Google   www kalachuvadu.com

 

பத்தி

மாயாவித் திருடர்கள்

சக்கரியா

பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது தமிழகம். முதலீட்டாளர்களில் பலரும் - உதாரணமாக பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் - கேரளத்துக்கு வந்து முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை விவாதித்தவர்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். காரணம், கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது. தொழிலாளிகளின் மூளைகளை அரசியல் கட்சிகள் பொய்களால் மழித்துவைத்திருக்கின்றன. கம்பெனியைத் திறப்பதில் அல்ல; மூடுவதிலேயே அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இடையில் நின்று இரு தரப்பினரின் சட்டைப் பைகளிலும் கை போடுகிறார்கள். இன்று கேரளத்தில் முதலீடு செய்வதும் அதைக் கடலில் வீசுவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

இங்கே சின்ன அளவிலாவது முதலீடு செய்யத் துணிந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துரதிருஷ்டவசமாகக் கொக்கோகோலா மட்டுமே. அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு.

கொக்கோகோலாவுக்குப் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்தது அன்று ஆட்சியிலிருந்த இடது முன்னணி அமைச்சரவையே. 2000இல் அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. 2001இல் காங்கிரஸ் முன்னணி அதிகாரத்துக்கு வந்தது. அப்போதுதான் பழைய மார்க்சிஸ்ட் முன்னணியில் அங்கமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கொக்கோகோலாவுக்கு எதிராகக் களமிறங்கியது.

கொக்கோகோலா தொழிற்சாலை உள்ள பிளாச்சிமடை என்ற பகுதி பெருமாட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது. கொக்கோகோலாவுக்கு அங்கே ஆலை நிர்மாணிக்க அனுமதியளித்த பெருமாட்டிப் பஞ்சாயத்து அப்போது ஜனதா தளம் (எஸ்)-இன் கைவசம் இருந்தது. கோலா எதிர்ப்பை முன்னெடுத்ததும் அவர்கள்தாம்.

முன்னெடுத்தார்கள் என்று சொல்லக் காரணமிருக்கிறது. கொக்கோகோலா தொழிற்சாலையின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு ஒரு போதும் குடிநீர் கிடைத்தது இல்லை. காரணம் எளிமையானது. ஆதிவாசிகளின் கோரிக்கைகளுக்குக் கேரளத்திலுள்ள அரசியல்-ஆட்சி-சமூகப் பொது அமைப்பு, ரோமத்தின் மதிப்புக்கூடத் தந்ததில்லை என்பதுதான். அவர்களுடைய குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்ததும் அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது கொக்கோகோலா தொழிற்சாலையால்தான் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்பவைக்க ஆட்கள் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து தர யார் கடமைப்பட்டவர்களோ அவர்கள் மிகச் சாமர்த்தியமாகப் பழியைக் கொக்கோகோலாமீது சுமத்தினார்கள். கொக்கோகோலா தொழிற்சாலைக்கு முன்னால் பந்தல் கட்டி ஆதிவாசிகள் போராட்டம் தொடங்கினார்கள்.

உலகமயமாக்கல், முதலாளித்துவம், நவகாலனியாக்கம் போன்ற சொற்களுக்கான மார்க்கெட் இடது சாரி மனோபாவமுள்ள கேரளத்தில் பிரசித்தமானது. தவிரவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இத்தகைய சொற்களின் நட்சத்திர மதிப்பு கவர்ச்சிகர மானது. அப்படிப்பட்ட சந்தையில் கொக்கோகோலாவுக்கு எதிராகத் திசைதிருப்பிவிடப்பட்டவர்களும் அப்பாவிகளுமான ஆதிவாசிகள் தொடங்கிய போராட்டம் முதல் தரமான விற்பனைச் சரக்காக இருந்தது. அதை ஜனதா தளம் போன்ற உயிர்ப் பிணமான ஒரு கட்சி ஆனந்தமாக முன்னெடுத்தது. ஆதிவாசிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டு, அரசியல்வாதிகள் முன்னிலை வகித்தார்கள். சி.கே. ஜானு போன்ற ஆதிவாசித் தலைவர்கள் பின்வாங்கினார்கள்.

தாமதமில்லாமல் பிளாச்சிமடை உலகப் புகழ் பெற்றது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கேரளத் தலைவருக்கு உரிமையான ஒரு பிரபல நாளிதழ் போராட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது. மேதா பட்கர் முதல் வந்தனா சிவா வரையான உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர்களின் தீர்த்தாடன கேந்திரமானது பிளாச்சிமடை. மயிலம்மாவைப் போன்ற உள்ளூர் விக்கிரகங்களும் உருவாக்கப்பட்டன. வழக்குகள் தடபுடலாக நடந்தன. கொக்கோகோலா தொழிற்சாலை மூடப்பட்டது. காங்கிரஸ் அரசு போய் கம்யூனிஸ்ட் அரசு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அது முதலில் செய்த காரியம் கொக்கோகோலாவுக்குத் தடை விதித்ததுதான். அதாவது, கேரளத்தின் மக்கள் தொகையில் 0.5 விழுக்காட்டினர் குடிக்கும் பானத்தைத் தடைசெய்தது. 90 விழுக்காட்டினர் காலாவதியானதும் உலகளவில் தடைசெய்யப்பட்டதுமான மருந்துகளைப் பயன்படுத்தும் மாநிலத்தில், 60 விழுக் காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கலப்படம் செய்த மதுவை அருந்தும் மாநிலத்தில், தடை விதிக்கப்பட்டதோ 0.5 விழுக்காடுள்ள ஒரு முட்டாள் பானத்துக்கு.

