|
முழு நிலவொளியில் ஒளிர்கிறது நகரம்.
புரவியின் பிடரி மயிரைத் தடவுகின்றன
கரங்கள்.
கண்களில் கசிகிறது கடந்தகாலம்.
நிலவில் முதல் அடியை எடுத்துவைக்கிறது
புரவி.
விண்மீன்களைத் தாண்டிச் செல்லத்
துடிக்கின்றன குளம்புகள்.
புரவியின் மூச்சுக் காற்றில் அதிர்கின்றன
போதிமரத்தின் இலைகள்.
முதுகுத் தண்டில் வேர்விட்டு
ஆகாயத்தில் கிளை பரப்புகிறது மனம்.
உள்ளங்கையில் உதிர்கிறது
எதிர்காலம்.
மின்னும் கண்களால் புத்தனைத் தேடுகிறது
இரவு.
வெளியைக் கிழித்துப் பறந்து
புள்ளியில் ஒடுங்குகிறது புரவி. |