பாரதியின் 125ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, பாரதி தொடர்பான சில பதிவுகள் இச்சிறப்புப்
பகுதியில் இடம்பெறுகின்றன. பாரதி அன்பர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த ரா.அ.
பத்மநாபன் முதல் இந்தத் தலைமுறை ஆறுமுகத்தமிழன் வரை மூன்று தலைமுறையின் பாரதி
பற்றிய கருத்துகள் இதில் உள்ளன. ரா.அ.ப.வின் தேடல் முயற்சி காலத்தால் மிக முந்தியது.
அதன் விளைவுகள் 'பாரதி புதைய'லாய், 'பெருந் திரட்'டாய், 'சித்திர பாரதி'யாய்ப் பாரதி
ஆய்வுக்குப் பெரும் துணையாய் இருப்பவை. சீனி. விசுவநாதன் பாரதி தேடலில் இன்னும்
இருப்பவர். கால வரிசையில் பாரதி படைப்புகளைப் பதிப்பிக்கும் - கற்பனைக்கு எட்டாத
உழைப்பைக் கோரும் - பணியைச் செய்துவருபவர்.
இந்த இருவரின் சுருக்கமான நேர்காணல்கள் அவர்களது பணியின் தன்மையை ஒருவாறு காட்டும்.
நுண்மையான மொழி அறிவு வாய்ந்த தங்கப்பா, தமது பாரதி மொழிபெயர்ப்பு அனுபவத்தின் சிறு
பகுதியை நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சலபதியின் 'தராசு' பற்றிய கட்டுரை
பாரதி-பாரதிதாசன் முதல் சந்திப்பின் காலக் கணிப்பாகக் கனிந்திருக்கிறது. வ.ரா.வின்
பாரதி பதிப்பு முயற்சிகள் பற்றிய அதியமானின் கட்டுரை தமிழ்ப் பதிப்பு வரலாற்றின் ஒரு
முன்புள்ளியைப் பற்றிய ஓர் உசாவலாக அமைந்திருக்கிறது. பாரதி - பகவத் கீதை தொடர்பான
சில முரண்களை, விவாதத்திற்கான தொடக்கமாக முன்வைக்கிறார் ஆறுமுகத் தமிழன், வெள்ளைத்
தமிழ் மரபில் வள்ளலாருக்குப் பின் பாரதி தயங்காமல் தொடர்வதை விளக்க முயல்கிறது ப.
சரவணனின் கட்டுரை. பெருமாள்முருகனின் ரசனை பாரதியின் எல்லையற்ற கவித்துவ ஆற்றலைச்
சிட்டுக்குருவியின் திசையில் தேடுகிறது.
பாரதியில் செய்ய வேண்டிய ஆய்வுகள், பணிகள், விவாதங்கள், சிலாகிப்புகள் 125
ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர்கின்றன.
பழ. அதியமான்
ஆ. இரா. வேங்கடாசலபதி
18.11.2006
(வ.உ.சி. 70ஆம் நினைவு நாள்)