கனிமொழி: இந்த மருத்துவமனையில் முக்கியமாக என்ன செய்கிறீர்கள்?
வளர் இளம் பருவத்தினருக்கான கவனிப்பை மையப்படுத்தி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்
குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கும் முறை குறித்த ஆலோசனைகளைத் தருகிறோம்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு எளிதாக இருந்தது. இந்தக்
குழந்தைகள் தப்பு செய்தாலும் நல்லது செய்தாலும் பெரியவர்களின் தலையீடு இருக்கும்.
ஆனால் இன்று அப்படியில்லை.
குழந்தைகள் நமக்குக் கிடைத்த வரம். அவர்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து
நம்மிடம் பெரிய அளவில் உரையாடல்கள் இல்லை. குழந்தைப் பருவத்தில் அவர்களை வளர்க்கும்
விதம்தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. எனவே குழந்தை வளர்ப்பு என்பது
மிகவும் முக்கியத்துவம் உடையது.
கனிமொழி: குழந்தைகள் நடத்தை, பெரியவர்கள் அவர்களை நடத்தும் விதம் எப்படி
இருக்கின்றன?
பிறந்த குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள்வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள இங்கே
வருகிறார்கள். மாதாந்தரச் சோதனைக்காகவும் வருகிறார்கள். அப்படி வரும்போது
குழந்தைகளின் பெற்றோருக்கு இடையே நடக்கும் உரையாடலிலிருந்து அவர்கள் குழந்தைகளை
நடத்தும் விதம் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். 1 முதல் 3 மாதம்வரையுள்ள
குழந்தைகள் ஊசிபோட்டால் வலிக்கும்வரை அழுவார்கள். ஆனால் 6 மாதங்கள் ஆன குழந்தைகள்
வலி குறைந்த பின்னும் அழுவார்கள். ஏனென்றால், கோபம் என்ற உணர்ச்சியும் அவர்களிடம்
சேர்ந்துகொள்கிறது. அப்படி அழும்போது குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள்,
சமாளிக்கிறார்கள், கவனத்தைத் திசைதிருப்புகிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.
பொதுவாக அதை வாங்கித் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொல்லி அழுகையை நிறுத்த
முயல்கிறார்கள். இது குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிகிறது. விரும்பியதையெல்லாம்
எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்னும் மனோநிலை இதிலிருந்துதான் குழந்தைகளுக்கு
உருவாகிறது. இப்படி ஏதேனும் ஒரு ஆசைகாட்டி அழுகையை நிறுத்துவதற்குப் பதில்,
'என்னைப் பிடித்துக்கொள், அப்பாவின் தோளைப் பிடித்துக்கொள், நான் பக்கத்தில்
இருக்கிறேன், வலி குறைந்துவிடும்' என்று சொல்லி உணர்வுபூர்வமான ஆதரவைத் தர
வேண்டும்.
ஊசிபோடும்போது, பெற்றோருக்கு இடையிலான உறவையும் பிரச்சினையையும்கூடத் தெரிந்துகொள்ள
முடியும். அம்மா பக்கத்தில் இருப்பார். அப்பா குழந்தையைப் பிடிப்பார். சில
அப்பாக்கள் அம்மாவைப் பிடிக்கச் சொல்லிவிட்டு வெளியே போய்விடுவார்கள்.
அரவிந்தன்: அவர்களால் குழந்தைகள் அழுவதைத் தாங்க முடியாது என்பதாலா?
அப்படியில்லை. அவருக்கே ஊசியைப் பார்த்தால் குழந்தையிலிருந்து பயமாக
இருந்திருக்கும். இந்த இடத்தில்தான் குழந்தை, 'நம்முடைய வேதனையான நேரத்தில் அதைப்
பகிர்ந்துகொள்ள அப்பா விரும்பவில்லை; அம்மா மட்டும்தான் கூட இருப்பார்' என்று
நினைக்கத் தொடங்குகிறது. உணர்வுபூர்வமான தேவைகளுக்கு அப்பாவைச் சார்ந்திருக்க
முடியாது என்று நினைக்கிறது. குழந்தைக்கு ஊசிபோடும்போது அழும் அம்மாக்களுக்கு
முதலில் பயிற்சி தர வேண்டும். ஊசி குழந்தைக்குக் கஷ்டமாக இருந்தாலும் உங்களுடைய
தைரியம்தான் குழந்தைக்கு தைரியத்தைக் கொடுக்கும் என்பதைச் சொல்ல வேண்டும்.
பெற்றோரும் குழந்தைகளும் வருவார்கள். குழந்தைக்கான ஊட்டச் சத்துக்கள் பற்றிப்
பேசிக்கொண்டிருப்போம். குழந்தையால் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. அதைத்
தொட வேண்டும், இதைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். கண்ணாடிப்
பொருட்களைத் தொடக் கூடாது என்று சொல்வோம். ஆனால் குழந்தைகள் அதைத் திரும்பத்
திரும்பத் தொடும். அந்தச் சமயத்தில் பெற்றோர் குழந்தையை எப்படி அணுகுகிறார்கள்
என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பொருளுக்குப் பதிலாக வேறொரு பொருளைத் தருகிறேன்
என்பார்கள்.
நாம் அழுதால்தான் ஏதோ ஒன்று நடக்கும் என்று குழந்தைகளை நினைக்கவைப்பது இந்த
அணுகுமுறைதான். நமது கடமை, குழந்தையின் கவனத்தைத் திசை திருப்புவதாகவும் அதைப்
பற்றி விளக்குவதாகவும்தான் இருக்க வேண்டும். இப்பொழுது வாங்க முடியாத
பொருளையெல்லாம் வாங்கித் தரச் சொல்லி அழுது சாதிப்பார்கள். இந்தக் குணம்தான்
பிற்காலத்தில் மிரட்டுவது, தற்கொலை செய்துகொள்வேன் என்று பயமுறுத்துவது, வீட்டை
விட்டு ஓடிவிடுவேன் என மிரட்டுவது போன்ற எதிர்மறைக் குணங்களுக்கான அடிப்படையாக
அமைகிறது. 2 முதல் 4 வயதுவரையுள்ள குழந்தைகள் அப்பா, அம்மாவோடு வருகிறார்கள்.
கடுமையான உடல் நலக் குறைவோடு இருக்கும் அந்தக் குழந்தைகளிடம் டாக்டருக்கு வணக்கம்
சொல் என்றும் நன்றி சொல் என்றும் பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவார்கள். அப்படிச்
செய்தால்தான் தகவல் பரிமாற்றத் திறன் வளரும் என்று நினைக்கிறார்கள். அப்போது,
நம்முடைய வேலை வணக்கம் சொல்வது, நன்றி சொல்வது மட்டும்தான்; யாரும் என்னுடைய
வேதனையைப் புரிந்துகொள்ளவில்லை; நமக்குப் பிடித்த மாதிரி இருக்கக் கூடாது; பொய்
வேஷம் போட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைக்கு வருகிறது.
