வங்க மூலம்:
சொஹராப் ஹுசேன்
ஆங்கிலம் வழித் தமிழில்: சொ. பிரபாகரன்
சுதாமயி நேற்று நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டாள். குடும்பத்தில் இருந்த மற்ற
நான்கு உறுப்பினர்களும் அவளது நம்பிக்கையற்ற செயலைக் குறித்து இனி கவலைப்படத்
தேவையில்லை. ஏனென்றால், சாவதற்கு முன்பு அவள் பயங்கரமான ஒருகாரியத்தைச்
செய்துவிட்டுப் போயிருந்தாள். எப்போதுமே கச்சிதமாக உடையுடுத்திய சுதாமயி இப்படி
முழுநிர்வாணக் கோலத்தில் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்று சுதர்சன், உத்தரா, சவோன்,
சிரேஷ்டா ஆகிய நால்வருக்கும் புரியவில்லை.
காலைத் தேனீர் கொடுப்பதற்காக வந்த அவர்கள் வீட்டு வேலைக்காரி மஞ்சு உடலைப்
பார்த்துவிட்டு பீதியில் சிறிது நேரம் அலறிக்கொண்டிருந்தாள். அந்த அறையில் கண்ட
காட்சியால் குடும்பத்தினர் நால்வரும் அதிர்ந்து போனார்கள். ஒரு வளர்ந்த பெண்மணியின்
உடல் பெண்டுலம்போல் ஆடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி வேதனையாக மட்டுமல்ல,
கோரமாகவும் இருந்தது. தனது உடல் சார்ந்த அந்தரங்கத்தில் எப்போதுமே விழிப்புடன்
இருந்த அந்தப் பெண்ணின் நிர்வாணப் பிரேதம், குடும்பத்தினர் நால்வருக்கும் குமட்டலை
வரவழைத்தது. குமட்டலில் அவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள். விறைத்துப்போன அந்த
நிர்வாணப் பிரேதம் அவர்களது முதுகுத் தண்டைச் சில்லிடவைத்தது. தன் மனைவிக்கும்
குழந்தைகளுக்கும் முன்னால் இப்படி நடந்துவிட்டதே என்று சுதர்சன் மிகவும்
நொந்துபோயிருந்தார். அவர்தான் முதலில் சுதாரித்தார். "அம்மா போய் இப்படிச் செய்வாள்
என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம்
தெரிந்தால் என்ன சொல்வார்கள்? என் கௌரவம் பற்றியோ அந்தஸ்து பற்றியோ அவள் கொஞ்சம்கூட
யோசித்துப் பார்க்கவில்லை" என்றார் அவர்.
உத்தரா விஷத்தைக் கக்க ஆரம்பித்தாள்; "எல்லாம் சதி; என் கௌரவத்தைக் குறைப்பதற்கான
திட்டம். அவர் எப்படியோ தப்பித்துவிட்டார். இப்போது அதன் பலனை நன்றாக
அனுபவிப்போம்."
"இப்போது என்ன செய்ய?" என சுதர்சன் தன் மனைவியைப் பார்த்தார்; பிறகு சவோனையும்
சிரேஷ்டாவையும் பார்த்தார். சவோன் கண்களை மூடிக்கொண்டு எதையோ தீவிரமாக
யோசித்துக்கொண்டிருந்ததுபோல் தெரிந்தது. சிரேஷ்டா தன் பாட்டியைக் உன்னிப்பாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டியின் அதிருப்தியின் ஆழத்தை அளந்து பார்க்க
முயன்றாளோ என்னவோ. பாட்டி அவர்களது மேலைய வாழ்முறையைக் கடுமையாக எதிர்த்தாள்.
அதற்காகத்தான் அவர்களுடைய வாழ்க்கைமுறையைத் தனது நிர்வாணத்தால் கிண்டல் செய்தாளோ?
சிரேஷ்டா பட்டென்று கத்தினாள்: "அப்பா, இந்த உடலை உடனே மூடுங்கள்! நிர்வாணம்
இவ்வளவு எரிச்சலூட்டக்கூடியது என்பது எனக்கு இதற்கு முன் தோன்றியதே இல்லை . . .
என்னால் இதைப் பார்க்கவே முடியவில்லை."
