|
நீ கேட்டபடி
ஒரு காதல் கவிதை
கலா
மின்னல் தீற்றலாய் சிரிப்பின் ஒளி
உலோக கோபுரம் தீப்பிடித்தது
கண்மணியில் சிந்தும் குழந்தை
ஆடும் சுடரொளியோடு நீர்ப்பரப்பில்
காமத்தின் அலைகளைப்பரவியபடி உடல்
மிதக்கிறதை சுமந்து சாய்கிறது பாலம்
வஸந்தத்தின் பச்சைக் கொண்டாட்டத்தினுள்
இளைப்பாறுகிறது போகும் ஞாயிறு
சவப்பெட்டிகளின் அடுக்கு
உதட்டின் சுழிப்பில் உதிர்கிறது சலிப்பு இலை
காற்று கொண்டாடியது. காற்றையும்தான்
கண்ணாடிச் சுவர்களைக்
காதலோடு கவ்வுகிறது
செந்நிற மது

என் கடல் என் நிலம் என் என் என்
நம்முடைய பொழுது
பிரிந்த காலங்களின் கனத்தோடு
குளிராவி கிளம்ப
குரூரமாய் நிறைகிறது
வெண்ணிற மது
ஓசையின்றி கருங்கதுப்புகளாய்க் குமுறும் நதி
புகார்க் காண்டம்
ஒளிக்கடல் ஒளிக்கலங்கள்
ஒளியானது உடல்
எழுதியவன் எதையோ சொல்லட்டும்
என்ன பாடுபட்டிருப்பாள் மணிமேகலை
விவால்டி வழியும் உடல்கள் சதுக்கத்தில்
மதுச்சாலை சன்னதம் கொள்கிறது
பிரெஸ்ஸோனின் சிறுவன் சாலை கடக்கிறான்
இன்னொரு இளவேனிலின் தொலைவைக் கடக்க
கண்ணும் கோப்பையும் நிறைகிறது
வஸந்தம் வந்துவிட்டது
நானும் எழுதியிருக்கிறேன்.
எப்போதும் நீ கேட்ட கவிதையை.
உள்ளடக்கம் |