‘இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்’ கட்டுரையில் கட்டுரையாளரின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஓர் அங்கத்தினரிடம் அவசியம் இருக்க வேண்டியவையே.
நான் ஒரு முஸ்லிம் எழுத்தாளன் என்ற கவனிப்பில், எனக்கெனச் சில கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் உள்ளன. பொதுத் தளத்திலும் தனித் தளத்திலும் அவற்றை நான் கடைப்பிடித்தாக வேண்டும்; மீற முடியாது. மார்க்கத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடாமலும் பொது அமைதிக்கு ஊறு நேர்ந்துவிடாமலும் பக்குவமாக எழுதுகோலைப் பிடித்தாக வேண்டும். இது எல்லாராலும் சாத்தியப்பட்டுவிடுவதில்லை.
இது, எழுத்து ஊடகத்திற்கு மட்டுமன்றி, காட்சி ஊடகத்திற்கும் பொருந்தும். அப்படியிருந்தும் தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் களமாடாமல் இல்லை. மொத்த எண்ணிக்கையில் விழுக்காடு குறைவாக இருக்கலாம், விழுக்காடே இல்லை என்று சொல்ல முடியாது.
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத்துறையிலிருந்து விலகி ஓடுவதில், சில இடதுசாரி முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு அதிகப் பங்குண்டு. எப்போது பார்த்தாலும் முஸ்லிம் சமுதாயத்தைக் குறைசொல்வதே இவர்களின் வாடிக்கை. அது மட்டுமன்றி, இஸ்லாமிய மார்க்கத் தரவுகளுக்குத் தம் மனம்போன போக்கில் வியாக்கியானம் பேசுவதும், சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினால், அவர்களை எள்ளல் மொழியில் தரக்குறைவாக விமர்சிப்பதும் இவர்களின் வாடிக்கை.
இந்தியச் சூழலை நன்கு உள்வாங்கிக்கொண்டு, அதே நேரத்தில் தாம் சார்ந்த மார்க்கத்திற்கும் விரோதமில்லாமல் நுண்ணறிவோடும் நுட்பமாகவும் செயலாற்றுகின்ற இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை- 14.
லஃபீஸ் ஷஹீத்தின் ‘பேரினவாதத்தின் கோரமுகம்’ கட்டுரையில் “பௌத்த உணர்வு நிலையின் பெருவெடிப்பை நிகழ்த்திய நாயகன்” என்றும், “ஆரிய இனமேன்மைக் கருத்தியலில் நின்று குருதிவழி இனத்தூய்மையை வலியுறுத்தி இயங்கியவர்” என்றும் குறிப்பிடப்படுகிற கட்டுரையின் சிறுபகுதி குறித்து விவாதிக்கப்படவேண்டியதாகும்.
இலங்கையின் கன்யாகுமரி எனப்படும் மடாராவில் பிறந்தவர் அனகாரிக தர்மபால (1864 - 1933). அவரின் ஆர்வம், செயற்பாடுகள் இலங்கைக்குள் மட்டுமேயெனச் சுருங்கியதல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட தூர நாடுகளுக்குப் பௌத்த கொள்கையைக் கொண்டு செல்ல மூன்று கண்டங்களில் சுற்றியிருக்கிறார். இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்தவர், சென்னையில் வசித்தவர்.
“அவர் நாடோடியாகவே பயணித்தார். அப்பொழுது தனது வசதிகளைப் பற்றிக் கவலைப்படாமல், துறவிகள், எளிய மக்கள் நிரம்பியிருந்த மூன்றாம் வகுப்பில் கலந்துறவாடினார். மிக எளிய உணவை உட்கொண்டிருக்கிறார். ஏழைகளுடன் உறங்கினார். அறியாமை, மூடநம்பிக்கை, வறுமை ஆகியவற்றால் துயருற்ற பாமரர்களுடன் இயல்பாக நட்புகொண்டார். அவர்களின் இயற்கைப் பண்புகள் குறித்த ஒரு உள்நோக்கை அப்பொழுது அங்கு கண்டிருக்கிறார்.”
சிகாகோவில் 1893ஆம் ஆண்டு நடந்த World Parliament of Religions மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டது நமக்குத் தெரியும். அதே மாமன்றத்தில் அனகாரிக தர்மபால புத்தமதம் பற்றிப் பேசியிருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா போகும்வழியில் இங்கிலாந்தில் இவரை வரவேற்றது புகழ்பெற்ற ‘ஆசிய ஜோதி’ நூலாசிரியர் Edwin Arnold (1832 - 1904).
