|
கள்ளர் சமூகத்தினர்மீது பிற சாதியினர் கொண்டிருந்த அச்சத்தையும் வெறுப்பையும் பற்றி
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த அரசாங்க அதிகாரிகள் பலர் அடிக்கடிக்
குறிப்பிடுகின்றனர். தொழிலாளர் துறை ஆணையராக இருந்த டி. ஈ. மோயர் கள்ளர்களின்
கிராமங்களில் பிற சாதியினர் வசிப்பதில்லை என்றும் இவ்வாறு “பிற சமூகத்தினரிடமிருந்து
தனிமைப்பட்டு வசிப்பதால்” கள்ளர்கள் பிறரைத் தங்களுக்குப் “பாத்தியப்பட்ட பலிகளாக”
எண்ணுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். கள்ளர் சீர்திருத்தம் (Kallar
Reclamation) வெற்றிபெற வேண்டுமென்றால் கள்ளர்கள் பிறர் தம்மீது கொண்டுள்ள
அச்சத்தைப் பற்றிப் பெருமைப்படுவதை விட்டுவிட்டுத் தங்களைப் பிறர் எவ்வாறு
பார்க்கின்றனர் என்பதை உணரத் தலைப்பட வேண்டும். “தங்கள் மீதுள்ள வெறுப்பை உணர்ந்து
அதைக் களைய முற்பட வேண்டும்” என்று மோயர் கருதினார். 1921இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு
எதிராக இந்தியாவெங்கும் பரவிவந்த தேசியப் போராட்டத்தின் பின்னணியில்தான் அவர் இந்த
எண்ணங்களை வெளிப்படுத்தினார். அவரது கருத்துப்படி கள்ளருக்கும் பிறருக்குமான பகைமை
தேச விடுதலைக்கான போராட்டத்தின் அடிப்படைக்கே சவாலாக இருந்திருக்கும். கள்ளர்கள்
பிற சமூகத்தினரிடமிருந்து ‘தனித்து நிற்கும்’வரையிலும் அரசியல்ரீதியான தன்னாட்சி
என்பது ஆபத்தான விளையாட்டாக முடியும் என்று மோயர் வாதிட்டார். “பல்வேறு
பிரிவினருக்குள்ளே நிலவும் மோதல்களையும் தன்னிச்சையான போக்குகளையும் அனைவருக்கும்
பொதுவான நலன்களை மையப்படுத்தி அதன் மூலம் கட்டுப்படுத்தும்போது தான்” சிறப்பான அரசு
அமைய முடியும்.
ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் ஏற்புடையதான செயல்பாடுகளுக்குத் தங்களை
உட்படுத்திக்கொள்ள எப்போது காலனிய மக்கள் கற்றுக்கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள்
தங்களை ஆள்வதற்கான தகுதியைப் பெற முடியும். இந்தியச் செயலராக இருந்த எட்வின் எஸ்.
மாண்டேகு 1919இல் தனது அறிக்கையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியானது தன்னாட்சி
கொண்ட அமைப்புகளை வளர்த்தெடுப்பதில் அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மோயரின் மேற்கண்ட கருத்துகளுக்கு இது தூண்டுதலாக அமைந்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. ஆனால் தன்னாட்சி மற்றும் அதன் அறவியல் அடிப்படைகள் பற்றிய முந்தைய
காலகட்டச் சிந்தனையின் சாயலையும் தொழிலாளர் துறை ஆணையரின் மொழி கொண்டிருந்தது. ஆடம்
ஸ்மித் தனது Theory of Modern Sentiments (1759) என்னும் நூலில்
சுயக்கட்டுப்பாட்டிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாக இருப்பது
இரக்கவுணர்வுதான் என்று குறிப்பிட்டிருந்தார். இரக்கம் என்பதைப் பிறர் இடத்தில்
தன்னை வைத்துப்பார்க்கும் திறன் என்று அவர் வரையறுத்திருந்தார். அதாவது, பிறர்
உணர்வது போல் தான் உணர்வதும் பிறர் தன்னை எடைபோடுவதுபோலத் தானே தன்னை எடை
போடுவதுமான ‘சக உணர்வு.’ இந்தத் திறன் மனிதரிடையே இயற்கையாகக் காணப்படும் ஒன்று
என்றாலும், நாகரிக மேம்பாடு அடைந்த தேசத்தினரிடம் தான் இது
முழுவளர்ச்சியடைந்துள்ளதாக ஸ்மித் கருதினார். தனிமனிதர்கள் தங்களது சுய
உணர்ச்சிகளைப் பரஸ்பரத் தேவைகள்சார்ந்து ஒழுங்குபடுத்தக் கற்றுக்கொள்ளும்
‘சுயக்கட்டுப்பாட்டிற்கான மிகச் சிறந்த கல்விக்கூடமாக’ மனிதர்களிடையான சமூகப்
பரிமாற்றத்தை ஸ்மித் விவரித்தார்.
