நாடகம், இசை, நாட்டியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும்
நாட்டின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான ‘சங்கீத நாடக அகாடமியின் 2008ஆம்
ஆண்டுக்கான விருது’ பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடகத் துறையில் ஓர் இயக்குநராக அவரது பங்களிப்புகளைக் கவுரவித்து இவ்விருது
வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நவீன நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான பேராசிரியர் சே.
இராமானுஜம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறைத் தலைவராக இருந்து
ஓய்வுபெற்றவர். கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழில் இயங்கிவரும் மாற்று நாடக
முயற்சிகளுக்கு இராமானுஜம் அளித்துள்ள பங்களிப்பு தனிச்சிறப்புமிக்கது. தகுதியான
ஒருவருக்கு விருது வழங்கிய சங்கீத நாடக அகாடமியைக் காலச்சுவடு பாராட்டுகிறது;
பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. |