"இவளை எப்படியம்மா மூடுவது?" சுதர்சன் திகைத்தார். "ஏதாவது துணியால் மூடுங்களேன்"
என்று சிரேஷ்டா முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள். தரையில்
குத்தியிட்டுக்கொண்டு, "இந்த அம்மண உடலை மூடுங்கள். இல்லையென்றால் எனக்குப்
பைத்தியம் பிடித்துவிடும்" என்று சத்தம் போட்டாள்.
சிரேஷ்டாவைப் பார்த்து உத்தரா பொங்கினாள்: "இதெல்லாம் பெரிய சதி . . . கெட்ட புத்தி
. . . அவர் வாழ்க்கை முழுதும் தன் உடல் ரீதியான அந்தரங்கத்தில் படுதீவிரமாக
இருந்தார். கடைசியில் அந்தத் தீவிரத்தை அவரே கேலிக்குரியதாகச் செய்துவிட்டார்."
"உத்தரா, இது கோபப்படுவதற்கான நேரமல்ல. உன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்.
சாந்தமாகு" என்று ஆயாசத்துடன் சுதர்சன் முணுமுணுத்தான்.
"என்ன சொன்னீர்கள்? கோபப்படுவதற்குப் போதுமான காரணம் இருக்கிறது? அவர் என்
குடும்பத்தையே அழித்துவிட்ட பிறகு என்னால் எப்படி வாயைப் பொத்திக்கொண்டு இருக்க
முடியும்?"
"வேறு என்ன செய்ய?"
"நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்."
"இப்போது என்னால் எதுவுமே யோசிக்கவே முடியவில்லை."
"உங்களால் எதையும் யோசிக்க முடியவில்லை என்றால் இந்த அம்மணப் பிணத்துக்கு
உட்கார்ந்து கிடங்கள். நான் என் பிள்ளைகளோடு வெளியே போகிறேன்." உத்தரா சிரேஷ்டாவின்
கையைப் பிடித்து இழுத்தாள்.
"இல்லை, வர முடியாது" என்று இவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த சவோன் கத்தினான்.
"ஏன்? இந்த அம்மணத்திற்கு முன்னால் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பாய்?" என்று
உத்தரா திருப்பிக்கத்தினாள்.
"தப்பித்து ஓடுவதால் ஒரு பயனும் இல்லை, அம்மா. அப்படி ஓடினால் நீ இன்னும்
கேவலப்பட்டுப்போவாய்."
"பின்னே வேறென்ன செய்வாய்?" உத்தரா பொறுமையில்லாமல் கேட்டாள்.
"பாட்டிக்கு வெள்ளைச் சேலை, சாயா, பிளவுஸ் போட்டுவிட வேண்டும். அதுவாவது உங்கள்
மானத்தைக் காப்பாற்றலாம்."
மகனின் அறிவுரையைக் கேட்டு உத்தராவின் கண்கள் மின்னின. "நீ சொல்வதுதான் சரி.
மற்றவர்களுக்கும் போலீசுக்கும் தெரிவதற்கு முன் இந்தச் சூழ்நிலையை நாம் சமாளித்தாக
வேண்டும்."
நகரத்தின் ரொம்ப நாகரிகமான அந்த இடத்தில் ஒரு போர். ஆமாம், மிக உக்கிரமான போர்
நடந்து கொண்டிருந்தது. கதவு, சன்னல்களை மூடிக்கொண்டு, ரொம்பப் பாதுகாப்பாய், அந்தக்
குடும்பத்திலிருந்த நான்கு பேரும் செத்துப்போன ஒருத்தியோடு கடும் போரில்
ஈடுபட்டிருந்தார்கள். நான்கு பேர் ஒரு பிணத்தோடு போரிடுவதால் இந்தப் போர்
இயற்கைக்குப் புறம்பானதாய்த் தெரியலாம். ஆனால், இந்தப் போர் சமபலம் இல்லாத இரு
அணியினருக்கு இடையே நடந்தது என்பதுதான் முக்கியம். உயிருள்ள நான்கு பேரும் தங்கள்
செத்த எதிரியைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள் என்பதுதான் இதில் ஆச்சரியம்.
இந்தப் பிரச்சினையை அவர்கள் எப்படி வேறு மாதிரி எதிர் கொள்ள முடியும்?
சொல்லப்போனால் அந்தப் பிணம் ரொம்பப் பயமுறுத்துவதாக இருந்தது. அதைத் தொட்டாலே
ரத்தம் உறைந்துவிடுவதுபோலிருந்தது. அதையெல்லாம்விட, அந்த உடல் ரொம்ப நேரம் தொங்கிக்
கொண்டிருந்ததால் முழுசாய் விரைத்துப்போயிருந்தது. பிணத்திற்கு உடையுடுத்தும் போர்
நடந்துகொண்டிருந்தது. நான்கு பேரும் எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் பயமும் நம்பிக்கையின்மையும் அப்பியிருந்தன.