இதற்கிடையில் கோலாவில் நச்சுக் கொல்லிகளின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்? கோலா தயாரிக்கப் பயன் படுத்தும் தண்ணீரிலும் சர்க்கரையிலும் அவை இருக் கின்றனவே! நச்சுக் கொல்லியின் கணக்கைப் பார்த் தால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு வரும் எந்தக் காய்கறியையும் எந்தப் பழத்தையும் பயன்படுத்த முடியாது. அவை பூச்சி மருந்துகளில் மூழ்கி எழுந்தவை. அதிகம் எதற்கு? கேரளக் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குழாய் நீரைப் பரிசோதித்தால் காணப்படும் நச்சுக் கூறுகள் நம்மை உணர்விழக்கச் செய்யும். ஆனால், இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும் மேதா பட் கருக்கும் எம்.பி. வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோகோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மக்சேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்? காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொக்கோகோலாதானே நட்சத்திரம்.

கொக்கோகோலா நிறுவனத்தை மூடி வருஷங்களாகின்றன. அது தண்ணீரை உறிஞ்சுவதில்லை என்பது வெளிப்படை. ஆனால், பிளாச்சிமடை ஆதிவாசிகளுக்கும் பிறருக்கும் இன்றும் குடிநீர் கிடைக்கவில்லை. இது என்ன ஆச்சரியம்? அப்படியானால் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போராட்டங்கள் எதற்காக? தமிழ் நாட்டிலுள்ள கொக்கோகோலா தொழிற்சாலைவரை பரவிய இந்தப் போராட்டம் ஏன் ஆதிவாசிகளுக்குக் குடிநீரைக் கொண்டுவரவில்லை? எல்லாரும் கேட்கக் கூடிய கேள்விகள்தாம் இவை.

அண்மையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உண்மை வெளிவந்தது. சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான பிரகாஷ் காராட்டின் கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செய்புதீன் ஷேக் அளித்த பதில் பின்வருமாறு:

மத்திய நீர்வளத் துறை பிளாச்சிமடை தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிளாச்சிமடை உள்ளிட்ட பெருமாட்டிப் பஞ்சாயத்திலுள்ள நிலத்தடி நீரில் 92 விழுக்காட்டையும் அங்குள்ள விவசாயிகளின் குழாய்க் கிணறுகள் தாம் உறிஞ்சியெடுக்கின்றன. சரியாகச் சொன்னால் பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 17.4 மில்லியன் கன மீட்டர் நீர் இன்று உள்ளது. இதில் 16.12 மில்லியன் கன மீட்டர் நீர் விவசாயப் பாசனத்துக்கும் 1.08 மில்லியன் கன மீட்டர் நீர் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 0.2 மில்லியன் கன மீட்டர் நீரைத்தான் கொக்கோகோலா தொழிற் சாலையும் பிற மதுத் தயாரிப்பு ஆலைகளும் பங்கிட்டுக் கொள்கின்றன. பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 508 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அவற்றில் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை ஐந்து. சாராய ஆலைக்குச் சொந்தமானது இரண்டு.

வந்தனா சிவாவுக்கும் மேதா பட்கருக்கும் இதைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? ஒரு வார்த்தைகூட இல்லை. அமைதி. பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை' உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு முன்னால் செல்வதாக நான் முன்பே குறிப்பிட்டேன்.

பிளாச்சிமடையில் நடந்த போராட்டக் கூத்துக்கு இன்னொரு சுவாரசியமான கிளைமாக்ஸ் அண்மையில் நிகழ்ந்தது. கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிளாச்சி மடைக்குச் சென்றிருந்தார். ஆதிவாசிகளுக்கு இப் போதும் குடிநீர் கிடைப்பதில்லை என்ற உண்மையைக் 'கண்டுபிடித்தார்'. காரணம் என்ன என்கிறீர்களா? அண்மைக் காலம்வரை நீதிமன்ற உத்தரவின்படி கொக்கோகோலா நிறுவனம் ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்துவந்தது. கம்பெனி மூடப்பட்ட பிறகும் அது தொடர்ந்துவந்தது.

நிறுவனம் ஊரைக் காலிசெய்ததோடு குடிநீர் விநியோகமும் நின்றுபோனது. நீர்வளத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் பிளாச்சிமடையில் ஒரு கம்பீரமான அறிவிப்பைச் செய்தார்: "ஆதிவாசிகளுக்குக் கொக்கோகோலாவின் பிச்சை வேண்டாம். இனிமேல் அரசே குடிநீர் வழங்கும்." அப்படியானால் இத்தனை காலமாகக் குடிநீர் வழங்காமல் அவர்களைப் போராட்டத்தில் இறக்கிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் யார்? கொக்கோகோலாவா?

"முட்டாள்களின் சொர்க்கம்" என்று ஒரு பிரயோகம் உண்டு. அதை நேரடியாக அனுபவித்து அறிய விரும்பினால் கேரளத்துக்கு வந்தால் போதும். நல்வரவு!

உள்ளடக்கம்

Google Ads.....


Google