'தரமான பொருள்கள், குறைந்த விலை, நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்'
எனப் போட்டி வியாபாரம் தனது இலக்குகளைத் தீர்மானித்துக்கொண்டு செயல்படும் காலத்தில்
இந்திய மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வியாபாரத்தில் போட்டிகளை அனுமதித்தால்
நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை
விதிகளில் ஒன்று. இந்த அடிப்படை விதி, நடைமுறையிலுள்ள சந்தையில் சரியாகப்
பொருந்திவருகிறதா என்று கேட்டால் ஆதரவான பதிலும் சொல்ல முடியாது, எதிரான பதிலையும்
சொல்லிவிட முடியாது.
எந்தப் பதிலைச் சொன்னாலும் புள்ளிவிவரங்கள் வேண்டும். ஒருவேளை பொருளாதாரத் துறை
ஆய்வாளர்களோ புள்ளியியல் துறை அறிஞர்களோ அதற்கான பதிலைத் தர முடியும்.
புள்ளிவிவரங்களைத் திரட்டும் வழிமுறைகளும் புள்ளிவிவரங்களைக் கைவசம் உள்ள
முடிவுகளுக்கேற்ப விளக்கும் சாமர்த்தியமும் நிபுணத்துவமும் அவர்களுக்குத்தான் உண்டு.
நிபுணர்களின் சாமர்த்தியம் எல்லா நேரத்திலும் எல்லாத் தளங்களிலும் சாதகமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. அரசியல் தளத்தில் அத்தகைய
நிபுணத்துவம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவின் பருண்மையான வெளிப்பாடு மத்திய
அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவிப் பறிப்பு.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் வல்லுநர்களும்கூடத் தாராளமயப் பொருளாதாரம் எவ்வாறு
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறார்களே தவிர, அதன் விளைவுகளைப் பற்றி
அதிகம் பேசுவதில்லை. திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களைக்கொண்டு நுகர்வோருக்கு இத்தனை
சதவீதம் லாபம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது; இதுவரை மானிய விலையில் உணவுப்
பொருள்களைப் பெற்று வந்த அடித்தட்டுப் பொருளாதாரத்தைச் சேர்ந்த பிரிவினரில் இத்தனை
சதவீதம் பேர் தாராளமயச் சந்தையில் அவற்றை வாங்கும் சக்தியுடையவர்களாக
மாறியிருக்கிறார்கள் என்னும் கணக்கைச் சொல்வதில்லை. அதேபோல் தரமான பொருள்கள் மட்டுமே
சந்தையில் உள்ளன; மற்றவை உற்பத்தியை நிறுத்திக்கொண்டு போட்டிச் சந்தையிலிருந்து
விலகிக்கொண்டன என்பதையெல்லாம் உறுதியாகச் சொல்லும் வல்லுநர்களும் இல்லை.
ஊடக வெளியில் அலையும் காட்சித் தொகுப்புகளையும் அவற்றின் தொடர்ச்சியான
கருத்துருவாக்க விளையாட்டுகளையும் பற்றிப் பேசுபவர்களுக்குப் புள்ளிவிவரங்கள்
அவ்வளவாக உதவும் எனச் சொல்ல முடியாது. இந்திய வாடிக்கையாளர்களை மனிதர்கள் என்ற
நிலையிலிருந்து வேறொன்றாக மாற்றிக் காட்டும் விளம்பரங்கள் உண்டாக்கும் பாவனைகள்
விதம் விதமானவை. குறிப்பாகக் குளிர்பானங்களின் விளம்பரங்களும் வாகனங்களின்
விளம்பரங்களும் மனிதர்களைப் பிம்பங்களாக மாற்றிக் கனவுலகத்திற்குள் அழைத்துச்
செல்கின்றன.
நடப்பு வாழ்க்கையிலிருக்கும் வெளிகளைக் கடந்து பயணிக்கும் அனுபவம் கிடைப்பதாகக்
காட்டும் இத்தகைய விளம்பரங்கள் 'இயல்பிலிருந்து மாற்றம்' என்பதன் மேல்
மனிதர்களுக்குள்ள ஈர்ப்பை வளைத்துப் போடுகின்றன. குளிர்பான விளம்பரங்களில் ஒன்றில்
நடிகை அசின் பறக்கும் பொம்மைப் பெண்ணாக மாறி வீடு, சாலை, அடுக்குமாடிக்
குடியிருப்புகள் என எல்லாவற்றையும் மறந்து இளைஞன் ஒருவனுடன் காடு, மலை, கடல் எனப்
பயணித்துவிட்டுத் திரும்பவும் பழைய நிலைக்கு வருகிறாள். நான்கு சக்கர வாகனம் ஒன்றின்
விளம்பரத்தில் தாத்தாவும் பாட்டியும் தங்கள் வயதை மறந்து இளம் பருவத்துக் காதல்
நினைவுக்குள் பயணிப்பதாகக் காட்டப்படுகிறது.
மற்றொரு விளம்பரத்தில் இளம்பெண்கள் இரு சக்கர வாகனப் பயணத்தைக் கடல் அலைகளைக்
கிழித்துக்கொண்டு பறக்கும் அச்சமற்ற ஒன்றாக உணர்கின்றனர். அண்மையில் மறைந்த ழான்
போத்ரியா புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுவதைவிட ஊடக வெளியில்
உண்டாக்கப்படும் பாவனைகள் பற்றியே அதிகம் விவாதித்துக்கொண்டிருந்தார் என்பதை இந்த
இடத்தில் நினைத்துக் கொள்ளலாம்.
