இருபது ஆண்டுகளுக்குமுன் ஒரு மாசி 14ஆந் திகதி அப்போது ஈரானின் தலைவராயிருந்த
அயோத்தல்லா கொமேனி சல்மான் ருஷ்டிமீது ஒரு பட்டுவா (மதத் தீர்ப்பு)
விடுத்திருந்தார். அந்த நாட்களில் பட்டுவா என்னும் வார்த்தை சொல்லாடலில் புதிதாக
இருந்தது. ருஷ்டி இழைத்த குற்றம் அவர் எழுதிய சாத்தானின் செய்யுள்கள் என்னும்
நாவலில் முஸ்லிம்களின் மனத்தைக் காயப்படுத்தும்படியான சம்பவங்களை எழுதியிருந்ததே.
எப்போதுமே சிடுசிடுக்கும் மனப்பான்மை உள்ள V.S. Naipaul அயோத்தலாவின்
அறிக்கை பற்றிச் சொன்ன கருத்து: ‘An extreme form of literary criticism’.முதலில் இந்த நூல் ஏற்படுத்திய
சர்ச்சையைச் சுருக்கித் தருகிறேன். புரளியை ஏற்படுத்திய சம்பவம் 547 பக்கம் கொண்ட
நாவலில் 70 பக்கங்களில் வரும். இதில் மூன்று கனவுக் காட்சிகள் இருக்கும். இதில்
ஒன்று ஆயிஷா என்ற இந்திய நாட்டுப்புறப் பெண்ணுக்குக் கிடைத்த திருவெளிப்பாடு எவ்வாறு
விபரீதத்தில் முடிந்தது என்பதைச் சித்தரிக்கிறது. மற்றது 20ஆம் நூற்றாண்டு மதத்
தீவிரவாதியைப் பற்றியது. இவருடைய செயல்கள் கொமேனி பிரான்சில் வந்தேறியாக இருந்த
நாட்களில் செயல்பட்டதை மறைமுகமாக நினைவூட்டியதை அன்றைய அரசியலை அவதான வாசிப்புச்
செய்தவர்கள் கண்டுணர்ந்திருக்கக்கூடும். முஸ்லிம்களை அதிகம் பாதித்த பகுதி மீண்டும்
பதிவுசெய்யப்பட்ட முகமது நபியின் வாழ்க்கை வரலாறு. அவர்களை நோகவைத்த சமாச்சாரங்கள்:
முகமது நபியை Mahound என்ற இழிபெயர் சொல்லி அழைத்தது; விபச்சார
விடுதியிலிருந்த பெண்களுக்கு நபியின் மனைவிகளின் நாமங்களைச் சூட்டியது;
திருக்குரானில் சாத்தான் ஓதியதாகப் புகுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வசனங்கள்;
இஸ்லாத்தைத் தழுவுமுன் மெக்காவிற்கிருந்த பழைய பெயரை நினைவுபடுத்தியது. நம்மூர்
சினிமா பாணியில் கனவுக் காட்சிகளாக இவை வர்ணிக்கப்பட்டிருக்கும்.
ருஷ்டி அன்றும் இன்றும்
இந்த நீண்ட நூலை முழுதாக வசித்து முடிப்பதற்கு நிறையப் பொறுமை வேண்டும்.
எதிர்ப்பு மும்முரமாயிருந்த நாட்களில் பெரும்பாலானவர்கள் இந்த 70 பக்கங்களை வைத்தே
ருஷ்டியின் அரசியல், மத, இலக்கியப் போக்குகளையும் தரத்தையும் எடை
போட்டிருக்கிறார்கள். இருபது வருடங்கள் கழித்து மறுபடியும் இந்த நூலை ஒரு துரித
மறுவாசிப்பு செய்தபோது ஒரு கூர்மையான கத்தரிக்கோலால் இந்த 70 பக்கங்களையும்
துண்டித்துவிட்டால் மிஞ்சி இருப்பது இங்கிலாந்தில் குடியேறியவர்களைப் பற்றிய ஒரு
சாதாரண நவீனப் பகடியான நாவல்தான்.
