கதுவாவை நினைவில் கொள்ளுங்கள்
கீழ்மையையும் கொடூரத்தையும் அநீதியையும் மதத்தின் பெயராலும் அரசியலின் பெயராலும் நியாயப்படுத்த முடியுமா என ஒரு கணம் நின்று கேட்டுக்கொள்ளுங்கள்.
ஜம்முவிலிருந்து 72 கிமீ தூரத்திலிருக்கும் கதுவா கிராமத்தில் பக்கேர்வால் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மிகக் கோரமானது. ஆனால் காவல்துறையின் புலானாய்வால் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுபவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நடந்த விஷயம் அதை விடக் கோரமானது. அது நமது சமூகத்திலுள்ள பிளவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகூட மத வெறுப்பைத் தூண்டவும், குற்றவாளிகளுக்கு அரசியல் ஒப்புதலுடன் தண்டனை விலக்கு அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்ற நிலைக்கு நாம் எப்படி வந்துசேர்ந்தோம்?
அந்தக் குழந்தை காணாதுபோன ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இளம் உடல் கிடைத்த ஜனவரி 17ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது; மனிதர்கள் இவ்வளவு கீழ்மையுடனும் நடந்துகொள்ள முடியும் என்பதை அது காட்டுகிறது. ஒரு குழந்தை கடத்தப்பட்டு, போதை மருந்து அளிக்கப்பட்டு, கோயிலில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து அடிக்கப்பட்டு, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டுத் தூக்கி எறியப்பட முடியும் என்பது தாங்கிக்கொள்ளவே முடியாத பயங்கரம். இந்தக் கொடுமையைச் செய்தவர்களில் உள்ளூர் காவல்துறையினர் சிலரும் அடக்கம் என்பது இந்த விஷயத்தை மேலும் அதிக பயங்கரமாக்குகிறது. பெற்றோர் குழந்தையைக் காணவில்லை என்று புகார் கொடுத்த பிறகு குழந்தையைத் தேடிய குழுவில் இந்தக் கொடூரத்தில் பங்குபெற்ற காவலர்களுள் ஒருவரும் அடக்கம். அந்தக் குழந்தை எங்கிருந்தாள், அவளுக்கு என்ன ஆனது என்பது அனைத்தும் இந்தக் காவலருக்குத் தெரியும்.
குழந்தையின் உடல் கிடைத்த பிறகு மாநில அரசாங்கம் இறுதியில் புலனாய்வுக் குழுவை அமைத்தது. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர், உடன் அரசியலும் தொடங்கியது. வன்புணர்ச்சியையும் கொலையையும் கண்டனம் செய்வதற்கும் நீதியைக் கோருவதற்கும் பதிலாக அரசியல்வாதிகளும் ஏன் வழக்கறிஞர்களும்கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் திறன், அதன் பாரபட்சமின்மை பற்றிச் சந்தேகங்களை எழுப்பியதுடன் வழக்கை மத்திய அரசாங்கம் மத்திய புலனாய்வு கழகத்திடம் (சிபிஐ) ஒப்படைக்க வேண்டுமெனக் கோருகின்றனர். வன்புணர்ச்சிக் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகப்படுபவர்களுக்கான இந்த ஆதரவு முன்னுதாரணமற்றது. பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற அமைப்பு தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதி கேட்டது. வழக்கறிஞர்கள் நேரடியாகவே தலையிட்டுக் காவல்துறை குற்றப்பத்திரிகையைப் பதிவு செய்வதைத் தடுக்க முயன்றனர். ஓர் இளம் குழந்தை வன்புணர்ச்சியும் சித்திரவதையும் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது என்பது இவர்கள் யாருக்கும் பொருட்டாகவே இல்லை.
இந்த விஷயங்களுக்குப் பின்னால் பெரிய அளவிலான அரசியல் பின்னணி இருப்பது உண்மை. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பாஜகவிற்கு உறுதியான அடித்தளத்தைத் தந்திருப்பது இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதி. இந்தச் சங்கடமான கூட்டணி தொடர்ந்தபோதிலும் ஜம்முவிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே வகுப்புவாத அரசியல் தீவிரம் குறையாது அப்படியே இருக்கிறது. ஆக, வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட குழந்தை முஸ்லிமாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாகவும் இருக்கும் நிலையில் வகுப்புவாத அரசியலுக்கான களம் அமைந்ததில் ஆச்சர்யம் இல்லை. கொடூரமாகச் சிதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மீது இது நடத்தப்படுவது என்பது இந்திய அரசியலின் வீழ்ச்சி மேலும் ஒரு புதிய எல்லையைத் தொட்டிருப்பதைக் காட்டுகிறது.
