Google   www kalachuvadu.com

எதிர்வினை
சார்பற்றவரல்ல அறிஞர் அண்ணா
க. திருநாவுக்கரசு
(திராவிட இயக்க ஆய்வாளர், சென்னை) 
காலச்சுவடு 109ஆம் இதழில் மலர்மன்னன் எழுதிய ‘அறியப்பட வேண்டிய அண்ணா’ கட்டுரையைப் படித்தோம். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா நேரமானதினால் அவரைப் பற்றிய கட்டுரைகள் பல கோணங்களில் பல இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு வகையாக மலர்மன்னனின் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. அதன் உள்ளடக்கம் எப்படி இருப்பினும் காலச்சுவடு இதழில் மீண்டும் அறிஞர் அண்ணாவைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றதில் எமக்கும் பெருமகிழ்ச்சியே.

துக்ளக் சோவின் Pic-wick ஏடு ஆழ்வார்ப்பேட்டையில் எமக்கு வேண்டிய ஓர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வந்தது. ஒருநாள் மாலை அந்த அச்சகத்திற்கு நாம் சென்று இருந்தோம். அங்கே அந்த அச்சக உரிமையாள ரோடு ஒருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்தி நடிகரைப் போல மழித்த சிவந்த முகம், தரமான பேண்டில் இன்செய்யப்பட்ட அரைக்கை சட்டை, காலுக்கு விலை உயர்ந்த செருப்பு, செந்தாமரைக் கண்ணராய்ப் புகையினூடே காட்சியளித்தார். அதே இடத்தில் இதே ‘கோலத்தில்’ பலமுறை நாம் அவரைப் பார்த்து இருக்கின்றோம். அந்த அச்சக நண்பர் மலர்மன்னனை நமக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார். விரிவாக நாங்கள் எதையும் பேசியதில்லை. மலர்மன்னன் றிவீநீ - ஷ்வீநீளீ இதழைப் பார்த்துக்கொள்கிறார் என அந்த அச்சக உரிமையாளர் தெரிவித்தார்.

அந்த அச்சகத்தின் பெயர் ஏ.எஸ். பிரிண்டர்ஸ். சென்னை டி.டி.கே. சாலையில் உள்ளது. அ. செல்வராசன் என்று அந்த அச்சக உரிமையாளருக்குப் பெயர். இவர் எனக்குப் பலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இப்போது அவர் இல்லை. அவர் திமுகவில் கவுன்சிலராக இருந்தவர்.

அந்தக் கவுன்சிலர், ‘மலர்மன்னன்’ அண்ணாவுக்கு வேண்டியவர், அவர்க்கு அறிமுகமானவர்; அவரால் மலர்மன்னன் என்று அழைக்கப்பட்டவர் என்றால் எமக்கு இவற்றையெல்லாம் சொல்லி அவரை அறிமுகப்படுத்தி வைத்திருப்பார். ஆனால் அவர் அப்படி அறிமுகப்படுத்தவில்லை.

காலச்சுவடு இதழைப் பார்க்கிறபோது அண்ணாவோடு மலர்மன்னனுக்குத் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில் அண்ணாமீது அவ்வளவு பக்தி உள்ளவர். அவரை அப்படி மதிப்பவர் அந்த அச்சக உரிமையாளர். அப்படி இருந்தும் ‘மலர்மன்னன்’ அண்ணாவிடம் இருந்தவர் என்று எமக்குச் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர் ஒருவர் உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியின் போது பார்வைக்கு இன்னொரு பாலமுருகனாய்க் காட்சியளித்தவரை நமக்கு அறிமுகப்படுத்தினார். இவர் தான் மலர்மன்னன் என்றார். எமக்கு வியப்பாக இருந்தது. அச்சகத்தில் பார்த்த நினைவு வந்தது. அவர் எழுதிய சிறுகதை ஒன்றை நினைவுகூர்ந்தோம். அச்சிறுகதை குமுதத்தில் வெளிவந்ததாகக் கூறினோம். இல்லை, குங்குமம் என்று திருத்தினார். ஏ. எஸ். பிரிண்டர்ஸில் பார்த்த மலர்மன்னன் இப்போது துறவியாய் அல்ல; சந்நியாசியாய் இருந்தார்.