கனிமொழி: இது போன்ற பழக்கவழக்கங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியவைதானே.
ஆமாம். ஆனால் அதை இப்படிக் கற்றுத்தரக் கூடாது. குழந்தைகள் பெற்றோரைக்
கவனிக்கிறார்கள். அம்மா, தெரியாமல் யாருடைய காலையோ தட்டிவிடும்போது சாரி
சொல்கிறார். நாமும் தெரியாமல் தட்டினால் சாரி சொல்ல வேண்டும் என்று
புரிந்துகொள்கிறார்கள். பெற்றோர்தான் அவர்களுடைய முன்மாதிரிகள். குழந்தைகளை
வற்புறுத்தி எதையும் செய்யவைக்க முடியாது.
சில சமயங்களில் கடுமையான சுவாசப் பிரச்சினைகளால் மூச்சு விட முடியாமல் குழந்தைகள்
வருவார்கள். மருந்து தருகிறோம். கொஞ்ச நேரத்தில் இப்போது எப்படி இருக்கிறது என்று
கேட்டால், 'நல்லா ஆயிடுச்சு டாக்டர்' என்று சொல்வார்கள். அறையை விட்டு
வெளியேறும்போது சிரித்த முகத்தோடு நன்றி சொல்லிட்டுப் போகிறார்கள்.
குழந்தைகளுக்குப் புரிகிறது, இந்த அறையை விட்டு வெளியேறும்போது நன்றி சொல்ல
வேண்டும் என்று. குழந்தைகளைக் கட்டாயப்படுத்திச் சொல்லச் சொல்லும்போது, என்
அம்மாவிற்கு என்னுடைய உணர்வுகளையும் வலிகளையும்விட மற்றவர்களுக்கு வணக்கம்
சொல்வதிலும் நன்றி சொல்வதிலும் கிடைக்கும் நிறைவுதான் முக்கியமானது என்று
குழந்தைக்குத் தோன்றுகிறது.
அரவிந்தன்: எந்த வயதில் இப்படி யோசிக்கத் தொடங்குவார்கள்?
12, 13 வயதிலெல்லாம் இதுபோலச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். பத்து வயதுவரை அம்மா,
அப்பாவின் நிழல்போல அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள். பன்னிரண்டு வயதுக்குப்
பிறகு சுயமாகச் சிந்திக்கும் திறன் வளர்கிறது. என்னுடைய தேவைக்கும்
விருப்பத்திற்கும் பிடித்ததுபோல ஏன் நடந்துகொள்ளக் கூடாது, எல்லோருக்கும் பிடித்த
மாதிரிதான் நடக்க வேண்டுமா என்ற கேள்வி அப்பொழுதுதான் குழந்தைகளிடம் உருவாகிறது.
'தான்' என்னும் அடையாளம் வெளிவருகிறது. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடத்
தொடங்குகிறார்கள்.
10-12 வயதுக் குழந்தைகள் சில நேரங்களில் மட்டும்தான் பெற்றோர் பேச்சைக்
கேட்கிறார்கள். அப்பொழுதுதான் பெற்றோருடன் குழந்தைகளுக்குப் பிரச்சினை உருவாகிறது.
சொல் பேச்சைக் கேட்பதேயில்லை என்று இந்தச் சமயத்தில்தான் பெற்றோர்கள் சொல்லத்
தொடங்குகிறார்கள். இது கவுன்சலிங் மூலம் சரிசெய்யும் விஷயம் அல்ல.
குழந்தைகளுக்கு நியாயமாகப்படும் விஷயம் பெற்றோர்களுக்கு நியாயமாக இருப்பதில்லை.
இதனால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்தாலே
அவர்கள் மனத்திலிருக்கும் பிரச்சினைகள் வெளியே வந்துவிடும். பெற்றோர்
இருக்கும்போதே, 'அப்பாவாலதான் பெரிய பிரச்சினை; அம்மாவால தாங்க முடியல' என்று பேசத்
தொடங்குவார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்பதற்கு
யாராவது ஒருவர் வேண்டும். அதை அவர்கள் விரும்புகிறார்கள்.
கனிமொழி: குழந்தைகள் எப்பொழுதும் தம் குடும்பம் சாராத, வெளியில் இருக்கும் ஒருவரையே
தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தேடுகிறார்கள். இது ஏன்?
குழந்தைகள் தம் பெற்றோரிடம் பிடிக்காத குணங்களையும் தமக்கு எதிர்மறையான
விஷயங்களையும் அடையாளம் காண்கிறார்கள். இந்தக் குணங்கள் இல்லாத வெளி மனிதர்களிடம்
பெரிய ஈடுபாடும் அபரிமிதமான நம்பிக்கையும் கொள்கிறார்கள். இது இயல்பு. அப்பா, அம்மா
உதவாத சமயங்களில் நண்பர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் பிறரையும் சார்ந்திருக்கப்
பழகிக்கொள்கிறார்கள்.
அரவிந்தன்: பெற்றோர் குழந்தைகளைவிட 20, 25 வயது மூத்தவர்களாக இருப்பதால்,
பகிர்ந்துகொள்வதில் குழந்தை களுக்கு உறுத்தல் இருக்குமோ?
யார் தன்னிடம் உண்மையாக அன்பு காட்டுகிறார்களோ, அன்பு யாரிடம் தனக்கு அதிகம்
கிடைப்பதாக நம்புகிறார்களோ, அவர்களிடம்தான் எல்லாவற்றையும் பேசுவார்கள். இந்த
வயதில் பெற்றோருடைய கண்காணிப்புக்கூடத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால்
அவர்களுக்கு உதவுவதற்கும் வழிநடத்துவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் கட்டாயம் ஒருவர்
வேண்டும். நம்மை வழிநடத்த யாரும் இல்லை என்று நினைத்தால் பயப்படுவார்கள். இந்த
பயம்தான் கோபமாக வெளிப்படுகிறது. ஏதோ தப்பு செய்துவிட்டோ மோ என்று சந்தேகம்
வருகிறது. இந்த பயத்தை நாம் அடையாளம் காண வேண்டும்.
கனிமொழி: இந்தப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?
வளர் இளம் பருவத்தினரை வழிநடத்தும் விதம் குறித்து அனைத்து மருத்துவர்களுக்கும்
பயிற்சி தரும் திட்டமொன்றை
WHO (World Health Organisation - உலக சுகாதார அமைப்பு) தொடங்கியது. இந்தப் பருவத்தில்
மனமும் பக்குவம் அடைகிறது, உடலும் வளர்கிறது. பாலியல் ரீதியாகவும் ஏராளமான
மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஹார்மோன்களால் எண்ணற்ற மன ரீதியான, பாலியல் ரீதியான
குழப்பங்கள் உண்டாகின்றன. இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் மருத்துவர்கள் குழந்தைகளை
அணுக வேண்டும். வளர் இளம் பருவத்தினரின் உடல் நலம் குறித்தும் வாழ்வியல் திறன்
குறித்தும் உலக சுகாதார அமைப்பு பெரிய அளவில் ஈடுபாடு காட்டத் தொடங்கியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவைப் பொறுத்தவரையில் குந்தைகள் நலச் சங்கம் உருவானது.
