புத்தகங்களின் மீதான தனது அக்கறையைப் பல விதங்களிலும் வெளிப்படுத்திவருகிறார்
தமிழக முதல்வர். கடந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த
முதல்வர் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதற்காகப் பாபாசிக்குத் தனது
சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். சென்னையில் ஒரு
நிரந்தரப் புத்தக அங்காடியை அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆவன
செய்வதாகவும் வாக்களித்தார்.
2007-2008ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
நிரந்தரப் புத்தக அங்காடி அமைப்பதற்கான நிலத்தை இலவசமாக அளிக்கும் தமிழக அரசின்
இந்த அறிவிப்பு புத்தக விற்பனையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகுந்த
பயனளிக்கக்கூடிய ஒன்று. அனைத்து வகையான நூல்களையும் உள்ளடக்கிய ஒரு நூலகத்தை 100
கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வந்திருக்கிறது.
வாசிப்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான இடவசதியோடும் இணையத் தொடர்புகளுக்கான
சாதனங்களோடும் மிக நவீன முறையில் அமையவிருக்கும் இந்த நூலகம் உண்மையில் வாசகர்களின்
நிறைவேறாத கனவாகவே இதுநாள்வரை இருந்துவந்திருக்கிறது. இத்திட்டங்களுக்கு ஒப்புதல்
வழங்கிய முதல்வரையும் முன்னெடுத்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் நூலகத்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும் வாழ்த்துகிறோம்.