எம்மை அவர் தெரிந்துகொள்ளவில்லை. நாமேதான் எல்லாவற்றையும் கூறினோம். காலச்சுவடு 109இல் அவர் எழுதிய கட்டுரையில் உள்ளவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

1. கட்டுரையின் தொடக்கமே அண்ணா அவர்களுடன் சிறிது காலம் மலர்மன்னன் இருந்ததாகத் தெரிவிக்கிறது. அது எந்த ஆண்டு என அவர் தெரிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அண்ணாவோடு பணியாற்றிய பலர் எமக்குத் தெரிந்தவர்கள். ஏ.எஸ். வேணு, தி.சு. கிள்ளி வளவன், எம்.எஸ். வெங்கடாசலம், ஈழத்தடிகள், இராம. அரங்கண்ணல், தில்லை வில்லாளன், ச. அய்யாபிள்ளை, பாலமுருகன், வெ. சம்பந்தன், தக்கோலம் ராமசாமி என்று நீண்ட வரிசை உண்டு. இதேபோல நம்நாடு இதழில் பணியாற்றியவர்களின் நீண்ட பட்டியல் எம்மிடம் உண்டு. இவ்விரண்டு பட்டியலில் மலர்மன்னன் எந்த இடத்தில் அண்ணாவோடு இருந்தார் என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்.

2. காலச்சுவடு 105ஆவது இதழில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை ஒன்றை நாம் எழுதியிருந்தோம். அக்கட்டுரையைப் பற்றிப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு, நம்மைக் குறித்து இரண்டுவித விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். ஒன்று அண்ணா என்கிற தனிமனிதரைச் சார்பு ஏதுமின்றி ஆய்வுப் பார்வையுடன் அணுகியிருக்க வேண்டும் என்பது. இன்னொன்று திராவிட இயக்க ஆய்வாளர் இயக்கம் சார்ந்தவராய் இருந்து தலைவர்களைப் பற்றி எழுதுவது ஆய்வாக இருக்காது என்பது.

நம்மை, நாம் திராவிட இயக்கத்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் பெருமிதமும் படுகின்றோம். எமது எழுத்துக்களையும் எம்மையும் முழுமையாக அறிந்தவர்கள் எமது ஆய்வின் ஆழத்தை அறிவர். திராவிட இயக்கத்தவராய் இருந்து ஆய்வை மேற்கொண்டதினால் அறிஞர் அண்ணாவை முழுமையாக எம்மால் காட்ட முடியவில்லை என்பது பொருந்தாக் கூற்றாகும். எந்தத் தனிமனிதரைவிடவும் ஓர் இயக்கம் உயர்ந்தது. ஓர் இயக்கத்தைவிடவும் “நாடு” உயர்ந்தது எனும் நோக்கத்தைக் கொண்டவர்கள் நாம். ஒரே கட்டுரையில் அண்ணாவைப் புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்திவிட முடியாது; ஏனெனில் அவர் மேகம் அல்ல-வானம்!

அறிஞர் அண்ணாவை சார்பு ஏதுமின்றி எப்படிப் பார்ப்பது? அவரது எழுத்தும் பேச்சும் இயக்கமும் பணிகளும் சார்பையே வெளிப்படுத்துகின்றன. அந்தச் சார்பின் வாசமல்லவா எம்மை ஈர்த்துச் சுவாசமாகிவிட்டது. திராவிட இயக்கச் சார்பு இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்ப்பது யாருக்கும் சாத்தியமில்லாத போது - ஏன் மலர்மன்னன்கூட இயக்கம் சார்ந்த நிகழ்வுகளைத்தானே எடுத்துக்காட்டுகிறார்? - எமக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? நடுநிலையோடு, நிகழ்வுகளைப் பிறழ்ச்சியில்லாமல் கூறி எடுத்துச் சொல்லுகிறோமா என்றுதான் மலர்மன்னன் போன்றவர்கள் பார்க்க வேண்டும்.

இயக்க ஆளுமையில்லாத அண்ணாவை மலர் மன்னனால் மட்டும் காண்பிக்க முடிந்ததா?

