உங்கள் நூலின் பின் அட்டையில் 'நவீனத் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லைகளை
விரிவுபடுத்திய' என்கிற வரி இடம்பெற்றிருக்கிறது. இதில் நவீனம் என்பதையும் எல்லைகளை
விரிவுபடுத்துதல் என்பதையும் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
சுரேஷ்குமார இந்திரஜித்: நவீனம் என்பது புதியது. பழையது அல்லாதது. ஏற்கனவே
சொல்லப்பட்ட கோணங் களிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் வடிவங்களிலிருந்தும்
விஷயங்களைப் பார்க்காமல் அவை அல்லாத வேறு முறைகளிலிருந்து பார்க்கும்போது நவீனம்
பிறக்கிறது. பிராந்தியத்திற்குப் பிராந்தியம், மொழிக்கு மொழி இந்த நவீனம்
வேறுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நவீனம் பழையதாக மாறும்போது அதனைத் துறக்கக்கூடிய
சூழல் உருவாகும். எழுத்து, பார்வை, சிந்தனை, கோணம் இவையெல்லாம் புதியதாகும்போது
பழையவற்றை அழித்துக்கொண்டு நவீனம் உயிர்க்கிறது.
இந்த நவீனத்தைப் புரிந்துகொள்கிற வகையில் ஒரு காலகட்டம் சார்ந்து அல்லது
குறிப்பிட்ட எழுத்தாளர்கள் சார்ந்து வரையறுக்க முடியுமா?
என்னுடைய அனுபவம் சார்ந்து சொல்வதானால், வண்ணநிலவனின் 'பாம்பும் பிடாரனு'மையும்
சுந்தர ராமசாமியின் 'பல்லக்குத் தூக்கிக'ளையும் நவீனத் துவத்தின் கதவுகளைத்
திறக்கும் தொகுப்புகளாகக் கொள்ள முடியும். இவற்றோடு சில தனித்தனிக் கதை களையும்
கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதுவரை இருந்த நவீனத்திலிருந்து இது மாறானது என்று பார்க்கிறீர்களா?
இந்தப் படைப்புகள் பழையவற்றை மறுக்கின்றன. பழையவற்றை மறுக்கும் காரியம் சிறிது
சிறிதாக வெவ் வேறு ரூபங்களில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மௌனியுடைய எழுத்துக்களை
அந்தக் காலகட்டத்தில் நவீன எழுத்தாக நாம் பார்க்கலாம். புதுமைப் பித்தனுடைய எழுத்தை
மொத்தமாக நவீனம் என்று சொல்ல முடியாது. ஆனால் புதுமைப்பித்தனுடைய படைப்புகள்
மறுமலர்ச்சியைத் தந்தவை என்பது மறுக்க இயலாதது. முற்போக்கு இடதுசாரிகளிடம் அடையாளம்
காணப்பட்ட எழுத்துக்களைப் புதுமைப்பித்தனிடமிருந் தும் அவரது முற்போக்குச்
சிந்தனையிலிருந்தும் விமர் சனப் பண்பிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டவையாகப்
பார்க்க முடியும்.
நவீனத்துவத்தின் இரண்டு துவக்கப் புள்ளிகள் என்று புதுமைப்பித்தனையும் மௌனியையும்
எடுத்துக்கொள்ளலாமா?
சிறுகதை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டம் அவர்களிடம்தான் தொடங்குகிறது. தமிழ்ச் சிறுகதை
வரலாறு என்று எடுத்துக்கொண்டால் முதலில் கு.ப.ரா., புதுமைப்பித்தன், மௌனி
இவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. சிறுகதைப் பரப்பில் இவர்கள்தான் புதுத் தரப்பு.
இவர்களுக்கு முன்பு சிறுகதை அதிகம் பழக்கத்தில் இல்லாத வடிவமாகத்தான் இருந்தது.
'பல்லக்குத் தூக்கிகள்', 'பாம்பும் பிடாரனும்' ஆகிய இரண்டிலும் மௌனியின் பாதிப்பு
இருக்கிறதல்லவா?
அப்படிச் சொல்ல முடியாது. நாத்திகம் பேசுபவர்கள் எல்லாம் சார்வாகனுடைய வாரிசுகள்
என்று எப்படிச் சொல்ல முடியாதோ அதுபோலத்தான் இதுவும். எந்தக் காரணி சார்வாகனை
நாத்திகனாக உருவாக்கியதோ அதே காரணி இவர்களையும் உருவாக்கியிருக்கலாம். மௌனியைப்
பற்றி அறியாமலே, மௌனியைப் படைப்பாக்கத்திற்குத் தூண்டிய ஆதாரம் எதுவோ அந்த ஆதாரமே
மற்றொருவரையும் படைப்பைச் செய்யத் தூண்டியிருக்கலாம். நான் கதை எழுதத் தொடங்கிய
நாட்களில் மௌனியைப் படித்திருக்கவில்லை.
மௌனியின் பாதிப்பு இருப்பதற்கு, மௌனியைப் படித்திருக்க வேண்டுமென்று இல்லை. . .
மௌனியின் பாதிப்பில் எழுதியவர்களின் படைப்புகளின் மூலமாகவும் அந்த பாதிப்பு வரும்
வாய்ப்பு இருக்கிறது அல்லவா.
அப்படியொரு பாதிப்பு வரவில்லையே. மௌனி கதையில்லாமல் கதை எழுதியவர்.
நவீனம் என்பதற்கான வரையறையைக் கருத்தியல் தளத்தில் இன்னும் விரிவுபடுத்திக்கொள்ளலாமா?
எதையும் வரையறைக்கு உட்படுத்தினால் அது சரியாக அமையாது. எல்லாவற்றையும்
வரையறுத்தலும் சாத்தியமில்லாதது. ஆனால் வரையறைக்கு உட்படுத்தினால் பலவற்றோடு
பொருத்திப் பார்த்து இதுதான் நவீனம் என்று சொல்ல முடியும். இப்பொழுது உதாரணங்களைச்
சொல்ல முடியுமே தவிர வரையறையைத் தர முடியாது. பண்டிதர்கள் எல்லாவற்றையும்
வரையறுப்பார்கள். அழகியல் என்னவென்றும் நவீனத்துவம் என்னவென்றும் வரையறுக்க முடியாது.
ஆனால் உணர முடியும்.
புலன்களால் அறியப்படும் புற உலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல், பௌதீக
உலகத்தையும் அக உலகத்தையும் இணையான இரண்டு கோடுகள்போலக் கொண்டு படைப்புகளைப் புனைதல்
என்கிற இந்தத் தளத்தில் நவீனத்துவத்தின் எல்லைகள் உங்கள் கதைகளில் நெகிழ்வதாகக்
கொள்ளலாமா?
நான் எழுதும் கதைகள் பெரும்பாலும் அப்படிப்பட்டவைதான். ஒருவருக்காகக்
காத்திருக்கும்போது, அவரைப் போலவே இரண்டு பேரைப் பார்ப்பதுபோலத்தான். இங்கே
பேசிக்கொண்டிருக்கும்போது வேறொரு அக உலகத்திற்குள் நான் போய்த் திரும்ப முடியும்.
இது வழக்கமாக எல்லோருக்கும் நடக்கும் விஷயம்தான். என்னுடைய கதைகளில் இதற்கு
முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன். இது மனித சுபாவம்தான். மனம் ஓரிடத்திலிருந்து
இன்னோர் இடத்திற்குப் போய் வருவது இயல்புதான். எனக்கு இந்த மன உலகம் முக்கியமாகப்
படுகிறது. அதோடு அதிகம் சொல்லப்படாததாகவும் இருக்கிறது. அதனால் இந்த விஷயம்
சொல்லப்பட வேண்டியதாக எனக்குத் தோன்றுகிறது.
உதாரணமாக, 'திரை' கதையில் திரைச் சீலைக்குப் பின் கணவனின் முகம் தோன்றுவது . . .
நான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடைய காதலியைப் போய்க்
கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். இது இயல்புதான். நிறையப் பேர் இந்தச் சுபாவத்தோடு
இருப்பவர்கள்தான். என்னுடைய கதைகளில் இந்த விஷயம் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.
தண்ணியடித்துக்கொண்டிருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்
குழந்தையைப் படிக்கவைப்பதுவரை நினைத்துவிட்டு மீண்டும் அடுத்த டம்ளரைக் குடிக்கத்
தொடங்கும் கதாபாத்திரம் என் கதையில் இருக்கிறது.
'உலகத் தமிழ்' இணைய இதழுக்காக அய்யனாருக்கு அளித்த பேட்டியில் மேஜிக்கல் ரியலிசம்
என்றால் என்னவென்று தெரியாது, அதை வைத்துக் கதைகள் எழுதவில்லையென்று
சொல்லியிருக்கிறீர்கள்.
மேஜிக்கல் ரியலிசம் என்னவென்று தெரியாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. மேஜிக்கல்
ரியலிசம் என்னும் வரையறையை வைத்துக்கொண்டு படைப்பைச் செய்ய முடியாது என்பதாகச்
சொன்னேன்.
தமிழ்ப் படைப்பாளிகள் பலர் வரையறைகளை வைத்துக்கொண்டு படைப்புகளைச்
செய்திருக்கிறார்கள் . . .
வரையறைகளை வைத்துக்கொண்டு படைப்புகளை உருவாக்கினால் செயற்கையாக இருக்கும்.
எக்சிஸ்டென்ஷியலிசத்தை வைத்துக்கொண்டு தமிழவன் உருவாக்கிய 'ஏற்கனவே சொல்லப்பட்ட
மனிதர்க'ளைப் போலத்தான் படைப்பு தோற்றுப்போகும். விமர்சகர் படைப்பாளியாகும்போது
நிகழ்வதுதான் இது. எஸ்.வி.ஆர்., அ. மார்க்ஸ் போன்றவர்கள் எழுதினாலும் இப்படித்தான்
இருக்கும். இவர்களது தளம் தத்துவங்களை எழுதுவதும் விவாதிப்பதும் முரண்படுவதுமாக
இருக்கும்போது படைப்புகளில் இயல்பான தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான்
வரையறைகளை வைத்துக்கொண்டு படைக்கப்படும் படைப்புகள் இயற்கையான படைப்புகளாக
உணரப்படுவதில்லை. படைப்பாளிகளும் சோபிப்பதில்லை.
