Google   www kalachuvadu.com

எதிர்வினை
க. திருநாவுக்கரசு

பிப்ரவரி 2008 இதழில் Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present புத்தகத்திற்கு விமர்சனமாக டி. தருமராஜன் எழுதியிருந்த ''கலகக்காரர்களின் கால்வழி மரபு'' கட்டுரை பிராமணரல்லாதோர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலா அல்லது திராவிடர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலா, எதன் அடிப்படையில் தமிழக அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டது என்னும் கேள்வியை எழுப்பி, ''திராவிடர்'' என்ற அடையாளத்தின் அடிப்படையிலேயே தமிழக மக்கள் ஒன்றுதிரண்டார்கள் என்று வாதித்திருக்கிறார். மேலும், ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ என்பதற்கான தமிழ்ச் சொல்லே உருவாகியிருக்கவில்லை என்பதால் அதன் அடிப்படையில் மக்கள் ஒன்றுதிரண்டிருக்க முடியாது என்றும் வாதித்திருக்கிறார். இது எனக்கு திக்ஷீணீஸீs ஙி.வி. பீமீ கீணீணீறீ என்ற உலகப் புகழ்பெற்ற றிக்ஷீவீனீணீtஷீறீஷீரீவீst கூறிய ஒரு நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்நவீனத்துவ அறிஞர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது சொல் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் கூட்டத்தில் புழக்கத்தில் இல்லையென்றால் அந்த வார்த்தையுடன் தொடர்புடைய செயல்பாட்டையோ அல்லது அனுபவத்தையோ அந்த மக்கள் பெற முடியாது என்றாராம். அதற்கு அங்கிருந்த அறிவியலாளர் ஒருவர் ''ஒரு மக்கள் சமூகத்தில் ஆக்சிஜன் என்பதைக் குறிப்பிட வார்த்தை ஏதும் இல்லையெனில் அவர்களால் சுவாசிக்க முடியாதா'' என்று கேட்டதற்கு அந்தப் பின்நவீனத்துவ அறிஞர் வாயடைத்துப் போனாராம்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தால் 1916ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் அறிக்கைதான் இந்த வார்த்தையை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. பிராமணரல்லாதோர் இயக்கத்தை வழிநடத்திய டாக்டர் டி.எம். நாயர், சர் பி.டி. தியாகராய செட்டியார் மற்றும் டாக்டர். சி. நடேசன் ஆகியோர் பிராமணரல்லாதோர் அடையாளத்தின் அடிப்படையில்தான் பத்திரிகைகளின் மூலமாகவும் மேடைப் பிரச்சாரங்களின் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதே அடிப்படையில்தான் 1926ஆம் ஆண்டு அரசாணை மூலம் பிராமணர்கள், இஸ்லாமியர்கள், பிராமணரல்லாதோர் ஆகிய பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. ஆக, பிராமணரல்லாதோர் என்ற சொல்லை ஆங்கில அறிவுலகம் வரித்துக்கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே அது அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மேலோங்கியிருந்த பிராமணர்களின் ஏகபோக ஆதிக்கத்தை எதிர்த்த பிராமணர் அல்லாத ஆதிக்கச் சாதியினரால் உருவாக்கப்பட்டது.

