ஹ்ஸ்டுபிட்ஸ்
ஹ்ஸ்டுபிட்ஸ்
அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் போனார்
சுதாரித்துக் கடந்த பிறகு
காலூன்றி நின்று
சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்
அரசைப் பார்த்தார்
அமைச்சரைப் பார்த்தார்
முதல்வரை, பிரதமரைப் பார்த்தார்
ரோடு காண்ட்ரக்டரைப் பார்த்தார்
அந்தப் பள்ளத்துள்
யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும் பார்த்தார்.
காவியம்
இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?
சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்
லாரி ஏறிவிட்டது.
அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,
கல்லூரி மாணவி ஒருத்தி
எஞ்சிய காலிரண்டைப் பற்றி
அலேக்காகத் தூக்கி ஓரத்தில் கிடத்திவிட்டாள்.
“குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு”
காவியத்திலிருந்து அவளை விலக்கிவைத்தார் நண்பர்.
“நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள்”என்று
நானவளைக் காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.
பிறகு
கடவுளே! நீர் முதலில்
மனைவிகளின் கன்னங்களிலிருந்து
வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர்
பிறகு
கணவர்களை கூண்டிலேற்றி
முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர்
கடவுளே! நீர் முதலில்
கணவர்களின் சொற்களிலிருந்து
நறுமணத்தை விரட்டியடிக்கிறீர்
பிறகு
சத்தியம் செய்யச் சொல்லி
மனைவியரைத் துன்புறுத்துகிறீர்
- இசை
மின்னஞ்சல்- isaikarukkal@gmail.com