உங்களுடைய படைப்புகளை வாசிக்கும்போது மேஜிக்கல் ரியலிசம் போன்ற வார்த்தைகள் எதுவும்
குறுக்கிடக் கூடாது என்று நினைத்தே படித்தேன். ஆனால் இயல்பாகவே கதைகளுக்குள் அதைப்
பார்க்க நேர்கிறது.
படைப்பாளி மேஜிக்கல் ரியலிசம் இதுவென்று புரிந்துகொண்டு படைப்பதில்லை. அவர் எழுதியது
அவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். நான் எழுதியவற்றை ஒரு
வெளிநாட்டவரிடம் கொடுத்தால் அதிலுள்ள பண்புக்கு அவர் ஒரு பெயர் சொல்லலாம். அதுவே
பின்னாளில் ஓர் இசமாக மாறிப் போகலாம். படைப்பாளிக்கு இந்நிகழ்வு பெருமையைக் கூடத்
தரலாம்.
உங்கள் கதைகளை படிக்கும்போது சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அதில் இடம்பெறக் கூடிய
மிகு யதார்த்தம், மிகு புனைவு என்ற கூறுகள் இயல்பாக இருப்பதாய் உணரச் செய்யும்
தன்மைதான் என்று நினைக்கிறேன். இந்தத் தன்மையைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள்கிறீர்களா
அல்லது உறுத்தக் கூடாது என்பதற்காகச் செய்கிறீர்களா?
அது இயல்பாகத்தான் வருகிறது. வலிந்து செயற்கையாகக் கையாளும்போது இலக்கியம் அதைக்
காட்டிக் கொடுத்துவிடும். இலக்கியம் இயல்பான வெளிப்பாடாக இருக்கும்போது அங்கு
வலிந்த முயற்சிக்கு அவசியமிருக்காது. ஒரு காலகட்டத்தின் நவீனப் போக்குகளைத்
தெரிந்துகொண்டு, அதைப் படைப்பில் கொண்டு வர முயன்றால் அது சாத்தியமில்லை. அது
பிரச்சினைக்குரியது. அதனால் தான் தத்துவம் தெரிந்த ஆட்கள் இலக்கியத்திற்கு வரும்போது
அவர்களால் பளிச்சிட முடிவதில்லை.
உங்கள் கதைகளில் தனி மனிதப் பிரக்ஞை சூழலுக்கு ஆற்றும் எதிர்வினை வலுவாக
வெளிப்படுகிறது. அதோடு அரசியல், ராணுவம், போலீஸ், சினிமா, மதவாதிகள் என்று பல்வேறு
கூறுகளும் சமூகச் சூழலை எவ்வாறு வெளிக் காட்டுகின்றன என்பதைப் பிரதிபலிக்கின்றன.
இந்த வீச்சு எப்படிப்பட்ட பார்வை என்று நினைக்கிறீர்கள்?
ஒரே பாணியில் வந்துகொண்டிருக்கும் திரைப்படங்களைப் பார்க்கத் திரையரங்குகளில்
கூட்டம் அலை மோதும். அதே நேரத்தில் இந்திய மக்களின் தலையெழுத்தையே
நிர்ணயிக்கக்கூடிய பட்ஜெட் உருவாகிக்கொண்டிருக்கும். இந்த முரண்பாட்டின்
இடுக்கிலிருந்து ஒரு கதை வரும். குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு சிறுவன் எடுக்கும்
காகிதத்தில் இந்திய பட்ஜெட் இருக்கிறது. இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் இருக்கும்
கடன், அதை உடனடியாக அடைக்க நேர்ந்தால் வரும் சிக்கல், வங்கியில் பணம் போட்டவர்கள்
எல்லாம் ஒரே நேரத்தில் பணத்தைத் திரும்பக் கேட்டால் என்ன ஆகும் என்பதையெல்லாம்
சொல்கிறது அந்தக் காகிதம். இப்படி இரண்டிற்கும் இடையிலிருக்கும் முரண்களின்
இடுக்கில்தான் கதை பிறக்கிறது.
சில கதைகளில் கற்பனையான பிரதேசங்களைச் சித்தரித்து அங்கிருந்து சில விஷயங்கள்
சொல்கிறீர்கள்.
நம் வீடு அலங்கோலமாயிருப்பது இன்னொருவர் வரும்போதுதான் தெரியும். இந்தத்
தர்க்கத்தைத்தான் சு.ரா., 'ஜே.ஜே: சில குறிப்புகள்' பற்றிச் சொல்லும்போது 'தமிழ்
வாழ்க்கையை விமர்சிக்க வேண்டியிருந்ததால் மலையாளப் பின்னணியை எடுத்துக்கொண்டேன்'
என்றார்.
உங்கள் கதைகளில் மதவாதிகள், சாமியார்கள் வருகிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும்
விமர்சனத்துக்குள்ளாகிறார்கள். உங்களுக்கும் மதம், மதவாதிகளுக்கும் இடையேயான உறவு
எப்படிப்பட்டது?
மத மரபுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அதிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு விஷயமில்லை
என்றே நினைக்கிறேன். வியாசனிலிருந்து எடுத்துக்கொள்ள விஷயம் இருக்கிறது. ஏனென்றால்
வியாசன் சிருஷ்டிக்கான ஜனன ஸ்தானம். ஒரு சிறு சதுரத்திற்குள்ளிருந்து காவேரி
பிறந்ததுபோல. போர்ஹஸை, மார்க்கஸைப் படித்திருக்கலாம்; ஆனால் யாரும் வியாசனை மறுக்க
முடியாது. அந்த ஜனன ஸ்தானத்திலிருந்து நான் அதிகம் எடுத்துக் கொள்ள முடியும். மதப்
பார்வையில் வியாசனைப் பார்க்க முடியாது. கண்ணனாக இருந்தாலும் சிவபெருமானாக
இருந்தாலும் வியாசனின் பார்வையிலிருந்துதான் பார்க்க முடியும்.
வியாசனுடைய பார்வையில் மதம் இல்லை என்கிறீர்களா?
வியாசன் ஒரு சிருஷ்டி கர்த்தா. அவனது படைப்பில் கடவுளான கண்ணனும்கூட வஞ்சகமானவன்தான்.
சொந்தங்கள் எல்லாம் இறந்துபோன பிறகு எங்கோ போய் அனாதையாக இறந்துபோகிறான். கடவுளே
துரோணரைக் கொல்லச் சதி செய்தவன்தான். பீஷ்மரைக் கொல்லச் சிகண்டியை நிறுத்தியவன்தான்.
கர்ணனிடம் கவச குண்டலத்தைச் சூதாகப் பறித்தவன்தான். கடவுளான கண்ணனும் மனிதனைப் போலத்
தவறுகள் செய்பவன்தான் என்பதை நமக்கு உணர்த்தும் ஆதாரங்களை வைக்கிறான் வியாசன்.
கடவுளைக் கொண்டாடும் ஒருவனால் எப்படிக் கடவுளை விமர்சிக்க முடியும்? எனவேதான்
வியாசன் சிருஷ்டியின் ஜனன ஸ்தானம் என்கிறேன்.
மத மரபு என்பது முக்கியமான பிரச்சினை. உதாரணமாக, சுந்தர ராமசாமி பற்றி ஜெயமோகன்
எழுதிய 'நினைவின் நதியில்' நூலைப் படிக்கையில் ஜெயமோகனுக்கும் சு.ரா.வுக்கும்
இடையிலான பெரிய பிரச்சினை இந்த மத மரபுதான் என்பது தெரிகிறது. மத மரபிலிருந்து
துண்டித்துக்கொள்வது ஜெயமோகனுக்குப் பெரிய பிரச்சினை. அதிலிருந்து எடுத்துக்கொள்ளப்
பெரிதாக எதுவும் இல்லை என்று சொல்கிற சு.ரா.வுடன் தொடர்ந்து மோதல் நேர்கிறது.
அந்தக் கட்டுரை முழுக்க இந்த மோதல்தான் பதற்றங்களைத் தரும் விஷயமாக இருக்கிறது.
குறிப்பாக நித்ய சைதன்யரைப் பற்றிய இடங்கள். இவருடைய பார்வையில் அவர் பார்க்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதில் தெரியும்.
ஜெயமோகன் 'ஜே.ஜே: சில குறிப்புக'ளை பஸ்ஸில் போகும்போது படிப்பார். படித்துவிட்டு
ஜே.ஜே.வுக்குக் கீழே மண்கூட இல்லை; சாமியாருக்குக் கீழே பிரபஞ்சம் இருக்கிறது என்று
கடிதம் எழுதுவார். இதுதான் இங்கே பிரச்சினை. மரபு என்று எடுத்துக்கொண்டால் எனக்கு
வியாசனிலிருந்து வருவதுதான். கடவுளை வணங்குவதொன்றும் புதிய பார்வை கிடையாது.
கிருஷ்ணன் கடவுள்தான்; அயோக்கியன்தான்; அனாதைப் பிணமும்தான் என்பது பார்வை.
தற்போதைய மதவாதிகள் பற்றிய உங்கள் பார்வை என்ன? உங்கள் படைப்புகளில் வருகிற கோயில்,
சாமியார் போன்றவற்றோடு உங்களுக்குள்ள நடைமுறை உறவு என்ன?
மூளையை மழுங்கடிக்கக்கூடிய பல விஷயங்கள் மதத்தில் இருக்கின்றன. கிராமங்கள்தான்
இந்தியாவில் சிக்கலான அமைப்பு முறை என்றால் அதற்குள்ளிருக்கும் கோயில்கள், கோயில்
சார்ந்த உறவுகள், மேல்-கீழ் என்ற விஷயங்கள் மேலும் சிக்கலானவை. ஒரு சிறிய கோயில்
இருக்கும். அதற்கொரு பூசாரி இருப்பார். சில வேலையாட்கள் இருப்பார்கள். சில
மரியாதைகள் இருக்கும். இதிலிருந்து பிரச்சினைகள் கிளம்பும். அதனால்தான் பிரச்சினை
கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று அம்பேத்கர் சொன்னார்.
ராணுவம், போலீஸ் போன்றோரை உங்கள் கதைகளில் விமர்சிக்கிறீர்கள் . . .