மனிதகுலம் சமூக வளர்ச்சியில் நான்கு காலகட்டங்களைக் கடந்து வந்துள்ளதாக ஆடம் ஸ்மித்
வாதிட்டார்: வேட்டைக் காலகட்டம், மேய்ச்சல் காலகட்டம், வேளாண் காலகட்டம், வாணிபக்
காலகட்டம். 1751இல் எடின்பரோவில் இந்தப் படிநிலைகள் தொடர்பாக அவர் ஆற்றிய சொற்
பொழிவு, ஸ்காட்லாந்தின் மலைப் பிரதேசங்களில் வாழ்ந்த மேய்ச்சலைத் தொழிலாகக்
கொண்டிருந்த முரட்டு இனக்குழுக்களை அடக்கிப் பண்படுத்துவதற்காக நடைபெற்றுவந்த
ஸ்காட்லாந்தின் அரசியல், பொருளாதாரப் போராட்டங்களால் பெருமளவு தாக்கம் பெற்றிருந்தது.
இதற்கு 175 ஆண்டுகளுக்குப் பிறகு, காலனிய இந்தியாவில், தொழிலாளர் துறை ஆணையர் மோயர்
கள்ளரை ஸ்காட்லாந்தின் மலையக மக்கள் தலைவனாகயிருந்த பேர்பெற்ற ராப் ரோய்
மெக்கிரிகோரோடு ஒப்பிட்டுக் கள்ளரைத் “துணிச்சல் மிக்க ஆனால் நெறிப்படுத்தப்படாத
கெரில்லாப் போராளிகள்” என்று விவரித்தார். ஸ்காட்லாந்தின் பிரபலமான அந்தக் கால்நடைக்
கொள்ளையன் முடிவில் ‘சமூகத்தின் தூணாக’ மாறினான். ஆனால் கள்ளர்களோ “தங்களைச்
சுற்றியிருப்ப வர்களோடு சதா சண்டையில் சிக்குண்டு கிடப்பதாக” மோயர் குறிப்பிட்டார்.
ஆடம் ஸ்மித்தைப் போலவே இந்தப் பிரிட்டிஷ் அதிகாரியும் இத்தகைய விளிம்புநிலை மக்கள்
“முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பொதுவான ஓட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்”
என்று வலியுறுத்தினார். முன்னேற்றம் குறித்த மோயரின் மொழியில் ஒலித்த தனித்தன்மை
கொண்ட புதியதொரு ஓசைக்கு அழுத்தம் அளிப்பது அவசியம். இருபதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் காலனிய இந்தியாவில், நதிகளை நீரியல்சார்ந்த மாற்றங்களுக்கு
(hydraulic manipulation) உட்படுத்தி அவற்றின் போக்கையும் மாற்றி அமைக்கும்
செயல்பாடு, ஒட்டு மொத்தச் சமூக மேம்பாட்டிற்கான முக்கியமான கருவியாகவும் வலிமையான
குறியீடாகவும் உருக்கொள்ளத் தொடங்கியது.