இந்து மதத்தின் பிரதிநிதியாக வந்திருந்த விவேகானந்தர் மெச்சத்தகுந்த , ஆனால் உணர்ச்சிக்கு ஆட்பட்ட Othello வுடன் ஒப்பிடப்பட்டார் எனில் அனகாரிக தர்மபால, இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிடப்பட்டு லண்டனிலுள்ள பத்திரிகைகளில் எழுதப்பட்டார். முழு உலகத்தையும் தன் பணியிடமாக மாற்றிக்கொண்ட பௌத்த மறைபரப்பாளர். இத்தனைக்கும் அவர் முறையான பௌத்த பிக்குவுமல்ல, தீட்சையும் பெற்றதில்லை. அனகாரிக என்றால் ‘வீடற்றவர்’, ‘நாடோடி’ என்று பொருள். வரலாற்றில் புத்த பிக்குகளே தர்மத்தின் காவலர்களாக, சமயப் பரப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். தர்மபாலாவின் வருகைக்குப் பிறகு, அவரின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி ஒரு புதியபோக்கு ஆரம்பித்தது. சாதாரணப் பாமரர்களும்கூட பெருமளவில் பங்கெடுக்கும் மக்கள் இயக்கமாக மாறியது.
புத்தர்களின் புனித பூமியான கயாவை உயர்சாதி இந்து சாமியார்களிடமிருந்து மீட்க முன்னெடுத்த சட்டரீதியான முயற்சிகளில் ஏற்பட்ட தொய்வே இவரை இலங்கைக்குத் திரும்பவைத்தது. அதுவே ‘சிங்கள தேசியவாதமாக’ பிற்காலங்களில் உருக்கொண்டது.
புத்தர் தம் முதல் தம்ம உரையை நிகழ்த்திய சாரநாத்தில்தான் இறந்துபோகிறார். அவரின் கடைசி ஆசையாக “Let me be reborn… I would like to be born again twenty five times to spread Lord Buddha’s Dhamma” என்பதே. தாமொரு சிங்களவர், இலங்கையில் மரணிக்க வேண்டும், அங்கு புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாக தெரியவில்லை. மாறாக பௌத்த மீட்டுருவாக்கமே அவரின் இலட்சியமாக இருந்திருக்கிறது என்பது என் அவதானம்.
“புத்தரிடமிருந்து இந்தியா பெற்றிருந்த மரபுரிமைச் சொத்தை உலகிற்கு மறுபடியும் நினைவூட்டியது அனகாரிக தர்மபால” என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு இவரைப்பற்றிக் கூறுகிறார். விவேகானந்தர், அம்பேத்கர் ஆகியோர் எப்படி தனித்த சிந்தனை அலையை இந்திய நிலப்பரப்பில் எழுப்பினார்களோ அவ்வாறான ஒருவராகவே அனகாரிக தர்மபாலவும். வலதுசாரிகள் எப்போதும் இதுபோன்ற பெரும் ஆளுமைகளைத் தம்வயப்படுத்துவதை வரலாறு முழுக்கக் காணமுடிகிறது. அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறுவதுபோல இந்த அறிஞர்களை இந்துத்துவர், சிங்களதேசியர் என நாம் அவர்களிடமே கையளித்துவிடுவது சரியல்ல.
கொள்ளு நதீம்
ஆம்பூர்
வி.எஸ். முகம்மது அமீனின் ‘இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்’ கட்டுரை உள்ளபடியே ஒரு சிறப்பான கட்டுரை. இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் நடைமுறையை நிதர்சனமாகப் பறைசாற்றுகிறது ! இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் இருப்பும் பங்களிப்பும் இன்னமும் அன்றைய கால ஆரம்ப நிலையிலேயே உள்ளது வருத்தத்திற்குரியது. மார்க்க உபதேசங்கள், வணக்க வழிபாடுகள், மார்க்க விழுமியங்கள், குர்ஆன், ஹதீஸ், சகாபாக்கள் வரலாறு, வரதட்சணை பிரச்சனை, குமரு காரியம்; இவற்றை விட்டால் முஸ்லிம் நாடுகள் பற்றிய பெருமை என்கிற குறுகிய வட்டத்தை விட்டு இஸ்லாமிய இதழ்கள் இன்னமும் வெளி வராமல்தான் இருக்கின்றன! சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள் வெளியிட இன்றும் சுணக்கம் காட்டியே வருகின்றன. காத்திரமான நவீன கதைகளுக்கு அவை இடம் தருவதில்லை.
