மூன்று சம்பவங்கள்
1
மூன்று சம்பவங்கள் என்னால் என்றுமே மறக்க முடியாத விதத்தில் எனக்குள் வெகு ஆழத்தில் புதைந்திருக்கின்றன. அவற்றின் பின்னாலுள்ள புதிரையும் யாராலும் அவிழ்த்துக் காட்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.
வெள்ளியம்பலம் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். பாவாடை தாவணி அணிந்து தளவாய் அக்ரஹாரம் வழியாகப் பள்ளிக்கூடம் போகும்போது, தெருவிலுள்ள அத்தனை கண்களும் என்னை வெறித்துப் பார்க்கிற மாதிரித் தோன்றும். சென்ற வருடம் முதல் அணிய ஆரம்பித்திருந்த தாவணியை முன்புறம் மேலும் கீழும் தானாகவே அடிக்கடி சரிசெய்து கொள்ளும் அனிச்சைப் பழக்கம் தொற்றியிருந்தது. லேசாகக் கூன்போட்டு நடக்கத் தொடங்கியதும் அந்த நாட்களில்தான். பருவமடைவதற்காகக் காத்திருந்த மாதிரி என் நெஞ்சு அவசரமாகப் பூரிக்கத் தொடங்கியிருந்ததும், வகுப்புத் தோழிகள் அநேகம்பேரைவிட அளவில் மிகப் பெரிதாக வளர்ந்திர