போலீஸ், ராணுவம் என்ற இரு துறைகளைச் சார்ந்தவர்களும் கட்டளைக்குக்
கீழ்ப்படிபவர்கள். சுய விருப்பு வெறுப்பு எதையும் பொருட்படுத்த முடியாதவர்கள்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள். கைதுசெய்
என்றால் கைதுசெய்யவும் அடி என்றால் அடிக்கவும் மட்டுமே முடிந்தவர்கள் இவர்கள்.
எப்பொழுதும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சுயமாகச் செயல்பட இயலாதவர்களால்
பிரச்சினைதான். இவர்களது இயல்பு, போக்கு என் கவனத்துக்குரியவையாக இருந்துவருகின்றன.
உங்கள் படைப்புகளில் யாருடைய தாக்கமோ பாதிப்போ இல்லை என்கிறீர்கள். மரபிலிருந்தும்
எடுத்துக்கொள்ளப் பெரிதாக ஏதுமில்லை என்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியம்?
நேரடியாக இல்லாவிட்டாலும் மரபிலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டது கொஞ்சம்கூட இல்லை
என்கிறீர்களா?
யார் யாரிடமிருந்து என் எழுத்துக்கான பாதிப்பு வந்ததென்று சொல்ல முடியாது.
வியாசனிலிருந்து போர்ஹஸ் வரை யாருக்கு என்ன பாத்திரம் என்று சொல்ல முடியாது. யாரும்
அதைக் கண்டறியவும் இயலாது.
ஒருவர் முழுக்க முழுக்க மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள முடியுமா? பழக்க
வழக்கங்களிலோ நடைமுறையிலோ மரபிலிருந்து சில விஷயங்கள் வரத்தானே செய்யும்?
அதில் ஈடுபாடில்லாமல் இருக்கலாமே தவிர முற்றிலுமாகத் தன்னைத் துண்டித்துக்கொள்ள
முடியாது. நாளைக்கு என் உறவினர் வீட்டில் 'காது குத்தல்' என்றால் நான் போய்த்தானாக
வேண்டும். இதுபோலத்தான் மரபுகளோடு கொண்டிருக்கும் உறவு.
உங்களுடைய கதைகளில் யாருடைய பாதிப்பும் இல்லை என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. ஒரு சில கதைகளில் உங்கள் விமர்சனமும் கிண்டலும் புதுமைப்பித்தனை
ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றன. இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
இல்லை, அப்படி உணர்ந்ததில்லை.
நீங்கள் மிகக் குறைவாக எழுதுவதற்குக் காரணம் என்ன?
பிரக்ஞைதான்.
பிரக்ஞையா?
பிரக்ஞை இல்லாதவர்கள் நிறைய எழுதலாம்.
டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறாரே.
பிரக்ஞையில் சலிக்கும்போது நிறைய எழுத முடியாது. பிரக்ஞையோடு நிறைய எழுதுவது ஒரு
வரம். இதை எழுதுவதா அல்லது அதை எழுதுவதா என்று பிரக்ஞை பூர்வமாகச் சலிக்கும்போது
குறைவாகத்தான் எழுத இயலும். மௌனிக்கு இது போன்ற இயல்புதான். கட்டற்ற வார்த்தைகளை
அள்ளிவிடாமல் அதிகமாக எழுதும் டால்ஸ்டாய் போன்றோர்களுக்கு அது வரம்தான்.
எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. தற்பொழுது பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து எழுதினேன். வழக்கமான பத்திக்குரிய தொனியிலிருந்து
இது வித்தியாசமானதாக இருந்தது. இரண்டு மூன்று பத்திகளுக்குப் பின்பு ஆய்வுக்
கட்டுரை போன்று ஒன்று எழுதுகிறேன். முன்யோசனைகளோடு எதையும் செய்வதில்லை. நினைப்பது
வேறாகவும் எழுதுவது வேறாகவும்தான் இருக்கும்.
குறைவாக எழுதுவதற்குப் பிரக்ஞையைத் தாண்டி விதவிதமான வாழ்க்கை அனுபவங்களின்
போதாமையும் காரணமாக இருக்கலாம் இல்லையா?
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழ்க்கை பெரிய கிணற்றுக்குள்
இருப்பதுபோலத்தான். ஏனென்றால் ஜரோப்பிய நாடுகள் போன்று உலகத்தையே உலுக்கும்,
சரித்திரத்தையே மாற்றும் காரியங்கள் எதுவும் இங்குக் கிடையாது. இரண்டு அரசியல்
கட்சிகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளைத் தவிர அந்நிய நாட்டுப் படையெடுப்போ பெரும்
பஞ்சமோ எதுவும் கிடையாது. எதிர்பாராது நிகழும் சுனாமி போன்றவற்றைத் தவிர்த்துப்
பார்த்தால் பெரிய பிரச்சினையென்று எதுவும் இல்லை. இந்தியா சுதந்திரமடைந்தபோதுகூட
இந்திய மக்கள் பெரிய பிரச்சினைகளைத் தாண்டி வரவில்லை. இருந்தாலும் அறிவு சார்ந்த
விஷயங்களைக் கிரகித்து எழுத முடியும். அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
மேல்நாட்டு எழுத்தாளர்களுடைய எழுத்துக்கு நிகராக எழுதக்கூடிய எழுத்தாளர்களும் இங்கே
இருக்கிறார்கள்.
உலகத்தை மாற்றும் அளவுக்கோ சரித்திரத்தைப் புரட்டும் அளவுக்கோ பிரச்சினைகள்
இல்லாவிட்டாலும் வாழ்க்கை இங்கே நெருக்கடியோடுதானே இருக்கிறது?
இலக்கியம் மனத்தோடு தொடர்புடையது. உறவுகள் சம்பந்தப்பட்டது. யுத்த நெருக்கடியில்
இருக்கிறவனின் மனநிலை சாதாரணமாக இருக்கிற ஒரு மனிதனுக்கு இருக்கலாம். ஒருவரைக்
கன்னத்தில் அடிப்பதனால்கூட நெருக்கடி நேரலாம். இதை யாரும் தீர்மானிக்க முடியாது.
குண்டு வெடித்து மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, இதெல்லாம் ஒரு நெருக்கடியா
என்று சொல்ல முடியாது. இந்த நெருக்கடிகள் மனத்தின் சிக்கல்கள்தான்.
ஆனால் அந்த நெருக்கடியிலிருந்து இலக்கியம் பிறந்திருக்கிறதா?
நெருக்கடிகளிலிருந்து இலக்கியம் பிறக்கத்தான் செய்திருக்கிறது.
கிணற்றுக்குள்ளிருந்து வந்து கடலில் நீந்துபவனுக்கு இணையாக எழுத முடிகிறது.
மேல்நாட்டு எழுத்தாளர்களுக்கு வாய்க்கும் வாழ்பனுபவங்கள் வேறு. பிரான்சில்
பிறந்தவன் ஜெர்மனியில் படிப்பான். ஹங்கேரியில் வேலை பார்ப்பான். ருமேனியாவில்
திருமணம் செய்துகொள்வான். லண்டனில் போய்க் குடியமர்வான். ஆனால் இந்த அனுபவம் தமிழக
எழுத்தாளர்களுக்கு நேர்வதில்லை. திருவனந்தபுரம் எல்லையைத் தாண்டுவதே நமக்குப் பெரிய
விஷயம். இந்த அனுபவங்களைக் கொண்டே பெரிய கடலில் நீந்துபவனின் சிருஷ்டிக்கு இணையான
சிருஷ்டியை இவர்களால் படைக்க முடியும். அதைச் செய்கிறார்கள்.
அது போன்று எழுதிக்கொண்டிருப்பவர்களுடைய நாவல், சிறுகதை எதையாவது
சுட்டிக்காட்டலாமா?
சிலரைப் போல எனக்கு எல்லாம் தெரியுமென்று சொல்ல முடியாது. நான் உலகத் தரத்தோடு
இந்தப் படைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால், உலகத் தரத்திலிருக்கிற நாவல்களைப்
பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அப்படியில்லாதபோது நான் சொல்ல முடியாது.
m m m
நவீனத்துவச் சிறுகதைகளில் இறுதியில் வரக்கூடிய திருப்பங்கள்போல உங்கள் கதைகளில்
ஏதாவது முயன்றிருக்கிறீர்களா?
அது தானாக அமைவதுதான். சிருஷ்டி எப்படி வந்ததென்று கண்டுபிடிக்க முடியாது. பெரிய
மர்மக் குகை அது. இப்பொழுது நான் பேசுகிறேன். திட்டமிட்டுப் பேசுகிறேன் என்று சொல்ல
முடியுமா? நீங்கள் ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். அக்கடிதம் திட்டமிட்டு எழுதப்பட்டது
என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஒரு கருத் தோட்டத்தோடு வருகிறீர்கள். எழுதும்போது
அது மாறும். உரையாடல் திட்டமிடப்படுவதில்லை. ஆனால் கருத்தும் கருத்தோட்டமும்
இருக்கும்.
'புனைவின் உரையாடல்' என்கிற கதையில் கடைசியில் இதுவும் புனைவுதான் என்பது
மொத்தமாகப் புரட்டிப்போடுகிற வார்த்தை. ஜிஹ்ஜீவீநீணீறீ சிறுகதைக்கான விஷயம் அதில்
இருக்கிறது. ஆனால் அது இல்லாதபோதும் ஒரு வித உறுதிப்பாட்டுடன் எழுதுகிறீர்கள்.
சிலர் கதை முடிந்த பின் இரண்டு பக்கங்கள் எழுதுகிறார்கள். இந்த இரண்டு பக்கங்கள்
இல்லாமலேயே கதை நன்றாக வருமென்று நமக்கே தெரியும். ஆனால் நீங்கள் அந்த இரண்டு
பக்கத்தைப் பிரக்ஞைபூர்வமாக, கலை ரீதியாகத் தேவை என்று எழுதி யிருக்கிறீர்கள்.