இதிலிருந்து விதிவிலக்காக ஜாஃபர் பாகவியை ஆசிரியராகக் கொண்டு ‘சமநிலைச் சமுதாயம்’ சிறந்த இஸ்லாமிய இதழாக வந்தது. பொருளாதாரப் பிரச்சனையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதழ் நின்றுவிட்டது. இந்த இதழை நடத்தியவர் இறந்துவிட்டபடியால் அவரின் வாரிசுகள்கூட இதழை நடத்த முன்வராமல் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லை.
அமீன் சுட்டிக்காட்டும், ‘வாங்கும் மனநிலையற்ற சமூகத்தில் எழுத்தாளர்களின் வரவு குறிபிடத்தக்க அளவில் இல்லை..’ நிதர்சன உண்மை. இருக்கும் ஒரு சில எழுத்தாளர்களுக்கு இஸ்லாமிய இதழ்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன? மேலும் அவர்கள் சுதந்திரமாக எதையும் எழுதவும் முடியாது! அதை எழுதக் கூடாது - இதை எழுதக் கூடாது என்று ஏகக் கட்டுப்பாடுகள் வேறு. அதனால்தான் முஸ்லிம் படைப்பாளிகள் வெளி இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்; இவர்களாக வாய்ப்புக் கொடுக்கவும் மாட்டார்கள் - எழுத வருபவர்களைச் சுதந்திரமாக எழுதவும் விடமாட்டார்கள். அப்புறம் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் எப்படி வளரும்? இஸ்லாமிய எழுத்தாளனின் வரவு எப்படி அதிகரிக்கும்? தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவல் ‘முஸ்லிம் முரசு’ மாத இதழில்தான் தொடராக வந்தது. அதன் ஆசிரியர் ஆளூர் ஜலால் செய்த புரட்சி அது. இந்தத் துணிச்சல் இப்போது இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் ஆசிரியர்களுக்கு இல்லை.
இஸ்லாமிய அமைப்புகளின் வருகையால் அவற்றின் பெருக்கத்தால் நிறைய பத்திரிகைகள் இப்போது வருகின்றன. எல்லாம் அந்தந்த அமைப்புகளின் கொள்கை இதழ்களாக - பத்திரிகைகளாகத்தான் செயல்படுகின்றன. எல்லா அமைப்புகளும் பதிப்பகங்கள் வைத்து நிறைய நூல்கள் வெளியிடுகின்றன; ஆனாலும் எந்த இதழும் இலக்கியப் பங்களிப்பைச் செய்வதில்லை. கட்டுரைகளைவிட இலக்கியப் படைப்புகள்தான் காலத்தை விஞ்சி நிற்கும் - பேசப்படும் என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்!
தோப்பில் முகம்மது மீரானுக்கும் கவிக்கோவுக்கும் மு. மேத்தாவுக்கும் சாகித்ய அகாதமி விருது கொடுத்தபோது எத்தனை இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இஸ்லாமிய இதழ்கள் அவர்களைப் பாராட்டிக் கவுரவித்தன? இப்போது எழுதிக்கொண்டிருக்கும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்குப் பாராட்டும் விருதும் வரும்போது ஏன் விழா நடத்த, பாராட்ட இவர்களுக்குத் தோன்றுவதில்லை? எது தடுக்கிறது? இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஏன் புறக்கணிக்கின்றன? ஏன் இன்னமும் சிறுகதை, கவிதை, நாவல்களுக்கு இடம் தருவதில்லை? முஸ்லிம்களின் வாசிப்பு ரசனை சுணங்கிப் போனதற்கு இவையெல்லாம் முக்கிய காரணம்.
