ஓர் இடத்திற்கு உண்மையிலேயே சொந்தமாக இருப்பதற்குச் சிறந்த வழி அதன் எல்லைகளை, அதன்
பிம்பங்களை, ஏன், அதன் இருப்பையேகூடக் கொஞ்சமும் அறியாமலிருப்பதாகத்தான் இருக்க
முடியும். - ஓரான் பாமுக்
'The White Sea is Azure' கட்டுரையில்
பெரும்பாலும் சர்ச்சைகளுக்குள்ளாகாதோரையே தனது பரிசுக்குரியவர்களாகத்
தேர்ந்தெடுக்கும் மரபைக்கொண்டது நோபல் பரிசு தேர்வுக் குழு. இவ்வாண்டின்
இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கும் ஓரான் பாமுக் படைப்புச்
செயல்பாடுகளைக் காட்டிலும் அரசியல் ரீதியான செயல்பாடுகளுக்காகவே அதிகமும்
பேசப்பட்டுவருபவர். எனவே அவருக்கு வழங்கப்பட்ட விருது மேற்குலகில் தற்போது
நிலவிவரும் 'இஸ்லாமிய வெறுப்'பிற்கு ஆதரவாக பாமுக்கைப் பயன்படுத்திக்கொள்ளும்
தந்திரம் எனக் கருத இடம் இருக்கிறது.
நோபல் கமிட்டியும் பாமுக்கும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளரான மௌரீன் ஃப்ரீலியும்
இந்தப் பரிசு பாமுக்கின் இலக்கியத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டு
வழங்கப்பட்டதாக வலியுறுத்தினாலும் இதன் பின்னால் இழையோடியிருக்கக்கூடிய இதர
அம்சங்கள் நமக்கு எப்பொழுதுமே வெளிப்படப்போவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாகக்
கூற முடியும். ஓரான் பாமுக்கிற்கு நோபல் விருது வழங்கப்படக்கூடுமென்று கடந்த ஆறேழு
வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. லண்டனின் சூதாட்ட அரங்கங்களில் 2003ஆம்
ஆண்டு முதற்கொண்டே பாமுக்கின் பெயர் முன்னணியில் இருந்துவந்திருக்கிறது. தன் சொந்த
நாட்டிலேயே தாய்நாட்டை இழிவுபடுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கை எதிர்
கொண்டிருக்கும் ஒருவருக்கு உலகின் உச்சபட்ச இலக்கிய விருதைத் தருவதென்பது சர்வதேச
அரசியல் அரங்கில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக்கூடும் என்பதாலேயே பாமுக்கிற்குப்
பரிசு கிடைப்பது தாமதமாகியிருக்கலாம் என்று நம்பவும் இடமிருக்கிறது.
சூதாடிகளுக்கும் மேம்போக்கான செய்தி வாசகர்களுக்கும் பாமுக்கின் இலக்கிய ஆளுமை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு ஓரான் பாமுக் என்பது எப்பொழுதும்
செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெயர். ஆனால் கடந்த ஏழாண்டுகளில்
இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிற எழுத்தாளர்களில் ஜே.எம். கூட்ஸியைத்
தவிர்த்து மற்ற அனைவரைக் காட்டிலும் ஓரான் பாமுக் மகத்தான எழுத்தாளர் என்பதில்
சந்தேகமில்லை.
'தன் சொந்த நகரத்தின் துக்ககரமான ஆன்மாவைத்தேடும் முயற்சியில் கலாச்சாரப்
பண்பாடுகளுக்கிடையே நிகழும் மோதல்களுக்கும் ஒருங்கிணைப்புகளுக்கும் புதிய
குறியீடுகளைக் கண்டறிந்தவர்' என்று அவருக்குப் பரிசு வழங்கியதற்கான செய்திக்
குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது நோபல் கமிட்டி.
