கொடிக்கால்
ஷேக் அப்துல்லாஹ்
தலித்திய சிந்தனையாளரும் சமூகப் போராளியும் பெரியாரியலாளரும் பன்னூல் ஆசிரியருமான
என் நீண்டகால நண்பர் ஏ.பி. வள்ளிநாயகம் அண்மையில் தனது 54ஆம் வயதில் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரியில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.,
மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கச் சிந்தனைகள்பால் கவரப்பட்டுச்
செயலாற்றிவந்தவர்.
ஈழத் தமிழர்களுக்கான அமைப்பின் தாய்த் தமிழக ஆதரவாளராக இருந்தவர். பாட்டாளி மக்கள்
கட்சியில் தத்துவ அணித் தலைவராக ஏழாண்டு காலம் பணிபுரிந்து கட்சியை வலுப்
படுத்துவதில் மிகுந்த பங்களிப்பைச் செலுத்தியவர்.
தலித்துகளுக்கான 'எங்கள் பூர்வ மதம் பௌத்தமே! எனவே, நாங்கள் இந்துக்கள் அல்ல'
என்னும் கோஷத்துடன், கோவை பி.என்.சி. மில்லின் தொழிற்சங்கத் தலைவரும் தாத்தா
ரெட்டைமலை சீனிவாசன் பேரவைத் தலைவருமான எஸ். நடராசனுடன் இணைந்து சென்னைமுதல்
குமரிவரை பிரச்சார வாகனப் பயணம் மேற்கொண்டார். பாபர் மசூதியை இந்துத்துவ சக்தியினர்
கரசேவை செய்தபோது எஸ். நடராசன், இனாயத்துல்லாவுடன் என்னையும் இணைத்துக்கொண்டு மசூதி
இடிப்புக்கெதிராக 'சகோதரத்துவ இயக்கம்' என்னும் அமைப்பை உருவாக்கி ஆற்றிய பணிகள்
குறிப்பிடத் தக்கவை.
தலித்தியம், பொதுவுடைமைச் சிந்தனை, ஈழத் தமிழ்த் தேசிய உணர்வு, பெரியாரியம்,
சிறுபான்மை ஆதரவு, நாஸ்திகம் எனப் பன்முக முற்போக்குச் சிந்தனை கொண்ட ஏ.பி.க்கு
ஏதாவதொரு அலகில் மற்றவர்களுடனான முரண்பாடும் இசைவும் தவிர்க்க இயலாத விஷயமாகவே
இருந்திருக்கிறது. இது இயல்பாகவே அவரைப் பிடிவாதக்காரராக மற்றவர்களிடம் காட்டியது.
இந்தத் தன்மை, அவரை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கு இடையூறாகவும் அமைந்திருந்தது.
பரஸ்பரப் புரிதல்களுக்குப் பிந்தைய அவரது உறவுகள் மிகவும் ஆழமானவை.
தன்னளவில் அவர் கொண்டிருந்த கருத்துகளை, புரிதல்களைப் பிறர்மீதான அதிகாரமாக
மாற்றுவதற்கு அவர் ஒருபோதுமே முயற்சித்ததில்லை. இதற்கு உதாரணமாக, பெண்ணியவாதியும்
சமூகப் போராளியுமான அவரது துணைவியார் ஓவியா, சுந்தர ராமசாமியுடன் வைத்திருந்த
நட்பைக் குறிப்பிடலாம். இந்த நட்பை அவர் தனது கோட்பாட்டு வழியாகப் பார்க்கவில்லை.
ஆனால், தன் அளவில் சுந்தர ராமசாமியை அவர் கோட்பாடு சார்ந்துதான் முதலில் பார்த்தார்
என்பது வேறு விஷயம். சுந்தர ராமசாமியின் இறுதிக் காலகட்டத்தில் அல்லது ஏ.பி.யின்
இறுதிக் காலகட்டத்தில், 5.3.2005இல் நாகர்கோவிலில் நடந்த 'கொடிக்காலின் வாழ்வியல்
கருத்தரங்கு' எனும் நிகழ்ச்சியில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ஏ.பி.யை வெகுவாகக்
கவர்ந்தது. சுந்தர ராமசாமியைப் பிறப்பு சார்ந்தும் கோட்பாட்டு இடைவெளிகளை அலகுகளாக
வைத்தும் புரிந்து கொண்டிருந்த ஏ.பி., சு.ராவுடனான தனது மன இடைவெளியை
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சுருக்கிக்கொண்டார். சு.ரா.வின் 'பிள்ளைகெடுத்தாள் விளை'
சிறுகதையைப் பற்றிய விவாதங்களின் போது, ஒரு படைப்பை முன்னிறுத்தி இம்மாதிரியான
விவாதங்கள், சாதியத்தேடல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பதே ஏ.பி.யின் கருத்தாக
இருந்தது.