மதுரைச் சுற்றுவட்டாரங்களில் கள்ளர் சீர்திருத்தத்தின் எதிர்காலத்தைப் பற்றிச்
சிந்தித்த மோயர் 1921இல் “தீமை அளிக்கக்கூடிய பாரம்பரியப் பழக்கங்களைப் புதிய
திசைகளுக்கு மடைமாற்றம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதை ஓர்
உருவகமாகத்தான் கொள்ள வேண்டும் என்றாலும், இதை அந்தச் சந்தர்ப்பத்தில்
பயன்படுத்தியது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. 1840 முதல் இந்தியாவில் நதிகளைப்
பாசனத்துக்காக மாற்றிவிடுவது, கொடும்செயல்களுக்குப் பெயர்போன முரட்டு
இனக்குழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்ற வலிமையான
வழிமுறையாக விளங்கியது. டேவிட் கில் மார்டின் குறிப்பிட்டது போல, காலனிய இந்தியாவில்
அணைகள் மற்றும் கால்வாய்களின் பெருக்கம் இயற்கைமீதும் அதைச் சார்ந்து வாழும்
மக்களின் மீதும் அரசு தனது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்குப் பெரும் உதவியாக
இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பயிற்சிபெற்ற பொறியாளர்கள்
இந்தியாவிலும் பிறகாலனிய நாடுகளிலும் அதிகார வர்க்கத்தினரிடையே மிக உயர்ந்த இடத்தைப்
பெற்றனர். இருக்கும் வளங்களை உச்ச அளவுக்குப் பயன்படுத்திப் பலன்பெறுவதே காலனிய
அதிகாரத்தின் உன்னத இலட்சியம் எனப் பறைசாற்றிவந்தனர்.
பெருமளவில் நடைபெற்றுவந்த கட்டுமானப் பணிகள் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் - பிரபலமான
பொறியிலாளரான வில்லியம் வில்காக்ஸ் 1919இல் பெருமிதத்துடன் குறிப்பிட்டதுபோல -
“ஒன்றுக்கொன்று அனு சரணையுடன் வாழக்” கற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த சூழலாக நதி
தீரங்களை உருவாக்கிவருவதாக அதிகார வர்க்கத்தினரைக் கற்பனை கொள்ளச் செய்தது.
நீரியல் சார்ந்த இரக்கம், இணக்கம் ஆகிய ஆதாரங்களின் மீது எழுப்பப்படும் நாகரிகம்
பற்றிய இந்தப் பார்வை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரைப் பகுதிகளை
நிர்வகித்துவந்த அதிகாரிகளிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது; கீழ்ப்படிய
மறுத்துவந்த பிரமலைக் கள்ளர்களைச் சமாளிப்பதற்கான வழிமுறையையும் உருவாக்கிக்
கொடுத்தது. 1923இல் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதுபோலச் “சீர்திருத்தப்
பணி முழுவெற்றியடைய வேண்டுமானால் கள்ளர் நாட்டிற்கான பாசனவசதித் திட்டம்
அத்தியாவசியமான ஒன்று.”
o
மதுரைக்கு வடகிழக்கே வசித்துவந்த, கள்ளரில் உள்மணச் சாதிப்பிரிவு ஒன்றைச் சேர்ந்த
மேலூர்க் கள்ளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் காலனியச் சொல்லாடல்களில் மிக மோசமாகச்
சித்தரிக்கப்பட்டவர்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் பல நடவடிக்கைகளாலும் 1700இன்
மத்தியில் நடைபெற்ற, இரண்டு கோரமான படுகொலைகளாலும்கூட அக்கம்பக்கக் கிராமங்களை
முற்றுகையிட்டுக் கால்நடைகளையும் சொத்துகளையும் கொள்ளையடிப்பதைத் தொழிலாகக்
கொண்டிருந்த அவர்களின் அடாத செயல்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. 1895இல்கூட
மேலூர்க் கள்ளர்களைப் பிரமலைக் கள்ளர்களுடன் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளை, வழிப்பறி,
கால்நடை கவர்தல் போன்றவற்றைச் செய்ய அஞ்சாதவர்களாக அரசு அதிகாரிகள் கருதினார்கள்.
ஆனால் இருப தாண்டுகளுக்குப் பிறகோ பிரமலைக் கள்ளர்களைக் குற்றப்பரம்பரையினராக
அறிவிப்பது தொடர்பாக நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான அரசாங்கக் கடிதப் போக்குவரத்துகளில்
மேலூர்க் கள்ளர்கள் பற்றிய குறிப்புகள் அனைத்துமே அவர்களைச் சீர்திருத்தத்தின்
வெற்றிச் சின்னமாகக் காட்டுகின்றன. இதில் வியப்பளிக்கும் அம்சம் என்னவென்றால்,
இம்மக்களின் நடவடிக்கைகளில் திடீரென்று ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்துக்கான
காரணமாக நீர்ப்பாசனம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுதான்.
