறான்கள்... எழும்புங்கோ...” என்று சற்று மெதுவான குரலில் கூறியபடியே மனைவி என் அறைக்குள் நுழைந்தாள்.
எதிர்பார்க்கப்பட்டவர்கள் தான்... ஆனாலும் இவ்வளவு விரைவாகக் காலையிலேயே வருவார்கள் என்று நினைக்கவில்லை. நான் எழுந்து வெளியே வந்தேன். முதல் நாள் சந்தித்த அந்த