ஓரான் பாமுக் 1952ஆம் வருடம் இஸ்தான்புல்லில் அவரது
Cevdet Bey and His Sons, The Black Book ஆகிய நாவல்களில் இடம்பெறும் பெரிய,
பணக்காரக் குடும்பங்களைப் போன்ற ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது 22ஆம்
வயதுவரையிலும் ஓவியம் வரைவதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பாமுக், கட்டிடக் கலைப்
படிப்பை மூன்று வருடங்கள்வரை பயின்றிருக்கிறார். அவரே ஒரு பேட்டியில்
குறிப்பிடுவதைப் போல, "தலைக்குள் ஒரு ஸ்குரூ கழன்றுவிட்டதால்" அந்தப் படிப்பைப்
பாதியில் விட்டுவிட்டு இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றார்.
ஆனால் அவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியதில்லை. 23ஆம் வயதில் எல்லாவற்றையும்
உதறிவிட்டு நாவலாசிரியராக வேண்டும் என்று முடிவுசெய்து எழுதவும் தொடங்கினார். இதுவரை
ஏழு நாவல்கள், நினைவுக் குறிப்புகளும் கவிதைகளும் சேர்ந்த, ஏறக்குறைய ஒரு சுயசரிதை
நூலான Istanbul, Other Colours என்னும் கட்டுரைத் தொகுப்பு ஆகியவை
வெளிவந்துள்ளன. இவை அனைத்துமே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஓரான் பாமுக் பிறந்த துருக்கி, புவியியல் ரீதியில் ஐரோப்பாவில் அமைந்திருந்தாலும்
அதன் கலாச்சாரம் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலூன்றிய ஓஸ்மான்லி அல்லது
ஓட்டமான் சாம்ராஜ்யம் உண்டாக்கிய பைஸான்ஷிய, மாம்லுக் மற்றும் பாரசீகக் கலாச்சாரக்
கலவையான இஸ்லாமிய ஓட்டமான் கலாச்சாரமாகவே இருந்துவருகிறது. மினியேச்சர் பெயிண்டிங்
எனப்படும் நுண் ஓவியங்கள் துருக்கியில் இஸ்லாமியக் கலாச்சாரம் காலூன்றுவதற்கு
முன்பிருந்தே இருந்துவந்திருக்கின்றன. 6, 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் துருக்கிய
நுண்ணோவியங்கள் தீட்டப்பட்ட சுவர்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ஓரான்
பாமுக்கின் மிகச் சிறந்த நாவலான
My Name is Red பதினாறாம் நூற்றாண்டின்
இறுதியில் நிகழும் கதை. ஓட்டமான் நுண்ணோவிய மரபு அழியத் தொடங்கியிருந்த காலம்.
சுல்தான் தனது சாம்ராஜ்யங்களின் கீர்த்தியையும் ஹெஜீராவின் ஆயிரமாவது ஆண்டு
விழாவையும் கொண்டாடும் வகையில் ஒரு மாபெரும் புத்தகத்தைக் கொண்டுவர விரும்புகிறார்.
இஸ்தான்புல்லின் மகத்தான ஓவியர்களை அழைத்து அந்நூலுக்கு நுண்ணோவியங்கள் வரைய
உத்தரவிடுகிறார். அவரது ஒப்பந்தக்காரர் எனிஷ்டே மேற்கத்தியத் தொழில்நுட்பங்களுடன்
அவ்வோவியங்களைத் தீட்டுவதற்கு சுல்தானின் சம்மதத்தைப் பெறுகிறார். ஆனால் இஸ்லாமிய
பாணி ஓவியங்கள் அல்லாவின் பார்வையின்படி அமைய வேண்டும். தனிமனிதக் கண்ணோட்டத்தில்
ஓவியங்கள் தீட்டும் மேற்கத்திய பாணி இதற்கு நேரெதிரானது. மதவாதிகளின்
சீற்றத்திலிருந்து தப்பிக்க நுண்ணோவியப் பணி தனித் தனியாகப் பல்வேறு
நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மிக ரகசியமாக நடந்துவருகிறது. பணி பாதியளவு
நிறைவடைந்த நிலையில் பிரதான ஓவியன் ஒருவன் காணாமல்போகிறான். அவனது பிரேதம் ஒரு
கிணற்றில் கிடக்கிறது. எனிஷ்டே அவனது ஓவியக் கூடத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.