சாத்தானின் செய்யுளுக்குப் பின் ருஷ்டியின் நாவல்கள் உற்சாகமான கவனத்தை
விமர்சகர்களிடமோ வாசகர்களிடமோ பெறவில்லை. இவருடைய நூல்கள் வாசகத் தோழமை
உடையவையல்ல. ஒரு கதா பாத்திரத்திற்கு மூன்று பெயர்கள் இருக்கும். பிரதிக்குள் பிரதி
இருக்கும். எல்லா வாசகர்களும் பகிர்ந்துகொள்ள முடியாத மறைமுகமான பகடி இருக்கும்.
இவருடைய சமீபத்திய நாவலான The Enchantress of Florenceஇல்
தன்னை மீட்டுக்கொண்டதாகச் சில திறனாய்வளர்கள் கூறுகிறார்கள். எனக்கு அப்படித்
தோன்றவில்லை. அவர் பழக்கப்படுத்திய அதே கதை உத்திகள் இந்தப் புதிய நாவலிலும் உண்டு.
ருஷ்டியின் எழுத்துக்களில் எனக்கு அதிகம் பிடித்தமான Haroun and the Sea of Stories என்னும் தொகுதி ஒரு பெரியவரின் குழந்தைகளுக்கான கதைகள்
என்றால், இந்த நாவலைப் பெரியவர்களுக்கான ருஷ்டியின் குழந்தைத்தனமான கதை என்று
எடுத்துக்கொள்ளலாம்.
எண்பதுகளில் இருந்த ருஷ்டிக்கும் இப்போதைய ருஷ்டிக்கும் மாறுபாடு இருக்கிறது.
அன்றைய ருஷ்டியை எனக்குப் பிடித்திருந்தது. புக்கர் பரிசுபெற்ற நடுநிசிக் குழந்தைகள்
மற்றும் இவரின் இலக்கியங்களில் காணப்பட்ட மாந்திரீக யதார்த்தத்தைவிடப்
புலம்பெயர்ந்த குடியேறிகளின் குரலாக இருந்த, அன்று அவர் செய்த அரசியல் குறுக்கீடுகள்
கவர்ச்சியாய் இருந்தன.
தாட்சரின் ஆட்சிக் காலத்தில் ருஷ்டி அந்த அரசாங்கதின் கடிமையான, கருணைற்ற
செயல்களை நிறையவே தாக்கினார். இந்த நூலிலும்கூடத் தாட்சரை ஹிட்லருக்கு ஒப்பிடுகிறார்.
பிரிட்டிஷ் பொலிசாரை இனவெறியர்கள் என்று சித்தரித்திருக்கிறார். ஆனால் 9/11க்குப்
பின் அவரது அரசியல் பார்வையில் ஒரு குழப்பமான மாற்றம் தெரிகிறது. சில அமெரிக்க
ஏகாதிபத்திய குறியார்வங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். இன்றைய கலாச்சார
வளர்ச்சிக்கு இஸ்லாம் பெரிய தடை அரண் எனப் பரப்புரை செய்திருக்கிறார். இந்தச்
செயல்களைப் பார்த்து இடதுசாரிச் சிந்தனையாளர் Tariq Ali இவருக்குச்
சூட்டிய பட்டம்: Warrior Writer.
இலக்கிய வெடிப்பொலிகள்
அன்றைய சாத்தானின் செய்யுள்களை ஒட்டிய சொற்போர் விவாதம் சுலபான இரட்டை நிலையில்
முடங்கிக் கிடந்தது. கூருணர்வுள்ள உள்நுழைந்தோருக்கும் கேலியையும் நையாண்டியையும்
இலக்கிய நற்கனிகளாகக் கொண்ட உள்நாட்டவர்களுக்கு மிடையே ஏற்பட்ட பூசலாகப்
பார்க்கப்பட்டது. மேலும் மத அடிப்படைவாதிகளுக்கும் மேலைத் தாராளாவாத
இலக்கியவாதிகளுக்குமிடையே ஏற்பட்ட மோதலாகவும் கருதப்பட்டது. ஒரு குறுகிய சமய
அடையாளத்துக்குள் சிறைப்படுத்திக்கொண்டவர்களுக்கும் கலப்பினப் பண்பாட்டின் அழகியலை
வெளிப்படுத்துகிறவர்களுக்குமிடையே ஏற்பட்ட சிக்கலாகவும் ஆவணப்படுத்தப்பட்டது. இந்தக்
கெட்டியான நிலை அமைவுகளைவிட (position) இந்தச் சர்ச்சைக் கதையாடல்
எடுத்துரைப்பில் எழுப்பியிருந்த சில கேள்விகள் இன்றைக்கும் பொருந்தும்: யார்
யாருக்குக் கதை சொல்லுகிறார்கள்?; யார் எந்தச் சூழலில் கதை சொல்லுகிறார்கள்?