3. பெரியாரின் கடவுள் கொள்கை பற்றியும் அறிஞர் அண்ணாவின் கடவுள் கொள்கை பற்றியும் மலர்மன்னன் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். பெரியார், அண்ணா குறித்து இயக்கப் போக்கிலும் சரி, மலர்மன்னனே குறிப்பிடுவதுபோல ‘தனிமனித ஆளுமையினை சார்பு எதுவுமின்றியும்’கூட இவர் அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்பதை நாம் புரிந்துகொண்டோம்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ அரசியல் கட்சிகளல்ல. ஒரு கட்டத்தில் சுயமரியாதை இயக்கம் ‘தென்னிந்தியர் சமதர்மக் கட்சி’யாக உருவாக இருந்தது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக்க முயன்றார். அம்முயற்சிக்குப் பெரியார் துணை நின்றார் இல்லை. எனவே சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் தமிழக அரசியலை வழிநடத்திய, (நடத்துகிற) பகுத்தறிவு நாத்திக இயக்கங்கள். ஆகவே அதற்குக் கடவுள் கொள்கை பற்றிய தெளிவு இருந்தாக வேண்டும்.

ஆனாலும் இவ்விரு இயக்கங்களும் அதன் தொடக்க காலத்திலேயே மலர்மன்னன் குறிப்பிடும் கடவுள் கொள்கைகளைப் ‘பிரகடனம்’ செய்யவில்லை. பெரியவர் 1967இல் தஞ்சை விடயபுரத்தில் மலர்மன்னன் எழுதியுள்ள கடவுள் கொள்கைக்கான முழக்கங்களை வெளியிட்டார். பெரியாரை, குடி அரசு வெளியீடுகளின்படி ஆய்ந்தால் அவர் கடவுள் நம்பிக்கையாளராக, சமய சீர்திருத்தக்காரராக, சீர்திருத்தக்காரராக, அதற்குப் பின்னர் பகுத்தறிவாளராக, இறுதியாக நாத்திகராகத் தம்மைப் பிரகடனப்படுத்திக்கொள்கிறார். பேரா. ந. இராமநாதன் பெரியாரைப் ‘பிறவி நாத்திகர்’ என்று குறிப்பிடுவார். நாம் அவ்வாறு கூறுவதற்கில்லை.

பெரியார் 1930களிலும் 1940களிலும் பகுத்தறிவு மற்றும் நாத்திகக் கொள்கைகளுக்கு ஆட்பட்டார் எனினும் அவற்றை அவர் அதிகாரபூர்வமாக 1967இல்தான் அறிவிக்கிறார். அண்ணாவின் நிலை பெரியாரைப் போன்றது அல்ல. அவர் திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக்க முனைகிறார். 1944இலேயே சேலம் மாநாட்டின் தீர்மானத்தின் பிற்குறிப்பிலேயே அவரது மனத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

திராவிடர் கழகம் அரசியல் கட்சியாக மாறி அதிகாரத்தைக் கைப்பற்றி கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டுமென்பதுதான் அண்ணாவின் திட்டம். ஓர் அரசியல் கட்சி மக்களிடம் செல்லும்போது மதம், கடவுள் போன்ற கருத்துகளில் எச்சரிக்கை தேவையாகிறது. ஆகவே அவர் ‘ஒரு கடவுள் உணர்ச்சியைப்’ பற்றிக் கூறுகிறார் (திராவிட நாடு 16.11.1947). இதிலிருந்து அப்போதைய திராவிடர் கழகத்திற்கு ஒரு கடவுள் உணர்ச்சி என்கிற ஒரு கொள்கை இருந்துவந்து இருக்கிறது. அண்ணாவின் நோக்கம் என்பது திராவிடர் கழகத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஆகவே அப்போதே அண்ணா இரண்டுவிதக் கருத்துகளை முன்வைத்தார். பகுத்தறிவு வாதம் நாத்திகமல்ல என்பது ஒன்று. இரண்டாவது திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்க மக்கள் அனுமதியைக் கோர வேண்டும் என்பதும்தான்!

