கவரி என்பது மானா?
சூன் 2016 காலச்சுவடு இதழில் மா.ச. இளங்கோமணி எழுதிய ‘மீசை எனும் மயிர்’ கட்டுரையில் சுட்டப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் கவரிமா என்றே குறிப்பிடுகிறார். அது மான் அல்ல; மா என்பது பல பொருள் ஒருசொல். பொதுவாக விலங்கையும் குறிக்கும்.
திருக்குறளுக்கு முன்பே தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் கவரி என்ற விலங்கு பற்றிய குறிப்புள்ளது. தொல்காப்பியர் கவரி பற்றி,
“கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே” (தொல். 1516)
“புல்வாய் புலிஉழையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும்” (தொல். 1535)
“பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறெனற் குரிய” (தொல். 1538)
“புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்லுவாய் நாடிற் பிணையெனப் படுமே” (தொல்.1557)என்று நான்கு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதில் கவரியின் இளமைப் பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர்ஆகியன சுட்டப்பட்டுள்ளன. இதன்வழி கவரியின் இளமைப் பெயர் கன்று என்பதும், ஆண்பாற்பெயர் ஒருத்தல், ஏறு என்பதும், பெண்பாற் பெயர் பிணை என்பதும் பெறப்படும். தொல்காப்பியர் ஓரிடத்தில் கூடக் கவரியை மான் எனச் சுட்டவில்லை
சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரு நூல்களிலும் கவரி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பதிற்.11:21-23, புறநா.43:1-2, பதிற்.90:36, புறநா.132:4-7 ஆகிய நான்கு பாடல்களில் கவரி சுட்டப்பட்டுள்ளது.
‘முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமாக்கள் பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம்புற்களையும் அவை வளர்ந்திருக்கும் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற் கண்டு மகிழும் பெரிய புகழுடைய ஆரியர் நிறைந்து வாழும் இமயம்’
‘சேரநாட்டில் வாழும் மகளிர் தம் கரிய கூந்தலைச் சீவிக் கவரிமயிர் கலந்து கொண்டையிட்டுக் கொண்டு செவ்விய அணிகளைப் பூண்டு காட்டிடத்தே ஊசலாடி மகிழ்வர்.’
“சேரமானின் குதிரைக்குத் தலையிற் கட்டிய தலையாட்டம் கவரி மயிரால் செய்யப் பட்டிருந்தது” என்பன பதிற்றுப்பத்தில் இடம் பெறும் கவரி பற்றிய குறிப்புகள் ஆகும்.
திருக்குறளின் ‘மானம்’ அதிகாரத்தில்,
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்”
என்பதற்கு ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரி மாவைப் போன்ற மானமுடையார் மானம் அழியவரின் உயிர்விடுவர் என்றவாறு1 என்று திருக்குறளின் முதல் உரைகாரரான (கிடைக்கும் உரை) மணக்குடவர் பொருளுரைப்பர். இதனை அடியொற்றியே பரிமேலழகர் உரை வரைவர் பரிதியார். ஒரு மயிர் சிக்கினால் பிராணனையும் விடும் கவரிமான் போல், மானம் வந்தால் பிராணனையும் விடுவர் நல்லோர் என்றவாறு என்பர்2 “தனக்கு அலங்காரம் ஆகிய மயிர்க்கற்றையின் ஒரு மயிர் போகின் மானினத்துப் பின் உயிர் வாழாது. அம்மயிர் துவக்குண்ட இடத்து நின்று வற்றிவிடூஉம் கவரிமா அன்ன கடப்பாடுடையார்”3 எனப்பொருள் உரைப்பர் காளி(லி)ங்கர்.
இதில் மணக்குடவரும் பரிமேலழகரும் கவரியை மா என்க பரிதியாரும் காளிங்கரும் மான் என்கின்றனர். ஆனால் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாது என்னும் கருத்தில் அனைவரும் உடனபடுகின்றனர். இங்ஙனம் பண்டை உரையாசிரியர்கள் மட்டுமின்றித் தற்கால உரையாசிரியர்கள் பலரும் “ஒரு மயிரை இழந்தாலும் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர்கள் மானமிழந்தால் உயிர் வாழமாட்டார்கள்”4 என்றே இதற்குப் பொருள் உரைக்கின்றனர்.