Academy of Indian Paediatricians (இந்தியக்
குழந்தைகள் நல மருத்துவர்களின் கல்வி நிலையம்) அமைப்பும் 50,000 உறுப்பினர்களோடு
செயல்படத் தொடங்கியது. அமைப்பைத் தவிர்த்து வெளியிலும் அதன் உறுப்பினர்கள்
இருக்கிறார்கள். குழந்தைகள் நல நிபுணர்களுக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
உலக சுகாதார மையம் இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்த 24 பேரில் நானும் ஒரு நபர்.
இதில் பயிற்சி பெற்ற நாங்கள் பொதுநல மருத்துவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்.
குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால், குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும் என்று
இப்பொழுதுதான் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை என்ன பிரச்சினையானாலும்
பொதுநல மருத்துவரைத்தான் அணுகுவார்கள். அதனால்தான் சிகிச்சைக்காக வரும் வளர் இளம்
பருவத்தினருக்கு என்ன மாதிரியான வழிகாட்டுதலைத் தர வேண்டும் என்னும் பயிற்சியைப்
பொதுநல மருத்துவர்களுக்கு நாங்கள் தருகிறோம்.
மருத்துவமனையிலோ வெளியிலோ அப்பா, அம்மாவைச் சார்ந்துதான் குழந்தைகள்
இருக்கிறார்கள். அவர்களோடு பேசும்போது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது புரியும்.
அவர்கள் நம்பகமுள்ள யாருடனாவது பகிர்ந்துகொள்ள நினைக்கிறார்கள்.
கனிமொழி: நிறைய குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படிக்க முடியாமல் திணறும்போது பெற்றோர்
அடிப்பது, பள்ளிக்குப்போக விருப்பமில்லாமல்போவது, இதெல்லாம் முக்கியமான
பிரச்சினைகள் இல்லையா? சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பது
குறித்துக்கூட மருத்துவர்கள் கவலைப்படுவதில்லை, இல்லையா?
அதைத்தான் நான் சொல்ல முயல்கிறேன். குழந்தைகள் நல மருத்துவருடைய பணி
உடல்நலத்திற்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல; நோய் வராமல் தடுப்பதும்
வந்துவிட்டால் சிகிச்சையளிப்பதும் மட்டுமல்ல; குழந்தை வளர்க்கப்படும் விதம்
குறித்தும் அக்கறைகாட்ட வேண்டும்.
பெரிய பள்ளிகளும் மீண்டும் மீண்டும் பயிற்சிகளைத் தருகின்றனவே தவிர, தனிப்பட்ட ஒரு
குழந்தையின் படிப்புத் திறன் சார்ந்த பிரச்சினை என்ன என்பதைக் கண்டுகொள்வதில்லை.
கணக்கு, இலக்கணம், வாசிப்பது, எழுதுவது என்று எத்தனையோ சிக்கல்கள் சில
குழந்தைகளுக்கு இருக்கின்றன. யாருக்கு என்ன பாடம் அல்லது எது கடினமாக இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்வதும் இல்லை.
படிப்பு சார்ந்த, கற்றுக்கொள்வது சார்ந்த பிரச்சினைகளை இரண்டாம், மூன்றாம் வகுப்பு
படிக்கும்போதே அடையாளம் காண வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான மாற்று என்ன என்பதைச்
சிந்திக்க முடியும்.
கனிமொழி: யார் அடையாளம் காண்பது?
ஆசிரியர்கள்தான் அடையாளம் காண வேண்டும்.
கனிமொழி: நம் ஊரில் அது நடப்பதில்லை, இல்லையா?
நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்தச் சிந்தனைகளை முன்வைத்துப் பயிற்சி
கொடுக்க வேண்டும். குழந்தைகள் நல மருத்துவருக்கு, ஆசிரியர்களுக்கு, பள்ளித்
தலைமையில் இருப்பவர்களுக்கு, பெற்றோருக்கு என்று எல்லோரிடமும் இந்தப் பயிற்சி
முறைகளைக் கொண்டுசெல்ல வேண்டும்.
பள்ளிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்போரிடம் குழந்தைகளுக்கு இருக்கும் இது போன்ற
பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண வேண்டும் என்று சொன்னால், சிலர் இந்த
மாதிரி மாணவர்கள் நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்துவிடுவார்கள். இது
துரதிருஷ்டவசமானது. படிக்கும் வாய்ப்பே பெரிய பள்ளிகளில் மொத்தமாக மறுக்கப்படுவதும்
நடந்துவிடுகிறது. பெற்றோரே வேறு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துவிடுகிறார்கள்.
அரவிந்தன்: ஆசிரியர்களுக்கு எப்படிப் பயிற்சியளிப்பது?
ஆசிரியர்களுக்கும் எங்களைப் போன்றோர்தான் போய்ச் சொல்லித்தர வேண்டும். நாமே போய்ச்
சொல்லித் தருகிறோம் என்றால் அதை அவர்கள் பிரச்சாரமாகத்தான் கருதுவார்கள். அதனால்
இது போன்ற கருத்துகளைப் பள்ளிக் கல்வித் துறை வழியாகப் புரியவைக்க வேண்டும். இதற்கு
அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வேண்டும்.
இன்னொரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இப்போது இருக்கும் 'டியூஷன் மேனியா'.
எங்கே பார்த்தாலும் டியூஷன் சென்டர்கள். இதனால் அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப்
பள்ளிகளிலும் பாடமே நடத்துவதில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்
இங்கு வருவார்கள். அவர்கள் இருவரும் காலையில் 5 மணிக்கு எழுந்து 5லு மணி முதல் 6லு
மணிவரை ஒரு டியூஷன், 6லு மணி முதல் 7லு மணிவரை ஒரு டியூஷன் முடித்துவிட்டு, காலை
உணவைச் சாப்பிட நேரமில்லாமல் பள்ளிக்குச் செல்கிறார்கள். வருகைப் பதிவிற்காகக்
காத்திருந்து மாலை 4 மணிக்குப் பிறகு வீடு திரும்புகிறார்கள். விளையாடக்கூட
நேரமில்லை. மறுபடியும் டியூஷனுக்குச் செல்கிறார்கள். இரவு ஏழு மணிவரை. டியூஷன்
முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால், வீட்டில் அப்பா பெல்ட்டோ டு காத்திருப்பார்,
படிக்கச் சொல்லி. இவர்களுக்கு விளையாடவும் நேரமில்லை, தூங்கவும் நேரமில்லை.
பள்ளிக்கூடங்கள் ஒவ்வொரு மாணவனுடைய படிப்பிற்கும் படிப்பில் வரும் சிக்கல்களுக்கும்
நல்ல மதிப்பெண்களைப் பெறவைப்பதற்கும் பொறுப்பேற்று இந்த மாணவர்கள்மீது அக்கறை
காட்டினால் இந்த 'டியூஷன்' என்கிற விஷயமே தேவையில்லை.
