|
நவீனத் தமிழ்க் கவிதையின் ஆளுமைகளில் ஒருவரான விக்ரமாதித்யன் 2008 ஆம் ஆண்டுக்கான
விளக்கு விருதைப் பெறுகிறார்.
நாற்பதாயிரம் ரூபாய் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கியது இந்த விருது.
அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான விளக்கு புதுமைப்பித்தன் நினைவாக
உருவாக்கியுள்ள இந்த விருதை இதுவரை தமிழின் முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு.
செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, தேவதேவன்
ஆகியோர் பெற்றிருக்கின்றனர். படைப்பின் தகுதியை மட்டுமே கருத்தில்கொண்டு
படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விளக்கு விருது படைப்பிலக்கியத்துக்கான மரியாதை.
அதனாலேயே இந்த விருதும் மரியாதைக்குரியதாகிறது. பிரமிள், நகுலன், தேவதேவனைத்
தொடர்ந்து நான்காவது கவிஞராக விளக்கு விருதைப் பெறுகிறார் விக்ரமாதித்யன்.
ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் விக்ரமாதித்யன்
தமிழ்க் கவிதை இயக்கத்தில் தவிர்க்க முடியாதவர். கவிதையே தன்னுடைய வழியும் வாழ்வும்
என்று நம்புகிறவர். சம காலத் தமிழ் வாழ்வின் விளைவு அவருடைய கவிதைகள். ஒரு
படைப்பாளியாக விக்ரமாதித்யன் பெறும் உயர்ந்த விருது இது.
விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யனுக்குக் ‘காலச்சுவ’டின் வாழ்த்துகள்.
|