பிராமணரல்லாதோர் இயக்கமானது செட்டியார், முதலியார், நாயுடு, வேளாளர் போன்ற ஒரு சில ஆதிக்கச் சாதியினரின் இயக்கமாக இருந்ததே தவிர, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினரின் இயக்கமாக இல்லை. ஆதிக்கச் சாதிகளிலும் பொருளாதாரம் மற்றும் கல்வியறிவில் மேம்பட்டவர்களின் நலன்களை முன்வைத்தே நீதிக்கட்சி போராடியது. இது ஒரு வெகுஜன இயக்கம் இல்லையென்ற போதும் பிற்காலத்தில் 1944இல் பெரியார் தலைமையில் உருவான திராவிடர் இயக்கம் என்பது நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்த ஒன்றாகும். திராவிடர் இயக்கம் பிராமணரல்லாத அனைத்துச் சாதியினரையும் ஏறக்குறைய சமவிகிதத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. இது கணிசமான தலித் மக்களையும் அறிவுஜீவிகளையும் தன்பால் கவர்ந்தபோதிலும் அது தலித் மக்களின் நலன்களுக்காகப் பெரிய அளவிலும் நேரடியாகவும் போராடியதில்லை. இது ஒரு மிக முக்கியமான குறைபாடு. பிராமணர்களின் பிராமணீயத்தை மிகக் கடுமையாகவும் விடாது தொடர்ந்தும் சாடிய பெரியார், பிராமணரல்லாத மற்ற ஆதிக்கச் சாதியினரின் பிராமணீயத்தை அப்படிச் சாடவில்லை என்பதும் மிகப் பெரும் குறைபாடே. ஆகவே, திராவிட இயக்கத்தின் விளைவால் தலித் அல்லாத ஆதிக்கச் சாதியினரே அதிகப் பலனடைந்தனர் என்ற வாதத்தில் பெருமளவு உண்மையுண்டு. ஆனால், பெரியாரின் இயக்கத்தைத் தலித் மக்களுக்கு எதிரான ஒன்று என்பதிலும் பிராமணர் மற்றும் தலித் அல்லாத மக்களின் இந்துத்துவா என்பதிலும் பிராமணர்கள் மேலும் ஸ்திரப்படவே வழிவகுத்தது என்பதிலும் உண்மையில்லை என்பது மட்டுமல்ல, இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் அவதூறுகள் மட்டுமே.

ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ என்ற ஒருமை செயல்படவில்லையே தவிர, பிராமணர்கள் மீதான வெறுப்பு சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்தது என்கிறார் தருமராஜன். பிராமணரல்லாதோர் சமூகம் என்பது லீஷீனீஷீரீமீஸீமீஷீus சமூகம் அல்ல. (பிராமணர் சமூகமும் சரி தலித் சமூகமும் சரி லீஷீனீஷீரீமீஸீமீஷீus அல்ல.) ஆகவே, அது ஒருமையுடன் செயல்படவில்லை என்பதால் அத்தகைய அடையாளம் உருவாக்கப்படவில்லை என்பதோ அதன் அடிப்படையில் மக்கள் திரட்டப்பட்டிருக்க முடியாது என்பதோ தவறு. ஆரியர், சமஸ்கிருதம் மற்றும் வடக்கு ஆகிய சொற்கள் பிராமணர் என்ற அடையாளத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதைப் போலவே திராவிடர், தமிழ் மற்றும் தெற்கு ஆகியவை பிராமணரல்லாதோர் அடையாளத்துடன் பிணைந்திருப்பது மிகவும் வெளிப்படை. யதார்த்தம் அப்படி இருக்க, பிராமணரல்லாதோர், திராவிடர் என்னும் அடையாளங்கள் ஏதோ வேறுவேறான ஒன்று என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க தருமராஜன் செய்யும் முயற்சி முற்றிலும் தோல்வியடைகிறது. ஆக, பிராமணரல்லாதோர் இயக்கமும் திராவிடர் இயக்கமும் முற்றிலும் வேறுவேறல்ல. இந்த இரு அடையாளங்களையும் கட்டியமைத்தவர்களைப் பொறுத்தவரை இந்த இரண்டும் ஒன்றே. கோட்பாட்டு ரீதியாக இதில் தலித்துகளும் அடக்கம் என்ற போதிலும் யதார்த்தத்தில் அவர்கள் பங்கு குறைவாக இருந்தது. ஆனால், இது அந்த உண்மையை மறுதலிப்பதாகிவிடாது.