யாருக்குக் கதை சொல்ல அதிகாரம் உண்டு? இந்தக் கேள்விகளுக்குத் தீர்வான முடிவுகள்
கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
திரும்பிப் பார்க்கிறபொழுது இந்த உணர்ச்சி கலந்த கலாச்சாரப் போட்டியில் அதிகம்
காயமடைந்தவர்கள் இங்கிலாந்து வாழ் முஸ்லிம்களே. அன்று ஊடகம் உருவாக்கிய அனுதாபம்
இல்லாத, இரக்கமற்ற, புத்திச் சாதுர்யமற்ற சமூகம் என்ற இனவாதப் படிவார்ப்புகள்
இன்றும் பொதுப்புத்தியில் இருக்கின்றன. நூல் எரிப்பும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும்
முஸ்லிம்களுக்குக் கெட்ட பெயரைத் தந்ததைத் தவிர வேறு ஒன்றையும் சம்பாதிக்கவில்லை
என்று அன்றைய போராட்டங்களில் ஈடுபட்ட ஆனால் அவற்றுக்காக வருந்தும் Inayat
Bunglawala சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த நாவல் விளைவித்த இலக்கியப் பேறுகளில் ஒன்று இதுவரை கதையாடலின்
விளிம்பிலிருந்த மதம் இப்போது கதைசொல்லிகளின் பிரதான கருப்பொருளில் ஒன்றாக
முக்கியத்துவம் பெற்றிருப்பதுதான். சமயம் நடத்திவரும் அதிகாரப் போராட்டங்கள், அதன்
நிறுவன ஏற்பாடுகள், அதன் சிந்தனைப் பழக்கவழக்கங்கள், அதன் திருப்பிரதிகளின்
துஷ்பிரயோகங்கள், அதன் மத நியமங்கள், புனைகதைகளின் விவாதக் களங்களாக
ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது ருஷ்டியின் நாவல் விளைவித்த ஆவேசமான
ஆர்ப்பாட்டங்களுக்குப் பின் எழுதப்பட்ட ஹானிப் குரேஷ்யின் இரண்டு கதைகள் Black
Album, My Son the Fanatic. இரண்டாம் தலைமுறைப் பிரிட்டிஷ்
முஸ்லிம்கள் ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் கவர்ந்து இழுக்கப்படுகிறார்கள்
என்பதைப் பரிசீலிக்கும் புதினங்கள் இவை. அதேபோல் Mohammed HanifÞ¡ A Case of
Exploding Mangoes, Moshin Hamidஇன்
The Reluctant Fundamentalist இஸ்லாமிய அடிப்படைவாதத்தை
அம்பலப்படுத்துகின்றன, விசாரணை செய்கின்றன. இவற்றில் முன்னையது பாகிஸ்தானில் எவ்வாறு
ஞீவீணீவில் காலத்தில் மதமும் அரசியலும் சக்தியுள்ள ஆனால் நச்சான கலவை என்பதைப்
பரிகாசிக்கிறது. குண்டுதாரிகள் எப்படி உருவாகிறார்கள், தீவிரவாதிகளின் மனநிலை
எவ்வாறு செயல்படுகிறது என்பதை Yasmina Khadraஇன் The Attack, The Sirens of Baghdad உன்னிப்பாகப் பதிவுசெய்கின்றன. மதச்
சார்பற்ற, மந்தமான ஆங்கில மையநீரோட்ட இலக்கியவாதிகளில் இலக்கியப் புலப்பரப்பை
இந்தப் புதினங்கள் விசாலப்படுத்தியது மட்டுமல்ல, சமயம் பற்றி இவர்களிடையே ஒரு தன்
உணர்வுநிலையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த மதத் தீர்ப்பு ஏற்படுத்திய கவலை தரும் இயல்நிகழ்வுகளில் (phenomenon) ஒன்று பதிப்பாளர்கள் தங்களுக்குள் செய்துகொண்ட சுயத் தணிக்கையாகும். பட்டுவாவின்
கொலை மிரட்டலுக்குப் பிறகு விவாதங்களைத் தூண்டிவிடும் மதம் சம்பந்தமான நூல்களை
வெளியிடுவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இந்த மதத் தீர்ப்பை மறுபடியும் கூர்ந்து