1908இன் Madura District Gazetter இவ்வாறு கூறுகிறது: “கள்ளரைச் சீர்த்திருத்த
முடியும் என்ற நம்பிக்கை இப்போது வேறு பகுதியிலிருந்து முளைவிட்டுள்ளது.
பெரியாற்றின் தண்ணீர் இப்போது இங்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், மேலூரைச்
சுற்றிலுமுள்ள இம்மக்கள் கால்நடைகளைத் திருடுவதை விட்டுவிட்டு வேளாண்மையில்
மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இராணுவம், காவல் துறை, நீதித் துறை இவற்றால் சாதிக்க
முடியாததைச் சாதித்தற்காகவும் மோசமானவர்களாகக் கருதப்பட்ட கள்ளர்களை நேர்மையான
மனிதர்களாக மாற்றிக் காட்டியதற்காகவும் பொதுப்பணித் துறை பெருமைப்பட்டுக்கொள்ள
முடியும்.”
நம்புவதற்குக் கடினமான இந்த மாற்றத்தை முன்னெடுத்ததில் கள்ளரின் பங்கு -
வேளாண்மையில் அவர்கள் காட்டிய விருப்பம், மேலூர் ஊர்த் தலைவர்கள் தத்தமது
கிராமங்களில் திருட்டுகளைத் தடுப்பதற்காகக் காட்டிய ஈடுபாடு - பற்றியும் இந்த
விவரிப்பு நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. ஆனால் நிலைமையைக் கட்டுக்குள்
கொண்டுவந்ததற்கான உன்னதக் காரணியாக மேற்குப் பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருந்த,
பெரியாற்றிலிருந்து தண்ணீரைப் பெற்றுத்தந்த அணை இனம் காட்டப்பட்டிருக்கிறது.
மும்பையிலிருந்து தொடங்கி இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடிவரை நீண்டு இந்தியாவை
இருகூறாகப் பிரிக்கும், அடர்ந்த காடுகளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு
பகுதியில் அமைந்துள்ளது காரையும் கல்லும் உறுதிசெய்து கட்டப்பட்ட பெரியாறு அணை.
கம்பம் பள்ளத்தாக்கின் தென்மேற்கு விளிம்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த அணை
பெரியாற்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கன அடித் தண்ணீரைச் சீரான
நீரோட்டமில்லாத வைகை நதிக்குத் திறந்துவிடுகிறது. ஒரு காலத்தில் மேற்குப் பகுதியில்
திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதிகளின் வழியாக அரபிக் கடலில் கலந்த தண்ணீரைக்
கிழக்குப் பகுதிக்குத் திருப்பித் தமிழகத்தின் சமவெளிகளுக்குப் பாய்ச்சுகிறது. மதுரை
மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் ஏற்படும் பஞ்சங்களைச் சமாளிப்பதற்காகத்
திட்டமிடப்பட்ட இந்த அணை இந்தத் திட்டத்தின் முதன்மைப் பொறியாளரான ஜான்
பென்னிகுவிக்கால் 1896இல் கட்டி முடிக்கப்பட்டது. 1876-78 காலகட்டத்தில் ஏற்பட்ட
கடுமையான பஞ்சம் மேலூர்ப் பகுதியை மிகவும் வாட்டியது. அந்தப் பஞ்சத்துக்குப் பிறகு
அமைக்கப்பட்ட பஞ்ச ஆய்வுக்குழு, பெரியாறு அணைத்திட்டம் “பிரமாண்டமான பொறியியல்
சாதனையாக” அமைவதோடு எதிர்காலத்தில் இத்தகைய பஞ்சங்கள் ஏற்படாமல் தடுக்கும் என யோசனை
கூறியது. 1901 வாக்கில் இந்த அணை, வைகை நதிப் படுகைப் பகுதியில் அமைந்திருந்த -
வறட்சிக்கு இலக்காகிக்கொண்டிருந்த மேலூர்ப் பகுதியில் அதிகமும் அமைந்திருந்த -
1,32,000 ஏக்கர் நெல் வயல்களுக்குப் பாசனத்துக்கான தண்ணீரை வழங்கியது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே, தமிழகத்தின் பாரம்பரிய ஆட்சியாளர்களும்
பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளும் பெருக்கெடுத்து ஓடும் பெரியாற்றின் தண்ணீரைச்
சீரற்றுக் குறைந்தளவு ஓடிக்கொண்டிருக்கும் வைகை நதிக்குத் திருப்பிவிடுவது பற்றி
யோசித்துவந்தனர். குறிப்பிட்ட ஒரு பாறையை அகற்றினாலே போதும் தண்ணீர் ஒரு
நதியிலிருந்து மற்றொன்றிற்குத் தானாகவே பாய்ந்துவிடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
1807இல் சுயமாக ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் ஒருவர், இது சற்றும் ஆதாரமற்ற
வெற்றுக் கற்பனை என நிராகரித்தார். பெரியாற்றையும் வைகை நதியின் நீர்ப்பிடிப்புப்
பகுதிகளையும் மூன்று மைல் நீளத்துக்குச் சமச்சீரற்ற மலைப் பகுதிகள் பிரிப்பதால்
இவற்றினூடாகக் கால்வாய்கள் வெட்டுவது “மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இயற்கை
ஒருபோதும் இதை அனுமதிக்காது. எனவே இயற்கையின் விதிக்கு நாம் பணிந்து போவோம்”
என்பதாக இருந்தது அவரது கருத்து. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,
இந்தியாவிலிருந்த காலனியப் பொறியாளர்கள் அதே இயற்கையை அரசாங்கத்தின் விருப்பத்திற்கு
அடிபணிய வைப்பதில் ஆர்வம்காட்டினார்கள். 1862இல் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத்
திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. பெரியாற்றை 176 அடி உயரமுள்ள அணைக்கட்டில் தடுத்து
நிறுத்தவும் அந்தத் தேக்கத்திலிருந்து வைகை நீர்ப்பிடிப்புப் பகுதிவரையிலும் ஒரு
மைல் தூரத்துக்கு மலையை வெடிவைத்துக் குடையவும் மேஜர் ஜான் பென்னிகுவிக்
திட்டமிட்டார். இதற்குத் தேவையான நிலத்தைப் பெறுவதற்காகத் திருவிதாங்கூர்
சமஸ்தானத்துடனான பேச்சுவார்த்தை 1886இல் நிறைவடைந்தது. அதற்கு மறுவருடம்
பென்னிகுவிக்கின் வழிகாட்டுதலில் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1895இல்
தண்ணீர் முதல்முறையாகக் கால்வாய் வழியாகக் கம்பம் பள்ளத்தாக்கில் விழுந்து வைகை
நதியில் ஓடியது.
அரசுத் தரப்பிலான வரலாறுகள், பெரியாறு அணையை இயற்கையை வெற்றிகொண்டதில் வரலாறு காணாத
சாதனை எனக் குறிப்பிடுகின்றன. யானைகள், புலிகள், கரடிகள், அட்டைகள் வசித்துவந்த
வெப்பமண்டலக்காடுகளைக் கொண்ட அடர்ந்த மலைச்சரிவுகளுக்கு மத்தியில் அமைந்திருந்த
குறுகிய பள்ளத்தாக்கில் இந்த அணை எழுப்பப்பட்டது. இந்தப் பணிக்காக அழைத்துவரப்பட்ட
இந்தியத் தொழிலாளர்களில் நூற்றுக்கணக்கானோர் அவர்களின் முகாம்களில் ஆண்டுதோறும்
பரவிய மலேரியா, காலாரா நோய்களால் மாண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரியாறே
பெரும் சோதனை தருவதாக இருந்தது. திடிரென்று ஏற்படும் இடிமழையால் பத்து மடங்கு,
சிலநேரம் நூறு மடங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும். கட்டுமானப் பணிகள் பலமுறை இந்தப்
பெருவெள்ளங்களால் அடித்துச் செல்லப்பட்டன. “பிரம்மாண்டமானதும் கட்டுக்கடங்காததுமான
பெரியாறு போன்ற நதிகள்மீது எந்த அணையும் இதுவரை கட்டப்படவில்லை” என இதன் செயற்பொறி
யாளராக இருந்த ஏ. டி. மெக்கென்ஸீ இத்திட்டம் பற்றிய விவரமான குறிப்பில் எழுதினார்.