அயோத்திதாசர்மீது அருந்ததியச் சாதியை இழிவாகப் பேசியதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாகப் போகிறபோக்கில் கூறிச் செல்கிறார். பறையர்களையும் அருந்ததியர்களையும் சமமானவர்களாகப் பாவிப்பதை இழிவான ஒன்றாகக் கருதிய அவர் அவ்வாறு எழுதியும் இருக்கிறார். சாதி, மத, வர்க்க, பாலின பேதமின்றி மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்து அவருள் வேரூன்றியிருக்கவில்லை. ஆண், பெண் சமத்துவத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. குறைபாடுகளை எல்லா மகத்தான மனிதர்களிடமும் காண முடியும். அறிவுலகத் தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலும் காலம் விதிக்கும் எல்லா எல்லைகளையும் மீறி ஒருவர் சிந்திப்பதும் செயல்படுவதும் இயலாத காரியம்.

ஒரு வார்த்தையின் மூலத்தை ஆராய்கிறபோது, அந்தச் சமூகம் மற்றும் மொழியைப் பற்றி நமக்குச் சில புரிதல்கள் உருவாகின்றன. ஆனால், அதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தையே (ஜிலீமீஷீக்ஷீமீtவீநீணீறீ யீக்ஷீணீனீமீ) உருவாக்க முயல்வது நவீன ஆய்வு முறைகளுக்கு ஒவ்வாதது. ஆனால், பின்நவீனத்துவ அறிஞர்களைப் பொறுத்தவரை 'கிஸீஹ்tலீவீஸீரீ ரீஷீமீs'. பறையர்கள் என்றால் அரசனின் உத்திரவுகளை, அறிக்கைகளை முரசறைந்து ஊர் மக்களுக்குப் பறைகிறவர்கள் என்றும் கூறப்படுகிறது. அல்லது அயோத்திதாசர் கூறுவது போலவும் இருந்திருக்கலாம். இதில் இதுதான் சரி என்று உறுதியாகக் கூறுமளவிற்குச் சான்றுகள் இல்லையென்பதே உண்மை. மேலும், அயோத்திதாசர் மற்றும் மறைமலையடிகள் ஆகியோர் தங்கள் கருத்துகளுக்குச் சான்றாக வைக்கக்கூடிய பல ஆதாரங்கள் மிகப் பலவீனமானவை. இது நவீன, அறிவியல் பூர்வமான ஆய்வு முறையைக் (சமூக அறிவியலில் பின்பற்றப்படும் அறிவியல் பூர்வமான ஆய்வு முறைக்கும் இயற்கை அறிவியலில் பின்பற்றப்படும் ஆய்வு முறைக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு.) கைக்கொள்கிற எந்த ஒருவருக்கும் புரியும். இதன் அர்த்தம் அவர்கள் அறிவுத் திறன் குறைந்தவர்கள் என்பதல்ல. 19ஆம் நூற்றாண்டுத் தமிழக அறிவுச் சூழலில் அறிவியல்பூர்வமான ஆய்வு முறை என்பது வேரூன்றியிருக்கவில்லை என்பதன் விளைவு இது. இது அக் காலகட்டத்தின் குறைபாடு. இக்குறைபாட்டைப் பெரியாரிடமும் காணலாம்.

பூர்வ பௌத்தர்களை இழிவுசெய்யும் விதமாகப் பல நாடோடி இனத்தவரையும் கல்லாத பழங்குடியினரையும் பறையர் என்ற அடையாளத்துடன் இயங்கவைத்தார்கள் என்கிறார் தருமராஜ். அப்படியெனில் நாடோடிகளும் கல்லாத பழங்குடிகளும் இழிவானர்களா? இது திக்ஷீமீuபீவீணீஸீ sறீவீஜீ? அல்லது தெரிந்தே எழுதியதா?