படியுங்கள். கொலைத் தண்டனை ருஷ்டிக்கு மட்டுமல்ல, அவருடய நூலை
வெளியிட்டவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மதத் தீவிரவாதிகளால் தேகரீதியாகத்
தாக்கப்பட்ட வர்கள் இவருடைய நாவலைப் பதிப்பித்தவர்களும் ஜப்பானிய, துருக்கிய,
நொர்வே, இத்தாலிய மொழிபெயர்ப்பாளர்களுமே. இந்தக் கொலை அச்சுறுத்துதலுக்குப் பின்
பதிப்பகங்களிடையே ஒரு சுயக் கட்டுப்பாடு வந்திருக்கிறது. பல உதாரணங்களில் ஒன்று:
திருநபியின் இளைய மனைவியான ஆயிஷா பற்றிய விவாதத்திக்குரிய Sherry Jonesஇன் The
Jewel of Medinaவை அச்சிட இருந்த Martin Rynjaவின் வீடு சென்ற செப்டம்பர் மாதம் தீவைக்கப்பட்டது. இந்தத்
தாக்குதலுக்குப் பின் அந்த நாவலை பிரசுரிப்பதை Rynja கை விட்டு விட்டார்.
இறுதியாக, சல்மான் ருஷ்டியின் சாத்தானின் செய்யுள்களின் தொடக்க வரி
இப்படியிருக்கும்: ‘ஒரு மனிதன் மறுபிறப்பு அடைய வேண்டுமானால் முதலில் அவன் மரிக்க
வேண்டும்.’ நாவல்களில் எழுதப்பட்ட முதல் வசனங்களில் இதுதான் ஜோதிட வல்லமையானதாகவும்
கொடூரமானதாகவும் சில்லிடல் கொண்டதாகவும் (chilling) அமங்களமானதாகவும் ஏன்
குறும்புத்தனமானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
o
ஸ்லம்டாக் மில்லியனர்: ஏழ்மையின் பாலின்பம்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்குவந்தது இருபதுகளின்
கடைசியில் எழுதப்பட்ட Katherin Mayoவின் நூலான Mother India பற்றி காந்தி சொன்ன அந்தச் சூடான வார்த்தைகள்:
‘a drain- inspector's report’ (சாக்கடை அதிகாரியின் அறிக்கை). ஒருவேளை
காந்தி நம் நாட்களில் வாழ்ந்திருந்து இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்திருந்தால் இது
மலசலக்கூடக் கண்காணிப்பாளரின் அறிக்கை எனக் கூறியிருப்பார். இந்தப் படத்தில் மலசலக்
கூடத்திற்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. காதரின் மயோவின் படைப்புக்கும்
இந்தத் திரைப் படத்திற்கும் சில முக்கியக் கலாச்சார இணைவுகள் இருக்கின்றன. அவை பற்றி
இந்த வியாசத்தில் ஒரு பொருத்தமான இடத்தில் சொல்லுவேன்.
இந்தக் கதையில் உங்களை இருக்கையின் விளிம்பில் வைப்பதற்கான பிரதானமான தடயங்கள்
ஒன்றும் இல்லை. கந்தைத் துணியில் இருந்தவன் காசுள்ள கனவானாக மாறுவதற்கான முயற்சியைப்
படம் சித்தரிப்பதுபோல் இருந்தாலும் கதையின் உள்ளுறைப் பொருளில் ஒரு சின்ன
வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பொடியனின் முழுக்குறிக்கோளும் பணத்தைப் பற்றியது
அல்ல. அந்தச் சாய்வாலாவிற்குக் காசைவிடக் காதல்தான் முக்கிய மாகப்படுகிறது. அவன்
அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றியது, அவனுடைய காதலியின் கவனத்தைப்
பெறுவதற்காகவே.
நாவலும் திரைக்கதையும்: பின்புலம்
இந்த ஸ்லம்டாக் கதைக்குப் பின்னால் ஒரு ‘சின்ன’ இலக்கிய வரலாறு இருக்கிறது.