நுண்ணோவியர்களைப் பீதி தொற்றிக்கொள்கிறது. கொலையாளி அவர்களிடையேதான் இருக்கிறானா?
அல்லது அவர்களைத் துரத்துவது சாபமா? இதற்கு விடை, பாதி முடிந்த அந்த
நுண்ணோவியங்களில் சமிக்ஞைகளாக ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
இந்த மகத்தான நாவலின் 59 அத்தியாயங்களும் ஒவ்வொரு பாத்திரத்தின் குரலாக
அமைந்திருக்கின்றன. "என் பாத்திரங்களுக்குள் நான் ஆள் மாறாட்டம் செய்து கொள்வது
எனக்குப் பிடித்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டின் ஓட்டமான் நுண்ணோவியன் ஒருவனின்
குரலைக் கண்டெடுப்பதிலும் தன் கணவனைத் தேடியலையும் இரண்டு குழந்தைகளின் தாயாகவும்
அந்தக் குழந்தைகளாகவும் கொலையாளியின் குரூரக் குரலாகவும் சொர்க்கத்திற்குச்
சென்றுகொண்டிருக்கும் இறந்தவனின் குரலாகவும் என்னை உருமாற்றிக்கொள்வது சுவாரஸ்யமாக
இருக்கிறது" என்கிறார் பாமுக். பாத்திரங்கள் மட்டுமல்லாது நாயும் பட்டாம்பூச்சியும்
பொற்காசும் மரமும் பல்வேறு நிறங்களும்கூட இந்நாவலின் அத்தியாயங்களில் பேசுகின்றன.
தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தமான அவரது நாவல்
The White Castle. ஆங்கிலத்தில் வெளிவந்த அவரது முதல் நாவல் இது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த அறிஞர்
ஒருவர் வெனிஸிற்கும் நேப்பிள்சுக்கும் இடையில் கடற்கொள்ளையர்களால்
பிடிக்கப்படுகிறார். அவரை இஸ்தான்புல்லிற்குக் கொண்டுவந்து அடிமைகளுக்கான சந்தையில்
ஏலத்தில் விடுகின்றனர். துருக்கியைச் சேர்ந்த ஓட்டமானிய அறிஞர் ஒருவர் மேற்குலகின்
அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சியை அறிந்துகொள்வதற்காக அவரை விலைக்கு வாங்குகிறார்.
எஜமானனும் அடிமையும் தத்தமது பாவங்களையும் ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள, அவர்களது
உறவு சிக்கலாகிறது. இக்கதையில் இடம்பெறும் அடிமைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து எல்லா
நாவல்களிலும் இடம்பெற்றுவருகிறது.
ஆனால் இத்தகைய ஆள்மாறாட்டம் மேலைக் கலாச்சாரத்தைத் துருக்கி எதிர்நோக்குவதிலும்
கலந்திருப்பது அவருடைய நாவல்களில் வெளிப்படுகிறது. அவரது
The Black Book நாவலில், ஜவுளிக் கடைகளில் உடைகளை மாட்டி வைக்கும் விளம்பர பொம்மைகள் விற்பவனுக்கு
இப்பிரச்சினை ஏற்படுகிறது. மீசையும் கருப்புத் தோலும் வளைந்த கால்களும் உடைய
பொம்மைகள் துருக்கியர்களைப் போலவே இருப்பதால் கடைக்காரர்கள் வாங்க மறுக்கின்றனர். "பரிச்சயமில்லாத,
தூர தேசத்தைச் சேர்ந்த ஓர் அழகான வெள்ளைக்காரன் இந்த உடையை வாங்கி அணிந்தால் நாமும்
அவனைப் போலவே வெள்ளையாக, அழகாக மாறிவிடுவோம் என்று தோன்றும். எனவே வெள்ளைக்கார
பொம்மைகளாகக் கொண்டு வா" என்கின்றனர்.