டியூஷன் எடுப்பவர்கள் யாரும் பாடத்தின் மையமான பொருள் என்ன என்று
சொல்லித்தருவதில்லை. மீண்டும் மீண்டும் தேர்வுகளை எழுதுவதற்கும் மனப்பாடம் செய்து
அப்படியே எழுதுவதற்கும்தான் சொல்லித் தருகிறார்களே தவிர, குறிப்பிட்ட நேரத்திற்குள்
எப்படித் தேர்வை முழுமையாக எழுதி முடிப்பது என்பதைக்கூடச் சொல்லித் தருவதில்லை.
தேர்வுக்கு உதவக்கூடிய இன்றியமையாத தன்மைகள் என்னென்ன என்று சில டியூஷன்களில்
மட்டுமே சொல்லப்படுகின்றன. அதனால்தான் எப்படியாவது இந்த டியூஷன் முறையைக்
கட்டுப்படுத்துங்கள் என்று நான் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
அரவிந்தன்: ஆசிரியரும் கிட்டத்தட்ட ஒரு மருத்துவரைப் போல மாணவர்களைக் கவனிக்க
வேண்டும், இல்லையா?
இதையெல்லாம் ஆசிரியர்களுக்குச் சொல்லித்தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவர்களுடைய பொறுப்புணர்வுதான் இங்கே முக்கியமானது. தனியார் பள்ளிகளில் ஆர்வமாக
இருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனை வழியாக இதை எனக்கு அணுக முடிந்தது.
ஆசிரியர்களுக்குச் சொல்லித்தரத் தயாராக இருக்கிறோம் என்று பள்ளிகளுக்கு மின்னஞ்சல்
அனுப்பினோம். அவர்கள் வந்தார்கள். தனியார் பள்ளிகளில் விவரம் தெரிந்தவர்கள் நிறைய
பேர் இருக்கிறார்கள். தெரிந்து கொள்கிறார்கள். தேவையான அளவிற்குத் தகவல்கள்
கிடைக்கின்றன. நாம் கவனம் செலுத்த வேண்டியது அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப்
பள்ளிகளிலும்தான் என்று எப்பொழுதும் எனக்குத் தோன்றும்.
உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் ஆறேழு
பையன்கள் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் மதில் சுவரின் மேல்
உட்காருவார்கள். பேசிக்கொண்டிருப்பார்கள். காலை 9 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள்.
கொஞ்ச நேரத்தில் கடலில் நீந்தி விளையாடுவார்கள். நீந்தி முடிந்ததும் கிடைக்கிற
மட்டை, குச்சி இதையெல்லாம் வைத்து கிரிக்கெட் ஆடுவார்கள். 2.45 மணி ஆனதும்
வீட்டிற்குக் கிளம்பிவிடுவார்கள். கொஞ்ச நாட்களாக நானும் என் கணவரும் இதைக்
கவனித்தோம். நாங்கள் பார்த்தவரை அந்தப் பையன்களிடம் வேறு எந்தக் கெட்ட பழக்கமும்
இல்லை. கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத இந்தக் கால கட்டத்தில்தான் இவர்களை மாற்ற
முடியும். உங்களுக்கு என்ன பிரச்சினை என்று நாங்கள் கேட்டபோது, அவர்கள் ஒரு
மாநகராட்சிப் பள்ளியில் படிப்பவர்கள் என்றும் அவர்களுடைய தலைமை ஆசிரியரும் பிற
ஆசிரியர்களும் பயங்கரமாக அடிப்பதால் பள்ளிக்குப் போக முடியவில்லை என்றும்
சொன்னார்கள்.
அரவிந்தன்: எந்த வயதுப் பையன்கள்?
8ஆம், 9ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். அவர்கள் சொல்வது எந்த அளவிற்கு உண்மை
என்று தெரியாததால், அவர்களோடு படிக்கும் சில மாணவிகளிடம் கேட்டோ ம். அவர்கள்
சொல்வது முழுவதும் உண்மைதான் என்று சொன்னார்கள். ஆண் மாணவர்களுக்கு ஆசிரியர்களும்
பெண் மாணவர்களுக்குப் பெண் ஆசிரியர்களும் அந்தப் பள்ளியில் கற்பிக்கிறார்கள்
என்பதோடு, ஆண் மாணவர்களின் எண்ணிக்கை அங்கு குறைந்து வருவதும் தெரியவந்தது.
நாங்களிருவரும் 'டீ எம்போசிஸ்' என்னும் சமூக சேவை அமைப்பில் உறுப்பினராக இருக்கும்
பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் இது குறித்துப் பேசியபோது, பள்ளிக்
கல்வி அதிகாரியிடம் இதைச் சொல்லலாம் என்றார். அவரிடம் பேசினோம். தலைமை ஆசிரியரால்
ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியாகச் சொன்னார்.
அதனால் இது போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினாலே பள்ளிப் படிப்பை நிறுத்தும்
குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இந்த எண்ணிக்கை குறைந்தாலே தெருவோரக்
குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். இந்தத் தெருவோரக் குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக்
கிடைப்பதால் தேவையில்லாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். ஒன்று, வன்முறையில்
ஈடுபடுவது. இல்லையென்றால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாவது, உடலுறவில் ஈடுபடத்
தொடங்குவது.
17 முதல் 19 வயதில் பாலியல் வேகம் உச்சத்தில் இருக்கும். அந்தச் சமயத்தில்தான்
தம்முடைய பாலியல் உணர்வுகளை எந்த விதத்திலாவது தணித்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
உறவு கொள்கிறார்கள். இவர்களுக்குக் கருத்தடைச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது
என்று தெரியாது. மருத்துவர்கள் யாரும் அதைச் சொல்லிக் கொடுக்கவும் தயாராக இல்லை.
இதையெல்லாம் பத்து, பன்னிரண்டு வயதிலேயே, குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன அளவில்
மருத்துவர்கள் புரியவைக்க வேண்டும். பள்ளி அளவிலும் இந்தக் கல்வி வர வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோ ர் அளவு
குறையும். பால்வினை நோய்கள் குறையும். பதின் வயதுகளில் கர்ப்பமாவது குறையும்.
அனாதையாக விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும். வளர் இளம் பருவத்தில்
வரக்கூடிய எச்.ஐ.வி., போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மது அருந்துதல்
போன்றவற்றுக்குக் குழந்தைகள் பலியாவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால், அவர்கள் அன்பு இல்லாத குழந்தைகள், அன்பு கிடைக்காத குழந்தைகள், ஏதோ ஒரு
பிரச்சினையால் குடும்பத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் கண்டறிய முடியும்.
இவர்களுக்கு எப்பொழுதும் மனதிற்குள் ஒரு சோகம் இருந்துகொண்டே இருக்கும். சந்தோஷம்
கிடைக்குமென்று நினைத்துத் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மது, சிகரெட்,
போதைப் பொருட்கள், முறையற்ற பாலுறவு என்று பல்வேறு வேண்டாத பழக்கங்களுக்கு
ஆளாகிறார்கள். இந்தப் பழக்கங்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டுபோவதாக
நினைக்கிறார்கள்.