மலர்மன்னன் குறிப்பிடுவதுபோல் பெரியாரின் நாத்திகக் கொள்கைக்கு மாற்றாக அறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் முழக்கத்தை வைக்கவில்லை. இரண்டு முழக்கங்கள் அறிவிக்கப்பட்ட கால கட்டங்களும் அதன் நோக்கங்களும் வெவ்வேறானவை. ஆனால் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை அடையவே அவை அறிவிக்கப்பட்டன. ஒன்று வெளிப் படையாகவும் மற்றொன்று உத்தியாகவும் அறவிக்கப்பட்டன. தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு திட்டங்களில் கடவுட் கொள்கைப் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ‘பகுத்தறிவு’ பற்றிய குறிப்பு உண்டு.

பெரியார் தமது பகுத்தறிவு இயக்கத்தை அதன் வளர்ச்சிப் போக்கில் நாத்திக இயக்கமாக அறிவித்தார். அப்போது அறிஞர் அண்ணா அவரது கட்சியில் இல்லை; ஆனால் அவரது இயக்கத்தில் இருந்தார். முன்னர் நாம் குறிப்பிட்ட ‘ஒரு கடவுள் உணர்ச்சி’-திராவிடர் கழகமாக இருக்கின்றபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதாக அண்ணா தமது உரையாடல்களிலே அமைத்தார். திரைப் படத்திலே எழுதிக்காட்டினார். தம்பிக்குக் கடிதங்களிலே வரைந்தார். இதற்குக் கட்சியில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

ஒரு மாநாட்டிற்குத் தலைமையேற்ற ஈழத்தடிகள், ‘நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல; பகுத்தறிவு வாதிகள்’ என்றார் (1954). நாவலர் நெடுஞ்செழியனிடம், ‘திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தோர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறுவதன் பொருள் என்ன?’ என்று கேட்கப்பட்டது. ‘ஒன்றே குலம்’ என்னும் போது ஒரே ஏதுவின் கீழ்க்கூடும் மக்கள் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கொள்ளாமல் ஒரு குலமக்களாய்த் திகழும் மனித குலத்தைக் குறிப்பிடுகிறோம் என்றும், ‘ஒருவனே தேவன்’ எனும்போது மனித சமுதாயம் போற்றி ஏற்றுக் கொள்வதற்குரிய நல்லறிவாகிய ‘அறிவை’க் குறிப்பிடு கின்றோம் என்றும் விடை அளித்தார் (1954 ‘மன்றம்’).

இதற்குப் பின்னர் 1956இல் அண்ணா - வினோபா சந்திப்பு நடைபெறுகிறது. உங்கள் சமுதாயக் கொள்கை என்ன என்று வினோபா கேட்கிறார். ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ திருமூலரின் பெயரைக் குறிப்பிட்டே அண்ணா பதிலளித்தார். அப்போது அண்ணா தமது பகுத்தறிவு நோக்கை விட்டுவிட்டு அம்முழக்கத்தைக் கூறவில்லை.

ஆகவே பெரியார் கொள்கைக்கும் முழக்கங்களுக்கும் எதிரானதல்ல அண்ணாவின் முழக்கம்! திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான, ‘வர்ணங்கள் அற்ற, சாதிகள் அற்ற, தமிழியம் சார்ந்த, பகுத்தறிவுடன் கூடிய சமதர்ம சமுதாயம் அமையப் பாடுபடுவது’ என்பதற்கான ‘உத்தியே’ அண்ணாவின் முழக்கம். அது பெரியார்க்கு எதிரானது என்று திரித்து அண்ணாவை எங்கோ அழைத்துச் செல்ல முனைகிறார் மலர்மன்னன்.

அதேபோலப் பெரியாரின் நாத்திகக் கொள்கையை இங்கிதமற்றது என்று கூறுவது வேத, உபநிடதங்கள் சார்ந்த கோட்பாடுகளை, கருத்தியல்களை அறியாததாரின் கூற்றாகும்.

4. வழக்கறிஞர் வி.பி. இராமன் தி.மு.க.வில் சேர்ந்தபோது பல பார்ப்பன இளைஞர்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர் என்கிறார் மலர்மன்னன். அப்படி யாரும் சேரவில்லை. அப்படி இருந்தால் சேர்ந்தவர்கள் பற்றிய பட்டியலை வெளியிடும்படி மலர்மன்னனைக் கேட்டுக்கொள்கின்றோம். அறிஞர் அண்ணா சோதனை ஓட்டமாகப் பார்ப்பனரைத் தி.மு.க.வில் சேர்க்க விரும்பினார். இது நீதிக்கட்சி காலத்திலிருந்து திராவிட இயக்கத்தில் இருந்து வருகிற விவாதமாகும். திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை என்பதில் கறாராக இருக்கிறது.