நம்பிக்கையின்மை என்னும் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்த சுதாமயியின் பேத்தி
சொன்னாள்: "நாம் இதில் எப்படியாவது ஜெயித்தாக வேண்டும். இல்லையென்றால்
அழிந்துபோவோம். நம்முடைய மானம், மரியாதை, அந்தஸ்து எல்லாம் போய்விடும். நாம்
சுதந்திரமான வாழ்க்கைமுறையைப் பார்த்து எல்லோருக்கும் பொறாமை. பாட்டியை யாராவது
இந்தக் கோலத்தில் பார்த்தால் நமக்கு மானமே போய்விடும். அப்பா, அம்மா, அண்ணா,
வாருங்கள், இறக்குவோம் . . . நம்மால் முடிந்ததைச் செய்வோம்."
உடலைக் கீழே இறக்க அவர்கள் முயன்றார்கள்; அவர்களுக்கு மூச்சு வாங்கியது.
இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
ஒவ்வொருவரும் யோசித்தார்கள், யோசித்துக்கொண்டே இருந்தார்கள். அந்த நால்வரில்
சிரேஷ்டா மிகவும் யோசனையில் மூழ்கிப்போயிருந்தாள். அவள்தான் பாட்டிக்கு மிகவும்
பிடித்தவள். சுதாமயி அவளை நம்பிப் பல விஷயங்கள் பேசுவாள். தனது கண்கள் அந்த
உடல்மேல் குத்திக்கொண்டிருக்க, சிரேஷ்தா பாட்டியுடனான தனது உறவைப் பற்றி யோசித்துக்
கொண்டிருந்தாளோ என்னவோ. அவள் பாட்டி ரொம்ப விநோதமான பெண்மணிதான். மகன் அல்லது
மருமகளின் வார்த்தைகளால் மனம் புண்படும்போதெல்லாம் அவள் நேராகப் போய் அந்தப் பழைய
கண்ணாடி முன்னால் நின்றுகொள்வாள்.
சுதாமயியின் டிரஸ்ஸிங் மேஜை மயில் தோகையின் மேல் இருந்தது. வட்டமான மேஜையைச் சுற்றி
ஒரு பறக்கும் மயில். கண்ணாடி அந்த மயிலின் வயிற்றுப்பாகத்தில் இருந்தது. கணவன்
இறந்த பிறகு, சுதாமயிக்கு மன வேதனை ஏற்படும்போதெல்லாம் அந்தக் கண்ணாடி முன்னே
நின்று அமைதியாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டு, உளறலாக ஏதோ முணுமுணுப்பாள்.
தாத்தாவின் ஃபோட்டோ வுக்கு மலர்கள் புதிதாய்க்கிடைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டு,
செயற்கை மலர்மாலையைப் போட்ட அந்த நாள் சிரேஷ்டாவிற்கு இன்னும் நன்றாக
நினைவிருக்கிறது. "பாட்டி, நான் உன்னை ஒன்று கேட்கலாமா?" என்று சிரேஷ்டா அன்றிரவு
கேட்டாள்.
"என்ன?"
"நீ மனம் புண்படும்போது ஏன் கண்ணாடி முன்னே நின்று அழுகிறாய்?"
"இந்தக் கண்ணாடிக்கு மாயாஜாலம் தெரியும். அதனால்தான் அதன் முன்னே நின்று
அழுகிறேன்."
"மாயாஜாலமா? கண்ணாடிக்கு எப்படி மாயாஜாலம் தெரியும்?"
"நன்றாகவே தெரியும். இந்தக் கண்ணாடி முன்னே நிற்கும்போது, உன் தாத்தா தெரிகிறார்.
அவர் கண்ணாடில் வந்து என்னோடு பேசுகிறார்."
"நீ சொல்வதை எனக்கு நிரூபிக்க முடியுமா?"
"ஓ நிச்சயமா. ஆனால், இன்றைக்கு இல்லை, இன்னொரு நாள்."