வழிதவறிப்போன பெண்களைப் பார்த்தால் தெரியும் - அவர்கள் அதிகமான, முரட்டுத்தனமான
கட்டுப்பாடுகள் இருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அங்கே
பார்க்காதே, இங்கே பார்க்காதே, தலையை இப்படி வாராதே, அப்படி வாராதே என்பதுபோலத்
தொடர்ந்து கட்டளை போடும் குடும்பமாக அது இருக்கும். எதிரில் வரும் ஆள்
சிரித்தால்கூட இது போன்ற வீடுகளில் தப்பு சொல்வார்கள்.
அரவிந்தன்: முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு இது போன்ற கட்டுப்பாடுகளை இந்தக்
குழந்தைகளின் அம்மாக்களும் அனுபவித்திருப்பார்கள் இல்லையா? இப்பொழுது மட்டும் ஏன்
இந்தக் கட்டுப்பாடு தவறான வழிக்குக் கொண்டுபோகிறது?
கட்டுப்பாடுகள் ஒரு புறம் இருந்தாலும் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் வெளியுலகப்
பரிச்சயம் அந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிட அதிகம். பொதுவாக ஒரு பையனும் பெண்ணும்
சேர்ந்து நடந்து போகமாட்டார்கள். பையன்களும் பெண்களும் கூட்டமாக நின்று
பேசமாட்டார்கள். இப்பொழுது அதெல்லாம் பெரிய காரியமில்லை. எல்லோரும் சுதந்திரமாக
இருக்கிறார்கள். சுதந்திரமான சூழலுக்குப் பொருத்தமில்லாத கட்டுப்பாடுகள்
எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
எந்த அளவிற்கு ஆண்களையும் பெண்களையும் பால் வேறுபாடு இல்லாமல் பழக விடுகிறோமோ அந்த
அளவிற்கு வேறு மாதிரியான எண்ணங்கள் அவர்களிடம் வராமல் இருக்கும். பலரோடு பழக
விடாமல் தடுப்பதால் எல்லோரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல், எப்போது
யார் வந்து பேசினாலும் காதல் என்று முடிவு செய்துவிடுவார்கள்.
நிறையப் பேரிடம் நாம் பேசுகிறோம். ஈர்ப்பு என்பது நாம் பேசும் எல்லோரிடமும்
வருவதில்லை. யாரோ ஒருவரிடம்தான் வருகிறது. ஆணுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு
ஆணிடமும் வரும் ஈர்ப்பு மிக இயல்பானது. இதில் கிடைக்கும் அனுபவம் பிற்காலத்தில்
குடும்ப வாழ்க்கைக்கான அடிப்படையாகவும் இருக்கிறது. பலரோடு நாம் பேசும்போதுதான்
அவர்களுடைய ஆளுமை என்ன என்றும் அணுகுமுறை என்ன என்றும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு
நமக்குக் கிடைக்கும். அது வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கான அனுபவம். இதைப்
பெற்றோரும் பள்ளிக்கூடங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்போரும் புரிந்துகொள்ள
வேண்டும்.
எவ்வளவு விரைவாகப் பாலியல் கல்வியைப் பரவலாக்குகிறோமோ அந்த அளவிற்கு முதல்
பாலுறவுக்கான உந்துதல் குறையும், தள்ளிப்போகும். அப்படிப் பாலியல் கல்வி கிடைக்காத
நிலையில், சில ஆண் பிள்ளைகள் அதை அன்பின் வெளிப்பாடு, தவிர்க்க இயலாத வாய்ப்பு,
ஒருவரோடு தனக்கு ஏற்படும் அரிய உறவு, அதைத் தவறவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்,
தவறு செய்கிறார்கள்.
இதேபோல ஒரு பெண்ணுக்குத் தன்னைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். சுய மதிப்பீடு
செய்யத் தெரிய வேண்டும். விடுபட முடியாத சூழலிலும்கூட அதைக் கடந்து வெளிவரத் தெரிய
வேண்டும். வளர்ப்பிலேயே அதை நாம் கற்றுத்தர வேண்டும். அம்மாவோ ஆசிரியரோ அதைப்
பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லலாம். இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் ஒரு
பெண்ணுக்கு அந்த நேரத்தில் ஏதோவொரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்கத்
தெரியுமளவிற்குத் தைரியம் வேண்டும். சமயோசித புத்தி இருக்க வேண்டும். தைரியம்
இல்லாத ஒரு பெண், உறவுகொள்ள மறுத்தால் இருக்கும் இந்த உறவும் போய்விட்டால் என்ன
செய்வதென்று குழம்பி, சம்மதிப்பாள்.
பொதுவாகப் பையன்களிடம் பள்ளிக் காலத்திலேயே இது பற்றிய உந்துதல் ஏற்பட்டுவிடுகிறது.
சிலர் பணம் கொடுத்து உறவுகொள்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். இது மற்ற
பையன்களுக்குத் தெரியும்போது, நாமும் ஏன் ஈடுபடக் கூடாது என்பது போன்ற கேள்விகள்
வருகின்றன. அசட்டுத் தைரியம் உள்ள ஆண்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. அந்த நேரத்தில்
கிடைக்கும் இன்பம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம்.
கனிமொழி: குழந்தைகள்மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பொதுவாக இருக்கக்கூடிய
பிரச்சினை என்றாலும் அதைப் பற்றி நாம் பெரிதாகப் பேசுவதில்லை.
பேசுவதில்லை என்பதைவிட ஒத்துக்கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கனிமொழி: இந்தப் பிரச்சினையிலிருந்து குழந்தைகள் விடுபடுவதற்குக் குழந்தைகளையும்
பெற்றோரையும் எப்படித் தயார்செய்வது?
மூன்று வயதுவரை குழந்தைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆனால்
இப்பொழுது play schools இருப்பதால் இரண்டு, இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு
அனுப்பிவிடுகிறோம். அப்பா, அம்மாவின் கண்காணிப்பை விட்டு நீண்ட நேரம் குழந்தைகள்
இருக்கத் தொடங்குகிறார்கள். எல்.கே.ஜி.க்குப் பிறகு குழந்தைகள் புரிந்துகொள்ள
ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகள்மீதான வன்முறை என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும்
இல்லை. ஆண் குழந்தைகளுக்கும் இருக்கிறது. அவர்களும் பெண் குழந்தைகளுக்கு இணையாக
ஏகப்பட்ட தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் பையன்களுக்குக் கர்ப்பமாகும் அபாயமோ
அந்தரங்க உறுப்பு கிழிபடும் அபாயமோ இல்லை. அதனால் ஆண் குழந்தைகளுக்கு நிகழும்
துன்புறுத்தல்கள் வெளியே தெரியாமல் இருக்கின்றன. மருத்துவர்களாலும் அதைக்
கண்டுபிடிக்க முடியாது. ஒரு பெண்ணுக்கு இந்தத் துன்புறுத்தல் நிகழ்ந்தால்
ஏற்றுக்கொள்ளவும் கண்டுபிடிக்கவும் போதுமான சாட்சியங்கள் அவளது உடலிலேயே
இருக்கின்றன. உதிரப் போக்கென்றோ வேறு காரணத்தாலோ பெண் குழந்தைகள் மருத்துவரிடம்
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஆண்பிள்ளைகளைவிடப்
பெண்பிள்ளைகளுக்குத்தான் இந்தப் பிரச்சினை அதிகம் என்பதுபோல நமக்குத் தோன்றுகிறது.
