Google   www kalachuvadu.com

கவிதைகள்
மாதுமை

நெருங்குவதாய்த் தெரிகிறது
உனக்கும் எனக்குமான
இடைவெளி

இடைவெட்டுகளின் தேய்மானத்தோடு
விலகுகிறது
நேசம்

ஆயிரம் கலவிகளின் பின்னும்
வேகம் குறையாமல் சுரக்கிறது
ஆன்மா

வெற்றுச் சம்பெயின் போத்தல்
நீரையும் பெயரறியா ஊதாப்பூக்களையும் சுமக்கின்றது

ஓர் பின்னிரவில் நீ தீர்த்த போத்தல் அதுவாய் ஞாபகம்

அதனினும் பின்னிரவில் அடம்பிடித்து
உன்னைப் பல்துலக்க வைத்தது முத்தமிடத்தான்

ஊதாப்பூக்களின் மையத்தில்
இன்னம் ஆழ்ந்திருக்கிறது
பற்பசையும் சம்பெயினும் கலந்த வாசத்தில் ஒரு முத்தம்

நாளை: கண்ணாடிக் கழிவுகளைக் கழிக்கும் தினம்
இதுவும் மாதத்தில் ஒருமுறை வந்துவிடுகிறது.

உள்ளடக்கம்