ஏ.பி.யின் ஆய்வியல் நோக்கங்களைப் பொறுத்தவரை மிகச்சரியானதும் தரவுகளை
உள்ளடக்கியதுமான விஷயங்களையே அவர் முன்வைத்தார். அடித்தள மக்களின் வரலாறுகள்
உண்மைகள், ஆதாரங்களைக் கண்டுகொள்ளாமல் பதிவுசெய்யப்பட்டால் மற்றவர்கள் அதை மிகச்
சுலபமாக அழித்துவிடுவார்கள் என்பது ஏ.பி.யின் உறுதியான கருத்து. கேரளத்தில் நடந்த
வைக்கம் சத்தியாக்கிரகத்துக்குத் தளம் அமைத்தவராக அவர் அய்யன்காளியைக்
குறிப்பிடுகிறார். சமூக நீதியை முன்மொழிந்தவர்களில் தமிழகத்தில் அவர் அயோத்திதாசப்
பண்டிதரைக் குறிப்பிட்டார். தென் திருவிதாங்கூரின் தமிழர் பகுதிகளில்
கிறிஸ்தவத்தைப் பரப்பியதில் ரிங்கில் தௌபேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கத்தின்
முக்கியப்பங்கையும் குறித்து, 'அடிமைகளின் தலைவர் அய்யன்காளி', 'மகாத்மா புலேவுக்கு
முன் மகராசன் வேதமாணிக்கம்' போன்ற ஆய்வு நூல்களை ஏ.பி. எழுதியிருக்கிறார். கேரளப்
பெண்ணிய இயக்கங்களின் முன்னோடியெனக் கருதப்படும் நம்பூதிரி குலப்பெண்மணியான (அந்தர்
ஜனம்) குரியேடத்து தாத்ரியைப் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியிருக்கிறார். தனது
நூல்களுக்கான (மொத்தம் 26) தரவுகளைத் தேடி வாழ்க்கையின் பெரும்பகுதியையும்
பயணங்களில் கழித்தவர். திராவிட இயக்கம் மற்றும் சமநீதிப் போராட்ட இயக்கங்களின்
முன்னோடி வேர்களைக் கண்டடைந்து அவற்றை ஆதாரபூர்வமாக நிறுவுவதில் ஏ.பி. தீவிரமாக
ஈடுபட்டிருந்தார்.
பிற புரட்சிகரசிந்தனையாளர்களிலிருந்து மாறுபட்ட, அரசியல் சட்டம் சார்ந்த சில
அணுகுமுறைகளும் ஏ.பி.யிடமிருந்தன. டாக்டர் அம்பேத்கர் முன்னிலையில் இயற்றப்பட்ட
இந்திய அரசியல் சட்டம் அப்படியே கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில்தான் ஒடுக்கப்பட்டோ
ர் அவர்களுக்கான நலன்களைவென்றெடுக்க முடியும். இதில் செய்யப்படும் திருத்தங்கள்கூட
அடிப்படையிலிருந்து மாறுபடாமலே செய்யப்பட வேண்டும் என்பதை அவர் அழுத்தமாக
வலியுறுத்தினார்.
ஒடுக்கப்பட்டோ ர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புக்களை அவரவருக்கான சுயங்களுடன் ஒரு
பொதுக்கண்ணியில் பிணைத்துவிடுவதற்கான பல்வேறு முயற்சிகளில் அவர் ஆழமாக
ஈடுபட்டிருந்தார். தலித் - உயர் ஜாதியினருக்கிடையிலான ஓர் ஆரோக்கியமான உரையாடலில்
ஏ.பி. எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தார். தனது கொள்கைகளுடன் ஏதாவது ஒரு வகையில்
தொடர்புகொண்டிருப்பவர்கள்மீது அவருக்கு இணக்கமான ஒரு மதிப்பீடு இருந்துவந்தது.
ஒடுக்கப்பட்ட இனமான தலித்சமூகமும் இசுலாமியர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய
தேவைகளை வலியுறுத்திவந்த ஏ.பி.யின் மறைவு இதில் பொருட்படுத்த வேண்டிய ஒரு பின்னடைவை
ஏற்படுத்திவிட்டது.
உள்ளடக்கம்