‘இஸ்லாம் தீவிரவாத மதம். முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்லது அதன் ஆதரவாளர்கள்’ என்று ஊடகங்கள் நாளும் குதறுகின்றன. ஆனால் தக்க பதிலடி கொடுக்க உண்மையைச் சொல்ல ஊடக வலிமை இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வாடகைக்கு எடுத்து, ஒருவரை ஒருவர் மாறிமாறி ஏசிக்கொண்டு அக்கப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றன அமைப்புகள். கல்யாண மண்டபங்கள் கட்டி வாடகை பார்க்கும் பணக்கார முஸ்லிம்களுக்குப் பள்ளிகள் , கல்லூரிகள் கட்டிக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க மனம் வருவதில்லை. ஊடகம் நடத்தத் தயாராக இல்லை. இருக்கும் ஒருசில இஸ்லாமிய இதழ்கள் தங்களின் போக்கைக் கொஞ்ச மாவது மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். சமரசம் இதழ் இணையாசிரியர் அமீன் எழுதியுள்ளகூற்றுகளை சமரசம் இதழில் அவர் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த இதழை முன்மாதிரி இஸ்லாமியத் தமிழ் இதழாக மாற்ற வேண்டும்.
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
கோவை - 8
சந்தையூர் சுவர் இடிக்கப்பட்டுவிட்டது. அது அறத்திற்குப் புறம்பான செயலாகவே தோன்றுகிறது. நெருக்கடியும் அழுத்தமும் இருந்தால் நியாயத்திற்கு அப்பாற்பட்ட காரியங்கள் எளிதாக அரங்கேறி விடும்போல. அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்ட இடம் இல்லை அது. அந்த இடத்தில் நூறாண்டு காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பறையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். அந்தக் குடியிருப்புகூடப் ‘பறையர் குடியிருப்பு’ என்றுதான் தெரியவருகிறது. பொதுவழிக்கு 12 அடியில் பாதை விடப்பட்டுள்ளது. தீண்டாமைச் சுவர் என்றால், அது சாதியை அடிப்படையாக வைத்து எழுவது. பறையர்களும் அருந்ததியினரும் ஆரம்ப காலத்தில் சமமாகத்தான் பழகினர். ஆகையால் அது தீண்டாமைச் சுவர் அல்ல. இடைக்காலத்தில் அவர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு, பாகுபாட்டில் நிறுத்தியிருக்கிறது. சாதியப் படிநிலையின் உக்கிரம், அவர்களிடையே சன்னதம் கொண்டு ஆடியிருக்கிறது. இதற்காகவே சமயம் பார்த்துக்கொண்டிருந்த வெளிச் சக்திகள் ஆங்காரமாக உள்ளே நுழைந்து, ‘சக்கிலியனுக்கு முதல் எதிரி பறையன்’ என்று உசுப்பேத்திவிட, அருந்ததியினர் ஆர்த்தெழுந்திருக்கிறார்கள். விதிவசமாய் அருந்ததியர் சகோதரர் ஒருவர் இறந்துவிட, நிலைமை விகாரம் அடைவதைப் புரிந்துகொண்ட நிர்வாகம் தடாலடியாய்ச் சுவரை உடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் தடையாணைகூட இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. சட்டத்தை மீறுவதற்கு அரசே வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.
அருந்ததியினரின்மீது பறையர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கரடிசித்தூர் கலவரத்தில் நான் பறையர்களுக்கு எதிராக, ‘பறையர்கள் விதைக்கிறார்கள் / பார்ப்பனிய விருட்சத்தை’ என்று கவிதை எழுதிப் பிரசுரம் செய்திருக்கிறேன். ஆனால் சந்தையூர் சுவர் விவகாரத்தில் பறையர்களின் கோரிக்கை நியாயமானது. ஜனநாயகம் பேசும் நாம், நியாயத்தின் பக்கமும் நின்றாக வேண்டும். பறையர் குடியிருப்பில், அவர்களின் சொந்தப் பணத்தில் கட்டப்பட்ட கோயிலை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் என்ன மீறல் இருக்கிறது?
