ஆள்கூட்டத்தில் தனியே...
அபூர்வ மனிதர்கள் சிலரைக் கதைகளில் மட்டுமே பார்க்க முடியும். மனிதர்களோடு மனிதராக வாழ்க்கைச் சுழலில் உழலாமல், வாழ்க்கைமீது நடந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான மனிதராக எம். சிவசுப்பிரமணியன் என்ற எம்.எஸ். என் மனதில் இருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்வின் மகிழ்ச்சி, துயரம் இவற்றில் மூழ்கிவிடாமல் விலகியே நடந்தவர். சாலையில் குறுக்கும்நெடுக்குமாகச் செல்லும் பரபரப்பான மனிதர்கள், முந்திச் செல்லும் வாகனங்கள், நவீன வாழ்க்கையின் வேகம் எல்லாவற்றுக்கும் வெளியே நடந்து தினமும் காலச்சுவடு அலுவலகம் வந்து வீடு திரும்பினார்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து ஏறக்குறைய நூற்றாண்டுக்காலம் வாழ்ந்த எம்.எஸ்., ஒரு காலகட்டத்தின் பிரதிநிதியாக இருந்தார். அந்தக் காலகட்டம் முதல் நவீன காலம் வரையான தன் மனச் சித்திரங்கள், சமூக இலக்கிய நிகழ்வுகள், நடைமுறைகள், ஆழ்ந்த வாசிப்பு எல்லாவற்றையும்கொண்டு இலக்கியப் ப