இந்த அணை கட்டப்பட்டுப் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அடங்க மறுத்த அந்த நதிக்கு அதைப்
போன்றே கலகக்குணம் கொண்ட எதற்கும் அடங்காத மேலூர்க் கள்ளர்களைக் கட்டுக்குள்
கொண்டுவந்ததற்கான பெருமை அளிக்கப்பட்டது என்பது ஒரு முரணாகும். காலனியப்
பொறியாளர்களால் “வீணாக”க் கடலில் கலப்பதாக ஒரு காலத்தில் இகழப்பட்ட அந்த நதிக்கு
இந்தப் பணி நிச்சயம் கடினமானதாகவே இருந்திருக்கும்.
பெரியாறு அணை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சம் ஏற்படாமல் தடுப்பதற்கும்
அரசின் வருவாயைப் பெருக்குவதற்கும்தான் உண்மையில் கட்டப்பட்டது; குற்றங்களைக்
குறைப்பதற்காக அல்ல. ஆனால் அதன் கட்டுமானத்திற்குப் பிறகு வந்த பத்தாண்டுகளில், அரசு
அதிகாரிகள் அது அளித்த நீர்ப்பாசனம் அப்பகுதியைத் திறம்படக் கட்டுக்குள்
கொண்டுவருவதற்கான திறவுகோலாக அமைந்ததிருந்த தாகத் தொடர்ந்து அறிவித்துவந்தனர்.
பெரியாறு தண்ணீர் அவர்களது கிராமங்களைச் சென்றடைந்த பின்னர், தாங்கள் திருட்டுத்
தொழிலை முற்றிலும் விட்டுவிட்டதாக மேலூர்க் கள்ளர்கள் ‘ஒட்டுமொத்தமாகச்’ சேர்ந்து
வெளிப்படையாக அறிவித்ததாகக் கூறப்பட்டது. பாசனவசதி செய்துகொடுத்தால் பிரமலைக்
கள்ளர்களிடமும் மாற்றத்திற்கான நம்பிகையை அளிக்க முடியுமா? “இப்பகுதி முழுவதற்குமே
பாசனவசதி செய்து கொடுக்க முடியுமானால், இச்சாதியினரின் குற்ற நடவடிக்கைகளைக்
கட்டுக்குள் கொண்டுவர முடியும். காவல் துறையால் இது ஒருபோதும்
சாத்தியப்படப்போவதில்லை” என்று வருவாய்த் துறைச் செயலராகயிருந்த ஆண்ட்ரூ கார்டியூ
பிரமலைக் கள்ளர் நாடு பற்றிப் பேசும்போது 1910இல் வாதிட்டார். கிணறுகள்
தோண்டுவதற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் கடன்கள் வழங்கத் தொடங்கியிருந்தனர்.
1920இலிருந்து மக்கள் சீர்திருத்தத்திற்காக அரசு மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின்
பட்டியலில் வைகை நதிப் பாசனமும் இடம்பெற்றிருந்தது.