இதனால் கவரி என்பது மானினம், அது தன் உடம்பில் ஒரு மயிர்நீப்பின் இறந்துவிடும், அதனைப் போல மானமுடையோர் மானம் போயின் உயிர்விடுவர் என்ற கருத்து நிலைத்துள்ளமை புலனாகும். மனிதனின் மான உணர்ச்சியை அஃறிணை விலங்காகிய கவரிக்கும் ஏற்றிக் கூற முற்பட்டனர். இதன் விளைவு, “மான்களில் ஒன்றான கவரிமான் மானத்திற் சிறந்ததாகப் பேசப்படுகின்றது”5
“கவரிமான் என்ற ஒருவகை மானின் இயல்பான வாழ்க்கை பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிடுகின்றார்”6 என்பன போன்ற கருத்துகள் காலூன்றிவிட்டன. இதனால் கவரியை மான் எனக் கருதத் தலைப்பட்டனர்.
சங்ககால மான்களில் இரலை, கலை என்ற இரண்டு பிரிவுகள் சுட்டப்பட்டன. இரலையினத்தில் இரலை, நவ்வி, மரையான் என்ற மூவகையும் கலையினத்தில் உழை, கடமா என்ற இரண்டு வகையுமே காணப்படுகின்றன. இதனை “சங்க இலக்கியங்களில் ஐந்து வகை மான்களைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. அவை இரலை, நவ்வி, மரையான், உழை, கடமா என்பனவாகும்”7 என்ற பி.எல்.சாமியின் கூற்று உறுதிப்படுத்தும்.
கழகத் தமிழ் அகராதி ‘கவரிமா’ என்பதற்கு ஒரு விலங்கு”8 என்று பொருள் கூறுகிறது. மான் எனச் சுட்டவில்லை. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் ‘கவரி’ என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. திருக்குறளில் மட்டும் ‘கவரி’ என்ற சிறப்புப் பெயரோடு ‘மா’ என்ற பொதுப்பெயரை இணைத்துக் ‘கவரிமா’ என வழங்கப்பட்டுள்ளது. திருக்குறள் உரையாசிரியர்களின் தவறாகப் புரிந்துகொண்டதால் இது மானினமாகச் சுட்டப்பெற்றுள்ளது.
கவரியின் பயன்பாடு
சங்ககாலத்தில் கவரியின் மயிரை மகளிர் தம் கூந்தலுக்குப் பயன்படுத்தியமையைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. இதனைப் பற்றி “இயற்கையில் நீளமான முடியில்லாதபோது செயற்கை முடியை வைத்துக்கொள்ளுதல் இக்காலத்திய கூந்தல் ஒப்பனை முறைகளில் ஒன்று. பண்டைக் காலத்திலும் இம்முறை இருந்திருக்கிறது. பெண்கள் கவரிமான் மயிரைக் கலந்து முடித்துக்கொண்டனர்”9 என்பார் வெ.வரதராசன்.
மேலும் கவரியின் மயிர்க்கற்றைகளைக் கொண்டு குதிரைக்குத் தலையாட்டமும், வீசுவதற்குச் சாமரமும் செய்துள்ளனர். சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக் காலத்தே இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார் என்னும் புலவர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின் மேல் தன்னையறியாது உறங்கிவிட்டார். வெற்றித் திருவீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறு பிறர் உறங்குவது குற்றமாகும். அது செய்வோர் கொலைத் தண்டனைக்குரியவர். இஃது அக்கால அரசுமுறை. இதனை அறியாதவர் புலவர். அவர்உறங்கியதை அறிந்த இரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவருக்குக் கவரி கொண்டு வீசலுற்றான். விழித்த புலவர் அவனது பேரருளை வியந்து பாடுகிறார்.10 பாடலில் கவரி என்னும் சொல் இல்லை எனினும், அக்காலத்தில் சாமரம் கவரியின் மயிரால் செய்யப் பெற்றிருந்தமையாலே மன்னன் ‘கவரி வீசிய காவலன்’ என அழைக்கப்பட்டுள்ளான்.
இமயத்தில் கவரி (யாக் சீகிரி)
சங்கப்பாடல்கள் கவரியை இமயமலைப் பிரதேசத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. இமயமலையில் பெரும்பாலும் ‘யாக்’ எனப்படும் விலங்கே மயிர்க் கற்றையுடன் காணப்படுகின்றது. இதனை, “இமயமலையில் வாழும் விலங்குகளில் மனிதரோடு பழகி வாழும் விலங்கு ‘யாக்’ எனப்படும். இது சடைமாடு என்றும் அழைக்கப்பெறும். இதையே கவரி என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன”11 என்பர் பி.எல்.சாமி.
