சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், பார்த்தசாரதி கோவில் மேற்குத் தோரண
வாயிலுக்கு எதிரேயுள்ள 'காலச்சுவடு' அலுவலகக்கட்டிடத்தில் (216, திருவல்லிக்கேணி
நெடுஞ்சாலை) சுதர்சன் புத்தக விற்பனை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 18.08.2006
அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற அதன் திறப்பு விழாவில் எழுத்தாளர் திலகவதி, கவிஞரும்
இதழியலாளருமான கவிதா, எழுத்தாளரும் பஞ்சாயத்து யூனியன் தலைவருமான எஸ். ஜோதிமணி,
அனிதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்கள். எழுத்தாளர் மா.சு. சம்பந்தன்
விற்பனை மையத்தைத் திறந்துவைத்தார். முதல் நூலை பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)
வாங்கிக்கொண்டார்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பக உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள்
எனப் பலரும் கலந்துகொண்டிருந்த இந்த விழா, மேடையோ உரைகளோ இல்லாத இலக்கியச்
சந்திப்பாக அமைந்திருந்தது. பள்ளிக் கல்வி மற்றும் நூலகத் துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி, நஞ்சுண்டன்,
ஆனந்த், தியடோ ர் பாஸ்கரன், பி.ஏ. கிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஜே.பி. சாணக்யா,
மலர் மன்னன், கனிமொழி, மணா, த.செ. ஞானவேல் (விகடன்), கே. பாண்டியராஜன் (மாஃபா),
பெருந்தேவி, க்ருஷாங்கினி, செந்தில்நாதன் (பரிசல்), பழ. அதியமான் எனப் பலரும்
விழாவிற்கு வருகைதந்தார்கள்.
காலச்சுவடு பதிப்பக நூல்கள், மதுரை காமராசர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகங்களின்
பதிப்புத் துறை நூல்களுடன் இவ்விற்பனை மையம் தொடங்கப்பட்டாலும் அனைத்துப் பதிப்பக
நூல்களையும் கொண்ட விற்பனை மையமாக விரைவில் விரிவுபடுத்தப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டது.
திரையரங்குகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் திறப்புவிழாவிற்குத்
திரள்வதுபோல் ஒரு புத்தக விற்பனை மையத் திறப்பு விழாவிற்குப் பலரும்
வந்திருந்திருந்தது புத்தக வெளியீடு, விற்பனை முதலானவற்றில் ஏற்பட்டுவரும்
உற்சாகமான சலனங்களைப் பிரதிபலித்தது.