உள்ளூர் விவசாயிகளின் பல விண்ணப்பங்களால் தூண்டப்பட்ட மோயரும் பிற அரசு அதிகாரிகளும்
பெரியாறு பாசனநீரைக் கள்ளர் நாட்டின் வறண்ட கிராமங்களுக்குக் கொண்டுசெல்வதற்கான
சாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர். பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள்,
வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு இடையிலுள்ள குன்றுகளைச் சமப்படுத்துவது
கடினமென்றும் தற்சமயம் கிடைத்துக்கொண்டிருக்கும் தண்ணீர்கூடத் தேவைக்குப்
போதுமானதாக இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர். திருவிதாங்கூர் அரசுடன் அதன்
பகுதியிலுள்ள மற்றொரு நதியின் நீரைச் சென்னை மாகாணத்துக்குத் திருப்பிவிடக் கோரிப்
பேச்சுவார்த்தை நடந்தது. 1926இல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதற்கு அடுத்த ஆண்டில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் நீர்த்தேக்கத்தின் ஒரு
மதகின் கீழே இன்னுமொரு கால்வாயை ஏற்படுத்திப்¢ புனல்மின் உற்பத்திக்கும் கள்ளர்
பகுதியிலுள்ள 20,000 ஏக்கர் வறண்ட நிலங்களுக்குப் பாசனவசதிக்கும் உதவும் திட்டமொன்றை
அளித்தார். இத்திட்டத்தை ஆதரித்த மதுரை மாவட்ட ஆட்சியர் இந்தப் பாசனத்திட்டமானது
“மேலூர் நாட்டில் வாழும் அவர்களுடைய சகோதர இனத்தவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு
நடந்துகொண்டதுபோல நிச்சயமாகவும் தாமாகவும் பிரமலைக் கள்ளர்களைக்
குற்றம்புரிவதிலிருந்து திருப்பிவிடும்” என்று கூறினார். தண்ணீரானது கண்காணிப்பு
பணியைத் தானாகவே செய்துவிடும் என்ற நிச்சயத்தைக் கொடுத்ததாகத் தோன்றுகிறது.
வறுமையும் தட்டுப்பாடும் நிலவும் சூழல்தான் அவர்களைக் குற்றங்களைப் புரியத் தூண்டின
எனச் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த நம்பிக்கை
அமைந்திருந்தது. “கள்ளர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலானவற்றில் வறட்சியும்
வறுமையும் நிலவின. வசதியான பிற குடியிருப்புகளைக் கொள்ளையடிக்கும் கள்ளர்களின் குல
வழக்கம் தொடர்ந்ததற்கு இதுதான் முக்கியக் காரணம்” என 1910இல் கார்டியூ
குறிப்பிட்டார். இது போன்ற பகுதிகளில் வசிப்போரின் உள்ளார்ந்த குணங்களும் கருத்தில்
கொள்ளப்பட்டன. கள்ளர் சீர்திருத்தத்தின் சாத்தியக்கூறுகள் பற்றிய அரசாங்கக்
குறிப்புகள் இவற்றை நீரியல்சார்ந்த (hydraulic) வார்த்தைகளில் - ஓட்டம் (current),
அழுத்தம் (pressure), வெளியேற்றம் (discharge), மடைமாற்றம் (diversion) -
குறிப்பிடுகின்றன. மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராகயிருந்த லவ்லக் 1921இல்
தயாரித்த முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகக் குறிப்பில் ‘செயல் துடிப்புள்ள கள்ளர்
இளைஞர்கள் தங்கள் சக்திகளைக் குற்றம்புரிவதில் காட்டாதபடி வேறுதடத்தில்
திசைதிருப்பிவிடுவதற்கான’ கல்வி, வேளாண்மை, குடிசைத் தொழில்கள் போன்ற பல்வேறு
முயற்சிகள் கோடிகாட்டப்பட்டுள்ளன. இந்த இடையீடுகள் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்
மாற்றத்திற்கான உத்வேகத்தை அளிக்கும் என அவர் வாதிட்டார்: “சீர்திருத்தத்தின் ஓட்டம்
சீராகவும் வலுவாகவும் இருக்கிறது”. கள்ளர்களின் “திசைமாறிப்போன சக்திகளைத் திருப்பி
மடைமாற்றம் செய்வதன்மூலம் அவர்களைச் சீர்திருத்துவது பற்றிப் பேசிய அரசு அதிகாரி
லவ்லக் ஒருவர் மட்டுமல்ல.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய எழுத்தாளர்கள் ரயில், தந்தி மற்றும்
பிற மின்சார, இயந்திரச் சாதனங்களை மனித இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான மாதிரிகளாகப்
(models) பார்க்க ஆரம்பித்தனர். மனித உடல், மனம் மற்றும் இவற்றின் மிகச் சிறந்த
பயன்பாடு ஆகியவை குறித்த பரவலான கற்பனைமீது இயற்பியல், இயந்திரப் பொறியியல் போன்ற
துறைகளில் நிகழ்ந்த புதிய அறிவியல் உண்மைகளின் தாக்கம் மிக வலுவாக இருந்தது.
காலனியத் தென்னிந்தியாவிலும் இது எதிரொலித்தது. இந்த ஐரோப்பியச் சிந்தனையின்
பாதிப்பு இந்திய அரசு அதிகாரிகள் பலரையும் இந்தியக் குடிகளின் உணர்வுகள், அவற்றைத்
திறமையாகப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களைத் தண்ணீரின் தன்மை மற்றும் அதைத்
திறமையாகப் பயன்படுத்திகொள்ளுதல் போன்றவற்றோடு இணைத்துப் பேச உந்தியது. மேலும்
நதிகளை அடுத்து வாழ்ந்து வந்த, சட்டத்தால் ஒழுங்குபடுத்த முடியாத மக்களின்
மனப்போக்குகளைச் சரிக்கட்டுவதற்கான வழிமுறையாக நதிநீர் மேலாண்மையைப் பரிந்துரைக்கச்
செய்தது. வீணாக ஓடிக்கொண்டிருக்கும் இணக்கமற்ற நதிகளைப் பயனளிக்கும்விதமாகத்
திருப்பிவிட முடியுமென்றால், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத முரட்டு இன மக்களையும்
அதுபோல மாற்ற முடியலாம். தண்ணீரை மடைமாற்றம் செய்தல் மனித நடவடிக்கைகளை மடைமாற்றம்
செய்வதற்கான மாதிரியாகவும் வழிமுறையாகவும் கருதப்படலாயிற்று. பாசனத்துக்காக
முறையாகத் தண்ணீரை வழங்கினால் கள்ளர்கள் “நேர்மையான வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவதோடு
மட்டும் நிறுத்திக்கொள்வார்கள்” என்று 1916இல் மதுரை மாவட்ட ஆட்சியராகயிருந்த ஜி.
எஃப். பாடிசன் வாதிட்டார்.
இந்த அதிகாரிகளின் பார்வையில், பாசன வசதி அமைத்துக் கொடுப்பது கள்ளர்களை
வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பிற குடிமக்களோடு இணக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு நிச்சயம்
வழிவகுக்கும். ஆனால் இம்மாதியான நல்லிணக்கம் கிராமப் பகுதிகளில் நிலவுவதற்கு அரசுத்
தரப்பில் விஷயங்களைக் கருணையுடன் அணுகும் நெறிமுறை கட்டாயம் இருக்க வேண்டும்.
மக்களின் மனப்போக்குகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக அவற்றைச்
சரியான திசையில் மடைமாற்றம் செய்து கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காலனிய அரசின்
கண்காணிப்புப் பணிக்கான பயன்பாட்டுக் கருவியாக நீர்ப்பாசனம் அமைந்தது. “ஒரு இரவில்
கன்னக்கோல் போடுவதன் மூலம் ஒரு மாதத்திற்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்க முடியும்
என்னும்போது, நீரிறைப்பதற்காக நாள் முழுவதும் ஏற்றத்தில் கிடந்து உழல்வதற்கு எவன்
விரும்புவான்?” என நறுக்கென்று வினவுகிறார் பாடிசன். கடுமையாக உழைக்க வேண்டும் என்ற
விருப்பத்திற்குப் பதிலாக வேளாண்மைத் தொழிலின் பளுவைச் சற்றுக் குறைத்ததன் -
வேளாண்மையை “ஓரளவுக்கு இலகுவான வாழ்க்கை முறையாக” மாற்றி - வாயிலாக உழைத்துவாழ
விரும்பாதவர்கள் என்று கருதப்பட்ட குற்றப்பரம்பரையினரை வழிப்படுத்த இந்தப் பாசனத்
திட்டங்கள் உதவின. நன்கு வடிவமைக்கப்பட்ட நீரியல் திட்டம் நீரொழுக்கைப் போல எளிதாகச்
சமூக விமோசனத்துக்கு வழிவகுக்கும் என அரசு அதிகாரிகள் தங்கள் நம்பிக்கையை அதன்மீது
வைத்தனர். =
|