ஒரு தேசத்தை நவீனமயமாக்கச் சிறந்த வழி ஏற்கனவே அங்கு நிலவிவரும் மரபுகளைப்
பிரக்ஞையோடு செயலாக்குவதுதான் என்கிறார் பாமுக். இது கேமல் அடாதர்க்கியக் குடியரசில்
நிகழவில்லை. துருக்கியில் பல்வேறு மதப் பிரிவுகள் - சில தீவிரவாதங்களாக, சில
அடிப்படைவாதங்களாக, சில பெரிதும் தாராள வாதங்களாக - இருக்கின்றன. இவை தமக்குள்
போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சமயப் புரட்சிப் பிரதேசங்களில்
சீர்திருத்தங்கள் பரிணமித்துவந்த நேரத்தில் கேமல் அடாதர்க் அவற்றைச்
சீர்கேடானவையென்று கூறித் தடைவிதித்து ஓட்டமான் மற்றும் துருக்கிய இஸ்லாமின்
கலப்புத்தன்மையை அழித்துவிட்டார். அதனால் ஒருவித வெறுமை உண்டாகி இத்தகைய 'ஒருங்கிணைந்த
ஒற்றைநிற அடிப்படைவாதமாக' அது மாறிவிட்டது.
பாமுக் எழுதத் தொடங்கிய காலத்தில் துருக்கியில் சோசலிச யதார்த்தமும் கிராமிய
நாவல்களும் ஸ்டீன்பெக்கின் படைப்புகளைப் போன்ற சோக இலக்கியமும்தான் கோலோச்சிவந்தன.
துருக்கியின் பெருநகர மத்தியத் தர வர்க்கத்தினரைப் பற்றியும் அவர்களது அடையாளச்
சிக்கல்கள் பற்றியும் பாமுக்தான் முதன்முதலாக எழுதத் தொடங்கினார். அவரது முதல் நாவல்
Cevdet Bey and His Sons 1982ஆம் வருடம் வெளிவந்தது. அடுத்ததாக
The Silent House, The White Castle ஆகியவை வெளிவந்தன. 1985
முதல் 1988 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசியராக பாமுக் பணிபுரிந்த
காலத்தில் எழுதப்பட்ட
The Black Book இல், காணாமல்போன தன் மனைவியைத்
தேடியலையும் ஒரு வழக்கறிஞன் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியரான தன் மாமனாகத் தன்னை
ஆள்மாறாட்டம் செய்துகொண்டு இஸ்தான்புல்லின் சரித்திரமும் நிகழ் காலமும்
கலந்திருக்கும் நிழல் பாவிய தெருக்களில் சுற்றித் திரிகிறான்.
தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து ஓரான் பாமுக்கின் மற்றொரு முகம் வெளிப்படத்
தொடங்கியது. துருக்கியின் பேரினவாத அத்துமீறல்களை
The New Life நாவலில்
மறைபொருளாகப் பொதிந்து வைத்திருந்தார். துருக்கியின் சமீபகாலச் சரித்திரத்தின் வலி
மிகுந்த இரு அத்தியாயங்களைத் தனது தாய்நாடு ஒப்புக்கொள்ளவே மறுத்து வருகிறது என்று
அதைக் குறித்த குற்ற உணர்ச்சியை மக்களிடம் எழுப்பிவிடக் கூடாது என்பதற்காக அவற்றைப்
பற்றிப் பேசுவதே ஒரு தெய்வக் குற்றம் என்பதுபோலத் தடை செய்துவைத்திருப்பதை பாமுக்
பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். ஆனால்
சுவிட்சர்லாந்தின்
Tages Anzeiger செய்தித்தாளுக்கு 06.02.2005
அன்று அளித்த பேட்டியில், "முதலாம் உலகப் போரின்போதும் அதற்குப் பின்னும் பத்து
லட்சம் ஆர்மீனியர்கள் ஓட்டமான் சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கூட்டு சேர்ந்ததற்காகக்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பற்றி என்னைத் தவிரத் துருக்கியர்கள் யாரும்
பேசத் துணிவதில்லை" என்று குறிப்பிட்டார். துருக்கியின் வழக்கறிஞர்களிடையே
தேசியவாதக் குழு ஒன்று துடிப்பாகச் செயல்பட்டுவருகிறது. அந்தக் குழு இது போன்ற
அபிப்பிராயங்களைச் சகித்துக்கொள்வதில்லை. குர்து மக்கள்மீது நிகழ்த்தப்படும்
வன்முறையைப் பற்றி எழுதிய குற்றத்திற்காக 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்
பத்திரிகையாளர்களும் துருக்கியில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக
International PEN அமைப்பின் ஆவணங்கள் கூறுகின்றன.