வி.பி. இராமனுக்குப் பெரிய விளம்பரம் தரப்பட்டது. அவர் மேடைகளில் ஆங்கிலத்தில் பேசி அதனைத் தமிழில் எடுத்துரைத்தனர். அவர் குறுகிய காலமே கட்சியில் இருந்தார். அவரால் தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தீமைதான் ஏற்பட்டது. அவருக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. தி.மு.க. சோதனையோட்டமாகப் பார்ப்பனரைக் கட்சியில் அனுமதித்துத் தோல்வியையே சந்தித்தது. இன்னும் சரியாகச் சொல்வதானால் அறிஞர் அண்ணாவுக்கு இது ஒரு தோல்வி என்று சொல்லுவோம். அந்தச் சோதனையை அவர் அனுமதித்து இருக்கக் கூடாது என்பதே எமது கருத்து. இது குறித்து எமது வரலாற்று நூலில் விரிவாக எழுதியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட வி.பி. இராமன் விலகியதற்கான காரணம் தெரியுமென்று குறிப்பிடும் மலர்மன்னன், ‘சார்பு ஏதுமின்றி ஆய்வுப் பார்வையுடன் அணுகலாமே!’ வி.பி. இராமன் விலக அண்ணா காரணம் இல்லை. யார் விலகவும் அவர் காரணமாக இருந்ததில்லை. வி.பி. இராமன் விலக யார் காரணம் மலர்மன்னன் தெரிவிக்க வேண்டாமா? ஆதாரம் இல்லை என்று கூறுபவர் ஏன் எழுத வேண்டும்?
தி.க, தி.மு.க. என இரண்டும் இரு அமைப்புகள் ஆன பின்பு அதன் அணுகுமுறைகள் வேறுபடவே செய்யும். ஆனால் அவை இரண்டும் ‘வர்ணாசிரம சநாதன தர்மத்தை’த் தகர்ப்பதில் இணைந்தே போராடின; போராடியும் வருகின்றன. ஆகவேதான் அறிஞர் அண்ணா, ‘திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்றார். பெரியார் வெளிப்படையாகச் செய்வார். அண்ணா உத்தியைப் பயன்படுத்துவார். அண்ணாவின் ‘உத்தி’ எதிரிகளுக்குக் கருத்து மயக்கத்தை ஏற்படுத்தும். அங்கே சிக்கிக்கொள்வர். அப்படிச் சிக்கிக் கொண்டு மலர்மன்னன் அண்ணாவின் நடவடிக்கைகளுக்குப் ‘புத்துரை’ காண முயன்றிருக்கிறார்.

6. அறிஞர் அண்ணா அமர்ந்து ஆரிய மாயை, கம்பரசம் போன்ற நூல்களை எழுதவில்லை. திராவிட நாடு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தவற்றைத் தொகுத்து நூலாக்கினார். கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைத் தீக்கிரையாக்க வேண்டு மென அண்ணா வாதிட்டார். கம்பரசக் கட்டுரைகள் மட்டுமல்ல, நீதிதேவன் மயக்கம் எனும் நாடகம் எழுதி கம்பன், இராவணன், கோட்புலி நாயனார், சிறுத் தொண்டர் ஆகிய இராமாயண, பெரிய புராணப் பாத்திரங்களைக் கூண்டில் ஏற்றி விமர்சனம் செய்தார்.

இவை அண்ணா இளமை வேகத்தில் செய்தவை என்கிறார் மலர்மன்னன். இதேபோலவே குமுதம் அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்ற நேரத்தில் இந்த விமர்சனங்களைக் ‘குறும்புக்கார வாலிபரின் விளையாட்டு’ என்று எழுதியது.

