Google   www kalachuvadu.com

மதிப்புரை

நீர் மிதக்கும் கண்கள்
(கவிதைகள்)

பெருமாள்முருகன்

சங்க காலச் சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் - 629 001.
முதல் பதிப்பு - டிசம்பர் 2005
பக். 88, ரூ. 50/-
ராணிதிலக்

ஒரு சமூகத்தின் பிரஜையான கவிஞன், அவனுடைய தனிமனித இருப்பினையும் சக மனிதர்களின் இருப்பினையும் ஆவனப்படுத்த விழையும்பொழுது கவிதை உருவாகிறது. இது ஒரு சமூக மற்றும் கலாச்சார விளை-பொருள். ஒளி விலகியும் பிரதிபலிக்கலாம், நேரடியாகவும் வீசலாம்ஔ

- பிரம்மராஜன்

இன்றைய நவீன கவிதை பன்முகத்துடன் இயங்கிவருகிறது. எளிய சொற்கள், இளகிய வடிவம், உரைநடைச் சாயல் கொண்ட இன்றைய கவிதைகள், தன்னிலை சார்ந்தும் புனைவு சார்ந்தும் வெளிப்படுகின்றன. அடையாளத்தைத் தேடுவதும் மறுப்பதுமான மனநிலையில் இயங்கும் கவிதைகள், எதையும் தர்க்கபூர்வமாகவும் இல்லாமலும் உரையாடலை வைக்கின்றன. ஒரு கவிதைக்கு மெய்யான அனுபவம் தேவையில்லை, அதை உருவாக்கிவிடலாம் என்ற புனைவு நம்பிக்கை புழங்கும் இச்சூழலில், பெருமாள்முருகனின் ஑நீர் மிதக்கும் கண்கள்ஒ தொகுதி வெளியாகியுள்ளது.

இன்றைய நவீன கவிதைகளின் ஑திறந்தநிலைஒ வடிவத்திற்கு ஒப்பானவை இவரது கவிதைகள். அநேகக் கவிதைகள் நேரடியான தன்மையுடன் பேசுகின்றன. மனஉணர்வுகளை, சலனங்களை உண்டாக்கும் இக்கவிதைகள் மொழியை நம்பாமல் வாழ்வனுபவத்தை நம்புபவை. இதனாலேயே இத்தொகுதியின் பெரும்பான்மை கவிதைகள் யதார்த்தத் தன்மை கொண்டவையாக உள்ளன. புனைவைக் கொண்ட கவிதைகள் ஒரு சிலவே. இக்கவிதைகள் யதார்த்தமானவை; சற்றும் மிகை இல்லாதவை. உணர்ச்சிகளின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தி, சிறிய முனகலாக வைப்பவை. இதில் நினைவுகளுக்கும் இடம் உண்டு, கனவுகளுக்கும் இடம் உண்டு.

நான் என்கிற தேடல், இயற்கை, உறவுநிலை, குழந்தைகள் குறித்த உலகங்களை இக்கவிதைகள் அதிகம் பேசுகின்றன.

இக்கவிதைகளில் உள்ள ஑நான்ஒ, காலங்காலமாய்க் கரையில் நின்று தவிக்கும் மனமாய் உள்ளது. எந்தச் சலனமும் இல்லாமல் வெளிப்படும் கருத்தாய் உள்ளது. வேலியைக் கடக்கும் எலியாக உள்ளது. யாவரும் விரும்புவதால் தவறுகள் செய்வதாய் மனம் அமைந்தும் விடுகிறது. ஑நான்ஒ சில வேளையில் கசப்பை உறிஞ்சி, பசுமையை வெளிப்படுத்துகிறது. கனவுகள் பிடுங்கப்பட்டாலும் விடுபட்ட நிம்மதியால் சாந்தம் கொள்கிறது மனம். சில கணங்களில், வீட்டைத் தொலைக்க முடியாத மனம் துர்பாக்கிய சாலியாகவும் மாறிவிடுகிறது. வாழ்வின் தீராத கசப்பில் இருக்கும் நானில் விரக்தியையும் அழுகையையும் ஒரு சேரகாண முடிகிறது.

இவருடைய ஑நான்ஒ அதிகம் சந்தோஷம் கொள்வது இயற்கையிடம் மட்டுமே. இயற்கை மீது பெரிதும் அக்கறை கொள்பவராக இருக்கிறார். ஑சாலை மரம்ஒ கவிதையில் வடுக்கள், பிசாசுகள், பெருங்காயம் கொண்ட மரமொன்று தனக்குள் அடைக்கலமாய் முளைவிடும்போது எப்படிக் காப்பாற்றுவது என வருத்தப்படுகிறார், தன்னால் ஏதும் செய்ய முடியாததால், புனைவின் ஊடாக ஒருவனை உண்டாக்கிவிடுகிறார். அவனால் மரங்கள் துளிர்விடுகின்றன. நிலாவுடன் நடை பயில முடிகிறது. அங்கு கோடைக்காலமே இல்லை. கதவு தட்டும் மழையின் ஓசையே ஑லயிப்புஒ தருகிறது. என்றாலும் இயற்கை எப்போதும் மகிழ்ச்சி தருவது இல்லை. மழையை ரசித்த மனம், ஓமழை பெய்துணகொண்டேயிருக்கிறது / கிழட்டு நச்சரிப்பாய்ஔ என்றும் வெளிப்படுகிறது.