இந்தத் திரைக்கதை விக்காஸ் சுவராப் 2005இல் எழுதிய Q & A நாவலின் ஒரு சாடையான தழுவல். வசனம்-சார்ந்த படைப்புகள் காட்சி-சார்ந்த
சாதனத்தினூடாக மறு உரு எடுக்கும்போது சில எதிர்பாராத இழப்புகளும்
வெறுமையாக்கல்களும் ஏற்படுவதுண்டு. இது இந்தப் படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. சில
முக்கிய வித்தியாசங்களை மட்டும் தருகிறேன். நாவலில் அந்தப் பதினெட்டு வயதுக்
கதாநாயகனின் பெயர் ராம் முகமது தாமாஸ். திரையில் ஜாமால் மாலிக். இந்தக் கதையின் கதா
நாயகனுக்கு நடந்தவை எந்த இந்தியருக்கும் நிகழக்கூடும் என்ற வகையில் ஒரு குறியீடாக
சுவராப் வைத்த நாமம் இப்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கதையாக
மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியர் என்ற அகன்ற அடையாளம் நீக்கப்பட்டு ஒரு குறுகிய மத
அடையாளம் முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் தேவையற்ற ஆனால் தவிர்க்க முடியாத, ஒரு இடைச் செருகல்: இந்திய
சரித்திரத்தைத் திசைதிருப்பிய ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை
நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்ற 21
வருடங்களுக்குப் பிறகு, இந்த அட்டூழியங்களுக்கு ஈடுசெய்யுமாறு 1940இல் லண்டன்
Caxton Hallஇல் Michael O'Dywer என்றவரை ஒரு இந்தியர்
சுட்டுக்கொன்று விடுகிறார். இந்த O'Dywerதான் Reginald Edward Harry Dyer விடுத்த கட்டளையில் ஆங்கிலத் துருப்புகள்
கண் மூடித்தனமாக இந்தியரைக் கொன்று குவித்தபோது பஞ்சாபின் ஆளுநராக இருந்தவர்.
ஆங்கிலேயரைக் கொலைசெய்தவரை உன் பெயர் என்னவெனக் கேட்டபொழுது அந்த இந்தியர் சொன்ன
விடை: Ram Mohahmed Singh Azad. இந்தப் பழிதீர்ப்பை எந்த
இந்தியருமே செய்திருக்கலாம் என்று ஒரு குறியீட்டுப் பட்டமாக இந்தப் பெயர்
சொல்லப்பட்டது. இதைச் சொன்னவர் உத்தம் சிங் என்னும் சீக்கியர். நவீனம்
முக்கியப்படுத்திய திவ்விய விவரிப்புகளில் ஒன்று இந்தியர் என்ற பொது அடையாளம்.
தேசிய முன்னுரிமைகளை வலியுறுத்தும் சின்னமாக இந்தப் பரந்த பார்வை கருதப்பட்டது.
பின்-நவீனம் ஆக்கம் செய்த குழப்பமான உன்னதங்களில் ஒன்று வட்டார, சாதி, சமய
தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் மீளுருவாக்கம் செய்தது. மூல நாவலிருந்த விசாலமான
சமதன்மையுள்ள இந்தியர் என்னும் ஒற்றை அடையாளம் சிதைக்கப்பட்டு இந்தப் படத்தில்
கதாநாயகன் ஒருமுக நோக்குள்ள சமயம் சார்ந்த இந்தியனாக ஆக்கப்பட்டது மட்டுமல்ல,
முஸ்லிமாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளான். சமய மாற்றம் மட்டுமல்ல, இவனுக்கு
வகுப்பு மாற்றமும் நேர்ந்திருக்கிறது. சுவராபின் கதைக்குப் பின்னால் ஒரு உண்மைச்
சம்பவம் இருக்கிறது. How to be a millionaire பிரிட்டிஷ்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Major Charles Ingram ஏதோ
மோசடிசெய்து வெற்றியடைந்தார் என்று மிஜிக்ஷி அலைவரிசை அமைப்பாளர்கள் வழக்குத்
தொடர்ந்திருந்தார்கள். இந்தச் சம்பவந்தான் நாவலுக்குக் கருவாக அமைந்தது என்று
சுவராப் கூறியிருக்கிறார். சமுதாயத்தில் அந்தஸ்து பெற்ற ஒரு மேஜரின் ஏமாற்று வேலை
சாதிப்பு, சுவராப்பின் கற்பனையில் கீழ்நிலைக் குடிமகன் செய்வதாகத் தகவமைப்பு
செய்யப்பட்டிருக்கிறது.