சுதாமயி நிஜமாகவே நிரூபித்துவிட்டாள். அந்த நாள் அந்தக் குடும்பத்துக்கு மற்றொரு
பயங்கரமான நாள். விருந்தினருக்கு எலுமிச்சை சர்பத்தைக் கொடுத்து உபசரிக்கும்
வழக்கம் அன்றிலிருந்து நிறுத்தப்பட்டது. சுதாமயி அந்தப் பானத்தைத் தானே
தயாரிப்பாள். பாட்டி கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர்
வடித்தாள். அன்றைக்கும் அவள் சிரேஷ்டாவிடம் அந்த மாயாஜாலத்தைக் காட்டினாள். அந்தக்
கண்ணாடியின் வண்ணம் மாறியதைப் பார்த்து சிரேஷ்டா பிரமித்துப்போனாள். கண்ணாடியின்
தெளிவான பரப்பில் கறுப்பு படர்ந்திருந்தது. "ஏன் இப்படி இருக்கிறது பாட்டி?" என்று
அவள் கேட்டாள்.
"இந்தக் கண்ணாடியால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அர்த்தம்."
"எதை?"
"அது உனக்குப் புரியாது. அது மாயாஜாலம்."
"என்ன மாயாஜாலம்?"
"எனக்கே தெரியாது."
"இல்லை, உனக்கு அது நிச்சயம் தெரியும். எனக்குச் சொல்லேன், பாட்டி."
"உன்னிடம் சொல்லி என்ன பயன்? நீங்களெல்லாம் புதிய உலகத்தின் புதிய குதிரைகள்.
நீங்கள் எல்லாவற்றையும் மிதித்துத் துவம்சம் செய்துவிடுவீர்கள்."
"அதனால் என்ன? எனக்குச் சொல்லு பாட்டி."
"என்னத்தைச் சொல்ல?" சுதாமயி அதைச் சொல்லாமல் தவிர்க்க விரும்பினாள்.
"எனக்கு மாயாஜாலத்தைப் பற்றிச் சொல்."
"அது சொல்வதற்கான விஷயமல்ல; பார்க்க வேண்டிய விஷயம்."
"அப்படியென்றால் காட்டு."
"இன்றைக்குக் காட்ட முடியாது."
"என்றைக்குக் காட்டுவாய்?"
"நான் என்றைக்குச் சாகிறேனோ அன்றைக்கு. நான் சாகும் நள் இந்தக் கண்ணாடியைப் பார்.
அது மாயாஜாலத்தைக் காட்டும்."
"நிஜமாகவா?"
"உன் கண்ணாலேயே அதைப் பார்க்கலாம்."
சுதாமயியின் உடலுக்கு முன் உட்கார்ந்திருந்தபோது சிரேஷ்டாவுக்கு அவர்களது உரையாடல்
நினைவுக்கு வந்தது. அவள் உடனே தனது கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியைப் பார்த்தாள்.
அவளே அதிசயித்துப் போகும் வகையில் கண்ணாடியின் வண்ணம் மாறியது. அவள் அந்த வீட்டில்
இருந்தவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த மாயாஜாலம் தன்னை எங்கே கொண்டு
போகப்போகிறது என்று பார்க்க அவள் விரும்பினாள். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவள்
ஆர்வத்துடன் கண்ணாடியைக் கவனித்துக்கொண்டிருந்தாள். இடையில் அவள், "அம்மா, போரைத்
தொடங்குங்கள்" என்று மட்டும் மற்றவர்களிடம் சொன்னாள்.
அவர்கள் போரைத் தொடர்ந்தார்கள். முதலில் சயாவை அணிவித்தார்கள். பின்னர் பிளவுஸின்
வலது கையைப் போட்டுவிட்டார்கள். இடது கையைப் போடுவதற்குப்
போராடிக்கொண்டிருந்தார்கள். வெட்கம், பயம், வெறுப்பு எல்லாவற்றையும் மறந்து,
மொத்தக் குடும்பமும் சுதாமயியின் இடது கையை இழுக்கத் தொடங்கியது. அதற்காகப்
பாட்டியின் இடதுகையை மடக்க வேண்டியிருந்தது. சவோன் பொறுமையின்றி மூர்க்கத்தனமாய்க்
கையைப் பிடித்து இழுத்தான். உடல் தடாலென்று கீழே விழுந்தது. அதன் பயங்கரக்
குளிர்ச்சியால் நால்வரும் நகர்ந்து சென்றார்கள். சுதாமயியின் கண்களில் நெருப்பு
எரிந்துகொண்டிருந்தது போல் இருந்தது.
"இது முடியாத காரியம்." சவோன் முயற்சியைக் கைவிடப்போவதுபோல் தெரிந்தது.
