Google   www kalachuvadu.com

கவிதை:
மஹ்மூட் தர்வீஷ் கவிதைகள்
அவன் அமைதியாக இருக்கிறான் நானும்தான்
தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்
அவன் அமைதியாக இருக்கிறான்
நானும்தான்
அவன் எலுமிச்சைத் தேநீர் அருந்துகிறான்
நான் கோப்பி குடிக்கிறேன்
(எம்மிடையுள்ள வேறுபாடு இதுமட்டும்தான்.
அவன் என்னைப் போலவே ஒரு தொளதொளத்த சேட் அணிகிறான்
நான் அவனைப் போலவே ஒரு மாத சஞ்சிகையைக் கூர்ந்து பார்க்கிறேன்
நான் அவனை ஆவலுடன் பார்ப்பதுபோல்
அவன் என்னைப் பார்ப்பதில்லை
அவன் என்னை ஆவலுடன் பார்ப்பதுபோல்
நான் அவனைப் பார்ப்பதில்லை

அவன் அமைதியாக இருக்கிறான்
நானும்தான்
அவன் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறான்
நான் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறேன்
ஒரு கறுப்புப் பூனை எங்களுக்கிடையே செல்கிறது
நான் அதன் இருண்ட ரோமத்தைத் தொடுகிறேன்
அவன் அதன் இருண்ட ரோமத்தைத் தொடுகிறான்
நான் அவனிடம் சொல்லவில்லை: இன்று வானம்
தெளிவாக உள்ளது
அதிக நீலம்
அவன் என்னிடம் சொல்லவில்லை:
இன்று வானம் தெளிவாக உள்ளது

அவன்தான் காட்சியும் அவன்தான் காண்பவனும்
நான்தான் காட்சியும் நான்தான் காண்பவனும்
நான் என் இடது காலை நகர்த்துகிறேன்
அவன் தன் வலது காலை நகர்த்துகிறான்
நான் ஒரு பாடலின் இசையை மீட்டுகிறேன்
அவன் ஒரு பாடலின் இசையை மீட்டுகிறான்
எனக்கு ஆச்சரியம்:
நான் என்னைப் பார்க்கும் கண்ணாடியா அவன்?
பின் நான் அவன் கண்களை நோக்குகிறேன்,
அவனைக் காணவில்லை
நான் அவசரமாகக் கோப்பிக் கடையை விட்டுச் செல்கிறேன்
நான் நினைக்கிறேன்: அவன் ஒரு கொலையாளியாக இருக்கலாம்
அல்லது அவன் ஒரு வழிப்போக்கனாகவும்
நானே கொலையாளியாகவும் இருக்கலாம்

நான் அங்கு பிறந்தேன்

நான் அங்குதான் பிறந்தேன்
எனக்கு நினைவுகள் உள்ளன
மனிதர்கள் போலவே நானும் பிறந்தேன்
எனக்கு ஒரு தாய் இருக்கிறாள்
பல ஜன்னல்கள் உள்ள ஒரு வீடும் உண்டு
சகோதரர்களும் நண்பர்களும் உள்ளனர்
இதயமற்ற ஜன்னலுடன் ஒரு
சிறைக்கூடமும் உள்ளது
நீர்ப்பறவை எழுப்பிய அலை எனதுதான்
எனக்கென்று சொந்தப் பார்வை உண்டு
ஒரு மேலதிக புல் இதழும் உண்டு
உலகின் தொலைதூரச் சந்திரன் எனதுதான்
பறவைக் கூட்டங்களும்
அழிவற்ற ஒலிவ மரமும் எனதுதான்
வாள்களுக்கு முன்பே நான் இந்த
மண்ணில் நடந்தேன்
அதன் வாழும் உடலை ஒரு துயர
மேசையாக்கினேன்

n

நான் அங்குதான் பிறந்தேன்
வானம் தன் தாய்க்காக அழுதபோது
நான் வானத்தை அதன் தாயாக மாற்றினேன்
திரும்பிவரும் மேகம் என்னைத்
தெரிந்துகொள்வதற்காக
நானும் அழுதேன்
இரத்த மன்றத்துக்குரிய எல்லாச் சொற்களையும் கற்றேன்
அதனால் விதியை என்னால் மீற முடிந்தது
நான் எல்லாச் சொற்களையும் கற்று அவற்றை உடைத்தேன்
ஒரேஒரு சொல்லை உருவாக்க: தாய்நாடு.

n

மஹ்மூட் தர்வீஷ் (67)
மார்ச் 13, 1941 - ஆகஸ்ட் 9, 2008
மஹ்மூட் தர்வீஷ் ஒரு பாலஸ்தீனப் படைப்பிலக்கிய கர்த்தா.

இவர் பாலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்கு கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941 இல் பிறந்தார். அக்கிராமம் 1948இல் இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971இல் இஸ்ரேலைவிட்டு வெளியேறி கெய்ரோவில் வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்து வந்தார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஜனரஞ்சக இசைக்கலைஞர்களுக்கு நிகரான பிரபலம் இவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

1969இல் ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் அமைப்பு இவருக்குத் தாமரை விருது வழங்கிக் கௌரவித்தது.

இவரது முதல் கவிதைத் தொகுதியான 'சிறகிழந்த பறவைகள்' 1960 இல் வெளிவந்தது.
அவரது நூல்கள்: ஒலிவம் இலைகள் (1964), பாலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் (1966), இரவின் முடிவு (1967), கலிலீயில் பறவைகள் இறக்கின்றன (1970), நான் உன்னைக் காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கவில்லை (1972), ஏழாவது தாக்குதல் (1975), திருமணங்கள் (1977).

உள்ளடக்கம்