அண்ணா எழுதிய விமர்சனங்கள் கற்பனையிலிருந்து உதித்தவை அல்ல. ஆரிய மாயை, பிரெஞ்சுப் பாதிரியார் ஆபே துபே எழுதியவற்றை அண்ணாவின் பாணியில் எடுத்துவைத்த கட்டுரைகளாகும். ஒரு கொள்கை வெகுமக்களை எப்படிச் சுரண்டுகிறது, தாழ்த்தி இருக்கிறது என்பதை ஆரிய மாயைக் கட்டுரைகளின் மூலம் எடுத்து விளக்கியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இன மீட்சிக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவை. கம்பரசம் - கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை எடுத்துக் கூறுகிறது. தெய்வமாக்கதை இப்படி இருக்க வேண்டுமா என்று கேட்கிறார் அண்ணா. பெரிய புராணத்தையும் அப்படியே பார்க்கிறார். அதை மக்களிடத்திலே கூறுகிறார். இது எப்படி இளமை வேகத்தில் கூறியதாகும். ஆராய்ச்சியாய் ஒரு வாலிபனின் கூற்றாய் ஏன் பார்க்கக் கூடாது. இப்போதும் படித்தால் அந்த ஆபாசங்கள் வழியத்தானே செய்கின்றன.

அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் எழுதிய இந்துமத ஆபாச தரிசனியைப் போல கம்பரசம் ஒரு ஆய்வுப் புத்தகம்; இதை இளமை வேகம் எனக் கூறி மலர்மன்னன் ஆராய்ச்சியையே கபளீகரம் செய்யப் பார்க்கிறார்.

7. அறிஞர் அண்ணா தமது இயல்பிலேயே எதிரிகளையும் நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் பண்பைப் பெற்றவர். பக்கத்து வீட்டுக்காரரோடு நட்பாய் இருக்கலாம். அதற்காக இடையிலே உள்ள சுவரை இடித்துவிட மாட்டோம் அல்லவா? அதைப் போல் சோவின் நாடகத்திற்கு அண்ணா தலைமை தாங்கினார்; பாராட்டிப் பேசினார். அவரும் நம்மோடு சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தனியாகச் சொல்கிறவர் இல்லை அவர். ஏற்கெனவே வி.பி. இராமன் வருகையால் ஏற்பட்ட ‘வடு’ இருக்கிறது. இந்த நிலையில் சோ தி.மு.கவுக்கு வந்தால் நன்றாக இருக்குமென்று சொல்லியிருப்பாரா? இப்படிக் கேள்விப்படாத விஷயங்களை அள்ளிவிட்டிருக்கிறார் மலர்மன்னன். அவர் அண்ணாவை ஏதோ வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இராஜரிஷியாக்கி இப்பர்ண சாலையில்தான் அண்ணா வாழ்ந்தார் என்றுகூடக் காட்டி விடுவார் போலிருக்கிறது.

8. ‘அண்ணா தம்மை சூத்திரர் என்று கூறிக்கொண்டதில்லை. ‘சாமான்யன்’ என்றுதான் சொல்லிக்கொண்டார்; அது இந்து சமூகத்தை இரு துண்டாகப் பிளவுபடுத்துவதாகும் என்று மலர் மன்னன் எழுதியிருக்கிறார். வாழ்ந்த காலமெல்லாம் அண்ணா வர்ணாசிரம சநாதன எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, இதிகாச புராண எதிர்ப்பு தெரிவித்ததற்குக் காரணம் வெகுமக்களை ‘சூத்திரர்’ என்று அழைத்து ‘விதைக்காது விளையும் கழனி’யைப் ‘பார்ப்பனீயம்’ சிருஷ்டித்துக் கொண்டதினால்தானே! அவரது ஒவ்வொரு படைப்பும் ‘சூத்திரன்’ என்பதைத் தானே சொல்லுகிறது. தனியாக அவர் ‘சி.என். அண்ணாதுரை சூத்திரர்’ என்று தலையில் எழுதி ஒட்டிக்கொள்ள வேண்டுமா? இந்த இடத்தில்தான் மலர்மன்னன் தம்மையார் என்று வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காகத்தான் சுற்றிச்சுற்றி வந்து எழுதியிருக்கிறார். இப்படித்தான் மற்றொரு செய்தியையும் கூறுகிறார்.