அதற்குச் சுற்றாய் இரண்டு அடியில் சுவர் போட்டால் என்ன, எட்டு அடியில் சுவர் போட்டால் என்ன? கோயில் பாதுகாப்புக்குப் போடப்பட்டிருக்கலாம். அருந்ததியினர் குடியிருப்பில் இருக்கும் பிள்ளையார் கோயில் இந்து அறநிலையத் துறையினரால் கட்டப்பட்டுள்ளது. அங்கு சென்று வழிபட பறையர்களுக்கு அனுமதி மறுத்து, அதன் கதவு பூட்டப்பட்டு, சாவி அருந்ததியினரிடம் இருக்கிறது. அதைப்பற்றி ஏன் எந்த சனநாயக சக்திகளும் வாய் திறக்கவில்லை. அரசு கட்டிக்கொடுத்த பிள்ளையார் கோயிலுக்குள் செல்ல - அது அருந்ததியினர் குடியிருப்பில் இருப்பதால் - பறையர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பறையர்கள் தம் சொந்தச் செலவில் கட்டிய கோயிலுக்குள் செல்ல, அருந்ததியினர் அனுமதி கேட்பது என்ன நியாயம்? ஒடுக்கப்பட்ட சாதிகள் என்ற வகைமையில் இருவரும் ஒன்றுபட்டிருந்தாலும், கேடுகெட்ட சாதியப் படிநிலையில் அருந்ததியினருக்கு மேல்நிலையில் இருப்பதாகப் பறையர்கள் நினைக்கிறார்கள்; அதை அருந்ததியினரும் நினைக்கிறார்கள். இவர்களை சாத்தியமான புள்ளியில் ஒருங்கிணைக்கவே ஜனநாயக சக்திகள் முனைப்புக்காட்ட வேண்டும். குஜராத்தில் நடந்த போராட்டமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டங்களும் கீழ்ச் சாதிகளின் சேர்க்கைதானே. கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தின் யதார்த்த நிலையை முழுதும் தெரிந்துகொள்ளாமல், அல்லது பறையருக்கும் அருந்ததியினருக்கும் முரண்பாடு என்றால், எடுத்த எடுப்பிலே பறையர்கள் அருந்ததியினரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும், கட்டப்பட்டிருக்கிற சுவர் தீண்டாமைச் சுவர் என்றும் நம் முற்போக்குவாதிகள் கொம்பு சீவிக்கொண்டு அறிவிக்கை விட்டதும், செயலில் இறங்கியதும் வேதனையான விசயங்களாகும். காலச்சுவடில் வெளிவந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையைத் தவிர வேறு எந்த அமைப்பின் அறிக்கையிலும் இந்தக் கலவரத்தின் பின்புறத்தில் ஆதிக்கச் சாதியின் தூண்டுதல் இருக்கிறது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. அது தவிர, தங்கள் இருப்பை விருத்தி செய்துகொள்ள விரும்பும் சில கட்சிகள், அருந்ததியினரின் மனங்களில் நெருப்பைப் பற்றவைத்துவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டிருக்
கின்றன.
முடிவாக, அது தீண்டாமைச் சுவர் அல்ல.அதை இடித்தது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குப் பின்னிருந்து தூண்டிவிடும் ஆதிக்கச் சாதிகளையும் அரசியல் சித்து விளையாட்டுக்காரர்களையும் அம்பலப்படுத்தி, முட்டி மோதிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் உள்முரண்களைப் பேசிக் களைந்து அல்லது நேர்மையான வழிகளில் ஒழுங்குபடுத்தி, அவர்களை ஓரணியில் திரட்டுவதற்கு அக்கறையுள்ள சக்திகள் முனைப்புக் காட்டுவதே, சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பாகும்.
அபிமானி
பணகுடி
‘இனவாதத்தின் உளவியல்’ தலையங்கம் பல்வேறு விடயங்களை வரலாற்று ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைத்தது. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேர்ந்திருப்பது வேதனைக்குரிய தகவல். சிங்கள பௌத்தர்களால் அச்சுறுத்தல், பிரிவினைகளை உருவாக்கி மதச்சட்டகத்தின் போர்வையில் இவர்கள் செய்யும் ஆதிக்கங்கள் கிள்ளி எறியப்படவேண்டியன.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரலாற்றை முன்னிறுத்திப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் கருத்துரிமையை மையம் × விளிம்பு என்று உள்வாங்கி வெளிப்படுத்தியது சிறப்பு. இதற்கான தீர்வையும் எதிர்காலச் சூழலையும் விளக்கி, இவை இலங்கையை மட்டுமில்லாமல் இந்தியாவையும் பாதிக்கும் என்று பிரதான வலுவான கருத்துகளின் சித்திரத்தைத் தருவதாக தலையங்கம் அமைந்துள்ளது.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு