நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம்
ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும்
பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு
அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்
முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன்,
ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன்,
வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.
எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய
வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிய
சொற்களில், நழுவும் கணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ஆனந்துடன் இணைந்து அவரவர்
கைமணல் என்னும் முதல் தொகுதியை தேவதச்சன் வெளியிட்டார். அத்துவான வேளை, கடைசி
டைனோசார், யாருமற்ற நிழல், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன் ஆகியவை பிற
கவிதைத் தொகுதிகள். கவிஞர் தேவதச்சனுக்குக் காலச்சுவடு வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறது.
|