தமிழகப் பிராமணர்களுக்குக் காலனிய எதிர்ப்பாளர்கள் என்ற பாத்திரத்தைப் பாண்டியன் வழங்கிவிட்டதாகக் கோபப்படுகிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் வகிக்கத் தகுந்த உயர் பதவிகளில் பெரும்பாலும் பிராமணர்களே கோலோச்சியிருந்தனர். அதே நேரத்தில் ஆங்கில ஆதிக்கத்திற்கெதிரான இந்திய தேசிய இயக்கத்தைக் கட்டியமைப்பதிலும் அவர்களே முன்னிலை வகித்தனர். ஆங்கில ஆதிக்கத்தை அவர்கள் எதிர்த்ததற்கான அரசியல், பொருளாதார, சமூக, மதரீதியான காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அவர்கள் காலனியாதிக்கத்தை எதிர்த்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஓர் எளிய உண்மை. அப்படியெனில் இதில் தருமராஜன் எழுப்பும் பிரச்சினைதான் என்ன? இவரது கட்டுரை முழுவதும் விரவியிருக்கும் நீஷீஸீஸ்ஷீறீutமீபீ றீஷீரீவீநீ சலிப்பூட்டுகிறது.

தமிழகத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் மத்தியிலும் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்கிறார். திராவிட இயக்கத்தால் பிராமண ஆதிக்கம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்தது. ஆனால், முற்றிலும் போய்விடவில்லை. தமிழ்ப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி என்று எடுத்துக்கொண்டால் அவர்களது ஆதிக்கம் வெகுவாகக் குறைந்திருப்பது தெரியும். ஏதோ மத்திய அரசையும் நீதித் துறையையும் தமிழகப் பிராமணர்கள் மட்டுமே தங்கள் கைப்பிடியில் வைத்திருப்பதுபோல் பேசுவது அறியாமை. மற்ற மொழி பேசும் பிராமணர்கள் என்ன ஆனார்கள்? இங்கு இருப்பது இந்தியப் பிராமணர்களின் ஆதிக்கம். திராவிட இயக்கத்தின் விளைவாகத் தமிழ் பிராமணர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் பெருமளவில் குடிபெயர்ந்ததாலும் பிறகு மேலை நாடுகளில் மற்ற சாதியினரைக் காட்டிலும் அதிக அளவில் குடியேறியதாலும் அரசுப் பணிகளிலிருந்து தனியார் துறைக்குச் சென்றதாலும் அவர்கள் இழந்ததைவிடப் பெற்றது அதிகம் என்பதைப் பேராசிரியர் சி.ஜே. புல்லர் தனது கட்டுரை ஒன்றில் விளக்கியிருக்கிறார். இதற்குப் பெரியாரைக் காரணமாகச் சொல்ல முடியாது. பிராமணர்களின் பார்வையில் சொல்வதென்றால், இதற்குப் பெரியார் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில், பெரியாரின் நோக்கம் தமிழகத்தில் பிராமணரல்லாதோரை ஆதிக்கத்திற்குக் கொண்டுவருவது. அது கணிசமாக நடந்தேறியிருக்கிறது. இதில் தலித்துகளும் கணிசமான அளவில் பங்கு பெற்றிருப்பார்கள் எனில் பெரியாரது நோக்கம் பெரும் வெற்றி பெற்றதாகக் கருதியிருக்க முடியும்.

காலனிய ஆட்சியாளர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் குரலாக ஒலித்ததாக ஓரிடத்தில் எழுதுகிறார். இது அபத்தமான ஒரு வாதம். காலனிய ஆட்சி பல காலமாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டுவந்த தலித் மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புதிய கதவுகளைத் திறந்தன என்பது உண்மை. ஆனால், ஒருபோதும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்ததில்லை என்பதற்கு அம்பேத்கரின் வரிகளைவிட ஒரு நல்ல சான்று இருக்க முடியாது என்று கருதுகிறேன்:

''நல்ல சாலைகள், வாய்க்கால்கள், ரயில்வே, நிலையான நிர்வாகம், உள்நாட்டுப் போர்களைத் தடுத்தது ஆகியவற்றிற்காக, பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை நாம் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க முடியாது... இந்த நாட்டின் ஏழை உழைக்கும் மக்களிடமிருந்து பெருமுதலாளிகளும் பெரு நிலவுடமையாளர்களும் எப்படி லாபத்தை வலுக்கட்டாயமாகக் கறக்கிறார்கள் என்பதை நோக்கி நமது கவனத்தைத் திருப்பினால் போதும் பிரிட்டிஷாருக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் உடனே மறைந்துபோகும் என்ற கருத்தை ஏற்கிற முதல் ஆளாக நானிருப்பேன்.''

''இந்து சனாதனிகளின் நீண்ட நெடுங்கால சர்வாதிகாரத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் தங்களை விடுவிக்க வந்தவர்கள் பிரிட்டிஷார் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களை வரவேற்றனர்.... பிரிட்டிஷ் ஆட்சி வருவதற்கு முன்பு நமது சமூகம் இருந்த நிலையோடு இன்றைய நமது நிலையை ஒப்பிடுகிறபோது நாம் முன்னேற்றம் கண்டிருப்பதற்குப் பதிலாக அதே இடத்தில் இருப்பதையே காண்கிறோம்.''

இந்தப் புரிதலின் காரணமாகத்தான் பெரியாரைப் போல் அம்பேத்கர் 1947 ஆகஸ்ட் 15ஐ துக்க தினமாகக் கருதவும் இல்லை. ஆங்கிலேயர்களிடம் மனு கொடுக்கவும் இல்லை. இந்த விஷயத்தில் பெரியாரின் புரிதல் தவறாக இருந்தது.

பெரியாரைக் கலகக்காரராகத் தேர்ந்தெடுத்து அவரது பேச்சுகளைப் பிராமணீயம் ரசித்ததாகவும் அவருக்குப் பிறகு கலகக்காரராக வரும் தகுதியை வேறு யாருக்கும் பிராமணர்கள் வழங்கவில்லை என்றெல்லாம் அபத்தமாக எழுதுகிறார். தனக்குச் சவக்குழி தோண்டுபவர்களை (தொழிலாளர்களை) முதலாளித்துவம் தானே உற்பத்தி செய்வதாக கார்ல் மார்க்ஸ் கூறினார். இதன் அர்த்தம், முதலாளித்துவமும் முதலாளிகளும் பாட்டாளி வர்க்கத்தை விரும்பித் தேர்ந்தெடுத்து அவர்களது போராட்டங்களை ரசிக்கிறார்கள் என்பதல்ல. மாறாக முதலாளித்துவத்தின் செயற்பாடுகளும் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளும் தவிர்க்கவியலாத வகையில் பாட்டாளி வர்க்கத்தை உற்பத்தி செய்கிறது என்பதே. இதைப் போலவே சமூக, மத நிறுவனங்களும் தங்களுக்கெதிரான கலகக்காரர்களை உருவாக்குகின்றன.

தான் கூறுகிற 'உண்மைகளை' எல்லாம் அறிய பாண்டியன் போன்றவர்கள் பல கண்கட்டுகளைக் களைய வேண்டும், கோட்பாடுகள்மீது அவ நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கிறார் தருமராஜன். அறிவுரை கூறும் இவர் ஓர் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் தான் கூறுவதைத் தர்க்க பூர்வமாக, ஆதாரங்களுடன் நிறுவுவது தனது பொறுப்பு என்பதை உணரவேண்டும். எதை நிரூபிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்துகொண்டு அதற்கான ஆதாரங்களைத் தேடுவது தனது கட்சிக்காரருக்காக வாதாடும் வழக்கறிஞரின் பணி. ஆனால், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு முடிவிற்கு வருவது என்பது ஓர் ஆராய்ச்சியாளரின் பணி. இதில் தருமராஜன் எந்தப் பணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

உள்ளடக்கம்