ஏனென்றால் அந்தக் கதை அந்த இரண்டு பக்கங்கள் தேவையென்று சொல்கிறது. புனைவுகள்
எல்லோரிடமும் ஒரு விதத்தில் வந்துகொண்டிருகின்றன. உதாரணத்துக்குச் சொன்னால்
சர்க்கரை நோயாளிக்குக் குண்டூசி அளவு இருக்கும் காயம்கூட விரலை எடுக்குமளவுக்குச்
சிக்கலானது. வெளியிலிருக்கும் ஆளுக்கு இந்த ஆபத்து புரியாது. நடக்கும்போது, எனக்கு
விரலில் அடிபட்டு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் நான் என்ன செய்கிறேன்? சொந்தக்காரர்
ஒருவருக்குக் காலில் முள் குத்திக் காயம் பெரிதாகி விரலையே எடுக்க
வேண்டியதாகிவிட்டது; அவரைப் பார்த்துவிட்டு வந்து வண்டியை எடுக்கும்போது, காலில்
இடித்துவிட்டது என்று இந்த விஷயத்தை ஒரு புனைவுபோலச் சொல்வேன். இல்லையென்றால் சிறிய
காயத்திற்கு இப்படி அலட்டுகிறான் என்று பிறர் நினைக்கக்கூடும். புனைவு,
வாழ்க்கையில் ஒரு பகுதியாக எனக்கு மட்டும் இருக்கிறதா எல்லோருக்கும் இருக்கிறதா
என்று தெரியாது. பொய்யையும் புனைவையும் பிரித்துப் பார்ப்பது பெரிய சிக்கல். நான்
சொன்னதைப் புனைவென்கிறேன்.
'புனைவின் உரையாடல்' கதையில் எது புனைவு என்றே தெரியாது. மொராக்கோ,
பிரான்சிலிருந்து வருவார்கள். மதுரை புறாத் தோப்பு, ஸ்டார் ஹோட்டலில்
குடிப்பார்கள். இதில் எது பொய் என்று தெரியாது. அதுதான் புனைவின் உரையாடல்.
'பீகாரும் ஜாக்குலினும்' கதையும் அப்படித்தான். பிரான்சில் ஹீலியம் வாயுவைப் பற்றி
ஒருவன் கட்டுரை வாசிப்பான். பீகாரில் நடக்கும் கலவரமொன்றில் வெள்ளைக்காரன் ஒருவன்
இறந்துபோவான் . . . அந்த இடத்தில் புத்தரைக் கண்ட, மௌரியரைக் கண்ட, அசோகரைக் கண்ட,
ஷெர்ஷாவைக் கண்ட, வங்காள நவாபுக்குச் சொந்தமாகி அப்புறம் பக்ஸார் போரில்
பிரிட்டிஷாருக்குக் கைமாறி, சுதந்திர இந்தியாவுக்குள் உள்ள இந்த பூமியில் கையைத்
தூக்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்வேன். இந்த இடத்தில்
creativity இருக்கிறது.
பீகார் இந்தியாவில் பிரச்சினையான மாநிலம். அந்த மாநிலம் அறிவுக் கேந்திரமாக
இருந்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகம் இருந்துள்ளது. அந்த இடத்தில் நடை பெறும்
வன்முறையைப் பற்றிச் சொல்வதனால் எழுதுபவருக்கு இந்த விஷயங்கள் நினைவுக்கு வர
வேண்டும். இதுதான் வரலாற்றைக் கொண்டாடுதல். வரலாற்றை வேறு மாதிரி எழுதுவதா படைப்பு?
வரலாற்று நிகழ்வுகளைச் சூசகமாகக் கொண்டுவருவதுதான் இலக்கியம்.
'மாபெரும் சூதாட்டம்', 'காலத்தின் அலமாரி' போன்ற கதைகள் ஒரு நாவலாக விரிவதற்கான
தன்மைகளோடு இருக்கின்றன. ஆனால் அவற்றைச் சிறுகதைகளாகவே நிறுத்திவிட்டீர்கள்.
எனக்கு இயல்பாகவே பெரியதாக எழுதுவதில் சிக்கல். பிரக்ஞை காரணமா என்று தெரியவில்லை.
பாலைச் சுண்டக் காய்ச்சியதுபோல இருக்க வேண்டும். எதையும் நீக்க நினைத்தால் அது
கஷ்டமான காரியமாக இருக்க வேண்டும். ஒரு வரியை எடுப்பதற்குக்கூட அதிகமாக
யோசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு நாவல்
எழுதுவது கஷ்டமானதாக இருக்கும்.
m m m
எண்பதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் இறுதிவரை யதார்த்தம்
செத்துப்போய்விட்டது என்றும் புது வகை எழுத்துகள் எழுதப்பட வேண்டும் என்றும் உருவான
போக்கு உங்களது சமகாலத்தில் நடந்ததில்லையா? இந்தப் போக்கை நீங்கள் எப்படிப்
பார்க்கிறீர்கள்?
எது யதார்த்தம் என்பதில் பிரச்சினை.
ஒரு பக்கம் நாகார்ஜுனன் போன்றோர்; மறுபுறம் கோணங்கி, ராமகிருஷ்ணன் முதலியோர்
முன்வைத்த பிரகடனங்கள். கௌதம சித்தார்த்தனின் புது வகை எழுத்து என்ற பெயரிலான
கதைகள். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள். இந்தப் போக்கை நீங்கள்
எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள்?
இதை ஆர்வத்தோடுதான் பார்க்க முடியும். மார்க்கஸ் யதார்த்தமாக எழுதுகிறேன் என்று
சொல்லிக்கொண்டிருக்கிறார் (மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்). யதார்த்தம் இல்லையென்று
சொல்லும்போது எது யதார்த்தம் என்பது பிரச்சினை. ஒரு முறையில் எழுதிப் பழகி இதுதான்
யதார்த்தம் என்று உருவாக்கிவிட்டார்கள். மனம் எப்போதும் 1, 2, 3 என்ற வரிசையிலேயே
இயங்கிவிடாது. 5, 7, 3, 2, 8, 9, இப்படியும் இயங்கும். யதார்த்தமென்று நாம்
பழகியிருக்கும் விஷயங்கள் வேறு. யதார்த்தம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.
யதார்த்தத்தைப் பார்த்துத்தான் எழுதுகிறோம். ஆனால் எழுதுகிற முறை வேறு. ஒரு
கட்டத்தில் எழுதப்பட்ட முறையை மறுத்து யதார்த்தத்தை வேறு மாதிரியாக எழுதத்
தொடங்கினார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட எழுத்துக்கு எதிரான குரல் அவசியமற்றது.
ஏனென்றால் தானாக ஒரு ஜனனம் நிகழும்போது தானாக மரணமும் நிகழத்தான் செய்யும். அதைக்
கத்திவைத்து ஏன் குத்திக் கொலை செய்ய வேண்டும்?
இது போன்ற விவாதங்களால் தமிழுக்குச் சாதகமான பங்களிப்பு கிடைத்திருக்கிறது என்று
நினைக்கிறீர்களா?
விவாதம் நடந்ததுபோல் தெரியவில்லை. ஆனால் எழுத்து முறை மாறியதில் மகிழ்ச்சி.
வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகப் படைப்பே இல்லாதவைகூட நிறைய வரத்
தொடங்கின. புதிய கருத்தோட்டங்கள் இங்கு நுழையும்போது, அதைச் செரித்து ஒருவர் எழுதத்
தொடங்கும்போது அதே போன்று நிறையப் பேருக்கு எழுதத் தோன்றும். எடுத்துக்காட்டாக,
விரக்தியடைந்த மனநிலையைப் பற்றிய படைப்புகள் 'கணையாழி'யில் தொடர்ந்து
வந்துகொண்டிருந்ததைச் சொல்லலாம். இதுவும் பிரச்சினைதான்.
யதார்த்தம் செத்துவிட்டது என்று சொன்னவர்களும் யதார்த்தக் கதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டார்கள் . . .
எல்லார் சொல்வதும் யதார்த்தம்தான் என்றாலும் எழுத்து முறையில் ஏற்பட்ட
வித்தியாசத்தால் புதிய முறையில் யதார்த்தம் எழுதப்படுகிறது. வித்தியாசமான
எழுத்துகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. அதற்காக முன்பு எழுதப்பட்ட எழுத்துமுறை மோசம்
என்று சொல்ல முடியாது. சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்' முக்கியமான
கதை. அதேபோல ராசேந்திர சோழனுடைய 'சாவி' எனும் கதை. அசோகமித்திரனின் 'பார்வை' எனும்
கதை. இவையெல்லாம் முக்கியமான கதைகள். இந்த எழுத்து சிருஷ்டி சார்ந்து நிற்கும்.
பழையதை மறுப்பது என்றால் எல்லாவற்றையும் சுட்டுப்போட்டுவிடுவது என்று அர்த்தமல்ல.
மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் பேசும்போது, மார்க்கஸ், போர்ஹஸ் இவர்களை ஆங்கிலத்தில்
படிக்கும்போது அவர்களது எழுத்துக்கள் புரிகின்றன; பிடிக்கிறது. ஆனால் அவர்களைப்
போன்று எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதுவோரின் எழுத்துக்கள் புரிவதில்லை;
படிப்பதற்கும் பிடிப்பதில்லையென்று கூறுகிறார்.
போர்ஹஸில் கதையே இருக்காது. கட்டுரை மாதிரி இருக்கும். கதை அதற்குள் எங்கோ
ஒளிந்திருக்கும். அவருடைய எழுத்து முறை அது. இப்படித்தான் எழுத வேண்டுமென்று
நினைத்துக்கொண்டு எழுதப்படும் எழுத்துக்களைப் படிக்க முடியாது. இயல்பாக
இருந்தால்தான் மலரும். கார்பைடு போட்டுப் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட
முடியுமா? சுவைக்குமா? அதுபோலத்தான் இந்த எழுத்துக்களும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது, மத மரபுகளில் பெற்றுக்கொள்ள ஏதுமில்லை
என்பது ... இதெல்லாம் பகுத்தறிவுவாதத்தின் வெளிப்பாடுதானே? ஆனால் புலனறிவைப்
பிரதானமாகக் கொள்ளும் பகுத்தறிவுவாதத்தின் எல்லைகளை உங்கள் கதைகள் மீறிவிடுகின்றன.
