'மீண்டும் காகங்கள்' கூட்டத் தொடரின் மூன்றாவது நிகழ்வு
09.12.2006 அன்று மாலை நாகர்கோவில், சுந்தர விலாஸ் மாடியில் நடந்தது. எழுத்தாளர்
ஜே.பி. சாணக்யா கலந்துகொண்டார். முதலில் கர்னாடக இசைப் பாடலொன்றைப் பாடிவிட்டுத் தன்
படைப்பனுபவம் குறித்து விரிவாகப் பேசினார்.
தனது கிராமத்திலும், பின்னர் சென்னை நகரத்திலும் தான் அறிந்த மனிதர்களையும் அவர்கள்
தொடர்பான சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு எழுதியவையே தன்னுடைய சிறுகதைகள்
என்றார். தன் தாயின் மூலம் மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கேட்டறிந்து தன்
அனுபவ தளத்தை விரிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது கதைகளைப் போலவே
சாணக்யாவின் பேச்சின் தோரணையும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. அவரது
உரை, பேச்சின் சாத்தியக்கூறுகளைத் தாண்டி, நிகழ்த்துகலை என்று சொல்லுமளவுக்குத்
துடிப்புடன் அமைந்திருந்தது.
கலந்துரையாடலில் சின்னசாமி, எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்,
தங்கக்கண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குச் சுமார் முப்பத்தைந்து பேர் வந்திருந்தனர். முந்தைய 'காகங்க'ளில்
அபூர்வத்திலும் அபூர்வமாகவே பெண்கள் கலந்துகொண்டதுண்டு. ஆனால் இன்றைய கூட்டத்தில்
திருமதி கமலா ராமசாமி, கஜரா ஆர்.ஜிஜி, ஜாஸ்மின் ஆசீர், மைதிலி சுந்தரம், டி. அஜீதா
ஆகியோர் கலந்துகொண்டது பழைய காகங்களுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.