பெருமாள்முருகன் உறவுநிலை குறித்தும் எழுதியிருக்கிறார். அவரது உறவுகள் தாயாக, தந்தையாக, காதலியாக, மனைவியாக, குழந்தையாக விரிவடைந்து செல்கின்றன. இவ்வுறவுகள் வெறுப்பையும் துயரத்தையும் சுமையாகத் தந்துவிடுகின்றன. என்னதான் மனித வெறுப்பு இருந்தாலும், கருணையான மனமும் கொண்டவர் என்பதை ஑இறுக மூடிய விரல்கள்ஒ கவிதையில் காணமுடிகிறது. அவரது ஒட்டுமொத்த உறவுகள் தரும் சுமைகளை ஑விடுபடல்ஒ கவிதையில் நாம் உணர்ந்துவிடலாம். இத்தொகுதியில், உறவுகள் குறித்த கவிதைகளில் ஑அம்மாவின் ரேகைஒ குறிப்பிடத் தகுந்த ஒன்று. இவ்வுறவு நிலைகள் ஊடாகக் கவிஞர் தேடுவது அனுதாபம் அல்ல, வலியைப் பகிர்ந்துகொள்ளல் மட்டுமே. தன் கசப்பை மறந்து, தன்னுலகத்தை மென்மையாக்கிச் சஞ்சரிக்க முடியும் என்பதை ஑வேம்பின் பாடல்ஒ சுட்டுகிறது. அங்கே எப்போதும் அடர்நிழல் தரும் குளிர்ச்சி மட்டுமே நிகழும், வாழும்.

இன்றைய நவீன கவிதையில் குழந்தைகள் குறித்த கவிதைகள் அநேகம். இதில் இவரும் விதிவிலக்கல்ல. குழந்தைகள் சொல்லும் உலகம் ரம்மியமானது. இதை மனத்தின் அதிர்வைப் பிரித்தறியும் செவியால் மட்டுமே கேட்க முடியும். குழந்தைகளால் மட்டுமே உணரப்படும் பொம்மைகள், அறிவால் பார்ப்பவர்களை உற்றுப் பார்க்கின்றன. இக்கவிதைகளில் இருக்கும் குழந்தைகள் பள்ளியில்லாத நகரத்தை உருவாக்கிக்கொள்கின்றன. இதுதான் பள்ளியாகக் கூடும். அங்கே நமது தண்டனைகள் தோற்கின்றன. குழந்தைகளின் குற்றங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எதுவும் செய்ய முடியாதுதானே! குழந்தைகளின் உலகம் மீதான கவிதைகளில் ஑கைகள்ஒ கவிதை மிக முக்கியமான ஒன்று. இக்கவிதையில் மகனுக்கும் மகளுக்கும் தனது கைகளைப் பறவையின் சிறகுகளெனத் தந்துவிட்டுக் கனவுகளை இழந்த தந்தையைக் காண முடிகிறது. இக்கவிதைகள் புனைவின் சாயலைக் கொண்டவை. எதனாலேயோ இவை நம்மைக் கவரக் கூடியவையாக இருக்கின்றன.

பெருமாள்முருகன் கவிதைகள் அரசியலைப் பற்றியும் பேசுகின்றன. ஒளிமூலம், விரல்கள், நாக்குகள், பெருஞ்சுமை ஆகியவை வெளிப்படையாகவும் குறியீடாகவும் இந்துத்வா, ஆதிக்கச் சாதிகள்மீது எதிர்வினை ஆற்றுகின்றன. இந்த அரசியல் கவிதைகள் மிகவும் வழமையானவை. இச்சமூகம் பற்றிப் பெரிதும் அக்கறை இல்லாமல் ஑நான்ஒ என்ற தேடல் கொண்டு வாழ்பவனுக்கு இக்கவிதைகள் பெரிய சலனத்தை உண்டுபண்ணாது. அல்லது இக்கவிதைகள் மனத்தில் சலனம் உண்டாக்கும் அளவில் எழுதப்படவில்லை எனலாம். அரசியல் கவிதைகளுக்கு மௌனமும் ரௌத்ரமும் தேவை. அவை இக்கவிதைகளில் இல்லை.