ஆத்திகத்துக்கு எதிரான நாத்திகனென்று என்னைச் சொல்ல முடியாது. எல்லா மதங்களிலும்
பகுத்தறிவுவாதிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, விரும்பத்தக்க ஆழமான விஷயங்கள்
இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றைக் கண்களுக்குப் புலப்படாதவாறு, தேடிக்
கண்டடையும் சூழலை மதம் சார்ந்த மனிதர்கள் உருவாக்கிவிட்டார்கள். ஆத்திகத்தை
எதிர்க்கிறவர்கள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மக்கள்
வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மதம் அவர்களோடு
பிறப்பிலிருந்து இறப்புவரை பிணைந்து கிடக்கிறது. ஏதோவொரு சடங்கு ரீதியாக இந்த மதம்
மனிதர்களோடு தொடர்ந்து உறவு கொள்கிறது. தாய், தந்தை இறந்த பிறகு தர்ப்பணம்
செய்வார்கள். மொழி புரியாது, ஆனால் மதத்தை மறந்துவிட்டுப் பார்க்கும்போது
அந்தச் சடங்கு மேஜிக்கல் ரியலிசம்போல எனக்குத் தோன்றுகிறது. அதனால் நாத்திகத்தின் முழுப்
பார்வையோடு ஆத்திகத்தைப் பார்க்கிற ஆள் அல்ல நான்.
புலன்களைத் தாண்டிய விஷயம் என்று எதுவும் இல்லை. ஓர் ஆளைப் பார்த்தவுடனே அவரைப்
பற்றிய ஒரு கணிப்பு உருவாகிறது. அந்தக் கணிப்பு எங்கிருந்தோ வருவதில்லை. நமது
அனுபவங்கள் சார்ந்து, நமது அறிவு சார்ந்து, நமது உள்ளுணர்வு தருவதுதான் அந்தக்
கணிப்பு.
ஆத்திகனாக இருப்பதிலும் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஏனென்றால் எதிரில்
வருகிற ஆளிலிருந்து நேரம் வரை எல்லாமே அவனுக்குப் பிரச்சினைதான். ஆனால்
மற்றவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அதை வேடிக்கைக்குரியதாகப் பார்க்க
முடியும். நீங்கள் சொல்வதுபோலப் புலன்கள் சாராத ஈடுபாடு என்னுடைய கதைகளில் எப்படி
வெளிப்படுகிறது என்று தெரியவில்லை.
புலன்களால் அறியப்படும் உலகத்தையும் அதன் தர்க்கத்தையும் தாண்டி, காரண-காரிய
அறிவால் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு மனோநிலை உங்களுடைய கதைகளில் வெளிப்படுகிறது.
திடீரென்று திரைக்குள்ளிருநது ஒரு கிழவன் எட்டிப் பார்க்கிறான். பகுததறிவுவாதி
இது பிரமை, பொய் என்று சொல்கிறான்.
நாத்திகவாதிக்கு உண்டான வரையறைகளை வைத்துக்கொண்டு பார்த்தால் அப்படித்தான்
தோன்றும். படைப்புப் பார்வையோடு பார்த்தால் இப்படித் தோன்றும் மனநிலை வராது.
படைப்பென்றால் என்னவென்று தெரியாத, இலக்கியம் என்றால் எதுவென்று புரியாத ஒருவன்
இதைப் படித்தால் அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் ஒரே
மாதிரியாகத்தான் தோன்றும். இந்தச் சிக்கல் அவன் ஆத்திகனா நாத்திகனா என்பதில் இல்லை.
இலக்கியத்தை எப்படிப் பார்ப்பது என்று தெரியாத நிலையிலிருந்து வருகிறது.
m m m
வாசகர்களிடம் வரவேற்பும் தகுந்த இடமும் உங்கள் கதைகளுக்குக் கிடைக்கின்றனவா?
பொதுவாக நான் மறைந்து திரியும் ஆள்தான். வெகு நாள்களுக்குப் பிறகு இப்பொழுதுதான்
முகத்தைக் காட்டும் எண்ணமே வருகிறது. ரசிகர்களோ வாசகர்களோ என்னைத் தேடி வருவதாக
இருந்தால் எனது முகவரியை, உத்தியோகத்தை மறைத்துக்கொள்வேன். இன்னும் பத்து வருடங்கள்
இருப்போம்; அதற்குள் நான்கு பேரிடம் பேசிப் பழகியபடி இருக்கலாம் என்று இப்போது
தோன்றுகிறது.
உங்கள் கதைகளுக்குப் போதுமான எதிர்வினைகள் கிடைக்கின்றனவா?
அப்படியெதுவும் இல்லை. அதுவும்
சந்தோஷமாகத்தான் இருக்கிறது. யாரும் வாசகர் என்று
சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதிகம் குழைந்தால் வருவார்களோ என்னவோ தெரியவில்லை.
வராதது மகிழ்ச்சிதான். இல்லையென்றால் அவர்களிடம் பேசுவதற்கான உத்திகளோடு இருக்க
வேண்டியிருக்கும். கதைகளுக்கான
response ஏதோவொரு விதத்தில்
இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் கதை நல்லாயிருக்கு, முக்கியமான சிறுகதை
ஆசிரியர் என்பது போன்ற கருத்துகள், இருட்டில் மின்னும் விளக்கைப் போல்
சந்தோஷமானவை.
பெரிய எழுத்தாளர்களிடம்கூட இப்படியொரு சந்தோஷத்தைப் பார்த்திருக்கிறேன்.
தொகுப்பைப் படித்துவிட்டு அதைப் பற்றி உரையாடுவதும் விவாதிப்பதும் அதிகமாக
நடக்கவில்லையே?
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதை வைத்தே அதைத் தீர்மானிக்க முடியாது. எதற்குக்
கடிதம் வருகிறதோ அது மட்டுமே முக்கியமான விஷயம் என்று சொல்ல முடியுமா? கடிதம்
எழுதுபவருடைய மனநிலையில் அந்த விஷயம் முக்கியமானதாகப் படுகிறது. அங்கீகாரம் இல்லை
என்பதால் அது முக்கியமானதல்ல என்று ஆகிவிடாது. சில விஷயங்களுக்குத்தான்
respond பண்ண முடியும். எளிதான விஷயங்களில் ஈடுபாடுள்ள ஆட்கள்தான்
பெரும்பாலும் கடிதம் எழுதுவார்கள்.
m m m
ஒரு படைப்பாளிக்கும் அவருடைய அடுத்த தலைமுறைப் படைப்பாளிக்குமான உறவு
எப்படியிருக்கிறது? குறிப்பாகச் சொன்னால் இளம் தலைமுறை எழுத்தாளர்களோடு
சு.ரா.வுக்கு இருந்த நட்பு. ஏதோவொரு வகையில் ஒரு சிலருக்கு இந்த நட்பு சிக்கலாக
மாறுகிறது. எதனால் இப்படி நடக்கிறது?
நண்பர்களாக இல்லாத இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் சந்திப்பது போன்ற துயரம்
வேறு இருக்குமா என்று தெரியவில்லை. இலக்கியம் தெரியாத ஆட்களிடம் படைப்பாளி என்று
நம்மை ஒருவர் அறி முகப்படுத்துவதும் படைப்பாளியிடமே நீங்கள் என்ன
எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் கேட்கும் சூழலும் படைப்பாளிக்குப் பெரிய மனச்
சோர்வைத் தரக்கூடிய விஷயங்கள்.
சு.ரா. புதிதாக எழுத வரும் படைப்பாளிகளை ஈர்த்தவர். 'ஜே.ஜே. சில குறிப்புக'ளுக்குப்
பின் சு.ரா.வின் இடம் நவீனத்துவத்திலும் இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடமும்
உறுதியானது. இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு நிகராக சு.ரா., பிரமிள்,
சாமிநாதன் போன்ற படைப்பாளிகள் இருந்தார்கள். பிரமிளுடைய மனநிலை இவர்களிலிருந்து
மாறுபட்டது. சாமிநாதனுடைய படைப்புகள் ஓர் இரைச்சலான குரலில் வெளிப்பட்டன. படைப்புத்
தளத்தில் கவிதைகளைவிடச் சிறுகதைகளும் நாவல்களும் எளிதில் வாசகனை அடைபவையாக இருந்தன.
இந்தச் சூழல் சு.ரா.வை நவீனத்துவத்தின் குறியீடாக உருவாக்க முக்கியக் காரணமாக
இருந்தது. உதாரணமாக, ஜெயமோகனையும் சு.ரா.வையும் எடுத்துக்கொண்டால், ஒருவர்
வார்த்தைகளைப் பிரக்ஞையோடு எழுதுகிறார் என்பது மற்றொருவருக்குச் சிக்கலாகிறது.
பேசும்போதும் எழுதும்போதும் பிரக்ஞைபூர்வமாகச் செயல்படும்போது கட்டற்ற
வார்த்தைகளைத் தவிர்க்க முடியும். மத மரபிலிருந்து எடுத்துக்கொள்ள விஷயங்கள்
இருக்கின்றன என்கிற ஜெயமோகனுக்கும் பிரக்ஞை சலித்த கண்காணிப்புக் கோபுரம் மாதிரி
இருக்கிற சு.ரா.வுக்கும் அடிப்படையாகச் சில வேறுபாடுகள் இருக்கின்றன. தனிமனிதன்
விரக்தியாக இருக்கிறான் என்றால் அந்த விரக்தியான சூழலும் மனநிலையும்கூடப்
படைப்புக்கு முக்கியம்தான். அதனால்தான் சு.ரா. நிற்கும் தளமும் ஜெயமோகன் நிற்கும்
தளமும் வெவ்வேறானவை என்பதைச் சொல்ல முடிகிறது.
இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலருக்கு சு.ரா.வுடன் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? இந்தச்
சூழலைப் புரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.
ஒரு சிலர் ஒழுங்கற்ற தன்மைமீது ஈர்ப்பு உடையவர்கள். சு.ரா. அக ஒழுங்குக்கும் புற
ஒழுங்குக்கும் தொடர்பிருக்கிறது என்று நினைப்பவர். 'ஜே.ஜே.'யில் அரவிந்தாட்ச மேனன்
தொடர்பான பாராட்டுதல்கள் எல்லாம் அந்தக் குணத்தோடு தொடர்புடையவைதான். அவர் பேனாவில்
மை ஊற்றும்போது சிந்தாது. வேட்டி கட்டிக்கொள்வது அழகாக இருக்கும். இவையெல்லாம்
குறியீடுகள்தான். இந்தக் குறியீடுகள் அக ஒழுங்கோடு தொடர்புடையவையாகும்போது இது
போன்ற இமேஜ் உருவாகிறது. இந்து பேப்பரைப் படித்துவிட்டு அதே ஒழுங்கோடு மீண்டும்
மடித்துவைப்பதை ஒருவர் ஆச்சரியமானதாகச் சொல்கிறார். அப்பொழுது பிரச்சினை வரத்தான்
செய்யும். மணிவண்ணனுக்கு ஒழுங்கற்றுக் கலைத்துப்போடுகிற தன்மையில் ஈடுபாடு
இருக்கிறது. ஆனால் சு.ரா.வுக்குப் பேனாவில் மை ஊற்றுவதிலும்கூட ஓர் ஒழுங்கு
இருக்கிறது. இந்த அடிப்படை முரண்பாடே பிரச்சினை உருவாவதற்குக் காரணமாயிருக்க
இயலும்.