"அண்ணா, நாம் பின்வாங்கக் கூடாது. எப்படியாவது பிளவுஸைப் போட்டே ஆக வேண்டும்,"
சிரேஷ்டாவின் குரல் தழுதழுத்தது.
சுதர்சன் மூர்க்கத்தனமாய்ச் சொன்னான், "வாருங்கள், மீண்டும் முயற்சிப்போம்." போரின்
இன்னொரு கட்டம் ஆரம்பித்தது. இரண்டிரண்டு பேராக இரண்டு பக்கங்களிலும் நின்றுகொண்டு,
சுதாமயியின் கைகளை இழுக்கத் தொடங்கினார்கள். ஆனால், இரண்டு கைகளும் இறுகி
விறைத்துப்போயிருந்தன. நான்கு பேருக்கும் வியர்த்துக்கொட்டியது. பிணத்தை
விட்டுவிட்டு, அவர்கள் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள்
நான்கு பேருடைய கண்களிலும் பீதி படர்ந்திருந்தது. அவர்களது கண்களில் ஒரேயொரு
கேள்விதான் தெரிந்தது: "அடுத்து என்ன செய்ய? பிணம் நிர்வாணமாகத்தான் கிடக்க
வேண்டுமா?"
"எனக்கு வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை." சவோன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான்.
"அவர் உயிரோடு இருந்தபோதும் நம்மைச் சித்திரவதை செய்தார். இப்போது செத்தும் நம்மைச்
சித்திரவதை செய்கிறார். அவர் உடலைக் கங்கையில் கரைக்கலாம் போல் தோன்றுகிறது."
உத்தராவின் குரல் ஆத்திரத்திலும் கசப்புணர்விலும் மிக உச்சஸ்தாயியில் ஒலித்தது.
சிரேஷ்டா கேட்டாள், "அப்படியென்றால் நாம் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானா?
"இந்தக் கிழவி அதைத்தானே விரும்பினாள்? இன்னும் அதைத்தான் விரும்புகிறாள்" என
உத்தரா கசப்புடன் பதிலளித்தாள்.
சுதாமயியின் குடும்பத்தினர் பக்கவாட்டில் இருக்க, பிணம் அங்கே தனியே கிடந்தது.
அவர்கள் அனைவரும் பேச்சற்றிருந்தார்கள். அவர்களது கண்கள் தரையில் நிலைகுத்தி
இருந்தன. இடையில் சிரேஷ்டா மற்றொருமுறை கண்ணாடியைப் பார்த்தாள். அவளால் உடனடியாக
அந்த மாயாஜாலத்தைக் காண முடிந்தது - சுதாமாயி கச்சிதமாக உடை உடுத்தித் தரையில்
கிடப்பதுபோல் கண்ணாடியில் தோன்றியது. சிரேஷ்டா கத்தினாள், "பாருங்கள்! பாட்டியம்மா
உடை உடுத்தியிருக்கிறாள்."
"எங்கே?" மூவரும் ஒருசேரப் பிணத்தை நோக்கினார்கள்.
"அங்கே இல்லை. கண்ணாடியில் பாருங்கள் . . . தெளிவாகத் தெரிகிறது."
சிரேஷ்டா சொன்னபடி கண்ணாடியைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். சுத்தமான
வெள்ளையாடையில் சுதாமயியின் உடல் கண்ணாடியில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். "ஏன் இப்படித் தெரிகிறது,
சிரேஷ்டா?" என்று சவோன் கேட்டான்.
"தெரியவில்லை. ஆனால், இந்தக் கண்ணாடிக்கு மாயாஜாலம் தெரியும் என்று பாட்டி
சொல்லியிருக்கிறாள்."
"மாயாஜாலமா?"
"நிச்சயமாக இது மாயாஜாலம்தான். அம்மா, நீ என்ன சொல்கிறாய்?"
"உன் மாயாஜாலம் நாசமாகப்போகட்டும். அந்தப் பிணத்தைக் கொஞ்சம் மூடேன்!" உத்தராவின்
எரிச்சல் படுதீவிரமாகிவிட்டிருந்தது.
தங்களது பார்வையைக் கண்ணாடியிலிருந்து சுதாமயியின் உடலின் பக்கம் திருப்பினார்கள்.
அது இன்னும் நிர்வாணமாய்த்தான் கிடந்தது. சுதர்சன் முன்னே வந்தார், நீண்ட
பெருமூச்சு விட்டார். "அப்புறம் என்ன செய்ய? வேறு வழியே இல்லையா?" என்றார்.