இதே போன்று முத்தம், சிரிப்பு, காதல் குறித்த கவிதைகள் அதன் ஆழத்தை எட்டவில்லை. ரொமான்டிசிசத்திலிருந்து நாம் நவீனத்திற்கு வந்துவிட்டோ ம். நமது பார்வையும் மாற வேண்டியிருக்கிறது. அப்படியான நவீனப் பார்வை ஑முலைகள்ஒ கவிதையில் பார்க்கப்படுகிறது. முலைகளை உடலாய் அறிந்தும் உணர்ந்தும் பாவித்தும் தீர்ந்தபொழுதில் முலையின் அர்த்தம் பரிகசிக்கப்பட்டு புறம் ஒதுக்கப்பட்டது. இக்கவிதையில் ஑முலைகள்ஒ பாலியல் உறுப்பாகப் பார்க்கப்படுவது, புறம் ஒதுக்கப்படுகிறது. ஑பெருமூச்சுஒ கவிதையில், புணர்ச்சியின் ஊடாக வெளிப்பட்ட ஑பெருமூச்சுஒ என்ற சொல் வேறு வேறு அர்த்தம் தருவதாக உள்ளது. இப்படியான கவிதைகள் வரவேற்புக்குரியன; உரையாடலுக்குரியன.

இத்தொகுப்பில் உள்ள வெகு சில வார்த்தைகள், நீர் மிதக்கும் கண்கள், சாலை மரம், அழைப்பு, அப்போதிருந்து, இறுக மூடிய விரல்கள், செந்நிறக் கண்கள், அப்பாவின் வேலி, நாற்காலி, வேம்பின் பாடல், விதைப் பானை, சுடுகல், விடுபடல், கைகள், அம்மாவின் ரேகை, மழை ஆகிய கவிதைகள் அனுபவத்தைப் பெரும்பாலும் வழங்கிவிடுகின்றன. இவற்றைப் பலமான கவிதைகள் என்றும் கூறலாம். கருணை, கல் மலிந்த ஊர் ஆகிய ஒரு சில கவிதைகளே பலவீனமாய் உள்ளன. பிரிவு, துயரம் சார்ந்த காதல் கவிதைகள் எழுதுவது மனத்திற்குச் சந்தோஷம் தருவதாக இருக்கலாம். அதில் இருக்கும் பழமையான சொல்லாடல் மிகவும் அதிகமும் வாசிக்கப்பட்ட ஒன்றுதானே.

இத்தொகுதிக்கு ஆனந்த் முன்னுரை எழுதியுள்ளார். பெருமாள்முருகன் கவிதை உலகம் குறித்துச் சிறிதளவே பேசுகிறார். கவிதை மனம், கவிதையின் தோற்றுவாய், சொல்லின் இருப்பு, கவிதை ஆகியவை குறித்த ஆழமான உரையாடலை ஆனந்த் முன்வைக்கிறார். இவை கவிதை குறித்து சிந்திப்பவர்களுக்குப் பெரிதும் உதவும். எழுதுபவர்களுக்குள் பெரிய திறப்பை உருவாக்கும்.

ஓகாட்சியும் தன்னுணர்வும் சந்திக்கும் அகப்புள்ளியில் ஏற்படும் பரிவர்த்தனையின் வெளிப்பாடாகவே கவிதை எப்போதும் இருக்கிறதுஔ என்கிற ஆனந்தின் கூற்று பெருமாள்முருகனுக்குப் பொருந்தக் கூடிய ஒன்றே. கவிஞர் தன் வாழ்க்கையை எளிய சொல்லாடலில் திறந்த நிலையில் சொல்கிறார். இக்கவிதைகளின் மனத்தை,
ஓகசப்புகளை உறிஞ்சி உள் திணித்துப்/பசுமையாய் வெளிப்படுகிறேன்ஔ
என்னும் வரிகளில் உணர முடிகிறது.

பெருமாள்முருகனின் முதல், இரண்டாம் தொகுதிகளை வாசித்தவர்களால், மூன்றாவது தொகுதியில் ஏற்பட்டுள்ள அவரது வளர்ச்சியையும் மாற்றத்தையும் அறிய முடியும். இன்றைய நவீன கவிதைகள் பிளவுண்ட மனநிலையில் ஆசிரியரைக் குறித்தும் அவரது வாழ்வியல் குறித்தும் உரையாடுகின்றன. யதார்த்தம் என்பது, தர்க்கம் என்பது தொடர்ந்து எதிர் வினையாற்றப்படுகின்றன. இன்றைய நவீன இளந்தலை முறைக் கவிஞர்களின் எழுத்தைப்போல் இல்லையென்றாலும், பெருமாள்முருகனின் கவிதைகள் வாழ்வனுபவத்தின் மனச் சலனங்களை, கசப்புகளைப் பேசுவதாக இருப்பது மனத்திற்கு இதம் தருகிறது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google Adsense