சரி, மறுபடியும் நாவலுக்கும் திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசங்களுக்கு வருவோம்.
மூலக் கதையில் கதாநாயகன் ஒரு அனாதை. ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிறித்தவக்
குருவானவரால் காப்பாற்றப்பட்டு ஒரு கிறித்தவ இல்லத்தில் வளர்கிறான். திரையில்
அவனுக்கு முஸ்லிம் தாயும் வம்பனான ஒரு சகோதரனும் இருக்கிறார்கள். சுவராப் கதையில்
கவர்ச்சியான சிமித்தா ஷா என்னும் ஒரு பெண் வழக்கறிஞர் வருவார். அவருக்குத்தான்
பொலிசில் மாட்டுவிக்கப்பட்ட ராம் முகமத் தாமஸ், எப்படித் தன் வாழ்க்கையில்
எதிர்பாராத தருணங்களில் நடைபெற்ற பனிரெண்டு சம்பவங்கள் தொலைக் காட்சி
நிகழ்ச்சியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடியதாக அமைந்தன என்று
விவரிப்பான். திரைப்படத்தில் ஜமால் மாலிக் செம்மையாகக் காவல் துறையினரால்
உதைவாங்கிக்கொண்டு பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இப்பிரான் கானுக்கு விளக்கம்
கொடுப்பான்.
பண்பாட்டுப் பரிமாணங்கள், மதிப்பீடுகள்
திரைக்கான மாற்றங்கள் பற்றி அதிகம் கவலையில்லை. ஆனால் இந்தத் திரைப்படம்
வெளிப்படுத்தும் மறைமுகமான கலாச்சாரத் தாத்பரியங்கள் பற்றித் தான் ஆழ்ந்த கவனிப்பு
தேவையாயிருக்கிறது. திரைப் படங்கள் கபடமற்றவை அல்ல. வறுமை இங்கு
அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. அதைவிட மேற்கத்தியர் களின் ஆழ்மனத்தில் கெட்டியாக
ஊறிப்போயிருக்கிற அனுகூலமற்ற இந்தியாவைப் பற்றிய மாறாநிலையான அச்சிடுகள் (stereotype) மீண்டும் மறுகூறு செய்யப்பட்டிருக்கின்றன. திரைப்படம் சித்தரிக்கும்
வார்ப்பெண்ணங்கள்: வறுமை, பாலிய விபச்சாரம், கொலை, பலாத்காரம், குறுகிய மதவாதம்,
சுரண்டல் தன்மை. இந்தியக் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே படுமோசமானவர்கள். ஜமாலின்
காதலி லத்திக்காகூட. அடிமட்ட மக்கள் மட்டுமல்ல மேட்டுக்குடியினரும் கார
குணமுள்ளவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜமாலின் முன்னேற்றத்திற்குத்
தடையாக இருப்பது பணக்கார இந்தியர்களே. அவனைக் காவல் துறையினரிடத்தில் ஒப்படைத்ததும்,
அவனது உடம்பைப் பின்னி எடுப்பதும் அவனைவிடப் பல மடங்கு வசதிபடைத்தவர்களே. இந்த
மும்பைப் பொலிஸ் கைதிகளுக்குத் தரும் ஆக்கினைகளைப் பார்த்தால் Abu Gharib அமெரிக்கச் சித்திரவதையாளர்களே மூச்சடைத்துப்போய்விடுவார்கள்.