உண்மையில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளுக்கு நிகராக இந்தச் சிக்கலை
எதிர்கொள்கிறார்கள்.
கனிமொழி: இந்த அனுபவம் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது?
ஒரு குழந்தைக்கு எட்டு வயதிற்குள் ஏற்படும் இந்தக் கசப்பான அனுபவம் மனிதர்கள்மீதான
நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மனிதர்கள் மோசமானவர்கள், நம்பகமானவர்கள் அல்ல என்ற
எண்ணம் வரத் தொடங்குகிறது. ஆழமான நட்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாரையும்
நெருக்கமானவர்களாக ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மனநிலை உருவாகும். அவர்களுடைய
வயதினரையும்கூட நம்பமாட்டார்கள். மொத்தத்தில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளத்தான்
நினைப்பார்கள். பிற்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும்போதுகூடத் தாங்கள்
சுத்தமானவர்கள் அல்ல என்னும் எண்ணம் அவர்களுக்கு வருகிறது. இந்த எண்ணம் பெண்களை
எந்த அளவிற்குப் பாதிக்குமோ அதே அளவிற்கு ஆண்களையும் பாதிக்கிறது. இவர்கள் திருமணம்
செய்துகொண்டு பெற்றோர் ஆகும்போது தங்கள் குழந்தையிடம்கூட அன்பு காட்ட முடியாமல்
பெரிய தயக்கத்தோடு இருப்பார்கள்.
எனக்கு இதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு ஒரு
அம்மா தன் குழந்தையோடு வருவார். குழந்தை அம்மா உட்கார்ந்ததும் மடியில் ஏறி
உட்காரும். உட்கார்ந்த உடனே அந்த அம்மா, 'சனியனே, கீழ இறங்கு' என்று குழந்தையைத்
திட்டினார். அந்தப் பையன் மறுபடியும் ஆசையாக அம்மாவிடம் ஓடி வந்து கையில் முத்தம்
கொடுத்தான். அப்பொழுதும், 'இந்த மாதிரிப் பண்ற வேலையை வச்சுக்காத' என்று
கோபப்பட்டார். ஏன் இப்படித் திட்டுகிறீர்கள் என்று அந்த அம்மாவிடம் நான் கேட்டபோது,
'அவன் பக்கத்தில் வந்தாலோ தொட்டாலோ எனக்குப் பிடிக்கல' என்றார். அதைக் கேட்டதும்
குழந்தையை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஒரு நாள் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று
நான் சொன்னேன். அவரும் வந்தார். பேசியபோதுதான் தெரியவந்தது, அவர் குழந்தையாக
இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது.
இது போன்ற பாதிப்பு ஆணின் திருமண வாழ்க்கையிலும் இருக்கிறது என்பதற்கு எங்களிடம்
இன்னொரு சான்று உள்ளது. எங்களது மருத்துவமனைக்கு ஒரு அப்பா தன்னுடைய பெண் குழந்தையை
அழைத்துக் கொண்டு வருவார். ஆனால் மருத்துவரின் அறைக்குள் குழந்தையுடன் வர மாட்டார்.
வெளியே பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் குழந்தையின்
உடல்நலம் பற்றிக் குழந்தையின் அப்பாவிடம்தான் பேச வேண்டும் என்று எனக்குத்
தோன்றியதும் அவரை அறைக்குள் வருமாறு அழைத்தேன். அவரோடு பேசினேன். குழந்தையோடு எந்த
நெருக்கமும் அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. இந்தக் குழந்தையை நீங்கள் தூக்கி
வளர்க்கவில்லையா, உச்சி முகரவில்லையா என்றெல்லாம் கேட்டபோது, 'இல்லை. நான்
குழந்தையிலிருந்தே தொடுவதில்லை' என்றார். அவரே என்னிடம் தனியாகப் பேச வேண்டும்
என்றும் சொன்னார்.
அவர் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, பத்தாம் வகுப்புப் படித்த ஒரு
மாணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். அதனால்தான் தன்னுடைய
குழந்தையைத் தொடும்போதுகூடத் தவறான எண்ணத்தில் தொட்டுவிடுவோமோ என்று தயங்கிக்
குழந்தையைத் தூக்கவும் தொடவும் செய்யாமல் தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டிருக்கிறார்
என்பது அவருடைய பேச்சில் வெளிப்பட்டது. மனதில் ஆழமாகப் பதிந்த இந்தச் சின்னக்
காயம், இந்த அளவிற்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து
கொள்ள முடிந்தது. இவரைப் பொறுத்தவரை, 'நான் சுத்தமில்லாதவன். அதனால் என்
குழந்தையைத் தொடக்கூடாது' என்ற எண்ணம், 'எனது அசுத்தம் என் குழந்தைக்குப் போகக்
கூடாது' என்ற ஆழ்மனதின் வெளிப்பாடு.
இதனால்தான் இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்து, மறந்துபோக
வேண்டிய இந்தப் பிரச்சினையில் உங்களது தவறு என்று எதுவும் இல்லை என்பதைப்
புரியவைக்க வேண்டும்.
அரவிந்தன்: இந்தத் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோரையும்,
அதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கக் குழந்தைகளையும் எப்படிப் பழக்கப்படுத்துவது?
பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கும் சமயத்திலேயே குழந்தைகளுக்குப் பெற்றோர் சில
விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். 'கழிப்பறைக்குப் போகும் போது, ஆயா கூட வருவார்.
சுத்தம் செய்வதற்கு அவரை மட்டும் அனுமதிக்கலாம், மற்றபடி உன்னுடைய அந்தரங்க
பாகங்களை வேறு யாரையும் தொட அனுமதிக்கக் கூடாது. உன்னுடைய பாகங்களைக் காட்டவும்
கூடாது. அப்பா அம்மாவை அனுமதிக்கலாம், ஆயாவை அனுமதிக்கலாம். உன்னாலேயே முடியும்
என்றால் நீயே அதைச் செய்துகொள்' என்பதுபோலச் சில விஷயங்களைத் தொடக்கத்திலிருந்தே
குழந்தையிடம் சொல்ல வேண்டும். அடுத்த கட்டம் என்னவென்றால், குடும்பத்திற்குள்ளேயே
நடைபெறும் துன்புறுத்தல்களும் குறிப்பிடப்பட வேண்டும்.
