சில சமயங்களில் எதிரான குறிக்கோள்களும் தாக்கங்களும் கொண்ட
இரண்டு நிகழ்வுகள் ஒன்றாய் நடப்பதுண்டு. இவற்றுள் ஒன்றின் தாக்கம் மற்றொன்றால்
சூன்யப்படுத்தப்படுவதும் உண்டு. நாடெங்கும்
IPC 377க்கு எதிராக ஓரின
ஈர்ப்புடையோர் (homosexual
- gay, lesbian), ஈரின ஈர்ப்புடையோர்
(bisexuals), அரவாணிகள், தமது பால் தன்மையை மாற்றிக்கொண்டவர்கள்
(transgendered), எங்களது ஆதரவாளர்கள் ஆகியோரின் குரல் வலுவடையும்
தறுவாயில், இப் பிரிவினரைப் பற்றிய தவறான, ஆரோக்கிய மற்ற, அரசியல் தெளிவற்ற
எண்ணங்களை வெளியிடும் திரைப்படம் வெளிவருவது இத்தகைய ஒரு நிகழ்வோ என்று
தோன்றுகிறது.
தமிழகத் திரையரங்குகளில்
'வெற்றி நடை' போட்டுக் கொண்டிருக்கும் வேட்டையாடு விளையாடு
இம்மக்கள் பற்றிய தவறான சித்தரிப்புகளையும் கருத்துகளையும் களிப்போடு
வெளியிட்டுள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் இரு கதாபாத்திரங்கள் ஓரின
ஈர்ப்புடையோராகவும் பெண்களைக் கடத்தி, வன்புணர்ச்சி செய்து, கொடூரமான முறையில் கொலை
செய்யும் 'சைக்கோ'க்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். பெண்கள்மேல் காம வெறி கொண்டுள்ள
இருவர் ஓரின ஈர்ப்புடையோராகவும் இருப்பதே ஒரு முரண்பாடு. அவர்களது மனநலமின்மையை
அவர்களது ஓரின ஈர்ப்புடன் இணைத்திருப்பதுதான் இதனைவிட அதிக சேதம் விளைவிக்கக்
கூடியது. ஓரின ஈர்ப்புள்ளவர் மனநலம் பிறழ்ந்தவராக இருக்கச் சாத்தியமில்லை என்பதோ
அதன் மாற்றுக் கூற்றோ எனது நிலை அல்ல. நான் எதிர்ப்பது இவற்றையே:
(1) தமிழ் சினிமாவிலும் பத்திரிகைகளிலும் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ள
(alternative sexualities) மக்களைப் பற்றிய நல்ல, நுட்பமான
கையாளுதல் இருப்பின், புண்படுத்தும் இந்தச் சித்தரிப்பு விமர்சிக்கப்படாது போகலாம்.
எத்தகைய பிரதி நிதித்துவமும் இல்லாத நிலையில் இது போன்ற கூற்றுகள் ஏற்றுக்கொள்ளத்
தக்கவை அல்ல.
(2) இந்த இரண்டு வில்லன் கதாபாத்திரங்களையும் காவல் நிலையத்தில் வைத்து ஓர்
அரவாணியைக் கொண்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தச் செய்வது அருவருக்கத்தக்க, தவறான
பிரதிபலிப்பை ஏற்படுத்தும் செயலாகும். கமலஹாசன் நடிக்கும் ராகவன் கதாபாத்திரம்,
இதற்குக் காரணமாயிருக்கும் அதிகாரியைப் பின்னர் கடிந்துகொண்டாலும் அதன் நோக்கம்
வேறு. இந்த நிகழ்வு வில்லன்களை மேலும் சீற்றமடையச் செய்ததைப் பற்றியதே அவரது கவலை.
நமது வேதனையோ அரவாணிகளின் சித்தரிப்புப் பற்றியது.
(3) மேலும் ஓரின, ஈரின ஈர்ப்புடை யோர் பற்றிய நுட்பமான வேறு சித்தரிப்புகளும்
சொற்களும் தமிழில் இல்லாத நிலையில், இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில்
இப்பிரிவினரைப் பற்றிய ஆரோக்கியமற்ற சிந்தனைகளும் அறிவும் பதிய நிறைய
வாய்ப்புள்ளது. மேலும் அமுதன், நிலா பாத்திரங்கள் பிரத்தியேக இயல்பு கொண்ட
தனிநபர்கள் என்பது பதிவு பெறாமல், வகைமாதிரிகள் (type-casts,
samples)
என்கிற ஆபத்தான எண்ணம் ஏற்படலாம்.
'சப்பாணி', 'சீயான்' போன்றவை இன்று கல்லூரிக்
கலாச்சாரத்தில் வழங்குவதுபோலவே
'அமுதன்', 'நிலா' என்ற பெயரடைகள் இழிந்த பொருளுடன்
வழங்கப்பெறும் அபாயம் உள்ளது. ஒரு ஆணை இன்னொரு ஆணிடம் காட்டி
'உன் காதலி', 'உன்
பெண்டாட்டி' என்று சொல்வது ஓர் உதாரணம்.
(4) இந்த இரண்டு பாத்திரங்களும் ஓரின ஈர்ப்புடையோராகச் சித்தரிக்கப்படுவது
கதைக்குத் தேவையானதே அல்ல. தானல்லாத மற்ற எந்த பிரிவினரையும் ஏளனம் செய்யச்
சிறிதும் தயங்காத மக்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் மட்ட ரக வர்த்தக நோக்கே இதற்குக்
காரணம். பெண்களைப் போகப் பொருட்களாகப் பார்த்தல், ஆண்களுக்கு இடையில் பரிமாற்றம்
செய்துகொள்ளும் உரிமைப் பொருட்களாகச் சித்தரித்தல் என்று பொதுவாகத் தமிழ்
சினிமாவின் அடையாளங்களாகிவிட்ட எல்லா குணாதிசயங்களும் வேட்டையாடு விளையாடு
படத்திற்கு உண்டு. பரஸ்பர மதிப்புடைய நட்பாகத் தொடங்கும் ராகவன் (கமல்) - ஆராதனா
(ஜோதிகா) உறவுகூட உரிமையாளர்-சொத்து என்ற கட்டமைப்பிற்குள் சிக்கிவிடுகிறது.
நல்ல கலைஞராகக் கருதப்படும் கமலஹாசன் நியாயப்படுத்த இயலாத இந்தக் கலையுலக
வன்முறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருப்பது வருத்தத்திற்குரியது. கலை நயமும் காட்சி
அமைப்பதில் திறமையும் பெற்றுள்ள இயக்குநர் கௌதம் இதற்குப் பொறுப்பாகிறார். சமூகச்
சிந்தனையும் அரசியல் தெளிவும் தேவை என்பதுடன் தேவையில்லாத அம்சங்களைக்
கொண்டிருக்கும் ஒன்று முழுமையான கலைப் படைப்பு ஆகாது என்ற அழகியல் உண்மையையும் அவர்
உணர்வது நல்லது.
n
கட்டுரை ஆசிரியர் இலக்கிய ஆய்வாளர்,
நடனக் கலைஞர்.
மின்னஞ்சல்:
aniruddh.vasudevan@gmail.com