இந்தக் கட்டத்தில்தான் காதரீன் மாயோவின் அன்னை இந்தியாவைப் பற்றிச் சொல்லலாம்
என்று நினைக்கிறேன். காலனிய ஆட்சிக்காலத்தில் அரசின் உதவியுடன் இந்தியாவின் நிலை
பற்றிக் காவல் துறை அறிக்கைகள், மருத்துவ நிலையப் புள்ளிவிவரங்கள், அரசாங்கக்
கோப்புகளை அலசி எழுதிய நூலில் அன்றைய சமூகச் சிதைவுகளை மாயோ
ஆவணப்படுத்தியிருந்தார். காதரீன் மாயோ அந்த நாட்களின் பெண் Naipual என்று
வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் சீரழிவுக்கான காரணங்களாக அவர் தந்தவை:
பின்தங்கிய பெண்கள், துப்பரவற்ற வாழ்க்கைமுறை, பால்ய விவாகம், இந்திய ஆண்களின்
தீவிரக் காம இச்சை, அவர்களின் சுய இன்பச் செயல்கள், அவர்களிடையே காணப்படும் ஓரின
ஈர்ப்பு. காலனிய ஆட்சிக் காலத்தில் மாயோவின் பிரதி தந்த செய்தி: இந்தியா இன்னும்
சுய ஆட்சிக்குத் தயாராகவும் இல்லை; தகுதியும் பெறவில்லை. பின்காலனிய நாட்களில்
Danny Boyleஇன் சினிமா தரும் தகவல் சேரிகளும் தாதாக்களும் அடியாட்களும்
மனித உரிமை மறுப்புகளும் காவல் துறை பலாத்காரங்களும் பணம் சம்பாதிப்பதற்காகச்
சிறுவர்களின் கண்களைக் குருடாக்குகிறவர்களும் இருக்கும்வரை இந்தியா உலக வல்லரசாகும்
வாய்ப்பு இல்லை. மாயோ தந்த புள்ளிவிவரங்களை அன்றைய கலாச்சாரத் தேசியவாதிகள்
மறுக்கவில்லை. அவர் கொடுத்த அதே பட்டியலைத் திசைதிருப்பி இந்தியாவின் கீழ்மட்ட
நிலைக்குக் காலனிய ஆட்சியே காரணம் என்று வாதிட்டார்கள். இன்றைய சேரிகளுக்கு இந்தியா
மட்டுமே முழுப் பொறுப்பல்ல. உலகமயமாக்கல், சுதந்திரச் சந்தை, சர்வதேச வர்த்தக
ஒழுங்கமைப்புகள், சக்தி வாய்ந்த பன்னாட்டு வணிகக் குழுமங்கள், சமனில்லாத
தொழில்நுட்பப் பரவல்கள் ஏற்படுத்தும் பொருளாதார சமத்துவமற்ற சமூகப் பிரிவினைகள்
குடிசைகளும் சேரிகளும் வளர்வதற்குக் கணிசமான பங்குண்டு. இயக்குநர் Danny Boyle சேரிகள் ஏதோ இந்தியக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த அம்சமாகக்
காட்டியுள்ளார்.
வணிக சினிமா சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லதல்ல. ஆனால் மறைமுகமான ஒரு பதில்
இந்தப் படத்தில் இருக்கிறது. மனிதத் தன்மையற்ற அந்த இருண்மையான சூழலிலிருந்து ஜமால்
தன்னை விடுவித்துக்கொள்ள பயன்படுத்திய உபாயம் மேற்கிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட ‘நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி. கொஞ்சம்
உற்றுப் பார்த்தால் இதில் ஒரு நுண்ணியம் வாய்ந்த உப செய்தி பொதிந்திருப்பதைக்
காணலாம். இன்றைய பரவிக்கிடக்கும் சேரிகளுக்கு சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பங்கை
ஞிணீஸீஸீஹ் ஙிஷீஹ்றீமீ ஒப்புக்கொள்ளத் தயங்குவது மட்டுல்ல சேரி வாழ் மக்களின்
மீட்பு மேற்கில் உருவாகிய உபகாரணங்களில்தான் இருக்கிறது என்கிறார்.
இந்த ஆண்டின் திரைப்படங்களுக்கான பரிசுகள் அனைத்தும் ஸ்லம்டாக் படத்திற்குக்
கிடைத்திருக்கின்றன என நினைக்கிறேன். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது
ஆஸ்கார் பரிசுகூடக் கிட்டியிருக்கலாம். இந்தப் படம் மேற்குலகில் ஏற்படுத்திய
பரபரப்புக்கான காரணங்கள் புதிராகவே இருக்கின்றன. ஒரு வேளை படத்தின் சுப முடிவு, ஒரு
அடிமட்டக் குடிமகன் வலுவான சக்திகளுக்கு எதிராகப் போராடிப் பெறும் வெற்றி,
அலுப்புத் தட்டாமல் கதை சொன்ன விதம், அந்தச் சிறுவர்களின் துடிப்பான நடிப்பு,
ரசிகர்களிடையே படம் ஏற்படுத்தும் சுக உணர்ச்சி போன்றவை இந்தப் படத்தின்
வியக்கத்தக்க வெற்றிக்குக் காரணமாய் இருக்கலாம். படம் முடிந்து அரங்கைவிட்டு
வெளிவரும்போது ஒரு ஆங்கிலேயர் இன்னொருவருக்குச் சொன்னது: very energetic. இது ஒரு சமர்த்தான
(smart) படம் என்றுதான் எனக்குத்
தோன்றுகிறது. மகத்தான சினிமாவுக்கான தடயங்கள் இல்லை.