'உனக்கு அசௌகரியம் ஏற்படும்படி, உனக்கு வித்தியாசமாகப் படும்படி உன்னுடைய பெற்றோரே
உனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டால் அதையும் அனுமதிக்காதே' என்றும் குழந்தைக்குக்
கற்றுத்தர வேண்டும். ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்றுதான் தெரியவில்லை.
அரவிந்தன்: குழந்தைகள் தங்களுடைய அந்தரங்க உறுப்புகளைக் கையாளும் விஷயம், அது
தொடர்பாகப் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் பற்றி... எந்த வயதில் இந்த நடத்தை
ஆரம்பிக்கும்?
குழந்தை பிறந்த 4, 5 மாதங்களில் தன் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக்கொள்ளும்.
இன்னொரு பக்கத்தில் இருக்கும் கையும் நம்முடையதுதான் என்று நினைக்கத் தொடங்கும்.
இரண்டு கைகளையும் சேர்த்துக்கொள்ளும். பிறகு காலைப் பிடித்துக்கொண்டு மாற்றிப்
பிடித்துப் பார்க்கும். இந்தச் செயலால் உடலின் மற்ற பாகங்களும் தன்னுடையதுதான்
என்று உறுதிப்படுத்திக்கொள்ளும். கையையும் காலையும் தவிர்த்து உடலின் பிற
பாகங்களைத் தொட முடியும் குழந்தைக்குத் தன்னுடைய அந்தரங்க உறுப்பைத் தொட முடியாது.
ஏனென்றால் எப்பொழுதும் அந்தப் பாகம் மட்டும் மூடப்பட்டே இருக்கிறது. அதனால்,
மறைக்கப்பட்ட அந்தத் துணியை நீக்கியவுடனேயே ஆறேழு மாதத்திலெல்லாம் குழந்தை தொட்டுப்
பார்க்கும். அதைத் தொடும்போது அங்கு ஏற்படுகிற உணர்ச்சி பிற பாகங்களைத் தொடும்போது
ஏற்படுகிற உணர்ச்சியிலிருந்து வேறு மாதிரியாக இருப்பதால் குழந்தையின் மனதில் அந்த
விஷயம் பதிகிறது. இது இயல்பாக நடக்கும் விஷயம். ஆனால் நாம் 'அதைத் தொடாதே, கையை
எடு' என்று கண்டிப்போம். இது சரியான அணுகுமுறை அல்ல.
பிறகு, குழந்தை வாயில் விரல் வைக்கும். கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் வாயில்
வைக்கும். ஏனென்றால் பதினெட்டு மாதங்களிலெல்லாம் வாயைச் சுற்றியிருக்கும்
பாகங்களில்தான் உணர்ச்சி இருக்கும். குழந்தை ஒரு பொருளுடைய தண்மையையோ வெப்பத்தையோ
வாயில் வைத்துத்தான் தெரிந்துகொள்கிறது. நாம் எல்லோருமே குழந்தை வாயில் வைத்தால்
எடுத்துவிடுவோம். எடு எடு என்று தொல்லைப்படுத்துவோம். அதனால் குழந்தைக்குத்
திருப்தியில்லாத மனநிலை உருவாகும். அப்பொழுதுதான் திரும்பத் திரும்ப அதைச் செய்ய
வேண்டும் என்று தோன்றும். நாம் அதைக் கண்டுக் கொள்ளாமல் விட்டால், அந்தப்
பாகங்களைத் தொட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்குத் தானாகவே குறைந்துவிடும்.
நாமாக அதைத் தடுத்தால்தான் அந்த ஆர்வம் குழந்தைகளுக்குத் தொடர்ந்து இருக்கும்.
3, 4 வயதுக் குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தரங்க
உறுப்புகளைத் தொட்டுக்கொண்டிருப்பதாகப் பல பெற்றோர்கள் குற்றச்சாட்டுகளைக்
கூறுகிறார்கள். அந்த வயதுதான் உடலின் மற்ற பாகங்களைவிட இந்தப் பாகங்கள்
வித்தியாசமான உணர்ச்சிகளைக் கொண்ட பாகங்கள் என்று புரிந்துகொள்ளும் வயது. அதனால்
நாம் பார்க்காததுபோல் விட்டுவிட வேண்டியதுதான். அந்தப் பழக்கத்தால் எந்தப்
பிரச்சினையும் வராதவரை இந்த விஷயத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால்தான் அவர்களது
ஆர்வம் குறையும். அடிக்கடி அதைச் செய்கிறார்கள் என்றால், எந்தச் சமயத்தில் அதை
அதிகமாகச் செய்கிறார்கள் என்று கவனித்து, அந்த நடவடிக்கையைக் குறைப்பதுதான் நல்லது.
மற்றபடி அந்தச் செயல் குறித்து அவர்களிடம் பேசவே கூடாது.
பெண் குழந்தைக்கு 10 வயதிலும் ஆண் குழந்தைக்கு 13 வயதிலும் பாலியல் ஹார்மோன்கள்
வரத் தொடங்கும். அப்படி வரும்போது பாலியல் வேகம் அவர்களுக்கு அதிகமாகும். அந்தரங்க
உறுப்புகளைக் கையாளும் விதம் குறித்த எண்ணங்களும் இந்தப் பருவத்தில் வரும்.
ஓர் ஆணுக்கு விந்தணு உற்பத்தியாவதே வெளியேறு வதற்காகத்தான். ஆணுக்கு அதை
வெளியேற்றுவதற்கான உந்துதல் இருக்கும்பொழுது அதைச் செய்வதில் தப்பில்லை. ஆனால் ஒரு
நாளைக்கு இத்தனை தடவை என்றோ செய்யவில்லை என்றால் படபடப்பாக இருக்கிறது என்றோ
தோன்றினால் அது மனநலம் தொடர்புடைய விஷயமென்று சொல்லலாம். அதற்கு மருத்துவரால்
வழிகாட்ட முடியும். அதனால்தான் 10, 12 வயதிலெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு
இதைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியவைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பாலியல்
குறித்த விஷயங்களை அறிமுகப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். 2004 நவம்பரில்
நாளிதழ்களில் அது குறித்த விளம்பரங்கள் கொடுத்தோம். ஆனால் இந்த விஷயம் மிகக்
குறைவாகக்கூட கவனம் பெறவில்லை.
கனிமொழி: ஒரு குழந்தையின் ஆர்வத்தைத் தெரிந்து கொள்ளாமல், அதைப் பற்றிய கவனம்
இல்லாமல் பொதுவாக டாக்டர், இன்ஜினியர் என்று படிக்கச் சொல்வது . . .