கட்டற்று இருப்பது, மரபோடு இருப்பது - இப்படி ஒருவர் இருப்பதில் பிரச்சினையில்லை.
ஆனால் படைப்பு இப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் இல்லையா?
படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென்று யாராலும் சொல்ல முடியாது. அதேபோல்
படைப்பு யாரிடமிருந்து பிறக்கிறது என்றும் சொல்ல முடியாது. எந்த மண்ணிலும் எந்தப்
பாறை இடுக்கிலும் முளைக்கும் பண்புடையதுதான் சிருஷ்டி. அது எப்படி உருவாகிறது
என்கிற ரகசியம் தெரிந்தால்தான் யார் வேண்டுமானாலும் படைத்துவிடலாமே!
உற்பத்தியாக இருந்தால் அதற்கான காரணிகளை வைத்துத் தீர்மானிக்கலாம். ஆனால் படைப்பை
ஒருபோதும் தீர்மானிக்க முடியாது இல்லையா? ஒழுங்கு, ஒழுங்கற்ற தன்மையென்று எந்த
இடத்திலிருந்தும் பிறக்கலாம் படைப்பு.
இந்திய இதிகாசங்களைப் பார்த்தால் அவையெல்லாம் படித்த மனிதர்களிடமிருந்தா உருவாயின?
வியாசன் யார்? வால்மீகி யார்? இலக்கியப் பரப்பு முழுக்க இப்படிப்பட்டவர்களை அதிகம்
காண முடிகிறது. காளிதாசன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவன்தானே!
சிருஷ்டி எல்லா தளங்களிலிருந்தும் உருவாகிறது. ஆடு மேய்ப்பவனிடம், தர்ப்பணம்
செய்பவனிடம், கொலை செய்பவனிடம், கொலை செய்யப்படுபவனிடம் என்பதாக யாரிடமிருந்தும்
உருவாகலாம் படைப்பு. சிருஷ்டிக்கு மண் வேறுபாடு கிடையாது.
வெவ்வேறு இடங்களிலிருந்து சு.ரா.வை நாடிப்போகிறார்கள். எந்த இடத்தில்
முரண்படுகிறார்கள்? வெவ்வேறு இடங்களிலிருந்து இவர்களால் உரையாடல் நிகழ்த்த முடியும்
இல்லையா?
சு.ரா. அளவிற்குப் புற ஒழுங்கு எனக்கில்லை என்றாலும் ஓரளவிற்குப் புற ஒழுங்கைக்
கடைப்பிடிக்கிறேன் என்பதால் எங்களுக்கிடையில் பெரிய முரண்பாடு இருக்க வாய்ப்பு
கிடையாது. இருவர் நிற்கும் தளங்கள் வெவ் வேறாக இருக்கும்போது ஒருவர்
மற்றொருவருக்குப் பிரச்சினைக்குரியவராகிறார். ஒழுங்கில்லாத ஆளாக இவர்
இருந்திருந்தால் இவரோடு யாரும் சண்டையிட மாட்டார்கள். வெளிப்படையாகத்
தண்ணியடிப்பவராக, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவராக, கூட்டங்களில் கலாட்டா
செய்பவராக இருந்தால், இவர் யாருக்கும் பிரச்சினைக்குரியவராக இருக்கமாட்டார்.
பிரிந்துபோனவர்கள் இவருடனே இருந்திருப்பார்கள்.
ஒழுங்கானவர்களுக்கு எப்பொழுதும் ஒழுங்கற்றவர்கள் பிரச்சினையாய் இருப்பதில்லை.
ஒழுங்கற்றவர்களுக்கு ஒழுங்கானவர்களோடு இருத்தல் தொடர்ந்து வலியைத் தரும்
விஷயமாகத்தான் இருக்கிறது.
தனியொரு ஆளைத் தாக்கும் இலக்கியவாதிகள், சரியாக நடந்துகொள்வதில் எந்தக்
கிளர்ச்சியும் கிடையாது என்பதால் கிளர்ச்சியைத் தானே உருவாக்குகிற உத்திகளில்
ஈடுபடுவது தற்போது சகஜமாகியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒழுங்கானவராக இருந்தாலும் பலரையும் தொடர்ந்து அவர்
வசீகரித்துக்கொண்டேதானே இருக்கிறார்?
அவர் ஓரு முக்கியமான ஆளுமை. இதுதான் அவருடைய பிரச்சினையே. தன்னை மறந்து அவரிடம்
கலக்க இயலாமைக்கு, எந்த நேரத்திலும் தனித்துத் தெரியும் அவரது இயல்பும் ஒரு
காரணம்தான். தனித்துத் தெரிகிற
unique ஆட்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்குப்
பிரச்சினைக்குரியவர்கள்தான்.
அவரிடம் ஈர்ப்புக்கான விஷயமாக எது இருக்கிறதோ அதுதான் பிரச்சினைக்குரிய விஷயமாகவும்
இருக்கிறதில்லையா?
அந்த ஈர்ப்பு அவரிடம் மற்றவர்களைக் கொண்டு சேர்க்கும். ஆனால் அவர் ஒரு தனித்துவமான
ஆளாக இருக்கிறார் என்பதை உணரும்போது, சூசகமான ஈர்ப்பு உண்டானதுபோல மறைமுகமாக
அவர்மீதான எதிர்ப்பும் உண்டாகிக்கொண்டுதான் இருக்கும்.
m m m
உங்களுடைய வேறு பரிமாணங்கள் குறித்துக் கொஞ்சம் பேசலாம். இளம் வயதில் 'சந்திப்பு'
என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள் அல்லவா?
1986இல் சந்திப்புக் கூட்டம் நடத்தினோம் என்று நினைக்கிறேன். எப்பொழுதும் என்னுடைய
பழக்க வழக்கங்கள் எல்லாம் என் வயதிலிருந்து பத்து வயது குறைந்தவர்களுடைய
மனநிலையில்தான் இருந்ததாக உணர்கிறேன். என்னுடைய வயதேயான நண்பர் சிவராமனுக்கு
இருக்கிற பக்குவம் ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறுவனைப் போல அவர்கூடச் செல்லலாம்.
டிக்கெட் எடுப்பதிலிருந்து, எங்கே உட்காருவது என்பதுவரை எல்லாவற்றையும் அவரே
பார்த்துக்கொள்வார்.
அப்படியொரு பக்குவம் எனக்கு எப்போதும் கிடையாது. என்
வயதையொத்தவர்களைவிடக் குறைந்த வயதுடையவர்களோடு பழகுவதுதான்
எனக்கு என்றும் பிரியத்திற்குரியதாக இருக்கிறது.
சந்திப்புக் கூட்டம் எப்படித் தொடங்கியது? எவ்வாறு நடந்தது? ஆர்வம் எப்படி இயக்கமாக
மாறியது?
ராஜமார்த்தாண்டன் மதுரைக்கு வேலைக்கு வந்திருந்தார். ஆர்வம் இயக்கமாக மாறியதா என்று
தெரியவில்லை. ஆனால் முதலில்
கூட்டங்களும், பின் அவை சார்ந்து சில
காரியங்களும் நடந்தன. முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் நானும்
பேசினோம். இருபது, இருபத்தைந்து பேர் கலந்துகொள்கிற கூட்டமாக இருந்தது. நடைபெற்ற
கூட்டங்களிலேயே சு.ரா. கலநதுகொண்ட
கூட்டம்தான் பெரியது. மாதத்தில் இரண்டாம்
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடந்தது. செல்வராஜ் எங்களோடு இருந்தார்.
Sponsorship வாங்கித் தந்தார். சைக்ளோஸ்டைல் முறையில்
கூட்டங்களைப் பற்றியும் பேசுவது
குறித்தும் தெரியப்படுத்தினோம்.
ஒரு கட்டத்தில் கூட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபோது, அதை நடத்துவதில்
அர்த்தமில்லையென்று தோன்றியது. நிறுத்திவிட்டோம். நமது இலக்கியக் கூட்டங்களில்
விவாதங்களை விடச் சண்டைகள் நடக்கும். ஆனால் இந்தக் கூட்டங்களில் சொல்லும்படியாகச்
சண்டைகளோ விவாதங்களோ நடைபெறவில்லை.
சந்திப்புக் கூட்டத்தில் சு.ரா. ஒரு முறை தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றிப்
பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்தது. கூட்டங்களில் பேசுவதற்கு அவர் தயங்கிய
காலகட்டம் அது. கோயம்புத்தூரில் 'ஜே.ஜே: சில குறிப்புக'ளைப் பற்றி நடந்த கூட்டம்.
அதிலும் சு.ரா. மிகவும் நன்றாகப் பேசினார். 'ஜே.ஜே.'வைப் பற்றி எல்லோரும் பேசி
முடித்த பிறகு, அந்நாவலுடைய ஆசிரியராக இல்லாமல், ஜே.ஜே.வின் பிறப்பு, அவன்
செயல்பாடு இவை குறித்துப் பேசினார். அந்நாவல் எப்படிப் புனைவோ அதுபோலவே அவர்
பேச்சும் புனைவாக, ரசிக்கும்படி இருந்தது. ஜே.ஜே. உயிரோடிருந்தால் எப்படிப்
பேசுவாரோ அதே போன்றே பேசினார். பேச்சு முடிந்ததும் எதிர்த்துப் பேசியவர்கள் எல்லாம்
ஆர்வத்தோடு அது பற்றிப் பேசினார்கள். அதே போன்று சிவகங்கையில் புதுமைப்பித்தன்
பற்றியும் திருக்குறள் பற்றியும் சு.ரா. பேசிய கூட்டமும் எனக்குப் பிடித்த
முக்கியமான கூட்டம்.
திருக்குறளைப் பற்றி சு.ரா. என்ன பேசினார்?
கூட்டங்களில் மேற்கோள் காட்டுவதற்கும், நன்னெறி போன்று ஒப்புவிப்பதற்குமே
திருக்குறளைக் கையாள்கிறார்கள். சாராம்சம் சார்ந்து அதைப் பற்றி சிந்திப்பதில்லை.