இந்த வன்புணர்ச்சிக் கொலையைச் சுற்றி நடந்த விஷயங்கள் குறித்து நமது கோபத்தை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் இதன் பரந்துபட்ட பின்னணியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். முதலாவதாக இந்த நாட்டில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு, வன்புணர்ச்சிக்கு, வீடுகளில் வன்முறைக்கு ஆளாவது மிக அதிகம். இவற்றில் பாதியைக்கூட புள்ளிவிவரங்கள் சொல்வதில்லை. பெண்களும் சிறுமிகளும் தங்கள் வீடுகளில், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில், வீதிகளில், வயல்களில், காடுகளில் என எந்த இடத்திலும் தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கடுமையான சட்டங்கள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் 2012இல் இயற்றப்பட்டது. 2013இல் பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன, மரண தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவது குறையவில்லை. சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் மட்டுமே சட்டங்கள் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
இரண்டாவதாக இந்த நிகழ்வு நடந்தது ஜம்முவில் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். அதே மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருந்தும் அதுபற்றி இந்தியாவின் பிற பகுதிகளில் எந்தக் கோபத்தையும் எப்போதும் எழுப்பியதில்லை. நீதி அளிக்கப்படுவதிலுள்ள வழக்கமான பிரச்சனைகள் மட்டுமன்றி இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்குச் சட்டப் பாதுகாப்பை அளிக்கும் ராணுவப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் காஷ்மீரிலுள்ள பெண்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
மூன்றாவதாக சமூகங்களுக்கு இடையே வெறுப்பு என்னும் விஷத்தை அரசியல் செலுத்துகிறபோது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்குப் பாடம் கற்பிக்கக் குறிவைப்பது பெண்களைத்தான். நாடு பிரிவினைக்கு உள்ளானதிலிருந்து பல இடங்களில் இது நிகழ்வதைப் பார்த்துவிட்டோம், இன்னும் நிற்கவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள திருப்பம் என்னவெனில் வெறுப்பை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தைத் தங்களது ஆதரவாளர்கள் பெற்றுள்ளனர் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். இல்லையெனில் ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக இவ்வளவு வெளிப்படையாகச் செயல்படுவதை எப்படி விளக்குவது?
பிற சிறுமிகளுக்கு இதே போன்ற நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய அமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் செல்ல வேண்டிய இடம் காவல் நிலையம். இங்கு அவர்களுக்கு எந்த அனுதாபமும் கிடைப்பதில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனோதானோ என்று நடக்கும் புலனாய்வும் அலட்சியமான வழக்கறிஞர்களும் வழக்கு தோல்வியுறும்படி பார்த்துக்கொள்வார்கள். நீதி அளிக்கும் அமைப்பு உடைந்து போயிருக்கிறது, அதைச் சரி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய உரையாடலில் 16 டிசம்பர் 2012 ஒரு திருப்புமுனை என்று நாம் நினைத்தோம். இந்தச் சிறுமியின் மரணம் அத்தகைய மற்றுமொரு நிகழ்வு. நமது சமூகம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை ஒவ்வோர் இந்தியனும் ஒரு கணம் நின்று கேட்டுக்கொள்ளும்படி இந்த நிகழ்வு செய்திருக்கிறது. கீழ்மை கொடூரம் அநீதி ஆகியவற்றை மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தும்படி நம்மை இந்த நிகழ்வு செய்யப்போகிறதா அல்லது மனிதாபிமானம் முன்னுக்கு வந்து எல்லா உயிர்களும் விலைமதிப்பற்றவை, குற்றத்திற்கு எந்த மதமும் கிடையாது என்பதை உணர்த்தப்போகிறதா?
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஏப்ரல் 14 , 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com