Google   www kalachuvadu.com

எதிர்வினை
ஆளும்வர்க்கங்களை மறுத்து எழுந்த சபை

காலச்சுவடு இதழ் 126இல் ஆசிரியர் கண்ணன் அவர்கள் மு.க. அழகிரியின் நாடாளுமன்ற நடவடிக்கை பற்றி விமர்சனம் செய்திருந்தார். அவ் விமர்சனம் குறித்து நான் விவாதிக்க வரவில்லை.

ஆனால்,

மு. க. அழகிரியின் மதுரை அரசியல் பற்றிய ஞானம் ஆசிரியருக்கு குறைவாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.

“நாடாளுமன்றம் என்ன பிரமலைக் கள்ளர்களின் சபையா?” என்று எழுதியிருப்பது, பிரமலைக் கள்ளர்களின் அரசியல் பிரதிநிதியாக மு. க. அழகிரியைச் சுட்ட முயன்றிருப்பது ஆசிரியரின் பெரும் பிழையே!

இன்றைய உலகமயமாக்கலில் போராடிய எல்லா இனக் குழு மக்களுக்கும் என்ன வீழ்ச்சி ஏற்பட்டதோ அதேதான் பிரமலைக் கள்ளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்ற புரிதல் இருந்தபோதிலும். ஒதுக்கிவைப்புகளும் அடையாளமழிப்புகளையும் திட்டமிட்டுத் தி.மு.க வரலாற்றில் யதார்த்த உண்மையாக இருப்பதை, எவ்வாறு மறக்க முடியும், மன்னிக்க முடியும்?

மதுரையில் மு. க. அழகிரி அரசியலில் பிரவேசித்த 79, 80களிலிருந்து, இன்றுவரை அரசியல் புரிதலின் நெருக்கத்தில் பிரமலைக்கள்ளர் யாரும் இருந்ததில்லை. தி.மு.கவின் தோற்றத்திலிருந்தே, குறிப்பாக எண்பதுகளில் பொன் முத்துராமலிங்கத்திலிருந்து இன்று புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்திவரை, பிரமலைக்கள்ளர் யாரும் மதுரை மாவட்டச் செயலாளர் ஆனது இல்லை. அதே கதிதான் மாநகர் மாவட்டத்திற்கும் தி.மு.கவின் பிரதான உள்நோக்கம் என்னவென்றால், தி.மு.கவில் பிரமலைக் கள்ளர்கள் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதுதான். இதில் கருணாநிதிக்கும் அழகிரிக்கும் மாறுபட்ட கருத்துகள் எக்காலத்திலும் இருந்ததில்லை.

1969, 71, 89, 96, 2006களில் ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க இருந்தபொழுது ஒருவர்கூடப் பிரமலைக்கள்ளர் சமூகத்திலிருந்து அமைச்சராக்கப்படவில்லை. முக்குலத்தோர் சிண்டிகேட்டில் பிர மலைக்கள்ளர்கள் இருந்தபோதிலும். அதை உடைத்து மறவர் - அகமுடையோர், அரசியலை முதன்மைப்படுத்திப் பிரமலைக்கள்ளர்களைத் தனிமைப்படுத்துவதில் கருணாநிதிதியும்-அழகிரியும் ஏன் ஜெயலலிதாவும்கூட வெற்றி பெற்றனர்.

மதுரை மாவட்டக் கோட்டா ஒதுக்கீட்டில் பிரமலைக்கள்ளர் அல்லாதவருக்கே அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார் கருணாநிதி, பி.டி. ஆர். பழனிவேல் ராஜன், சமய நல்லூர் செல்வராஜ், சமயநல்லூர் தமிழரசி, பொன் முத்துராமலிங்கம் இவர்களில் யாரும் பிரமலைக்கள்ளர் அல்ல.

மு.க. அழகிரியின் நடவடிக்கைகளுக்கு இன்றுவரை பக்கபலமாக இருப்பவர்கள் மாற்றுச் சமூகத்தினரே! மு. க. அழகிரியின் மீது குற்றம் சுமத்தப்பட்ட லீலாவதி, தா. கிருஷ்ணன் கொலை வழக்குகள், தினகரன் எரிப்பில் மூன்றுபேர் கொலையுண்டதில் முன்னனிக் குற்றவாளிகளில் யாரும் பிரமலைக்கள்ளர்கள் அல்ல.

பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை மாநகராட்சியில் தலைவராக வந்துவிடுவார் என்று கருதிய மு. க. அழகிரியின் ஆதரவாளர்கள், பிரமலைக்கள்ளர் அல்லாத சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி அவரைத் தோற்கடித்தனர். தி.மு.க வின் சார்பில் மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதே! தற்போது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பூஜ்யம்தான்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேலூர் கள்ளர்களின் வாக்குகளைப் பெறுவதற்குத்தான் மு.க. அழகிரி பெரிதும் பாடுபட்டார். பிரமலைக்கள்ளர்கள் பெரும் பகுதியாக வசித்துவரும் மதுரைத் தெற்குத் தொகுதியில் (இதில் மு.க. அழகிரியின் குடியிருப்பு அமைந்துள்ளது) சி.பி.எம் வேட்பாளர், மோகனைவிட வெறும் பத்தாயிரம் வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருந்தார். பிரமலைக் கள்ளர்களின் கணிசமான செல்வாக்கு அ.தி.மு.கவிற்குத்தான் தற்போதும் இருந்துகொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மையே! தற்போது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில்கூடப் பிரமலைக்கள்ளர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். பிரமலைக்கள்ளர்களின் சபை என்பது ஆண்டைகளின் சபையாகவும் ஒன்றும் தெரியாத முரடர்களின் சபையாகவும் ஆசிரியர் காட்ட முயன்றிருப்பதும்கூடப் பிரமலைக்கள்ளர் பற்றிய அவமதிப்பு சார்ந்த கருத்தியலாகத்தான் உள்ளது. கடும் உழைப்பையும் ஒதுக்கிவைப்புகளையும் அவமானத்தையும் மற்றும் கொலைகள், தற்கொலைகள், பெண் சிசுக் கொலைகள் போன்ற துயரங்கள் அனுபவித்து, விளிம்பு நிலையில் ஒடுக்கப்பட்டு கிடப்பவர்களின் சபையாக, (கூட்டம்) வரலாற்றில் ஆளும் வர்க்கங்களை மறுத்து எழுந்த சபையாக இருப்பது ஒருக்காலும் மு. க. அழகிரி போன்றவர்களை ஏற்றுக்கொண்டதில்லை.

தா. வே. பிரபாகரன்

உள்ளடக்கம்