பாரதியிலும் பாரதிதாசனிலும் பத்துப் பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு மேற்கோளாகப்
பயன்படுத்துவதுபோலத் திருக்குறளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது குறித்துச்
சிந்திப்பதில்லை என்ற ரீதியில் அந்தப் பேச்சு இருந்தது.
உங்களுக்கும் சு.ரா.வுக்கும் நட்பு எப்படி ஏற்பட்டது?
'ஜே.ஜே: சில குறிப்புகள்' வருவதற்கு முன் (1979-80) நாகர்கோயிலுக்கு ஒரு அலுவலக
வேலை விஷயமாகப் போனபோது சு.ரா.வைக் கடையில் வைத்துப் பார்த்துக் கொஞ்ச நேரம்
பேசினேன். அது முக்கியமான சந்திப்பு கிடையாது. எங்களுக்கிடையில் நட்பு எப்படி
உருவானதென்று ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அவர் மதுரைக்கு
வரும்போதெல்லாம் சந்தித்தோம். அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிடுவதற்கான முயற்சி
'வர்ஷா'வில் நடந்துகொண்டிருந்தது. அதற்காக மதுரையில் தங்கினார். ஆனால் 'வர்ஷா',
'குறத்தி முடுக்கு', 'இலததீன் அமெரிக்க சிறுகதைகள்' வெளியிட்டதோடு நின்றுபோனது.
சு.ரா.வைச் சந்திப்பதற்கு நிறையப் பேர் போவார்கள். தங்களது பிரச்சினைகளை
(குடும்பம், பிணி, எதுவாக இருந்தாலும்) பற்றிப் பேசுவார்கள். ஒரு பாதிரியாரைப் போல
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பார். தங்களது சுமையை இறக்க எல்லோரும் இவரையே
தேர்ந்தெடுக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கும். எல்லாருடைய சொந்தப்
பிரச்சினைகளும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய பிரச்சினையென்று
எதுவும் யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவரது பால்ய கால நண்பர்களுக்கு வேண்டுமானால்
தெரிந்திருக்கலாம். தனது உளைச்சல்களை அவர் யாரிடமும் காட்டிக்கொண்டதில்லை. இவர்கள்
கொண்டுபோய்க் கொட்டும் விஷயங்களை
அவர் தாஙகிக்கொள்பவராக இருந்தார். எல்லோருடைய
மனங்களையும் படிக்கத் தெரிந்த அறிவாளி அவர்.
தன்னுடன் மட்டும்தான் சு.ரா. இவ்வளவு நட்போடு இருக்கிறார் என்று அவரிடம் பேசும்
ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்ளும்படி சு.ரா. இருந்தார். இலக்கிய ஆளுமை அவருக்கு
இருந்தது. அறிவாளியாக இருந்தார். எந்தக் கேள்வி கேட்டாலும் அக்கறையோடு பதில்
சொல்வார். இராமானுஜன் என்ற ஒரு நண்பர் இருந்தார். ஆங்கிலத் துறை விரிவுரையாளர்.
நீச்சல் தெரியுமா என்று தொடங்கிக் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனைத் தெரியுமா
என்பதுவரை இடைவெளியில்லாமல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருப்பார். சு.ரா.வும பொறுப்பாக
எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்வார். ஜி.ஆர். பாலகிருஷ்ணன், ஐ.சி.
பாலசுந்தரம் போன்றோர் 'ஜே.ஜே.' வெளிவந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வாசகர்களாக
இருந்தார்கள். 'ஜே.ஜே.' வெளி வருவதற்கு முன்பு சு.ரா. கையெழுத்துப் பிரதியாகவே
வாசித்துக் காண்பித்திருந்தார். ராமகிருஷ்ணன், சிவராமன், சு.ரா. மூவருக்கும்
அந்தரங்கமான நட்பு இருந்தது.
சு.ரா.வின் மரணத்திற்குப் பின் வந்த பதிவுகளில் ஜெயமோகன் போன்றவர்களுடைய பதிவுகள்
குறித்து. . .
பெரிய பதிவு என்று ஜெயமோகனுடையதுதான் வந்திருக்கிறது. அதில் சு.ரா.வின் இயல்பு,
அவருடன் ஏற்பட்ட உரையாடல் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. ஆனால் இருவருக்குமான
மோதலில் சில பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் ஜெயமோகன் சு.ரா.வை
insult செய்கிறார். இவர் சொல்வதை
வைத்துப் பார்த்தால்கூட அவர் எந்த இடத்திலும்
இவரை அப்படிப் பேசியதாகத் தெரியவில்லை. இவரே பல இடஙகளில் அதை ஒத்துக்கொள்கிறார்.
அதேபோலக் குறிப்பிட்ட சூழலில் சொல்லப்படுகிற சிறு விஷயத்தை வைத்துக்கொண்டு
முழுமையான ஒரு அபிப்ராயத்தை முன்வைக்கிற செயலை அதில் பார்க்க முடிகிறது.
உதாரணதத்திற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் சரிதா நடித்த படத்தில் ஒரு காட்சியைப்
பாராட்டினார் என்பதற்காகச் சரிதாதான் அவருக்குப் பிடித்த நடிகை என்று
தீர்மானிப்பதுபோல் கணிப்புப் பிழைகள் அதில் நதறைய இருப்பதாகத் தோன்றுகிறது.
m m m
ஒரு எழுத்தாளனாக, ஒரு மனிதனாக இசையோடு எபபடி உறவுகொள்கிறீர்கள்?
இயற்கையைப் பார்ப்பதுபோல இசையை அனுபவிப்பது ஆனந்தத்தைத் தருகிறது. பாடல்களோ
வார்த்தைகளோ மொடடையாக இருக்கக் கூடாது. பாடும்போதே தெரியும், இந்த இடம் எப்படிப
பிரமாதமாக வந்திருக்கிறது என்று. இந்தோள ராகத்தில் அருணா சாய்ராம் பாடிய பாடலொன்று
கேட்டேன். ஸ்வரமே மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாடுவதில் வெளிப்படும் சிருஷ்டி
இதுதான். இசையைப் பொறுத்தவரை எனக்கு மணி அய்யர் மிக முக்கியமானவர். காபி நாராயணி,
கௌட மாலா, உமாபரணம் ஆகிய மூன்றில் அமைந்த அவரது பாடல்கள் மிக அருமையானவை. டி.என்.
கிருஷ்ணன் வயலின், பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம் - இதில் ஒரு முறை கிருஷ்ணனின்
வயலின் பிரதானமாகத் தெரியும். மற்றொரு முறை மணி அய்யரின் மிருதங்கம் பிரதானமாகக்
கேட்கும். சில நேரங்களில் மணி அய்யரின் பாடல் ஒருவாறு ஆக்கிரமிப்புச் செய்யும்.
பாடகர் பக்தியில் உருகும்போது நீங்கள் எப்படி எதிர்வினை புரிகிறீர்கள்?
பக்தி பாவத்தோடு சுப்ரபாதத்தைக் கேட்க என்னால் முடியாது. சங்கீதத்தை
ரசிப்பவர்களுக்கு எந்தப் பக்தி பாவமும் முக்கியம் இல்லை. இசையை ரசித்தல் பக்தி
பாவத்தால் நேர்வதல்ல. அந்தப் பாடல்களுக்குள்ளாக சங்கீதத்தை எவ்வாறு கையாள்கிறார்கள்
என்பதையே கவனிக்கிறேன். கடவுள் பக்தி இல்லாவிட்டாலும் கர் நாடக சங்கீதம் வரும்,
அருணா சாய்ராம் சொன்னதுபோல. இங்குப் பாரம்பரியச் சங்கீதம் பக்தியில்
மாட்டிக்கொண்டது. பக்தியிலிருந்து கர்நாடக சங்கீதம் என்று விடுபடுகிறதோ அன்று பெரிய
மறுமலர்ச்சியும் எதிர்காலமும் அதற்கு இருக்கிறது.
வேறு சாகித்யங்கள் எழுதப்படுமா?
மீண்டும் பக்தியோடு தொடர்புபடுத்திச் சாகித்யங்களைத் தேட வேண்டுமென்ற அவசியம்
கிடையாது. கர்நாடக சங்கீதம் என்றால் தியாகராசர் கீர்த்தனை பாடுவார்கள். அடுத்ததாகப்
பாபநாசம் சிவன் என்று தொடர்வார்கள். மேம்போக்காகக் கேட்கும்போது அது தமிழ்ப் பாடலா
என்று யோசிக்குமளவிற்குச் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கும். இப்பொழுது
பாடிக்கொண்டிருக்கும் சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம்,
சௌம்யா இவர்களெல்லாம் பக்தி சாகித்யங்களைப் பாடுவதில்லை என்று சொல்லிக் கண்ணதாசன்
போன்றோர் எழுதிய பாடல்களைப் பாட வேண்டும். அப்படிப் பாடும்போது இது போன்ற பாடல்களை
எழுதும் படைப்பாளிகளும் பிறப்பார்கள்.
புறநானூறு, அகநானூறு என்று பக்திக்கு அப்பாற்பட்ட பழைய பாடல்கள் இருக்கத்தானே
செய்கின்றன?
அந்தப் பாடல்களில் பெரும்பாலும் நமக்குப் பரிச்சயம் இல்லாத வார்த்தைகளே
இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில்கூடப் பல இடங்களை அகராதியில்லாமல் படிக்க முடியாது.
அதனால்தான் நமக்குப் பரிச்சயமான தமிழாக இருக்க வேண்டுமென்று சொல்கிறேன். மொழி
தெரியாததால் தெலுங்கில் என்ன சொன்னார்கள் என்பது நமக்குப் பிரச்சினையாயிருக்க
முடியாது. வார்த்தைகளை நன்றாக உச்சரிக்கிறார், நன்றாகப் பாடுகிறார், சங்கீதத்தை
நன்றாகக் கையாளுகிறார் என்றுதான் பார்க்க முடியும்.
பக்தியை அடுத்து தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைச் சொல்லலாமில்லையா? பாரதியார்
போன்றோரின் பாடல்களையும் பாடுகிறார்கள்தானே?