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சொன்னார்:
தரமான பொருட்களுக்கு மட்டுமே சந்தையில் அனுமதி என்ற கட்டுப்பாடோ , அவை மட்டுமே
நுகரப்படும், மற்றவை ஒதுக்கப்படும் என்ற நிலையோ இந்தியச் சந்தையில் இல்லை. இந்த
அம்சம்தான் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையைக் குறிவைக்க முக்கியக் காரணமாக
இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் முதல் தரமான தொலைக்காட்சிப்
பெட்டியையோ சலவை இயந்திரத்தையோ வாங்கும் சக்தி கொண்ட உயர் வருவாய்ப் பிரிவினரும்
இங்கு உண்டு; அதே நிறுவனங்கள் வேறு பெயரில் தயாரிக்கும் நான்காம் தர, ஐந்தாம் தரத்
தொலைக்காட்சிப் பெட்டிகளையும் சலவை இயந்திரங்களையும் வாங்கும் கீழ்மத்திய வருவாய்ப்
பிரிவினரும் உண்டு என்பதுதான் அவர் சொன்னதன் சாரம்.
அவரே இன்னொன்றும் சொன்னார்: தாராளமயப் பொருளாதாரச் சந்தையும் போட்டிப் பொருளாதார
நிலைமைகளும் பன்னாட்டு மூலதனமும் இந்தியாவைத் தங்கள் விளையாட்டுக்களமாக ஆக்கிய
பின்பும் கூடத் தமிழக முதலாளிகள் இன்னும் முதலாளியவாதிகளாக ஆகவில்லை என்று
சிரிப்போடு சொன்னார். அந்தச் சிரிப்புக்கான அர்த்தத்தையும் அவரே விளக்கிய
பின்புதான் எனக்குப் புரிந்தது. ஒரு முதலாளியின் குணாம்சத்தை அளக்கும் கருவியாக
மூலதனத்தை மட்டும் சொல்வோமானால் இங்கு முதலாளிகள் பலர் உண்டுதான். தரகு
முதலாளிகளாகவும் பன்னாட்டு முதலாளிகளாகவும்கூட அவர்களை வகைப்படுத்தலாம். ஆனால்,
மூலதனம் மட்டுமே முதலாளிய அடையாளம் அல்ல. தாராளவாத மனோபாவம் என்ற அடிப்படையான குணம்
ஒன்றும் அதற்கு உண்டு. உழைக்கும் உடலையும் செயல்படும் புத்திசாலித்தனத்தையும்
ஒத்துக்கொள்ளக்கூடிய குணம் முதலாளியத்தின் முக்கியமான பண்பு. அதுதான் எதனையும்
பேசித் தீர்க்கலாம் என்னும் நம்பிக்கையை உறுதிசெய்கிறது. சட்டத்திற்குக்
கட்டுப்படுகிறது; அல்லது கட்டுப்படும் பாவனையாவது செய்கிறது.
தமிழக முதலாளிகள் இதற்கு மாறானவர்கள். சுரண்டு வதில்கூடச் சொந்தச் சாதிப்
பாசத்தைக் காட்டுபவர்கள். சொந்தச் சாதி ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுத்து, வேலையில்
அமர்த்திக்கொள்பவர்கள். சொந்தச் சாதி ஒதுக்கீடு முடிந்த பின்புதான் மற்றவர் களை
அனுமதிப்பனவாக தேசிய முதலாளிகளின் நிறுவனங்கள் உள்ளன என்பதை நண்பரின் சிரிப்பு
சொன்னது. அவர் சொன்னது ஏறத்தாழ உண்மைதான். முதலாளியும் தொழிலாளியும் சாதிச்
சங்கத்தில் ஒன்றாக இருப்பதால், தொழிற் சங்கம் தேவையில்லாமல் போய்விடும். கோயில்
கொடையிலும் கல்யாணம், பூப்புனித நீராட்டு என வீட்டு விசேஷங்களுக்கு முதலாளியோ
முதலாளி வீட்டு நாய்க் குட்டியோ வந்து மொய் எழுதிவிட்டுப் போய்விடுவதால், போனஸ்,
இழப்பீடு எனத் தனியாகக் கேட்க வேண்டியதில்லை. தமிழக முதலாளிகள் என்றில்லை; இந்திய
முதலாளிகளே இப்படித்தான் இருக்கிறார்கள்.
தரகு வணிகத்தில் ஈடுபடுவதற்கு மட்டும் அல்ல; சில்லறை வணிகத்தில்
ஈடுபடுவதற்குக்கூடக் குறிப்பிட்ட சாதிகளுக்குத்தான் இங்குத் தைரியமும் விருப்பமும்
இருக்கின்றன. குறிப்பாகத் தலித்துகளுக்கு வியாபார வெளி எப்பொழுதும் மறுக்கப்பட்ட
வௌததான். ஆனால், ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களின் சில்லறை வர்த்தக
நுழைவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்த முனையும்போது மட்டும் சாதி வெளிகள் கடந்த
ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இந்திய வாழ்க்கை எந்த விதத்தில் பார்த்தாலும்
வெளிகளைக் கடக்கும் கணங்களில் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்
பருண்மையான வேறுபாடுகளும் இருக்கின்றன. நுகர்வுத் தளத்தில் இருப்பது
நிர்ப்பந்தமற்ற, பிரக்ஞையற்ற வெளி கடத்தல். அதனை எதிர்க்கும் போராட்டத் தளத்தில்
இருப்பதோ நிர்ப்பந்தத்தின் விளைவு.
நிர்ப்பந்தங்கள் விலகும்போது பிரக்ஞையற்று நிர்ப்பந்தமற்ற ஈர்ப்பில் மனித மனம்
நுழைந்துவிடுகிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது.
உள்ளடக்கம்