"இருக்கிறது" என்றான் சவோன். மற்ற மூவரும் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்தார்கள்.
"பாட்டிக்கு சிரேஷ்டாவின் நைட்டியையோ அம்மாவின் நைட்டியையோ மாட்ட முடிந்தால்
பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்."
"அப்படிப் போடு! அற்புதமான யோசனை. இது ஏன் யாருக்கும் தோன்றவில்லை?" என்று உத்தரா
குதித்தெழுந்தாள். சுதர்சனைப் பார்த்து,
"சவோனின் யோசனையைக் கேட்டீர்கள் அல்லவா? இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டிவிடலாம்."
"இல்லை, அதற்கு முடிவுகட்ட முடியாது" என்று சிரேஷ்டா மறுத்தாள்.
"ஏன்?"
"ஏனா? வாழ்க்கை முழுதும் புடவை, சயா, பிளவுஸ் அணிந்திருந்தவள் ஏன் சாகும்போது
மட்டும் நைட்டி அணிந்திருக்க வேண்டும்? இப்படி யாராவது கேட்பார்கள் அல்லவா?"
"ஆமாம், கேட்பார்கள்" என்றான் சுதர்சன்.
"கேட்டால் கேட்கட்டும். அதற்கு அப்புறம் பதில் சொல்லிக்கொள்ளலாம்" என்றாள் உத்தரா
உறுதியாக. அவள் பேச்சு எல்லா விஷயங்களிலும் எடுபடும். அவள் வார்த்தைகள் சட்டம்போல.
சுதாமயியின் உடலிலிருந்து சயாவும் பிளவுஸும் அகற்றப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக
விலையுயர்ந்த வெளிநாட்டு நைட்டி ஒன்றைப் போட்டுவிட்டார்கள். எரிச்சலூட்டும்
நிர்வாணம் ஒரு வழியாக மூடப்பட்டது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள்.
இதற்கிடையில் சிரேஷ்டா ரகசியமாக மீண்டும் கண்ணாயைப் பார்த்தாள். பார்த்துத்
திடுக்கிட்டாள். கண்ணாடியில் சுதாமயியின் உடல் முழு நிர்வாணமாகத் தெரிந்தது. நைட்டி
மிக மெலிதாக இருந்ததால் அவளது அந்தரங்க உறுப்புகள் தெரிந்தன. சிரேஷ்டா மீண்டும்
கத்தினாள்: "அம்மா, அங்கே பார்."
என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள நான்கு பேரும் கண்ணாடியைப் பார்த்தார்கள்,
அதிர்ந்து போனார்கள். இறந்துபோன சுதாமயியை இப்போது கண்ணாடியில் காணவில்லை. அதற்குப்
பதிலாக, அந்த நான்கு பேரும் தெரிந்தார்கள். ஒவ்வொருவரும் அதில் நிர்வாணமாக
இருந்தார்கள். இதைப் பார்த்து சிரேஷ்டா, "எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
பார்க்காதீர்கள். அப்பா, தயவுசெய்து கண்களை மூடிக்கொள்" என்று கூவினாள். அம்மா,
"சவோன், ஆடை அணிந்துகொள், கண்ணை மூடிக்கொள்" என்று பீதியில்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
நால்வரும் பயத்தில் கண்ணாடியிடமிருந்து விலகினார்கள். ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
பீதி அவர்கள் முகத்தில் பரவியிருந்தது, "தான் இறந்த பிறகு கண்ணாடி மாயாஜாலத்தைக்
காட்ட ஆரம்பிக்கும் என்று பாட்டி சொல்வாள். அது இப்போது உண்மையாகிவிட்டது" என்று
முணுமுணுத்தாள் சிரேஷ்டா. சிரேஷ்டா சொன்னதைக் கேட்டதும் எல்லோரும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டார்கள் - அவர்கள் நிர்வாணமாக, முற்றிலும் நிர்வாணமாக இருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் சுதாமயி கிடந்தாள். அவளது கடைசிச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு
நான்கு வீரர்களும் நிராதரவாக உணர்ந்தார்கள். அந்த நிராதரவு சிறிது நேரமே நீடித்தது.
அவர்கள் மீண்டும் போருக்குத் தயாரானார்கள். நால்வருமாகச் சேர்ந்து கண்ணாடிமீது
பாய்ந்தார்கள்.