இந்திய இயக்குநர்கள் சித்தரிக்கத் தயங்கும் அசல் இந்தியா முதன்முதலாக இந்தப்
படத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் பிரம்மையை ஸ்லம்டாக்
ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பொய்யான பிம்பத்திற்குக் காரணம் இப்போது
வாரந்தோறும் இறக்குமதி செய்யப்படும் பம்பாய், கோடம்பாக்கம் மசாலாப் படங்களே.
வங்காள வறுமையைப் பதேர் பாஞ்சாலியில் 1955லேயே சத்தியஜித் ரே தத்ரூபமாகப்
படம்பிடித்திருக்கிறார். இன்று மானிடத்திற்கு அஞ்சலி என்று புகழப்படும் இதே படம்
அன்றைக்கு வறுமை வியாபாரமாக ஆக்கப்பட்டிருகிறது என்று குறை கூறப்பட்டது.
பொலிசாரால் அடிபடும் ஜமால் அமெரிக்கச் சுற்றுலாத் தம்பதிகளுக்குச் சொல்லுகிறான்:
You want to see the real India. This is real India. இந்தத் திரைப்படம் கொடூரமான, இருண்மையான, கடுமையான, நெறி தவறிய, ஒரு
பக்க இந்தியாவைக் காட்டுகிறது. இந்த எதிர்மறையான உருப்படிவங்கள் (ஸீமீரீணீtவீஸ்மீ
வீனீணீரீமீs) இந்தியாவிற்குப் பொருந்தமாட்டா எனச் சொல்லவில்லை. இந்தியாவிற்கு
இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அதன் தாராளம், பன்மைத்தன்மை, ஜனநாயகப் பண்பு, சகிப்பு,
இரக்கம் ஆகியவையும் இந்தியாவின் குணாதிசயங்கள்தான். இந்தப் படம் எழுப்பும் கேள்வி
சிக்கலான முரண்பாடான விஷயங்களை ஒற்றைப் பரிமாணச் சாதனமான சினிமாவால் எடுத்துக்காட்ட
முடியுமா?
முடிக்கும் முன் இன்னுமொரு இடைச் செருகல்: இந்தப் படம், தினசரிகளில் தலைப்புச்
செய்திகள் எழுதும் துணை ஆசிரியர்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். நீங்கள்
வாய்விட்டுச் சிரிக்காவிட்டாலும் உள்ளூரப் புன்னகைக்கச் சில நக்கலான தலைப்புகள்:
ஐபிஎல் ஏலத்திற்கு அடுத்த நாள் Kevin Peterson தன்னுடைய விக்கட்டை
மிகக் குறைச்சலான ஓட்டங்களுடன் இழந்தபோது Times கிரிக்கட் விமர்சகர்
பீட்டர்சனுக்குக் கொடுத்த பட்டம்: Slum slog millionaire. இன்றைய பண நெருக்கடிக்குக் காரணமாகவிருந்த கறைபட்ட வங்கி ஆளுநர்களுக்கு
Sun பத்திரிகை வழங்கிய பட்டம் Scumbag Millionaires. மலிவான
ஆட்டக்காரக் குழுவான Stroke City பல கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள Manchester Cityயை உதை பந்தாட்டதில் தோற்கடித்தபோது
Independent எழுதிய தலைப்பு Slumdogs beat Millionaires.
கிறிஸ்தவ நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வசனம் இருக்கிறது: ‘ஏழைகள்
உங்களுடன் எப்போதும் இருப்பார்கள்’. அதேபோல் நாவலாசிரியர்களும் சினிமா
இயக்குநர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் இயேசு சொல்ல மறந்தது: இவர்களில்
யார் ஏழைகளைத் தங்களுடைய வளர்ச்சிக்கு இலாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ளப்
போகிறார்கள்?
e-mail: rssugi@blueyonder.co.uk
|