பாரதியார் பாடல்களிலும் திரும்பத் திரும்பச் சின்னஞ்சிறு கிளியே, தீராத
விளையாட்டுப் பிள்ளை, தீர்த்தக் கரைதனிலே, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே இப்படிப் பாடிய
பாடல்களையேதான் பாடுவார்கள். எதைப் பற்றி வேண்டுமானாலும் பாடலாம். கண்ணதாசன்
மாதிரியான பாடலாசிரியர்களின் பாடல்களைப் பாடலாம். பாடல் என்பது பக்தியாக மட்டும்
ஏன் இருக்க வேண்டும்? ஏன் இயற்கையையோ வேறு எதைப் பற்றியோ இருக்கக் கூடாது?
கச்சேரிக்கு வருபவர்கள் பக்தி பாவத்திற்காக வருகிறார்களா, இல்லை பக்தியை
மறந்துவிட்டுச் சங்கீதத்தை ரசிக்க வருகிறார்களா என்பது தெரியாது. ஆனால் பக்தியைக்
கடந்து வேறு விஷயங்களைப் பரிச்சயமான வார்த்தைகளில் பாடலாக்கி அதில் சங்கீதத்தைக்
கையாளும்போது இந்தப் பாரம்பரிய சங்கீதத்தில் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும்.
திரை இசை உங்களுக்குப் பிடிக்கிறதா?
ஆரம்ப காலத்தில் திரை இசையெல்லாம் கர்நாடக சங்கீதமாகத்தான் இருந்தது. குறிப்பாகத்
தியாகராஜ பாகவதர் போன்றோரின் காலகட்டம். இலக்கியத்தில் நவீன இலக்கியம் என்று
சொல்வதுபோலத் திரை இசையில் நவீன இசை என்று சொன்னால் அது ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து
தொடங்குவதாகச் சொல்வேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இது இருக்கிறதா என்று
தெரியவில்லை. திரையிசையில் இளைய ராஜா எனக்குப் பிடித்தமானவர் அல்ல.
தமிழ்த் திரை இசைக்கு இளையராஜாவின் பங்களிப்பு எதுவும் இல்லையென்கிறீர்களா?
பங்களிப்பு இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அவருடைய இசையில் நவீனம் என்றும்
மலர்ச்சி என்றும் எதையும் அடையாளப்படுத்த முடியாது. ஆயிரம் பாடல்களுக்கு அவர்
இசையமைத்திருந்தால் அதில் பத்துப் பதினைந்து பாடல்களைச் சிறப்பானவை என்று சொல்ல
முடியும். ஆனால் முக்கியமானவர் என்று சொல்ல முடியாது.
m m m
தொடர்ந்து இருபது இருபத்தைந்து வருடங்களாகச் சிற்றிதழ் தளத்தில் வாசகனாகவும்
எழுத்தாளனாகவும் உறவு கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய வளர்ச்சியும் போக்கும் எப்படி
இருக்கின்றன?
முன்பைவிடச் சிறுபத்திரிகைகளை நிறையப் பேர் வாசிக்கிறார்கள். அவை சார்ந்த மனிதர்கள்
பல்வேறு இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் அறிவாளிகளாக இந்தத் தளத்திற்கு
வெளியில் இருப்போரால் கருதப்படுவதால் இவர்களை யாரும் பயன்படுத்தாமல்
விட்டுவிடுவதில்லை.
'காலச்சுவடு', 'உயிர்மை' தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. வேறு சில பத்திரிகைகள்
சில தடங்கல்களோடு வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றைய சூழல் பத்திரிகைகள் தன்னை
வளர்த்துக்கொள்ள, நிலைநிறுத்திக்கொள்ள உதவக்கூடிய சூழலாக இருக்கிறது. முந்தைய
இலக்கியச் சூழல் இன்று போன்றதல்ல.
பெண் படைப்பாளிகளின் எழுத்துக்கள் குறித்து?
பெண் எழுத்துக்களில் சல்மாவினுடையதை முக்கியமானதாகச் சொல்ல முடியும். ஆனால் பெண்
படைப்பாளிகளுடைய எழுத்துக்கள் எல்லாம் ஒரே தரப்பு எழுத்துக்களாக வெளிப்படுவதுதான்
சிக்கலானது. சல்மாவைப் போன்றே உமாவும் எழுதினால் சல்மாவை மட்டுமே வாசித்தால்
போதுமே. ஒரே மாதிரியாக எல்லோருடைய எழுத்துக்களும் இருந்தால் தனித்தனியாக எந்தப்
படைப்பாளியையும் வாசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாலதி மைத்ரியின் கவிதைகள்
வேறு மாதிரியானவை. அவருடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தாண்டிக்
கற்பனை செய்கிற விஷயம் வேறு. தாய்மையைப் பற்றி உமாவாலும் சல்மாவாலும் சிறப்பாக எழுத
முடியாததை மாலதியால் எழுதிவிட முடியும். வாழ்க்கை வேறாகவும் படைப்பு வேறாகவும்
வெளிப்படுகிற விஷயம் அசாதாரணமானது. இதுதான் படைப்பின் விசித்திரம். சுகிர்தராணி
வலிந்து சில பிம்பங்களை ஏற்றுக்கொண்டு எழுதுவதாலோ என்னவோ, எதிர்பார்த்த அளவிற்கு
மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவில்லை. பெண்ணால் இதுவரை சொல்ல முடியாது என்று
கருதப்பட்ட விஷயங்கள் இன்று துணிச்சலாகச் சொல்லப்படுகின்றன.
ஒரு பெண் சொல்ல முடியாத துணிச்சலான விஷயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
"மயிர்கள் சிரைக்கப்படாத எனது நிர்வாணம் அழிக்கப்படாத காடுகள் போல கம்பீரம்
வீசுகிறது" - இந்த மாதிரியான குரல் வருவதற்கான ஆதார மூலம் மிக முக்கியமானது. இந்த
மூலத்திலிருந்து, இந்த மண்ணிலிருந்து சொல்லப்படுகிற விஷயம் நிறைய இருக்கும் என்று
நினைத்தேன். மனநிலையைத்தான் மண் என்கிறேன். ஆனால் அது வளர்ச்சியடையவில்லை.
பெண்கள் பாலியல் சார்ந்துள்ள விஷயங்களை எழுதுவது குறித்த புகார்கள் மீண்டும்
மீண்டும் முன்வைக்கப்படுவது பற்றி . . .
இங்கே கடவுள் சார்ந்து பாலியல் விஷயங்களைப் பயமின்றிப் பேசலாம். கடவுள் இல்லாமல்
பாலியல் பற்றிப் பேச முடியாது. ஆண்டாளைப் படித்துப் பார்க்க வேண்டும். சாமியைச்
சாட்சியாக வைத்துப் பாலியல் கவிதைகளை நீங்களும் எழுதலாம்.
தீவிர இலக்கியப் பரப்பில் இருப்பவர்கள்கூடப் பாலியல் குறித்துப் பெண்கள் எழுதுவது
அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக என்றும் திரும்பத் திரும்ப உடல் பற்றியே எழுதுகிறார்கள்
என்றும் விமர்சிக்கிறார்களே.
ஆண்டாள் கடவுளோடு தன் காதலை, வேட்கையை, உடலைப் பற்றிப் பேசினார். கடவுளை
விட்டுவிட்டுத் தன் காதலைப் பேசியிருந்தால் என்ன செய்வீர்கள்? அதைத்தான் இன்றைய
பெண்கள் செய்கிறார்கள். கடவுளை விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கடவுள் சாராமல்
இருப்பதுதான் இவர்களுக்குப் பிரச்சினை.
இந்தப் பத்தாண்டுகளில் பெண் எழுத்துக்களைப் போல தலித் எழுத்துக்களை எப்படிப்
பார்க்கிறீர்கள்? அந்த எழுத்துக்களின் வலு, அவற்றின் வெளிப்பாடு எப்படி
இருக்கின்றன?
இமையம், சிவகாமி படித்திருக்கிறேன். அவை எல்லாம் தலித் சமூகத்துக்குள் இருக்கின்ற
மனநிலையைப் பற்றித்தான் பேசுகின்றன. தலித்துகளுக்கும் பிற சாதியினருக்கும்
இருக்கக்கூடிய பிரச்சினைகளை, இவை சார்ந்த மனநிலைகளை தலித் இலக்கியம் கொண்டு
வரவில்லை. இந்தச் சூழலில் வாழும் ஒருவன், தன்னை ஒரு தலித்தாக காட்டிக்கொள்வதில்
பிரச்சினை உள்ளது. இதுதான் சூழல். தலித்துகளின் உளவியல் ரீதியான சிக்கல்கள்
இலக்கியத்தில் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது. பொதுச் சூழலில் இருக்கும்போது அண்டை
வீட்டார், பணியிடத்திலிருப்போர் என்று எல்லோரோடும் பழக வேண்டியிருக்கிறது.
கிராமங்களில் இன்றும் சூழல் மோசமாக இருக்கிறது. இவர்களது உளவியல் ரீதியான சிக்கல்
தலித் இலக்கியத்தில் வடிவம் கொள்ளும்போது விசித்திரமான படிமங்களையும் விசித்திரமான
பிம்பங்களையும் கொண்டதாக அமையும். இந்த எழுத்துக்கள் தமிழில் மிக முக்கியமான
பாய்ச்சலாக இருக்கும். ஆனால் எழுதக்கூடிய எழுத்தாளர் வர வேண்டும்.
எழுத்து, இசை தவிர உங்களுக்கு வேறு எதில் ஆர்வம் இருக்கிறது?
நண்பர்களோடு ஆனந்தமாக இருப்பதுதான். மனிதன் தனியாளாக உணர்ந்தால் துக்கம்தான்.
எவ்வளவு பெரிய கூட்டத்தோடு இருந்தாலும் மனிதன் தனியாள்தான். தனியே அவரவர்க்கென்று
சில துயரங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். போல லட்சம் பேருடன்
இருந்தாலும்கூடத் தனிமை இருக்கத்தான் செய்யும். ஆட்களோடு கொண்டாடும்போது தனிமையை
மறுத்தல் நிகழ்கிறது. நான் எப்போதும் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டுதான்
இருக்கிறேன். அது ஒரு மன இயல்பு. வாழ்க்கையைக் கொண்டாடத்தான் வேண்டும்.
உதவி: கண்ணன், நெய்தல் கிருஷ்ணன்,
தேவேந்திர பூபதி
தொகுப்பு: ந. கவிதா