உயர்ந்த இடத்தில் குளிர்ந்த சூழலில் வாழும் விலங்கு கவரி. எனவே கடுங்குளிரைத் தாங்கத் தடித்த மயிர்க்கற்றைகளாலான உடற்போர்வை அதற்கு இருந்தது. இம்மயிர்க்கற்றையின் உதவியாலேயே இமயமலையில் இதனால் பிழைத்து வாழ முடிந்தது. இதன் உடலிலிருந்து மயிர் களையப்பட்டால் இவ்விலங்கால் உயிர்வாழ முடியாது. இதனால்தான் மயிர்க்கற்றையை இழந்தால் தான் வாழுமிடத்தில் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போல, மானத்தை இழக்கும் சூழ்நிலையில் மானமுடையோர் வாழ மாட்டார் என்ற பொருளில் வள்ளுவர் சுட்டிச் சென்றுள்ளார். இதன் நுட்பத்தை உணராத உரையாசிரியர்கள் கவரியை மானினத்தில் ஒன்றாகக் கருதித் தனக்கு அலங்காரமாகிய மயிர்க்கற்றையின் ஒரு மயிர் போகின் பின் அது உயிர் வாழாது எனக் கூறியுள்ளனர்.
மேலும் சங்ககாலத்தில் வாழ்ந்த எந்த மானிற்கும் மகளிரின் கூந்தலுக்கு மயிர்க்கற்றையைத் தரும் அளவிற்கு நீளமான தடித்த மயிர் இருந்ததற்கான சான்றுகளும் இல்லை.
சங்க இலக்கியத்தில் கவரியைப் பற்றிய பாடல்கள் பதிற்றுப்பத்திலேயே அதிகம் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில் பண்டைத் தமிழகத்திற்கு ஈடாகவோ அல்லது உயர்வாகவோ வடக்கில் இமயம் சிறந்து விளங்கியிருந்தது. இந்நிலையை,வடதிசைக்கண் இமயம் நிற்பது போல,
“இத்தென்திசைக்
கண் இவ்வாய்குடி நில்லாதாயின் இவ்வுலகமே கீழ்
மேலதாகி அழிந்து படும்” (புறநா.132)
என ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம் அறிய முடியும். வடக்கில் இமயம் சிறந்திருப்பதைக் கண்ட தமிழக மன்னர்கள் அதனை வெல்லக் கருதினர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம்வரை சென்று ஆரிய மன்னரை வென்று தம்புகழைப் பரப்பியதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுவார் (பதிற்.11:1-25). இதனைப் போன்றே கடல்பிறக் கோட்டிய சேரன் செங்குட்டுவன் இமயம் வரை சென்று பெற்ற வெற்றியைப் (பதிற்.43:1-17) பரணர் பாடுவர். எனவே சேர மன்னர்களுக்கும் இமயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னன், செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகனான பெருஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலப்பதிகாரத்தில் கவரி பற்றிக் குறிப்பிடும் இளங்கோவடிகளும் சேரரே.
இமயத்தில் கவரியைக் கண்ட மன்னர்கள்தாம் அவ்விடத்திற்குச் சென்றதன் நினைவாக அங்கு கண்ட கவரியின் மயிற்கற்றைகளைக் கொண்டு வந்து அதைத் தம் குதிரைகளை அழகுபடுத்துவதற்கும் சாமரத்திற்கும் மகளிர் ஒப்பனை செய்வதற்கும் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் சேர மன்னர்களைப் பற்றிப் புகழ்ந்த பாடல்களில் கவரி பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது,
பனி மிகுந்த இமயமலையில் கவரி இம்மயிர்ப் போர்வையால்தான் கடுங்குளிரைத் தாங்கி உயிர்வாழ்ந்துள்ளது. இதனை அறியாத மக்கள் தம் பயன்பாட்டிற்காகக் கவரியின் மயிர்க்கற்றையைப் பிரித்தெடுத்துள்ளனர். அதனால் குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாத கவரி உடனே உயிரை இழந்துள்ளது. கவரி பற்றிய இச்செய்தியை அறிந்த வள்ளுவப் பெருந்தகை மயிரை இழந்தால் உயிர் வாழாத கவரியைப் போல மானமுடையோர் மானம் இழந்தால் உயிர் வாழ மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் இனியாவது கவரியை மான் அல்ல அது ஒரு விலங்கு என்பதை அறிந்துகொள்ளட்டுமாக.
சான்றெண் விளக்கம்
1. திருக்குறள் உரைக்கொத்து.ப.577
2. மேலது, ப.577
3. மேலது, ப.578
4. சுஜாதா(உரை) திருக்குறள் புதிய உரை, ப.213. க.ப.அறவாணன் (சிறப்புரை..) (திருக்..ப.345)
5. அ.திருமலை முத்துச்சாமி, இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும், ப.19.
6. இரா. வசந்தகுமார், அறிவியல் கண்ணோட்டத்தில் சங்க இலக்கிய விலங்குகள், ப.20.
7. பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், ப.85.
8. கழகத் தமிழகராதி, ப.298
9. வெ.வரதராசன், தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன், ப.92.
10. புறநானூறு, பாடல் எண்.50
11. பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,
ப.460
மின்னஞ்சல்: pavaisenthamizh17@gamil.com