1962ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தோற்றுப்போனார். ஓய்வுக்காக பெங்களூர் சென்றார். அவர் நண்பர் புட்டாசாமி வீட்டில் தங்கினார். சரவண பெலகோலா சென்றார். கோமாட்டீசுவரரைப் பார்த்தார். எத்தகைய துன்பங்கள் சூழ்ந்தாலும் மனிதன் சலனமற்று இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பின்பு தம்பிகளுக்கு விளக்கி திராவிட நாட்டில் கடிதம் எழுதினார். இதை வைத்துக்கொண்டு அவர் ஈ.வெ.ராவிட மிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டார் என்று மலர் மன்னன் எழுதுகிறார். அண்ணாவின் அனுமானத்திற்கு மலர்மன்னனின் வியாக்கியானம் வேடிக்கையாக இல்லையா?

10. 1967 தேர்தல் வெற்றிக்குப்பின் பெரியார்-அண்ணா சந்திப்பு நிகழ்ந்தது. அமைச்சரவையைப் பெரியாருக்குக் காணிக்கை என்றார் அண்ணா. ‘அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என உரை காண்கிறார் மலர்மன்னன். அப்படியானால் ‘நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான்’ என்று அண்ணா கூறியதற்குப் பெரியவாச்சான் பிள்ளையின் உரையிலிருந்து மேற்கோள் காட்டுவார் போலிருக்கிறது மலர்மன்னன்.

11. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டக் கூடாது என ஓர் ஆணை வெளியிடப்பட்டது. இவ்வாணை பெரியாரின் முகதாட்சண்யம் பார்த்து வெளியிடப்பட்ட ஆணையாம். மலர்மன்னன் சொல்கிறார். இந்த ஆணையை வெளியிட்டுவிட்டு இது சுற்றறிக்கைதான்; கண்டிப்பான ஆணை அல்ல என்று அண்ணா சொன்னாராம். தாம் ஏற்றுக்கொண்ட தலைவரின் ஆணையை-முகத்தாட்சண்யத்திற்காக அண்ணா வெளியிடுவதை ஓர் அதிகாரியிடம் எப்படித் தெரிவிப்பார்?

காஞ்சிபுரத்தில் அண்ணா வீட்டில் இருந்தால் ‘பிரசாதம்’ கோவிலிலிருந்து அவரது வியாபார நண்பர்கள் மூலம் வீட்டிற்குக் கொடுத்து அனுப்புவார்கள். சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். திராவிட நாடு ஊழியர்களுக்கெல்லாம் அந்தத் தின்பண்டம் வழங்கப்படும். அண்ணாவும் சாப்பிடுவார். அதனால் அண்ணா ‘பக்தர்’ ஆகிவிட்டார் என்று கூற முடியுமா?

தமது கருத்தைத் திணிக்காமல் நட்பைப் பெருக்கிக்கொண்டவர் அவர். மதுரைக்குச் சுற்றுப்பயணம்போன இடத்தில் அண்ணா, துரையரசன் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு வந்து எழுத்தாளர் நா. பார்த்தசாரதி அவரைச் சந்தித்து ஒருமணி நேரம் பேசிவிட்டுப்போனார். ஆகவே அண்ணா பார்த்தசாரதியின் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் ஆகிவிடமாட்டார். அதேபோல பார்த்தசாரதி அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொண்டவர் ஆகிவிடமாட்டார்.
ஆளுமையின் பரிணாமம் என்பது ஒவ்வொருவருக்கும் உண்டு. வாழ்நிலையிலிருந்துதான் சிந்தனை உண்டாகிறதே ஒழிய, சிந்தனையிலிருந்து வாழ்நிலை உண்டாவதில்லை. அறிஞர் அண்ணா தமது அடிப்படைக் கொள்கைகளை எப்போதும் மாற்றிக்கொண்டதில்லை. அதை அடைவதற்கான திட்டத்தை, முறையை மாற்றிக்கொண்டவர் அவர். புலர்காலைப் பொழுதும் மயங்கும் மாலையும் தோன்றும் ஒன்றுபோல். ஆனால் அவை நமக்கு வழங்கும் புலன் உணர்ச்சி வேறுபாட்டை வழங்கியே தீரும். புலர்காலை மாலையாய் மயக்கமளிக்கிறது மலர்மன்னனுக்கு! அது நமது குற்றமல்ல. சிறுகதை எழுத்தாளர் பல செய்திகளைக் கதைத்து இருக்கிறார் என்பதைக் கூறி முடிக்கிறேன்.

உள்ளடக்கம்