பாமுக்கின் மீது 01.09.2005 அன்று 'துருக்கியத் தன்மையை இழிவுபடுத்தியதற்காக'த்
துருக்கியச் சட்டப் பிரிவு 301/1இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. உலகம் முழுவதும்
உள்ள மதச் சார்பற்றவர்கள், அறிவுஜீவிகள் தவிர ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் கூடத்
துருக்கியின் இந்நடவடிக்கைக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. உலகளாவிய எதிர்ப்பைச்
சமாளிக்க முடியாமலோ ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்கு விண்ணப்பித்திருந்த துருக்கிக்கு
இது போன்ற நடவடிக்கைகளால் பின்னடைவு நேரக்கூடும் என அஞ்சியோ பின்னர் பாமுக்
அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓரான் பாமுக்கைப் போன்ற புகழ் பெற்ற ஓர்
எழுத்தாளருக்குக் கிடைத்த இத்தகைய உலகளாவிய ஆதரவு துருக்கியின் பிரபலமற்ற மற்ற
எழுத்தாளர்களுக்குக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இருந்தும் பாமுக்மீது
சுமத்தப்பட்ட அதே விதமான குற்றச்சாட்டு எலிஃப் சஃபாக் என்ற இளம் பெண்
எழுத்தாளர்மீதும் சுமத்தப்பட்டு அதிர்ஷ்டவசமாகச் சென்ற மாதம்
விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நோபல் பரிசு கிடைத்திருப்பதால் இன்று ஓரான் பாமுக்கின் மீது உலகின் மொத்த கவனமும்
திரும்பியிருக்கிறது. இப்பரிசுக்கு முன்புகூட அவரது அரசியல் கருத்துகளாலும்
அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளாலும் அவரது பெயர் தொடர்ந்து செய்திகளில் இடம்
பெற்றுவந்திருக்கிறது. அவருடைய பிரபல்யத்திற்கு உதவியாக அவரது இலக்கிய ஆளுமைமீது
சுற்றப்பட்டிருக்கும் இத்தகைய ஜரிகைகளை நீக்கிவிட்டு அவரது படைப்புகளை மட்டும்
எடுத்துக்கொண்டு ஆழ்ந்து வாசித்தால் அவரது படைப்புகளின் இலக்கியத் தரம் நோபல்
அங்கீகாரத்திற்கும் மேலானது என்பது விளங்கும்.
இலக்கியத்தின் அடிப்படைத் தன்மையையும் அதன் பலன்களில் ஒன்றையும் வெளிப்படுத்தும்
அவரது கருத்து ஒன்றை இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக அமைப்பது பொருத்தமாக இருக்கும்:
"ஓர் எழுத்தாளனின் அரசியல் அவன் கற்பனையிலிருந்தும் வேறு யாரோவாகத் தன்னை
உருவாக்கிக் கொள்ளும் திறனிலிருந்தும் எழுகிறது. இந்த பலமே தனக்காக வாதிட
முடியாதவர்களின், யாரும் கேட்க முன்வராத சோகங்களைக் கொண்டிருப்பவர்களின் குரலாக
எழுத்தாளனை ஆக்குகிறது."