எந்தக் குழந்தையும் தான் நல்ல மதிப்பெண்கள் வாங்கக் கூடாது, நல்ல முறையில் படிக்கக்
கூடாது என்று நினைப்பதில்லை. இந்த விஷயம் பெற்றோருக்குப் புரியாது. குழந்தைகள்
குறைவாக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்றால், குழந்தைக்கு ஏதோ குறைபாடு
இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றுதான் பெற்றோர் யோசிக்க வேண்டும். எல்லாக்
குழந்தைகளும் ஒரே மாதிரியான திறமைகளோடு இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். எத்தனையோ உளவியல் ரீதியான அணுகுமுறைகளும் பள்ளித் தேர்வு முறைகளும்
அறிமுகமாகியிருக்கும் இந்தச் சூழலில், குழந்தையின் குறைபாடு என்ன என்பதை எளிதாகக்
கண்டறிய முடியும். இந்த முறைகளில் குழந்தைகளின் குறைபாடுகளுக்கான காரணங்களைக்
கண்டுபிடிக்கும்போது, அவர்களுடைய விருப்பம் என்ன, ஆர்வம் என்ன என்பதையும்
அறிந்துகொள்ள வாய்ப்பு அதிகம்.
கனிமொழி: பெற்றோர்கள் நம் குழந்தையும் 80% வாங்கவேண்டும் என்று அவர்களை
நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள் . . .
நாம்தான் பெற்றோருக்குப் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் திறமையும்
வளரும் விதமும் வித்தியாசமானது. திறமைகள் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை.
ஒரு குழந்தையால் அதிகம் படிக்க முடியாமல் போவதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
சுயமான ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் வாங்கலாம். சாதாரணமான
திறனுடைய ஒரு குழந்தைக்கு 90% வாங்குவது சாத்தியமில்லை. குழந்தைகள் கற்ற முறையிலும்
படித்த முறையிலும் வேறுபாடுகள் அதிகம். படிப்பதும் மதிப்பெண் வாங்குவதும் மட்டுமே
திறமையில்லை. கற்றுக்கொள்வது, சூழலைப் புரிந்துகொள்வது, ஒன்றையொன்று தொடர்புபடுத்தி
அறிந்துகொள்வது, இசையை ரசிப்பது, தம்மைச் சுற்றியிருப்போரிடம் பழகுவது,
ஆசிரியர்கள், சக மாணவர்கள், அவர்களது பெற்றோர் என்று அனைவரிடம் பழகுவது, இதெல்லாம்
சமூக நடத்தைகள். இவையும் குழந்தைக்கு முக்கியமானவைதான்.
ஒரு குழந்தை எதிலெல்லாம் பலவீனமாக இருக்கிறது? எழுத முடியவில்லையா? எதைப்
புரிந்துகொள்ள முடியவில்லை? எதில் சமரசம் செய்துகொள்கிறது? உணர்வுபூர்வமான
பிரச்சினைகள் ஏதாவது உண்டா? எந்தப் பிரச்சினை குழந்தையின் மதிப்பெண் குறையக்
காரணம்? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முயல வேண்டும். பெற்றோருக்கும்
ஆசிரியருக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது.
சில வீடுகளில் எப்பொழுதும் சண்டையாக இருக்கும். சில பெற்றோர் குழந்தைகளை எந்த
நேரமும் வேலைக்கு ஏவிக்கொண்டே இருப்பார்கள். இதனாலெல்லாம் படிப்பு நேரம் குறைகிறதா
என்பதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் சில சமயங்களில், 'நான் சரியாக வளரவில்லை. என்னுடைய முகம் சரியில்லை.
அதனால் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்' என்று நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே
நொந்துகொள்வார்கள். இந்தச் சிக்கலும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.
குழந்தையின் முழுத் திறனும் வெளிப்படாமல் இருக்க இவையும்தாம் காரணங்கள்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் ஞாபக சக்தி குறையும். அதனால் குழந்தையின்
கவனிப்புத் திறனும் குறையக்கூடும். சில சிறு குழந்தைகள் ஆசிரியர் பாடம்
நடத்தும்போது வேறு பக்கம் திரும்பிக் கவனிப்பார்கள். ஆசிரியர் குழந்தையைத் திட்டி
கவனிக்குமாறு சொல்வார். ஆனால் அந்தக் குழந்தைக்கு ஒரு காது மட்டுமே கேட்கும்
திறனுடையதாக இருக்கும். எந்தக் காது கேட்குமோ அந்தப் பக்கம் திரும்பிப் பாடத்தைக்
கவனிப்பது ஆசிரியருக்குத் தெரியாது. அதேபோலத்தான் கண் பார்வையும். இவ்வாறு மன
ரீதியாகவும் உடல் ரீதியாகவும் குழந்தையின் படிப்புத் திறன் குறையக் காரணம் என்ன
என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். இதற்கெல்லாம் ஆசிரியர்களுக்குப்
பயிற்சியளிக்க வேண்டும்.
அரவிந்தன்: என்னுடைய நண்பர் ஒருவர் குழந்தைகளைப் பற்றி நிறைய புத்தகங்களை
வாசித்தாராம். இதில் சில புத்தகங்களை முதலிலேயே படித்திருந்தால் தன் குழந்தைகளை
இப்படித் திட்டியிருக்கவே மாட்டேன் என்றார்.
குழந்தை வளர்ப்பு என்பது அதற்குரிய எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு
செய்யப்படுவதல்ல. குழந்தை வளர்ப்பு கடினமானது என்று நான் சொல்ல மாட்டேன். நாம்
குழந்தைகள்மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்கக் கூடாது. தேவையில்லாத விஷயங்களைக்
குழந்தைகள்மீது திணிக்கக் கூடாது. அவர்கள் வளரும்போது அவர்களுக்கான இடத்தையும்
சுதந்திரத்தையும் நாம் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். சுதந்திரமாகச் சிந்திக்கவும்
செயல்படவும் விட்டால் குழந்தைகள் நமது கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடுவார்கள் என்ற
பயத்தில் சில பெற்றோர்கள் எந்த விஷயமானாலும் தாமேதான் குழந்தைக்குச் செய்ய வேண்டும்
என்று நினைப்பார்கள். இது தவறு.
அரவிந்தன்: பெற்றோர் தங்களுடைய உணர்வுகளையெல்லாம் குழந்தைகள்மீது காட்டுவது . . .
பெற்றோர் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று
நினைக்கிறார்கள். அந்த இடம் பலருக்குக் குழந்தையாகத்தான் இருக்கிறது. அந்த மாதிரி
உணர்வுகளைக் குழந்தைகளிடம் காட்ட ஆரம்பித்துவிட்டால், குழந்தைகள் தாமே எதையும்
தேர்ந்தெடுப்பதை விரும்ப மாட்டார்கள்.
ஆண் குழந்தைகளாக இருந்தால் சில பெற்றோர்கள் எங்கே போகிறாய், யாரிடம் பேசுகிறாய்,
எந்தப் பெண்ணோடு பழகுகிறாய், தொட்டுப் பேசுகிறாயா தொடாமல் பேசுகிறாயா என்றெல்லாம்
தொடர்ந்து நச்சரிக்கும்போது, பெற்றோரின் அன்பே தேவையில்லை; நண்பர்களின் அரவணைப்பே
போதும் என்று சில குழந்தைகள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.